Saturday, September 25, 2004

எழுத்து மயக்கம் ?!

ஐகாரஸ் பிரகாஷீக்கு வந்த எழுத்து மயக்கம் ஆச்சர்யமளிப்பதாக மூக்கன் கருத்து தெரிவித்திருக்கிறார். மேய்ச்சல் நிலமாக இருந்த தனது வலைப்பூவை இத்தனை காலம் தரிசு நிலமாக்கி வைத்திருந்தது இதற்குத்தானா என்கிற அவரது ஆதங்கத்தில் நியாயமிருப்பது உண்மைதான். ஆனால், போகிற போக்கில் வெகுஜன பத்திரிக்கைகளில் எழுதுவதை சர்வசாதாரணமான விஷயமாக மூக்கன் சொல்லியிருப்பதுதான் உறுத்தலான விஷயம்.

இணையத்தில் வரும் எழுத்துக்களில் அறுபது சதவீதம் தரமானவை என்பதில் சந்தேகமில்லை. வெகுஜன பத்திரிக்கைகளில் வருபவையெல்லாமே தரமான எழுத்துக்கள்தான் என்று வக்காலத்து வாங்கி உங்களை நான் சிரிக்க வைக்கப் போவதுமில்லை. சிறுபத்திரிக்கையோ, வெகுஜன பத்திரிக்கையோ கட்டுப்பாடுகள் ஜாஸ்திதான். இணையத்தோடு ஒப்பிடும்போது எதிர்வினைகள் கூட குறைவுதான். ஆனாலும் அச்சு ஊடகத்தின் மீதான காதல் மக்களிடையே அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இல்லாவிட்டால் நாலு முன்னணி புலனாய்வு இதழ்கள், 3 ஆன்மீகப் பத்திரிக்கைகள், மருத்துவத்திற்கென்றும், பெண்களுக்கென்றும் பிரத்யேக பத்திரிக்கைகள் என நாளுக்குநாள் வந்துகொண்டேயிருக்காது. தினமணி சென்றடையாத ஊரில் கூட தினத்தந்தியும் ராணியும் அமோகமாக விற்பனையாகின்றன. முப்பது பக்கத்தில் வரும் இந்தியா டுடேவை பத்து ரூபாய் கொடுத்து வாங்கி படிக்கவும் ஆளிருக்கிறார்கள்.

பிரகாஷாவது கட்டுரை எழுதியிருக்கிறார். எட்டு வருஷமாக எல்லா பத்திரிக்கைகளிலும் வாசகர் கடிதம் எழுதியிருந்தும் அந்த மயக்கம் எனக்கு இன்னும் மிச்சமிருக்கிறது. பத்திரிக்கையில் நமது எழுத்துக்கள் பிரசுரமாவது என்பது சினிமா மாதிரி. திறமையை மட்டுமல்ல அதிர்ஷ்டத்தையும் பொறுத்தது அது. வாசகர் கடிதத்திற்கே நாலு பேர் படித்துப் பார்த்து விஷயத்தோடு இருந்தால் மட்டுமே என்ட்ரி கிடைக்கும். பத்திரிக்கை படிக்கும் பத்து பேரில் நாலு பேர் கூட வாசகர் கடிதம் பகுதியை திரும்பி பார்க்கமாட்டார்கள். பைசா நஹி, பேரும் நஹி! பெரிதாக அங்கீகாரம் எதுவும் கிடையாது. எழுதுவதும் வளவளவென்று இருக்காமல் உருப்படியாக இருக்கவேண்டும். யாரையும் தாக்கியும் இருக்கக்கூடாது. நடக்கப்போறதையோ அல்லது நடந்த விஷயத்தையோ எழுதிவிடக்கூடாது. அநாவசிய வார்த்தை அலங்காரம் இருக்கக்கூடாது. சில பத்திரிக்கைகளுக்கு ஒருமையில் எழுதக்கூடாது. சில பத்திரிக்கைகளுக்கு ஒருமையில்தான் எழுதியாகணும். இப்படி ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். வாசகர் கடிதத்திற்கே இப்படியென்றால் கதை, கட்டுரை பற்றி கேட்கவே வேண்டாம். ஆபிஸில் ஆளாளுக்கு கத்தரியும் பிளாஸ்திரியுமாக அலைந்து கொண்டிருப்பார்கள். இதையெல்லாம் மீறி பிரசவித்து, அதை வாசகன் படித்து, அதற்கொரு எதிர் வினை வந்தால் நிச்சயம் முற்றும் துறந்த ஞானிக்கு கூட போதை வரும்.

நீங்க எழுதியிருந்ததை பார்த்தேன்னு சொல்றவங்களை விட நீங்களும் எழுதுவீங்களான்னு கேட்கறவங்கதான் அதிகமா இருப்பாங்க. பக்கத்து வூட்ல இருக்கிறவருக்கு கூட விஷயம் தெரியாது. பத்து வருஷம் எழுதினா பத்திரிக்கை ஆபிஸ் உள்ளே மட்டும்தான் பெயர் பரிச்சயமா இருக்கும். இருந்தாலும் தொடர்ந்து வாசகர் கடிதமா நான் வரைஞ்சு தள்ளினதுக்கு காரணம், நாலு வரியில நச்னு சொல்ற விஷயம் எனக்கு ஏனோ பிடித்திருந்தது. அதுவே கொஞ்சம் அலுத்து போன சமயத்தில்தான் வலைப்பூ மீது வந்தது காதல். இப்போது என்னுடைய நலம் விரும்பிகள் வாசகர் கடிதம் எழுதினா கையை ஒடித்துவிடுவதாக பல்லைக் கடித்தாலும் பழக்க தோஷத்தை விடமுடியவில்லை!

இணையத்தில் வரும் எழுத்துக்கள் பத்து வருஷம் ஆனாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு பரிச்சயமாகப் போவதில்லை என்கிற நிலையில் வெகுஜன பத்திரிக்கைகளின் பார்வை நமக்கு அவசியம் தேவை. கல்கியில் அவர்களாகவே தேடிக் கண்டுபிடித்து எங்களது வலைத்தளத்தை பற்றி எழுதியிருந்ததால் வந்த ரெஸ்பான்ஸ் என்னை மலைக்க வைத்தது. சினிமா மாதிரி வெகுஜன பத்திரிக்கைகளுக்கும் கமர்ஷியல் கட்டாயம் இருக்கலாம். அதற்காக எல்லாவற்றையுமே குப்பையாக ஒதுக்கிவிட முடியாது. மேட்டர் கிடைக்காத நேரத்தில் பத்திரிக்கையுலக ஜம்பவான்களெல்லாம் இணையத்தைதான் மேய வருகிறார்கள் என்று அடிக்கடி கேள்விப்படுகிறேன். இணைய பத்திரிக்கைகள் என்கிற வட்டத்துக்குள் நம்மை அடக்கிக்கொண்டு வெகுஜன பத்திரிக்கைகளிலிருந்து நாமெல்லோரும் விலகிப்போய்விட வேண்டாம் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். அதற்காக இப்படி நீட்டி முழக்கி சுயபுராணம் பேசியதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்னு உங்க மனசுக்குள்ள பிராம்ப்டர் ஓடறதை இங்கிருந்தே என்னால படிக்க முடியுதே!

Wednesday, September 22, 2004

ஆட்கள் வேலை செய்கிறார்கள்!



மறக்க முடியாத நான்குவழி பாதைகளின் சந்திப்பு அது. எங்க ஊர்ப்பக்கம் 'முக்கூட்டு'ன்னு சொல்வோம். வீட்டுக்கு போகிற வழியில் இருப்பதால் முச்சந்தியையும் அதில் ஜம்மென்று உட்கார்ந்திருக்கும் பிள்ளையாரையும் எப்போதும் என்னால் தவிர்க்கமுடியாது. ஊருக்கு வரும்போதெல்லாம் இரண்டு வி.ஐ.பிக்கள் பிள்ளையார் கோயிலுக்கு வராமல் போவதில்லை. ஒருத்தர் விஜய டி.ராஜேந்தர். இன்னொருத்தர் ஹி...ஹி.. நான்தான்! இருபது வருஷத்துக்கு முந்தி சைக்கிளில் வந்த அப்பா மீது லாரி மோதி, கட்டைவிரலில் அடிப்பட்டதிலிருந்து நிறைய ஆக்ஸிடென்டகளை இந்த முக்கூட்டில் பார்த்திருக்கிறேன். இப்பவும் அப்பாவின் கட்டைவிரலை ஆட்டிக்காட்டும்போது பிரபுதேவாவின் டான்ஸ் ஞாபகத்துக்கு வரும். ஒரு பக்கம் மயிலாடுதுறை முனிசிபாலிட்டி, இன்னொரு பக்கம் தாலுகா ஆபிஸ், இன்னொரு பக்கம் மயிலாடுதுறை ஜெயில் என வித்தியாசமான காம்பினேஷனும் இந்த முக்கூட்டில் உண்டு. காலேஜ் போக பஸ் வர காத்திருக்கும்போதெல்லாம் ரோட்டை நன்றாக கவனித்திருக்கிறேன். நிறையபேர் காரிலிருந்தபடியே காரைக்கால் போக வழி கேட்பார்கள். இரண்டு வழியிலும் போகலாம் என்பதால் கொஞ்ச நேரம் முழித்துக்கொண்டு நிற்பேன். பெரிய அளவுக்கு டிராபிக்கெல்லாம் இருக்காது. ஆனாலும், மக்கள் ஏதோ பிள்ளையார் கோயிலையே சுத்தி சுத்தி வருவது மாதிரி இருக்கும். என்னைக் கேட்டால் மயிலாடுதுறையின் இதயமான பகுதி இதுதான்னு சொல்வேன். ஆனால், இப்போது பாதாள சாக்கடைக்காக பாதையையே பிரித்து போட்டிருக்கிறார்கள். ஆறு மாசமாக ஆட்கள் வேலை செய்து கொண்டே இருக்கிறார்கள். எப்படியும் திரும்பவும் பார்முக்கு வர ஒரு வருஷம் ஆயிடும்!



முக்கூட்டில் எனக்கு புடிச்ச முக்கியமான விஷயம். ஒரு பக்கம் பிள்ளையார் கோயில், இன்னொரு பக்கம் தர்கா. இரண்டுக்குமிடையே ஒரு ரோடு. ரோட்டை காவல் காத்துக்கொண்டிருப்பது மாதிரி கையில் தடியோடு காந்தியின் சிலை!

Tuesday, September 21, 2004

வர்க்கப்புரட்சி

அந்த குறுகலான சந்திலிருக்கும் கீற்று கூரையுடன் கூடிய கட்டிடத்தில் வெளுத்துப்போன சிவப்புக்கொடி பறக்கிறது. சுவற்றில் ஸ்டாலின் தொடங்கி வாயில் நுழையாத பெயர் அடிக்குறிப்புடன் அயல்நாட்டு பிரபலங்களின் கருப்பு வெள்ளை படங்கள் பளிச்சிடுகின்றன. ஆங்காங்கே, பிட் நோட்டீஸ்களும், முதலாளிகளை எதிர்க்கும் டீஸெண்டான கண்டனக் குரல்களும் சுவற்றில் எழுதப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் புரட்சிகர கம்யூனிஸ கட்சி அலுவலகங்கள் நிறைய உண்டு. இது போன்ற அலுவலகத்தை எட்டிக்கூட பார்க்காதவர்களுக்கும் இந்தியாவின் எந்த மூலையிலிருக்கும் ரயில்வே ஸ்டேஷனிலும் தென்படும் புரட்சிகர வாசகங்களை படித்த அனுபவம் நிச்சயமாக இருக்கும்.

நாடு சுதந்திரமடைவதற்கு முன்னபாகவே இந்தியாவிலும் ஒரு வர்க்கப்புரட்சி நிச்சயம் நடக்கும் என்று நிறையபேர் நினைத்திருந்தார்கள். வெள்ளையர்களை வெளியேறிய பின்னர் நிச்சயம் இது நிகழக்கூடும் என்றுதான் சாமானியர்களிலிருந்து ஜவர்ஹலால் நேரு வரை எல்லோருமே நினைத்திருந்தார்கள். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வாரிசுகள் கம்யூனிஸ கொள்கையில்தான் ஈர்க்கப்பட்டிருந்தார்கள். ஆனார்ல, காந்திஜியோ அப்போதே வர்க்கப்போராட்டம் எதுவும் தேவையில்லை என்பதை அழுத்தி சொல்லிக்கொண்டு வந்திருக்கிறார். இந்தியா போன்ற நாடுகளில் பெரிதாக வர்க்கப்புரட்சி எதுவும் தேவையில்லை. சம்பந்தப்பட்ட இரு தரப்பிலும் நல்ல மனமாற்றம் இருந்தாலே போதும் என்பதுதான் அவரது கருத்து.

'வர்க்கப்புரட்சி என்பது இந்திய மண்ணிற்கு அந்நியமான விஷயம். அடிப்படை உரிமைகளை பரந்த நிலைத்தளமாக கொண்டு அனைவருக்கும் சமநீதி கிடைக்கும் வகையில் ஒரு புதுவடிவான கம்யூனிஸத்தை உருவாக்கும் திறமை நமக்கு இருக்கிறது' (Collected Works of Mahatma Gandhiji)

காந்தீய விழுமியங்கள் : வர்க்கப்புரட்சி

Friday, September 17, 2004

ரீ வியூ - மூன்று முடிச்சு

ஒரு பக்கம் ஹீரோ துணி துவைக்கிறார். இன்னொரு பக்கம் ஹீரோயினும் துணி துவைக்கிறார். 'டப்' ஓசை மெல்லிதாக ஆரம்பித்து பெரிதாக வளர்ந்து ஒத்திசைவாக உயரும்போது மாடியிலிருந்து ஒரு கருப்பு உருவம் வெறுப்போடு பார்த்து ஸ்டைலாக சிகரெட் பிடிக்கிறது. படமும் சூடு பிடிக்கிறது.

நண்பனின் காதல் மனதில் ஏற்படுத்தி வைத்த சபலம் விபரீதமாகி மோகம் மூச்சை முட்ட வெறித்தனம் விஸ்வரூபமெடுக்க ஒரு சமானியன் அடுக்கடுக்காய் செய்யும் தவறுகளையே வரிசையாக காட்சிகளாக்கி, மாறிய உறவு சமன்பாடுகளை ஏற்றுக்கொள்ளாத மனக் கிலேசத்தை மையமாக்கிய சைக்காலஜிகல் ட்ரீட்மெண்ட் தமிழ் சினிமாவுக்கு புதுசு. அதுவும் தமிழ் சினிமாவின் கெமிஸ்ட்ரியை மாற்றியமைத்து, வில்லனை மையப்படுத்திய மூன்று முடிச்சு, பாலசந்தரின் பரீட்சார்த்த முயற்சியில் வந்த ஒரு யதார்த்த சினிமா.

கலைந்த தலையும் கருப்பு நிறமுமாக ஒரு பையனுக்கும், கூரான மூக்குடன் பெரிய கண்களுடன் ஒரு புதுமுக பெண்ணிற்கும்தான் வெயிட்டான ரோல் என்று டைரக்டர் சொன்னதும் புரொட்யூசர் நிச்சயம் ஒரு மராத்தானுக்கு முயற்சி பண்ணியிருந்திருப்பார். இடைவேளை வரைக்கும் கமல்ஹாசன் ஒருவர்தான் மக்களுக்கு தெரிந்த முகம். இருந்தும் படம் ஜெயித்து தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்ததற்கு காரணம் கே.பி-ரஜினி-ஸ்ரீதேவி கூட்டணி.

தன்னுடைய மனைவியாக வரவேண்டியவள் அம்மாவாக வந்தால் என்ன ஆகும் என்கிற விபரீத கற்பனை கே.பியின் வழக்கமான டச். மூன்று முடிச்சில் புதுசாக கே.பி சொல்லியிருப்பது எந்தவொரு மனிதனையும் குற்றவுணர்ச்சி தப்ப விடுவதில்லை என்பதுதான். மனசாட்சியே வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து துரத்திக்கொண்டு வந்து நெருஞ்சிமுள்ளாய் நெஞ்சில் குத்துவதை வெற்றிகரமாக காட்சிப்படுத்தியிருப்பார். ஹே இரைச்சலுடன் அருவியின் பின்னணியில் கமலும் ஸ்ரீதேவியும் மவுத் ஆர்ஹான் வாசித்து நெருங்கி வரும் ரொமாண்டிக் ஸீன் படத்தின் இளமை துள்ளல்.

அமைதியாக, அழகாக வந்து ரஜினிக்கு நல்ல நண்பனாய் ஸ்ரீதேவியுடன் டீஸெண்டாய் ஒரு டூயட் பாடி பரிதாபமாய் செத்துப்போகும் சின்ன பாத்திரத்தில் கமல். கமலின் சாவுக்கு காரணம் தவறி விழுந்ததா அல்லது துடுப்பு போடுவதை நிறுத்திய ரஜினியா என்று பட்டிமன்றம் நடத்தினாலும் பதில் கிடைக்காத விஷயம். அந்த குழப்பம்தான் ரஜினி காரெக்ட¨ரை தூக்கி நிறுத்த காரணமாகிறது. ரஜினியின் பாத்திரம் வலியப் போய் மற்றவர்களுக்கு கெடுதல் செய்யாது. ஆனால், வாய்ப்புகள் வரும்போது சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறிவிடாது.

முதல் படத்திலேயே படு மெச்சூரான ரோலில் ஸ்ரீதேவி. கமல் வாங்கி தந்த புடவையை தீக்குச்சிக்கு தின்னக் கொடுத்துவிட்டு அதே டிஸைன் புடவையை கொடுத்து கட்டிக்க சொல்லும் ரஜினியை அருவெறுப்பாக பார்க்கும் ஸ்ரீதேவியின் முக பாவங்கள், ரஜினியை பார்க்கும்போதெல்லாம் சிரிப்பை தொலைத்துவிட்டு இறுக்கமாகும் முகம் என ஸ்ரீதேவி என நிறையவே ஆச்சரியப்படுத்தியிருப்பார். குடும்ப சூழ்நிலையின் காரணமாக அப்பா வயதிலிருப்பவரின் மனைவியாகும்போது கூடவே முதிர்ச்சியும் ஒட்டிக்கொள்கிறது.

காதலியாக இருந்தவரை அம்மாவாக பார்த்த அதிர்ச்சியில் ரஜினி உறைந்து நிற்கும்போது 'என்னடா கண்ணா...அப்படி பார்க்குறே.. நான் உன் அம்மா மாதிரிடா'ன்னு வசனம் பேசும்போது காட்டும் லாவகம் தனி ரகம். ஆனால், மிரட்டலுக்கு பயந்தோ அல்லது மிரட்டியவனை முக்குடைப்பதற்காக அம்மாவாக மாறுவது என யதார்த்ததை மீறிய கற்பனை, கதையோடு ஒட்டவில்லை. அப்பாவாக வந்து ரஜினியை திருத்தும் Calcutta Viswanathan, வயதுக்கு வந்த மகனிடம் தான் கல்யாணம் செய்துகொண்ட விஷயத்தை சொல்லும்போது காட்டும் தவிப்பில் பளிச்சிடுகிறார். நாகேஷை ஞாபகப்படுத்தும் ரஜினியின் தாத்தா கேரக்டரும் கலகலப்புக்கு உத்தரவாதம்.

தவறு மேல் தவறு செய்துவிட்டு குற்றவுணர்ச்சியை மறைக்க முடியாமல் தவிக்கும் நெகடிவ் பாத்திரம் ரஜினிக்கு. படத்தில் வசனத்தை விட ரஜினியின் கைகளுக்குதான் அதிக வேலை. பயத்தையும் அதிர்ச்சியையும் வெளிக்காட்டாமலிருக்க சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடித்த ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் காட்சியும், டேபிளின் மீது வைக்கப்பட்டிருக்கும் துப்பாக்கியை எடுப்பதா, வேண்டாமா என்கிற மனப்போராட்டத்தை டைட் குளோஸப்பில் வெளிப்படுத்தும் காட்சியிலும் ரஜினியின் உள்ளிருக்கும் நல்ல நடிகர் எட்டி பார்ப்பார்.

கமலின் இழப்பை நினைத்து டேபிளில் தலைவைத்து குலுங்கி அழும் காட்சி, படகிலிருந்து தவறி விழுந்த அப்பாவை காப்பாற்ற முடியாமல் தவிக்கும் நேரத்திலும் கொஞ்சம் பரிதாபத்தை வரவழைத்திருப்பார். ஆரம்ப காட்சிகளில் அமைதியாக வந்துவிட்டு, தனது குரூர வில்லத்தனத்தை காட்டி கிளைமாக்ஸில் பரிதாபமாய் திருந்திவிட்டதாக அழும் காட்சிகளில் சடார், சடாரென்று மாறும் முகபாவங்கள்தான் தமிழ் சினிமா ஆடியன்ஸீக்கும் வில்லனுக்கும் இருந்த இடைவெளியை குறைக்க ஆரம்பித்த விஷயங்கள்.
கமலின் முதுகை நோட்டீஸ் போர்டாக்கி ரஜினியும் ஸ்ரீதேவியும் மோதிக்கொள்வதும் ஸ்ரீதேவியின் மீதிருக்கும் கோபத்தில் வேலைக்காரியிடம் தவறாக நடந்துகொள்வது அக்மார்க் வில்லத்தனம் என்றால் ஸ்ரீதேவி தன்னைவிட்டு எங்கும் போய்விட முடியாது என்கிற அதீத தன்னம்பிக்கையுடன் அநாயசமாக ரஜினியிடமிருந்து வரும் சிரிப்பு வழக்கமான பி.எஸ் வீரப்பா ஸ்டைல்.

பாத்ரூமில் குளிக்கும் ஒய். விஜயாவின் கோர முகத்தை பார்த்துவிட்டு அதிர்ந்து போய் ஓடும் காட்சி படத்துக்கு தேவையில்லை என்றாலும் கே.பியின் அழுத்தமான டச் மனதை தொடுகிறது. வசந்த கால நதியினிலே, ஆடி வெள்ளி என எம்.எஸ்.வி-கண்ணதாசன் கூட்டணிக்கு இன்னொரு பெயர் சொல்லும் படம். காதலனை இழந்துவிட்டு கலங்கி நிற்கும் பெண்ணிற்கு ஆறுதல் சொல்ல மாயவனை துணைக்கு அழைக்கிறார்.

மன வினைகள் யாருடனோ
மாயவனின் விதி வகைகள்
விதிவகைகள் முடிவு செய்யும்
வசந்த கால நீரலைகள்...

வாழ்க்கையின் தாத்பரியத்தை நாலே வரிக்குள் மடித்து அடக்கிவிட்ட கண்ணதாசன் நிஜமாகவே கிரேட்தான்!

Thursday, September 16, 2004

கணக்கு வாத்தியார்!

நிஜமான பெயர் - சிவகங்கை சின்னப் பையன்

உத்தியோகம் - கழுவுற தண்ணியில நழுவுற மீன்

வயசு - அரசியலில் முன்னுக்கு வர ஆரம்பிக்கும் வயசு

சமீபத்திய சாதனை - துண்டு போடும் வேலைக்கு துண்டு போட்டு பிடிச்சது

அரசியல் எதிரிகள் - தேர்தல் நேரத்தில் போயஸ் தோட்டத்து அல்லிராணி மத்த நேரத்தில் கோபாலபுரத்து கிருஷ்ணர்

சமீபத்திய வருத்தம் - போயஸ் தோட்டத்து மெளனச் சாமியார் கைகழுவியது

சமீபத்திய எரிச்சல்- புரசை பிஸ்தா தேசியத்திலிருந்து திராவிடத்துக்கு நழுவியது

ஜனநாயகப் பேரவை - ஒன் மேன் ஷோ

மூன்றாவது அணி - யாரும் கண்டுக்காதபோது முணுமுணுக்கும் மந்திரம்

திடீர் நண்பர் - தைலா தோட்டத்து மரத் தமிழன்

குறைந்தபட்ச செயல்திட்டம் - ஜக்குபாய் பட வெளியீட்டு விழாவில் தலைகாட்டுவது

நீண்டகால செயல்திட்டம் - கார்த்திக் சிதம்பரத்தை காபினட் அமைச்சராக்குவது

நீண்டகால சாதனை - அறிவு ஜீவி இமேஜ் அடிபடாமல் அரசியல் நடத்துவது

ஹேப்பி பர்த்டே ஸார்!

Monday, September 13, 2004

சாருநிவேதிதாவின் மெயின் லைன்!

தொண்ணூறுகளில் சாருநிவேதிதாவின் எக்ஸ்டென்ஷியலிஸம் வெகு பிரபலம். சாருவின் எழுத்துக்கள் எனக்கு பரிச்சயமானது தினமலர் அந்துமணியின் பா.கே.ப மூலமாகத்தான். அவரது ஸீரோ டிகிரியின் சில பக்கங்களை மட்டும் படிக்க நேர்ந்தபோது கூசிப்போனேன். என்னைப் பொறுத்தவரை சாருவின் படைப்புகள் என்றால் சென்ற ஆண்டில் இந்தியா டுடேவில் எழுதிய கட்டுரைகள்தான் ஞாபகத்துக்கு வரும். ஆபாசமான வார்த்தைகளை டிக்ஷனரியாக தொகுக்க நினைப்பவர்கள் சாருவை தவிர்க்க முடியாது. எழுத்தில் மட்டுமல்ல நேரிலும் சாரு கட்டுப்பாடில்லாத சுதந்திரமான மனிதர்தான். ஆனால், தனது படைப்புகளின் மூலம் வாசகனையும் ஆபாசம்தான் முக்கியமான அம்சம் என்கிற கட்டுப்பாட்டிலேயே அவர் வைத்திருப்பது ஏன் என்கிற கேள்விக்குதான் பதிலில்லை. 'நேநோ'வை அசோகமித்திரன் புகழ்ந்து தள்ளியிருப்பதற்கும் உயிர்மை ஆண்டுவிழாவில் அசோகமித்திரனின் பேச்சை மட்டும் ஆவலாக கேட்டுவிட்டு சாரு இடத்தை விட்டு நகர்ந்ததற்கும் சம்பந்தமில்லையென்றுதான் நான் நினைக்கிறேன். சாருவை குறை சொல்லி புண்ணியமில்லை. ஒரு காலத்தில் 'மஜா'வான எழுத்துக்களுக்கு பேர் போன சாருநிவேதிதாவுக்கு போட்டியாக சில பெண் கவிதாயினிகள் வந்ததுதான் காலத்தின் கோலம்.

சமீபத்தில் 'படித்துறை'யை இன்னொருவர் படிக்க பக்கத்திலிருந்து பார்த்தபோது ஒரு கவிதாயினி எழுதிய மொழிபெயர்ப்புக் கவிதைகள்தான் கண்ணில் தட்டுப்பட்டன. வழக்கம்போல நாமெல்லோரும் எதிர்பார்க்கும் 'சுதந்திரமான' சிந்தனைகளாகவே கவிதையும் இருந்தது. பத்ரியின் ஆதங்கத்தில் நியாயமிருக்கிறது. புணர்தல் சம்பந்தமாக எதையாவது எழுதி வைத்தால்தான் ஜென்மம் சாபல்யமடையும் என்கிற வியாதி இன்று இலக்கியவாதிகளுக்கு மத்தியில் பரவி வருகிறது. சாருவுக்கு நம்ம பிரகாஷ் வேறு வக்காலத்து வாங்குகிறார். சாரு ஆரம்பத்தில் நல்ல சிறுகதைகளை எழுதினார் என்பதற்காக இப்போது எந்த சாக்கடையை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்கிற ஆதங்கத்தை பிரகாஷ் கூட புரிந்துகொள்ளவில்லையே! ஆனால், சாருவிடம் 'எழுத்து திருட்டு' இருக்கிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவரிடம் திறமை இருக்கிறது என்பது வெளிப்படை. அவரது நடையும் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. ஜீரணிக்க முடியாத விஷயம், மறைக்க வேண்டிய விஷயத்தையெல்லாம் வேண்டுமென்றே பரபரப்பிற்காக முச்சந்தியில் போட்டு உடைத்து அலம்பல் பண்ணுவதுதான்!

Wednesday, September 08, 2004

ரீ-வியூ - அபூர்வ ராகங்கள்



வாணிஜெயராமின் கணீர் குரலில் 'கேள்வியின் நாயகனே...' என்று ஸ்ரீவித்யா வாயசைக்கும் காட்சிதான் ஒரு வழியாக கத்தியின்றி யுத்தமின்றி கிளைமாக்ஸ் கலாட்டா எதுவுமின்றி நம்மை ஸீட் நுனிக்கு வரவழைக்கும். படத்தின் கதையையும் ஓரே பாட்டில் சொல்லிவிடும்! தமிழ்க் கலாசாரத்தின் (தமிழ் சினிமாவின் ?) சமன்பாடுகளை கலைத்துப்போட்டுவிட்டு பின்னர் குழம்பிப் போய் ஒழுங்காக அடுக்கி வைக்கும் குழப்பமான கிளைமாக்ஸாக இருந்தாலும் அபூர்வ ராகங்கள் நிச்சயம் அபூர்வமான படம்தான்.

கணவனை பிரிந்திருக்கும் கர்நாடக பின்னணி பாடகியின் மீது ஒரு ரசிகனுக்கு வெறித்தனமான காதல். பாடகியின் ஒரே செல்லப் பெண்ணிற்கோ அதே ரசிகனின் அப்பாவின் மீது காதல். இளைய தலைமுறை, முதிய தலைமுறையை விரும்பும் டேஸ்ட்டை டீஸெண்டாக சொல்லிவிட்டு நம்மூர் கலாச்சாரத்தை நினைத்து கவலைப்பட்டு மேட்டரை அப்படியே கைகழுவி விட்டு எஸ்கேப்பாகிவிடுகிறார் டைரக்டர் கே. பாலசந்தர்.

அவள் ஒரு தொடர்கதை, அரங்கேற்றம் என்று வெற்றிப்படிகளில் நின்று கொண்டிருந்த கே.பியின் உயரத்தை தக்க வைத்து தமிழ் சினிமாவுக்கு இன்னொரு ஸ்ரீதர் கிடைத்திருக்கிறார் என்கிற செய்தியை இந்திய சினிமாவுக்கு சொன்னது அபூர்வ ராகங்கள். ·பார்முலா படங்களில் சிக்கிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவில் அன்னக்கிளி கொண்டு வந்திருந்த மாற்றத்தை உறுதிப்படுத்தி இயக்குனர்களின் யுகம் தொடங்கிவிட்டத்தை உறுதிப்படுத்தியது அபூர்வராகங்கள்தான்.

பிரபல வசவு வார்த்தையோடு அறிமுகமாகும் கமல்ஹாசன் படத்தின் நிஜமான அமுல்பேபி. சின்ன விஷயத்திற்கெல்லாம் ஏகத்துக்கும் கோபப்பட்டு, உணர்ச்சிவசப்பட்டு... கமலின் நடிப்புக்கு நல்ல தீனி. இருபத்து நாலு படங்களில் வராத மெச்சூரிட்டியை அபூர்வ ராகங்கள் அள்ளிக் கொடுத்திருக்கிறது. ஹீரோவாக பிரமோஷன் என்றாலும் ஸ்ரீவித்யாவை கவருவதற்காக வில்லங்கமான விஷயங்களை செய்துவிட்டு மனசாட்சி உறுத்தல்களையும் வெளிப்படையாக காட்டியது ஹீரோ என்பதை விட நல்ல குணச்சித்திர ரோலாகவே மனதில் நிற்கிறது.

பவுடர் மேல் பவுடர் பூசியும் மேக்கப் எடுபடாத வேடத்தில் மேஜர் சுந்தராஜனை திணித்து ஜெயசுதாவுக்கு அவர் மீது வரும் காதலை நியாயப்படுத்த காட்சிகள் எதுவுமில்லாது படத்தின் பெரிய குறை. தேசிய கீதத்திற்கு யாரோ சரியான மரியாதை செய்யாததால் கமலுக்கு வரும் கோபம் படு செயற்கை. வெறித்தனமாக ரசிகனை பாடகி வீட்டுக்குள்ளே வைத்திருக்கவேண்டிய அவசியமென்ன என்கிற கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை. ஆனாலும், ஏழு கேரக்டர்களை வைத்துக்கொண்டு படத்தை ஜிவ்வென்று இழுத்து ஒவ்வொரு ரீலிலும் ஒவ்வொரு ஸ்வரங்களை காட்டினாலும் தாளம் தப்பவில்லை.

கமல், ஸ்ரீவித்யா தவிர டாக்டர் வைத்தியாக வரும் நாகேஷ¥ம் கவியரசுவாகவே வரும் கண்ணதாசனும் நிறையவே ஸ்கோர் பண்ணுகிறார்கள். சினிமா புள்ளிவிவர கணக்குகளுடன் எப்போதும் தொண தொணக்கும் நாகேஷ், எப்போது கேட்டாலும் கவிதை படிக்கும் கண்ணதாசனும் ரசிகர்களின் மனதில் ரொம்ப நாள் இருந்தார்கள். 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்...' என்று கண்ணதாசனும் எம்.எஸ்வியும் ஆச்சரியப்படுத்தியிருப்பார்கள். அதே கூட்டணியில் 'அதிசய ராகம்..' சொல்லும் ஜேசுதாஸின் குரலில் வரும் பாடல் இன்னும் ஜீவித்திருக்கிறது.

இப்படியெல்லாம் படத்தை பற்றி விமர்சித்தாலும் வெகு சாதாரணமாக சித்தரிக்கப்பட்ட அந்த புதுமுகத்தின் அறிமுகம்தான் தமிழ் சினிமாவின் சகாப்தத்தில் அபூர்வ ராகங்களின் பெயரை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறது. அந்த புதுமுகத்தின் பெயரை குறிப்பிட மறந்த பத்திரிக்கை விமர்சனங்கள் நிறைய. படத்தின் வெற்றிவிழாவில் கலைஞரின் கையால் விருது கிடைக்கும் வாய்ப்பு கூட இல்லாமல் போய்விட்ட அந்த புதுமுகத்தின் முதல் படமாக மட்டுமே அபூர்வ ராகங்கள் இன்று சினிமா ஆய்வாளர்களால் எடுத்தாளப்படுவது வேடிக்கை.

'சுருதிபேதம்' டைட்டில் கார்டுடன் அறிமுகமாவதிலிருந்து ஆடியன்ஸோடு ஆடியன்ஸாக இருட்டிலிருந்தபடியே செத்துப்போகும் கிளைமாக்ஸ் வரை சொற்ப காட்சிகளில் கருப்புக் கோட்டு சகிதம் கலைந்த முடியுடன் ஸ்ரீவித்யாவின் திருந்திய கணவராக வரும் அந்த கருப்பு முகத்தில் பிரகாசமான ஒளி எதுவும் தென்படாது. 'பைரவி வீடு இதுதானே..' என்று கேட்கும் முதல் டயலாக்கில் பரிதாபம் கொஞ்சமாய் எட்டிப் பார்க்கும்.

படத்தில் டாக்டர் வைத்தியாக வரும் நகேஷ், அந்த கருப்பு கோட்டு கணவரிடம் பிரேம் நஸீர் நடித்த நூறாவது படம் எது என்று கேட்டு, தவறான பதிலில் முகம் சுளித்து இதுவே உனக்கு கடைசியாக இருக்கட்டுமென்று சபித்துவிட்டு போய்விடுவார்.

நல்லவேளை....அபூர்வ ராகம், கடைசி ராகமாகிவிடாமல் இன்னும் சுகமான ராகமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது!

Friday, September 03, 2004

இன்னிக்கு படிச்சதுல புடிச்சது!

இரா.முருகன் பேட்டி

முத்துராமன் கதை

ராஜீவ் கொலை பற்றிய பத்ரியின் பதிவு

காந்தீய விழுமியங்கள் - தொழிலாளர் நலன்

துக்ளக்கில் சத்யாவின் கைவண்ணம். சாம்பிளுக்கு சில...

அன்பழகன், கருணாநிதியிடம்

'ரொம்ப டயர்டா இருக்குது. அடிக்கடி மாநாடு, மீட்டிங்னு கூப்பிடாதீங்க. ஸ்டாலின்தான் அடுத்த தலைவர்னு இந்த டேப்ல பேசியிருக்கேன். எத்தனை தடவை வேணும்னாலும் யூஸ் பண்ணிக்குங்க..'


ஜெயலட்சுமியிடம் நீதிபதி

'என்னம்மா, பட்டியல் சின்னதா இருக்குது? யார் மிரட்டலுக்கும் பயப்படாம உண்மையை சொல்லு..'

'இல்லை ஸார், இந்த பட்டியல்ல இருக்குற போலீஸ் தவிர மத்தவங்க எல்லாம் எனக்கு அநீதி இழைச்சிருக்காங்க..'