Monday, September 13, 2004

சாருநிவேதிதாவின் மெயின் லைன்!

தொண்ணூறுகளில் சாருநிவேதிதாவின் எக்ஸ்டென்ஷியலிஸம் வெகு பிரபலம். சாருவின் எழுத்துக்கள் எனக்கு பரிச்சயமானது தினமலர் அந்துமணியின் பா.கே.ப மூலமாகத்தான். அவரது ஸீரோ டிகிரியின் சில பக்கங்களை மட்டும் படிக்க நேர்ந்தபோது கூசிப்போனேன். என்னைப் பொறுத்தவரை சாருவின் படைப்புகள் என்றால் சென்ற ஆண்டில் இந்தியா டுடேவில் எழுதிய கட்டுரைகள்தான் ஞாபகத்துக்கு வரும். ஆபாசமான வார்த்தைகளை டிக்ஷனரியாக தொகுக்க நினைப்பவர்கள் சாருவை தவிர்க்க முடியாது. எழுத்தில் மட்டுமல்ல நேரிலும் சாரு கட்டுப்பாடில்லாத சுதந்திரமான மனிதர்தான். ஆனால், தனது படைப்புகளின் மூலம் வாசகனையும் ஆபாசம்தான் முக்கியமான அம்சம் என்கிற கட்டுப்பாட்டிலேயே அவர் வைத்திருப்பது ஏன் என்கிற கேள்விக்குதான் பதிலில்லை. 'நேநோ'வை அசோகமித்திரன் புகழ்ந்து தள்ளியிருப்பதற்கும் உயிர்மை ஆண்டுவிழாவில் அசோகமித்திரனின் பேச்சை மட்டும் ஆவலாக கேட்டுவிட்டு சாரு இடத்தை விட்டு நகர்ந்ததற்கும் சம்பந்தமில்லையென்றுதான் நான் நினைக்கிறேன். சாருவை குறை சொல்லி புண்ணியமில்லை. ஒரு காலத்தில் 'மஜா'வான எழுத்துக்களுக்கு பேர் போன சாருநிவேதிதாவுக்கு போட்டியாக சில பெண் கவிதாயினிகள் வந்ததுதான் காலத்தின் கோலம்.

சமீபத்தில் 'படித்துறை'யை இன்னொருவர் படிக்க பக்கத்திலிருந்து பார்த்தபோது ஒரு கவிதாயினி எழுதிய மொழிபெயர்ப்புக் கவிதைகள்தான் கண்ணில் தட்டுப்பட்டன. வழக்கம்போல நாமெல்லோரும் எதிர்பார்க்கும் 'சுதந்திரமான' சிந்தனைகளாகவே கவிதையும் இருந்தது. பத்ரியின் ஆதங்கத்தில் நியாயமிருக்கிறது. புணர்தல் சம்பந்தமாக எதையாவது எழுதி வைத்தால்தான் ஜென்மம் சாபல்யமடையும் என்கிற வியாதி இன்று இலக்கியவாதிகளுக்கு மத்தியில் பரவி வருகிறது. சாருவுக்கு நம்ம பிரகாஷ் வேறு வக்காலத்து வாங்குகிறார். சாரு ஆரம்பத்தில் நல்ல சிறுகதைகளை எழுதினார் என்பதற்காக இப்போது எந்த சாக்கடையை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்கிற ஆதங்கத்தை பிரகாஷ் கூட புரிந்துகொள்ளவில்லையே! ஆனால், சாருவிடம் 'எழுத்து திருட்டு' இருக்கிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவரிடம் திறமை இருக்கிறது என்பது வெளிப்படை. அவரது நடையும் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. ஜீரணிக்க முடியாத விஷயம், மறைக்க வேண்டிய விஷயத்தையெல்லாம் வேண்டுமென்றே பரபரப்பிற்காக முச்சந்தியில் போட்டு உடைத்து அலம்பல் பண்ணுவதுதான்!