Tuesday, September 21, 2004

வர்க்கப்புரட்சி

அந்த குறுகலான சந்திலிருக்கும் கீற்று கூரையுடன் கூடிய கட்டிடத்தில் வெளுத்துப்போன சிவப்புக்கொடி பறக்கிறது. சுவற்றில் ஸ்டாலின் தொடங்கி வாயில் நுழையாத பெயர் அடிக்குறிப்புடன் அயல்நாட்டு பிரபலங்களின் கருப்பு வெள்ளை படங்கள் பளிச்சிடுகின்றன. ஆங்காங்கே, பிட் நோட்டீஸ்களும், முதலாளிகளை எதிர்க்கும் டீஸெண்டான கண்டனக் குரல்களும் சுவற்றில் எழுதப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் புரட்சிகர கம்யூனிஸ கட்சி அலுவலகங்கள் நிறைய உண்டு. இது போன்ற அலுவலகத்தை எட்டிக்கூட பார்க்காதவர்களுக்கும் இந்தியாவின் எந்த மூலையிலிருக்கும் ரயில்வே ஸ்டேஷனிலும் தென்படும் புரட்சிகர வாசகங்களை படித்த அனுபவம் நிச்சயமாக இருக்கும்.

நாடு சுதந்திரமடைவதற்கு முன்னபாகவே இந்தியாவிலும் ஒரு வர்க்கப்புரட்சி நிச்சயம் நடக்கும் என்று நிறையபேர் நினைத்திருந்தார்கள். வெள்ளையர்களை வெளியேறிய பின்னர் நிச்சயம் இது நிகழக்கூடும் என்றுதான் சாமானியர்களிலிருந்து ஜவர்ஹலால் நேரு வரை எல்லோருமே நினைத்திருந்தார்கள். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வாரிசுகள் கம்யூனிஸ கொள்கையில்தான் ஈர்க்கப்பட்டிருந்தார்கள். ஆனார்ல, காந்திஜியோ அப்போதே வர்க்கப்போராட்டம் எதுவும் தேவையில்லை என்பதை அழுத்தி சொல்லிக்கொண்டு வந்திருக்கிறார். இந்தியா போன்ற நாடுகளில் பெரிதாக வர்க்கப்புரட்சி எதுவும் தேவையில்லை. சம்பந்தப்பட்ட இரு தரப்பிலும் நல்ல மனமாற்றம் இருந்தாலே போதும் என்பதுதான் அவரது கருத்து.

'வர்க்கப்புரட்சி என்பது இந்திய மண்ணிற்கு அந்நியமான விஷயம். அடிப்படை உரிமைகளை பரந்த நிலைத்தளமாக கொண்டு அனைவருக்கும் சமநீதி கிடைக்கும் வகையில் ஒரு புதுவடிவான கம்யூனிஸத்தை உருவாக்கும் திறமை நமக்கு இருக்கிறது' (Collected Works of Mahatma Gandhiji)

காந்தீய விழுமியங்கள் : வர்க்கப்புரட்சி