Monday, November 29, 2004

திருக்கார்த்திகை தீபம்

தீபத்திருநாள்தான் நமக்கெல்லாம் நிஜமான தீபாவளி! மண்பாண்டத்தில் செய்யப்பட்ட விளக்கு, நல்லெண்ணெய் வாசம், தீபாவளிக்கு வாங்கி வெடிக்காமல் நமத்துப்போயிருக்கும் பட்டாசு, பிசுபிசுவென்று கையில் ஒட்டிக்கொண்டாலும் இனிக்க வைக்கும் பொரி, பெரிய கோயில் சொக்கப்பானை, அதில் தேடிக்கண்டுபிடித்து வீட்டுக்கு எடுத்துவரும் கரித்துண்டுன்னு சுவராசியமான நினைவுகள்...

போன வருஷம் திருக்கார்த்திகைக்கு பஸ்ஸில் இடம் கிடைக்காமல் நின்று கொண்டே திருவண்ணாமலை போய் சேர்ந்து ஏதோ ஒரு தெரு முனையில் நின்று அண்ணாந்து பார்த்து அண்ணாமலை தரிசனம் செஞ்சதை விட கூடுதல் திருப்தி 'ஜெயா' டிவியின் புண்ணியத்தில் இந்த வருஷம் வீட்டிலிருந்தபடியே கிடைத்துவிட்டது. திருவண்ணாமலைக்கு போனால் கூட கோயில் பிராகாரத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை பார்க்க முடியாது. அதுவும் தீபம் ஏற்றியவுடன் திருவண்ணாமலை நகரத்துக்கே வெளிச்சம் வரும் காட்சியை தெருவில் நின்று பார்ப்பதைவிட வீட்டின் திண்ணையில் உட்கார்ந்து டிவியில் பார்ப்பதில் பரவசம். அகிலா கிரேனில் சரசரவென்று ஆக்ஷன் படம் மாதிரி காமிரா இயங்கி, எறும்பு போல ஊர்ந்து போகும் மக்களை படம்பிடித்தது அசத்தல். சன்டிவியாக இருந்திருந்தால் டெக்னாலஜியில் இன்னும் அசத்தியிருப்பார்கள். தடையாக இருப்பது பகுத்தறிவு கொள்கையா, சீரியலில் வரும் பணமான்னுதான் தெரியவில்லை! நமக்கெதுக்கு அரசியல்?!

சாம்பிளுக்கு குவாலிட்டி இல்லாத ஸ்டில்ஸ் கொஞ்சம். ஜெயாடிவியிலிருந்து சுட்டவை!

திருவண்ணாமலை சாயங்கால நேரம்...



உண்ணாமலை அம்மன் உற்சவத்துக்கு ஆஜர்...



கவுண்டிங் ஸ்டார்ட்ஸ்....



சிக்னல் கொடுத்தாச்சு!



மலை மீது தீபம்!



பிரகாசமாய் கொழுந்துவிட்டு...



கீழே, கோயில் பிரகாரத்தில் தீபம்...



லைட்ஸ் ஆன்..!



ஜொலிக்குதே...தங்கம் போல் ஜொலிக்குதே!



எறும்பு போல பக்தர்கள், அண்ணாமலையாரை சுற்றி!



அண்ணாமலையாருக்கு அரோஹரா!

Wednesday, November 24, 2004

தேவை - ஓரு தியரி

(19.9.2004 நாளிட்ட கல்கி வார இதழில் வெளியானது)

இந்த உலகத்துல எல்லோரும் எதையாவது தேடிக்கிட்டேதான் இருக்கோம். வசதியில்லாதவன் பணத்தை தேடி அலையறான். பணம் நிறைய வெச்சிருக்கிறவன் பேரு வேணும்னு அலையறான். எல்லோரும் ஏதாவது ஒண்ணை தேடிக்கிட்டே இருக்கிறதுலேயே நம்ம வாழ்க்கை அப்படியே 'வணக்கம்' போடறவரைக்கும் போயிடறது. அப்படியே தேவையானது கிடைச்சாலும் மனசு புல்ஸ்டாப் போட மறுத்துவிடும். ஜட்டி வாங்குலாம்னு சென்னை சில்க்ஸ் போய்ட்டு அரை டஜன் டிஷர்ட்டும் நாலும் பேன்ட் பிட்டும் வாங்கிட்டு வர்றது சகஜம்தானுங்களே!

இதையெல்லாம் 'மகனே, எதை நீ தேடுகிறாய்'னு ரமணர் கேட்டு பதில் சொன்னாலும் ஏதோ ஸ்பிரிச்சுவல் மேட்டர்னு நினைச்சு எஸ்கேப்பாகிவிடுகிறோம். நம்ம ஆளுங்களும் மனுஷனோட தேவைகளை பத்தி கரெக்டா தப்பான்னு வெறும் தத்துவமாவே பேசிட்டு போயி சேர்ந்துட்டாங்க. ஆனா, ஏ.எச். மாஸ்லோன்னு ஒரு ஆசாமி மனுஷனோட வெவ்வேறு தேவைகளுக்கு நடுவே ஏதோ ஒரு தொடர்பு இருக்குறதா அடிக்கடி மோட்டுவளையை பார்த்து யோசிக்க ஆரம்பிச்சு சீக்கிரமா ஒரு முடிவுக்கும் வந்ததுனால கிடைச்சதுதான் மாஸ்லோவோட 'தேவை' தியரி. எம்சிஏ படிக்கிறச்ச Behavioural Theory பேப்பரில் என் மண்டையில ஏறின விஷயத்துல இதுவும் ஒண்ணு.

ஏ.எச் மாஸ்லோ, மனுஷனோட விதவிதமான தேவை எல்லாத்தையும் ஒரு லிஸ்ட் எடுத்து அதுல ஏதோ ஒரு ஒத்துமை இருக்கிறதையும் கண்டுபிடிச்சுட்டாரு. அதுவுமில்லாம எல்லா மனுஷனும் ஒரு தேவையான விஷயங்கள் கிடைச்ச பின்னாடிதான் அடுத்த தேவையை தேடி அலையறாங்கிறாங்கிற சிம்பிளான விஷயத்துலேர்ந்து எந்தெந்த தேவைக்குக்கெல்லாம் முதல்ல முன்னுரிமை கொடுக்கிறாங்கிறதையும் விலாவாரியா தியரியில சொல்லியிருக்காரு. எல்லா மனுஷனுக்குமே முதல்ல தன்னுடைய தேவைகளெல்லாம் கரெக்டா கிடைச்சுட்டான்னு முதல்ல பார்த்துக்குறானாம். அப்புறமாதான் சமூக சேவை அது இதுன்னு அலைய ஆரம்பிக்கிறான்னு மாஸ்லோ சொல்றாரு. சரி, கொஞ்சம் டீடெய்லாவே பார்த்துடலாம்.

முதல்ல அவரு சொல்றது. அடிப்படை தேவை. அதாவது உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம். கூடவே தண்ணியையும் சேர்த்துக்கலாம். சென்னைவாசியாயிருந்தா வாட்டர் டேங்க் சத்தம் கேட்டவுடனே மேலே சொன்ன ஐட்டத்தையெல்லாம் மறந்துட்டு ஓடுவான் பாருங்க.. ஒரு ஓட்டம். அது தனி கதை...சொந்த கதை, சோக கதை!

ரெண்டாவது, பாதுகாப்பு தேவை. நமக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா என்னா பண்றதுங்கிற கேள்விதான் மனுஷனை ரொம்பவே ஆட்டிப்படைக்குது. சில அதிசிய பிறவிங்க கல்லறையெல்லாம் கட்டி வைக்குதுங்க. செத்துப்போனா நல்ல இடத்துல கொண்டுபோய் வைப்பானுங்களோ இல்லையோங்கிற பயத்துல. கொஞ்சம் காசு கையில வந்ததும் பேங்குல போட்டு வைக்கிறது, எல்ஐசி ஏஜெண்டுகிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறது இதெல்லாமே பாதுகாப்பு தேவைதாங்க!

மூணாவது தேவை, துணை. அதாவது மொத இரண்டும் கிளிக் ஆயிடுச்சுன்னாலே மனுஷனுக்கு பயங்கர கஷ்டமெல்லாம் வந்துடும். அதாவது வந்துட்ட மாதிரி ஒரு ·பீலிங். நாட்டுல நம்மளை யாரும் கண்டுக்க மாட்டேங்கிறானேன்னு ஒரு கவலை. யாராவது நம்மளை முதுகுல தட்டிக்கொடுக்க மாட்டாங்களான்னு ஒரு ஏக்கம். அதுக்குத்தான் ஒத்தாசைக்கு ஒரு நண்பர்கள் வட்டாரம். ஒரு சிங்கிள் டீ அடிச்சுட்டு தினத்தந்தி படிச்சுட்டு கதை கதையா அடுத்தவனுக்கு சொல்றதுல ஆரம்பிச்சு இலக்கிய கூட்டம் போடறது வரைக்கும் இதுதான் காரணம்.

நாலாவது தேவை. பாராட்டு, பிரஸ்டீஜ். மேலே சொன்னது மேட்டரிலிருந்து இது கொஞ்சம் வித்தியாசமான ஈகோ மேட்டர். சொஸைட்டியிலே ஒரு ஸ்டேட்ஸ் கிடைக்கணுங்கிறதுக்காக எதையாவது செஞ்சு வைக்கிறது. ·பிரண்டோட அப்பாவோட பிறந்த நாளுக்கு அவரோட பேரை விட தன்னோட பேரை பெரிசா போட்டு போஸ்டர் அடிச்சு ஒட்டறது. நான் யாரையும் ·பாலோ பண்ணமாட்டேன்னு தனி வழியில போறது எல்லாமே லிஸ்ட்டுல உண்டு. பெரும்பாலும் அடுத்தவன் செய்யறான்கிறதுக்காக குக்கர் உதைச்சு எதையாவது செஞ்சுட்டு திரியறது.

கடைசியா சுய பரிசோதனை. நாலு தேவையும் பூர்த்தியான பிறகுதான் மனுஷனுக்கு ஞானாதேயமே வருது. ஏதாவது உருப்படியா சேலன்ஜிங்கா செய்யணுமேன்னு. தனக்கும் உருப்படியா இந்த சொஸைட்டிக்கும் உருப்படியா ஏதாவது செய்யணும்னு நினைக்கிறது. நிஜமாவே நமக்கு என்ன தெரியும் அதை வெச்சு உருப்படியா என்ன பண்ணலாம்னு யோசிச்சு பண்றது.

சிலபேரு அடிப்படை தேவை கிடைச்சதுமே மத்ததை பத்தி நினைக்காம சொஸைட்டிக்காக ஏதாவது பண்ண நினைக்கிறதும் உண்டும். அதையெல்லாம் 'தெய்வ மச்சான்' லிஸ்டில்தான் சேர்த்ததாகணும். ஒவ்வொருத்தனுக்கு ஒவ்வொரு தேவை முக்கியமா இருக்கிறதுக்கிறதுக்கு காரணம் சைக்காலஜி, வளர்ந்து சூழல், படிச்ச படிப்பு எல்லாமே காரணம்தான்னு மாஸ்லோ சொல்றார். இதெல்லாம் இருக்கட்டும். ஏதோ ஒரு 'தேவை'யை மனசுல வெச்சிக்கிட்டு நம்மளை சுத்தி வரும் பார்ட்டிகளிடமிருந்து எஸ்கேப்பாக ஏதாவது தியரி இருக்குதா ஸார்?

Monday, November 22, 2004

காமெடி டைம்முங்கோ!

ஜெயா டிவியில் ரேடியோ விளம்பரத்தை உல்ட்டா பண்ணும் மாறன் கோஷ்டி

'லேட்டா வந்துட்டேன்னு கோவமா'?

'ஆமா, இனிமே லேட்டா வந்தா....'

'லேட்டா வந்தா...'

'அர்ச்சனாவோடதான் வரணும்'

'கூப்பிட்டு பார்த்தேனே... அவ புருஷன் ஒத்துக்க மாட்டேன்னுட்டான்'

கே டிவியில் ஏதோ ஒரு படத்தில் கவுண்டமணி-செந்தில் கோஷ்டி

'சே... சுவரேறி குதிச்சு திருடறது வெறுத்துப்போயிடுச்சுண்ணே..அதனால..'

'அதனால...'

'அரசியல்ல குதிக்கலாம்னு முடிவுபண்ணிட்டேன்..'

'அட, நாயே..ரெண்டும் ஒண்ணுதாண்டா..'

கொஞ்சம் சீரியஸான காமெடி. என்டிடிவியில் முலாயம்சிங் யாதவ்

'நல்ல வசதிகளுடன் இருக்கும் தனி வீட்டில் காஞ்சி சங்கராச்சாரியரை தங்க வைத்து விசாரிப்பதை விட்டுவிட்டு அந்த புனிதமானவரை சிறையிலடைப்பது இந்துக்களை புண்படுத்திவிடும்'

Thursday, November 18, 2004

யாரோடு யார்...

யாரோடு யார்தான் என்பது
உண்டாகும்போதே உள்ளது.
வானோடு நீலம் சேர்ந்தது
வாழ்வோடு இன்பம் சேர்ந்தது.
கங்கை நதி வந்ததென்ன...
காவிரியும் சேர்ந்ததென்ன...

Wednesday, November 17, 2004

நிலமெல்லாம் ரத்தம்!

கேட்டது

முதன் முதலாக ரொம்ப சிக்கலான கேஸை டீல் பண்ணப் போகிறீர்கள் என்று நினைக்கிறேன் என்கிற முஸ்தீபோடு ஆரம்பித்த என்டிடிவி ராஜீவை இடைமறித்து.... ரொம்ப சிம்பிளான கேஸ்தான் என்றார் ராம்ஜெட்மலானி. சங்கராச்சாரியார் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் பற்றி கேள்வி கேட்டால் அவரை கைது செய்த விதம் சரியில்லை என்று சொன்னார். கடைசி வரை சப்ஜெக்டுக்கு வரவேயில்லை. யாருக்கு தெரியும் அந்த ரகசியம்?! வேலூர் சிறைக்குள் போன முரளி மனோகர் ஜோஷியும், ஜார்ஜூம் 'உண்மையிலேயே உங்களுக்கு தொடர்பு உண்டா'ன்னு சங்கரச்சாரியாரை கேட்டிருக்க மாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

நள்ளிரவு கைதுகள் சரியா தவறான்னு திமுக தலைவரால் ஒரு முடிவுக்கு வரமுடியாத நிலை. கலைஞர் கைதின் போது எல்லோரும் பேருக்கு 'உச்' சொல்லிவிட்டு அவரவர் வேலையை பார்க்கப் போய்விட்டார்கள். சங்கராச்சரியாரின் கைதுக்கு காவிப்படையோ நாடு முழுவதும் கழி, குச்சி சகிதம் அலைந்து கொண்டிருக்கிறது. காஞ்சிபுரமே நார்மலாக இருக்கும்போது கேரளாவில் கடையடைப்பாம்! அவசரமாய் ஹைகோர்ட்டுக்கு கிளம்பிக்கொண்டிருந்த நண்பரிடம் கேட்டேன். 'ஹைகோர்ட் ஜாமீன் கொடுக்க மறுத்தால் சுப்ரீம்கோர்ட்... எப்படியும் சாமியார் வார இறுதியில் காஞ்சிபுரத்தில் இருப்பார்'னு சொன்னார். பெரிய இடத்து சமாச்சாரமுங்கோ!

படித்தது

எங்க ஊர் நேஷனல் ஹைஸ்கூல் சேஷாத்திரி வாத்தியார் ரொம்ப பிரபலம். ஆசிரியர் சங்க மீட்டிங், போராட்டம் என்று எப்போதும் பிஸியாகவே இருப்பார். எப்போதாவது வரலாறு கிளாஸ் எடுத்து வாய் பிளக்க வைப்பார். அவர் உலகப் பிரச்னைகளை புத்தகத்தில் இல்லாத சங்கதிகளோடு விவரிப்பதே சுவராசியமாக இருக்கும். இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினை பற்றி எனக்கு புரியும்படியாக சொன்னவர் அவர் ஒருவர்தான். அப்போதே டிஎம்கே, ஏடிஎம்கே, அமெரிக்க, ரஷ்யா என்று சார்பு நிலை எடுத்தே பழக்கப்பட்டனுக்கு யார் பக்கமும் சாயாமல் பிரச்னையை அவர் எடுத்து சொன்னது இன்றும் நினைவிருக்கிறது. பாலஸ்தீனர்கள் படும்பாட்டை உருக்கமாக சொல்பவர் அதே வேகத்தில் உலகத்தில் இஸ்ரேலில் இருப்பதை விட பிரமாதமான பாதுகாப்பு படைகள் எங்கும் கிடையாது என்பார். அதற்கப்புறம் வாராவாரம் இஸ்ரேலில் நடக்கும் தாக்குதல் சம்பவங்கள் பற்றி கேட்டும் படித்தும் ரொம்ப காலமாய் அலுத்துப் போய்விட்டது.

பாக் ஒரு புதிரில் ஆரம்பித்து டாலர் தேசத்தை விவரித்து செப்டம்பர் 9/11 அறிக்கையையே குட்டி திரைக்கதையாக்கிய பா.ராகவன் இஸ்ரேல்-பாலஸ்தீனத்து பிரச்னையை சுவராசியமாக சொல்ல வருகிறார். திரும்பவும் குமுதம் ரிப்போர்ட்டரில்! அடுத்த வாரத்திலிருந்து கலக்கப்போகிறாராம். காலையில் ரிப்போர்ட்டரை படித்து நான் தெரிந்து கொண்ட சங்கதி இது. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் பாரா ஸார்!

Wednesday, November 10, 2004

தீபாவளி வேலை!

கொஞ்சம் பெருமையாகத்தான் இருக்கிறது. தமிழகம் முழுவதிலிருந்தும் வந்த விண்ணப்பங்களை பரிசிலீத்து, அப்ளிகேஷனில் தரப்பட்ட விபரங்களை மன்ற உறுப்பினர்கள் மூலம் உறுதி செய்து, லிஸ்ட் தயார் பண்ணி, எஸ்டிமேட் எடுத்து, இரவு பகல் பாராமல் ராகவேந்திரா மண்டபத்திலேயே உட்கார்ந்து வேலை செய்தது மறக்க முடியாத விஷயம். நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளவும் முடிந்தது. ('அனாதை குழந்தைகள்னு எழுதாதீங்க... ஆதரவற்ற குழந்தைகள்னு எழுதுங்கப்பா!' / தகவல் உபயம் - சத்தியநாராயணா.)

குமரன் சில்க்ஸ் டிரெஸ், கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சிவகாசியிலிருந்து வரவழைக்கப்பட்ட பட்டாசுகளை பேக்கிங்கில் அடைத்து ஒவ்வொரு ஆசிரமமாக டோர் டெலிவரி செய்ய ஆட்களை ஏற்பாடு செய்வதில் கடைசி இரண்டு நாட்கள் வேலை படு மும்முரமாக இருந்தது. இதெல்லாம் வழக்கமாக ஒவ்வொரு வருஷமும் நடைபெறும் சங்கதிதான் என்றாலும் இந்த முறை விழா நடத்த வேண்டும் என்று முடிவு செய்ததும் வேலை இரண்டு மடங்காகிவிட்டது. கூடவே தீபாவளியன்று ஆசிரமங்களில் ராகவேந்திரா டிரஸ்ட் சார்பாக மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யும் வேலை வேறு. சென்னை நகரத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட எட்டு ஆசிரமங்களிலிருந்து குழந்தைகளை மண்டபத்திற்கு கூட்டி வந்து நிகழ்ச்சி முடிந்து திரும்பவும் பத்திரமாக அனுப்புவது வரை வேலை கடுமையாக இருந்தாலும் மனசுக்கு நிறைவாக இருந்தது. (இன்னும் எனக்கு தீபாவளி டிரஸ் எடுத்துக்கலை! டைம் லேது?!)

எத்தனை குழந்தைகளுக்கு, எந்தெந்த ஆசிரமங்களுக்கு உதவி செய்யப்பட்டது என்பது குறித்த விபரங்களை தெரிந்து கொள்வதில் வழக்கம் போல மீடியாவுக்கு ஆர்வமில்லை. இருந்தாலும் ஆசிரமங்களின் பெயர் மற்றும் விபரங்கள் எங்களின் WWW.RAJINIFANS.COM இணையத்தளத்தில் வெளியாகும். பிறந்தநாளை ஆசிரமத்தில் கொண்டாட நினைப்பவர்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.

மூன்று வயது குழந்தைகளிலிருந்து எழுபது வயது முதியவர் வரை விதவிதமான வண்ணங்களில். இடுப்பில் ஒரு குழந்தை கையிலொரு குழந்தை சகிதம் வந்த அந்த இரண்டு ·பாரின் பெண்மணிகளும் கடைசி வரை குழந்தைகளை கொஞ்சுவதிலேயே 'கருமமே கண்ணாய்' இருந்தது மெகா அட்ராக்ஷன்! தரையில் புரண்டு அழுது அடம்பிடித்த அந்த மீசை முளைத்த குழந்தைக்கு வயது முப்பதைந்தாம்! வந்தவர்களில் சிலர் மனநலம் குன்றிய, போலீயோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள். ஆனாலும் முகத்தில் மலர்ச்சிக்கும் சிரிப்புக்கும் பஞ்சமில்லை.

திரும்பி ஆசிரமம் போவதற்காக பஸ்ஸில் ஏறி உட்கார்ந்த பின்னரும் 'ரஜினி வரவே மாட்டாரா'ன்னு அந்த சின்னக் குழந்தை கேட்ட கேள்வியைத்தான் எதிர்கொள்ள முடியவில்லை.

Monday, November 08, 2004

பியர்லஸ் தியேட்டர்




மயிலாடுதுறை வாழ் பெருமக்களுக்கு (முக்கியமாக சினிமாவில் ஆர்வமில்லாதவர்களுக்கும்) பியர்லஸ் தியேட்டரை பற்றி தெரியாமல் இருக்க முடியாது. சினிமா ரசிகர்களுக்கோ இது சினிமா பேலஸ்!

அரசியல்வாதிகள் வந்துபோகும் இடமாக இருந்து பின்னர் பஸ் ஸ்டாண்டாக மாறி, தற்போது சகலமுமாக (அதாவது சாக்கடை!) இருக்கும் நகரப்பூங்கா. அதற்கு எதிராக ஓடாத தண்ணீரோடு ஒரு சாக்கடை கால்வாய். கால்வாயின் கரையோரத்தில் பல ஹீரோக்களை பள்ளிக்கொள்ள செய்த இந்த தியேட்டர் ஆரம்பிக்கப்பட்டு நாற்பது வருஷமாகப்போகிறது. எண்பதுகளின் வெள்ளி விழாப்படங்கள் இங்கேதான் வெளியாகின. திரிசூலம், சகலகலாவல்லவன், முந்தானை முடிச்சு, அம்மன் கோயில் கிழக்காலே, மனிதன், வேலைக்காரன், தளபதி, எஜமான், பாட்டி சொல்லை தட்டாதே, தேவர் மகன், பாட்ஷா, முத்து, படையப்பா... லிஸ்ட் கொஞ்சம் பெரிசு.

சாதாரண நடிகர் நடித்த படம் கூட இரண்டு வாரம் ஓடும். தீபாவளி, பொங்கல் பண்டிகை சமயத்தில் பியர்லஸ் தியேட்டரில் படம் பார்ப்பதும் ஒரு சம்பிரதாயம். அப்படிப்பட்ட நாட்களில் கியூவில் நின்று அடித்து பிடித்து படம்பார்ப்பவர்களில் நிறைய பேர் வடகரை முஸ்லீமாக இருப்பார்கள். இரண்டாம் கிளாஸ் படிக்கும்போது அம்மா, அப்பா சகிதம் 'சகலகலாவல்லவன்' படம் பார்த்திலிருந்து 'படையப்பா' கடைசிநாள் கடைசிகாட்சி பார்த்தது வரை தியேட்டரோடு சம்பந்தப்பட்ட அனுபவங்களை நினைத்துப் பார்ப்பதே சுகமாக இருக்கும். பதிமூணு வருஷத்துக்கு முன்னாடி தீபாவளி நாளில் 'தளபதி'யை தரிசிக்கப் போய் கூட்ட நெரிசலில் சட்டையை கிழித்துக்கொண்டதை தீபாவளி நேரங்களில் அவ்வப்போது ஞாபகத்துக்கு வரும்.

இதுவரைக்கும் பலான படம் எதுவும் இந்த தியேட்டரில் ரீலிஸாகவில்லை என்பது ரொக்கார்ட். மேற்காணும் ஸ்டில் 'போஸ்' என்னும் புதுப்படம் ரீலிஸான ஒரு சனிக்கிழமை மாலை ஐந்தரை மணிக்கு எடுத்தது என்பதை சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். எந்தப்படமாக இருந்தாலும் ரீலிஸான நாளன்று பாலம் முழுவதும் கூட்டத்தால் நிறைந்திருக்கும். வெயிலானாலும் மழையானாலும் கூட்டத்துக்கு பஞ்சமிருக்காது. ஆனால், தற்போது நிலைமை தலைகீழ்.

இப்போதும் 'பியர்லஸ்' அப்படியேதான் இருக்கிறது. ஆனால், பார்க்க வருகிறவர்கள்தான் குறைந்து போய்விட்டார்கள். என்றைக்காவது ஒரு நாள் படம் பார்க்க என்றில்லாவிட்டாலும் தியேட்டரை பார்க்கவாது உள்ளே போய் பார்த்துட்டு வரணும்!

Monday, November 01, 2004

கேள்விகள் ஆயிரம்!

மும்முரமா பேப்பர் படித்துக்கொண்டிருக்கும் அப்பாவுக்கும் ஹாலில் விளையாடிக்கொண்டிருக்கும் மகனுக்கும் நடக்கும் உரையாடல் :-

"அப்பா, சூரியனை யார் கண்டுபிடிச்சாங்க?"

"கடவுள்"

"கடவுள் எங்கேப்பா இருக்காரு?"

"சொர்க்கத்துல"

"நீங்க சொர்க்கத்துக்கு போய் பார்த்துட்டு வந்தீங்களாப்பா?"

"இல்லே".

"பின்னே, அவர் சொர்க்கத்துலதான் இருக்காருன்னு எப்படி சொல்றீங்க?"

"கடவுள் சொர்க்கத்துல இருக்கார்னு எல்லோரும் சொல்வாங்க"

"அப்ப சொர்க்கத்தை கண்டுபிடிச்சது யாரு?"

"கடவுள்"

"அப்ப, அதுவும் கடவுள்தானா?"

"ஆமா"

"கடவுள், அதுக்கு முன்னாடி எங்கே இருந்தாரு?"

"ஷட் அப்... நீ ரொம்ப பேசுறே! போய் ஹோம் வொர்க் பண்ற வேலையை பாரு.."

நீதி - உலகத்துல எந்த கேள்விக்குமே சரியான பதில் கிடைக்கவே கிடைக்காது!

(சொன்னது - சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிஜி)