Wednesday, November 10, 2004

தீபாவளி வேலை!

கொஞ்சம் பெருமையாகத்தான் இருக்கிறது. தமிழகம் முழுவதிலிருந்தும் வந்த விண்ணப்பங்களை பரிசிலீத்து, அப்ளிகேஷனில் தரப்பட்ட விபரங்களை மன்ற உறுப்பினர்கள் மூலம் உறுதி செய்து, லிஸ்ட் தயார் பண்ணி, எஸ்டிமேட் எடுத்து, இரவு பகல் பாராமல் ராகவேந்திரா மண்டபத்திலேயே உட்கார்ந்து வேலை செய்தது மறக்க முடியாத விஷயம். நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளவும் முடிந்தது. ('அனாதை குழந்தைகள்னு எழுதாதீங்க... ஆதரவற்ற குழந்தைகள்னு எழுதுங்கப்பா!' / தகவல் உபயம் - சத்தியநாராயணா.)

குமரன் சில்க்ஸ் டிரெஸ், கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சிவகாசியிலிருந்து வரவழைக்கப்பட்ட பட்டாசுகளை பேக்கிங்கில் அடைத்து ஒவ்வொரு ஆசிரமமாக டோர் டெலிவரி செய்ய ஆட்களை ஏற்பாடு செய்வதில் கடைசி இரண்டு நாட்கள் வேலை படு மும்முரமாக இருந்தது. இதெல்லாம் வழக்கமாக ஒவ்வொரு வருஷமும் நடைபெறும் சங்கதிதான் என்றாலும் இந்த முறை விழா நடத்த வேண்டும் என்று முடிவு செய்ததும் வேலை இரண்டு மடங்காகிவிட்டது. கூடவே தீபாவளியன்று ஆசிரமங்களில் ராகவேந்திரா டிரஸ்ட் சார்பாக மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யும் வேலை வேறு. சென்னை நகரத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட எட்டு ஆசிரமங்களிலிருந்து குழந்தைகளை மண்டபத்திற்கு கூட்டி வந்து நிகழ்ச்சி முடிந்து திரும்பவும் பத்திரமாக அனுப்புவது வரை வேலை கடுமையாக இருந்தாலும் மனசுக்கு நிறைவாக இருந்தது. (இன்னும் எனக்கு தீபாவளி டிரஸ் எடுத்துக்கலை! டைம் லேது?!)

எத்தனை குழந்தைகளுக்கு, எந்தெந்த ஆசிரமங்களுக்கு உதவி செய்யப்பட்டது என்பது குறித்த விபரங்களை தெரிந்து கொள்வதில் வழக்கம் போல மீடியாவுக்கு ஆர்வமில்லை. இருந்தாலும் ஆசிரமங்களின் பெயர் மற்றும் விபரங்கள் எங்களின் WWW.RAJINIFANS.COM இணையத்தளத்தில் வெளியாகும். பிறந்தநாளை ஆசிரமத்தில் கொண்டாட நினைப்பவர்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.

மூன்று வயது குழந்தைகளிலிருந்து எழுபது வயது முதியவர் வரை விதவிதமான வண்ணங்களில். இடுப்பில் ஒரு குழந்தை கையிலொரு குழந்தை சகிதம் வந்த அந்த இரண்டு ·பாரின் பெண்மணிகளும் கடைசி வரை குழந்தைகளை கொஞ்சுவதிலேயே 'கருமமே கண்ணாய்' இருந்தது மெகா அட்ராக்ஷன்! தரையில் புரண்டு அழுது அடம்பிடித்த அந்த மீசை முளைத்த குழந்தைக்கு வயது முப்பதைந்தாம்! வந்தவர்களில் சிலர் மனநலம் குன்றிய, போலீயோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள். ஆனாலும் முகத்தில் மலர்ச்சிக்கும் சிரிப்புக்கும் பஞ்சமில்லை.

திரும்பி ஆசிரமம் போவதற்காக பஸ்ஸில் ஏறி உட்கார்ந்த பின்னரும் 'ரஜினி வரவே மாட்டாரா'ன்னு அந்த சின்னக் குழந்தை கேட்ட கேள்வியைத்தான் எதிர்கொள்ள முடியவில்லை.