Wednesday, November 24, 2004

தேவை - ஓரு தியரி

(19.9.2004 நாளிட்ட கல்கி வார இதழில் வெளியானது)

இந்த உலகத்துல எல்லோரும் எதையாவது தேடிக்கிட்டேதான் இருக்கோம். வசதியில்லாதவன் பணத்தை தேடி அலையறான். பணம் நிறைய வெச்சிருக்கிறவன் பேரு வேணும்னு அலையறான். எல்லோரும் ஏதாவது ஒண்ணை தேடிக்கிட்டே இருக்கிறதுலேயே நம்ம வாழ்க்கை அப்படியே 'வணக்கம்' போடறவரைக்கும் போயிடறது. அப்படியே தேவையானது கிடைச்சாலும் மனசு புல்ஸ்டாப் போட மறுத்துவிடும். ஜட்டி வாங்குலாம்னு சென்னை சில்க்ஸ் போய்ட்டு அரை டஜன் டிஷர்ட்டும் நாலும் பேன்ட் பிட்டும் வாங்கிட்டு வர்றது சகஜம்தானுங்களே!

இதையெல்லாம் 'மகனே, எதை நீ தேடுகிறாய்'னு ரமணர் கேட்டு பதில் சொன்னாலும் ஏதோ ஸ்பிரிச்சுவல் மேட்டர்னு நினைச்சு எஸ்கேப்பாகிவிடுகிறோம். நம்ம ஆளுங்களும் மனுஷனோட தேவைகளை பத்தி கரெக்டா தப்பான்னு வெறும் தத்துவமாவே பேசிட்டு போயி சேர்ந்துட்டாங்க. ஆனா, ஏ.எச். மாஸ்லோன்னு ஒரு ஆசாமி மனுஷனோட வெவ்வேறு தேவைகளுக்கு நடுவே ஏதோ ஒரு தொடர்பு இருக்குறதா அடிக்கடி மோட்டுவளையை பார்த்து யோசிக்க ஆரம்பிச்சு சீக்கிரமா ஒரு முடிவுக்கும் வந்ததுனால கிடைச்சதுதான் மாஸ்லோவோட 'தேவை' தியரி. எம்சிஏ படிக்கிறச்ச Behavioural Theory பேப்பரில் என் மண்டையில ஏறின விஷயத்துல இதுவும் ஒண்ணு.

ஏ.எச் மாஸ்லோ, மனுஷனோட விதவிதமான தேவை எல்லாத்தையும் ஒரு லிஸ்ட் எடுத்து அதுல ஏதோ ஒரு ஒத்துமை இருக்கிறதையும் கண்டுபிடிச்சுட்டாரு. அதுவுமில்லாம எல்லா மனுஷனும் ஒரு தேவையான விஷயங்கள் கிடைச்ச பின்னாடிதான் அடுத்த தேவையை தேடி அலையறாங்கிறாங்கிற சிம்பிளான விஷயத்துலேர்ந்து எந்தெந்த தேவைக்குக்கெல்லாம் முதல்ல முன்னுரிமை கொடுக்கிறாங்கிறதையும் விலாவாரியா தியரியில சொல்லியிருக்காரு. எல்லா மனுஷனுக்குமே முதல்ல தன்னுடைய தேவைகளெல்லாம் கரெக்டா கிடைச்சுட்டான்னு முதல்ல பார்த்துக்குறானாம். அப்புறமாதான் சமூக சேவை அது இதுன்னு அலைய ஆரம்பிக்கிறான்னு மாஸ்லோ சொல்றாரு. சரி, கொஞ்சம் டீடெய்லாவே பார்த்துடலாம்.

முதல்ல அவரு சொல்றது. அடிப்படை தேவை. அதாவது உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம். கூடவே தண்ணியையும் சேர்த்துக்கலாம். சென்னைவாசியாயிருந்தா வாட்டர் டேங்க் சத்தம் கேட்டவுடனே மேலே சொன்ன ஐட்டத்தையெல்லாம் மறந்துட்டு ஓடுவான் பாருங்க.. ஒரு ஓட்டம். அது தனி கதை...சொந்த கதை, சோக கதை!

ரெண்டாவது, பாதுகாப்பு தேவை. நமக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா என்னா பண்றதுங்கிற கேள்விதான் மனுஷனை ரொம்பவே ஆட்டிப்படைக்குது. சில அதிசிய பிறவிங்க கல்லறையெல்லாம் கட்டி வைக்குதுங்க. செத்துப்போனா நல்ல இடத்துல கொண்டுபோய் வைப்பானுங்களோ இல்லையோங்கிற பயத்துல. கொஞ்சம் காசு கையில வந்ததும் பேங்குல போட்டு வைக்கிறது, எல்ஐசி ஏஜெண்டுகிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறது இதெல்லாமே பாதுகாப்பு தேவைதாங்க!

மூணாவது தேவை, துணை. அதாவது மொத இரண்டும் கிளிக் ஆயிடுச்சுன்னாலே மனுஷனுக்கு பயங்கர கஷ்டமெல்லாம் வந்துடும். அதாவது வந்துட்ட மாதிரி ஒரு ·பீலிங். நாட்டுல நம்மளை யாரும் கண்டுக்க மாட்டேங்கிறானேன்னு ஒரு கவலை. யாராவது நம்மளை முதுகுல தட்டிக்கொடுக்க மாட்டாங்களான்னு ஒரு ஏக்கம். அதுக்குத்தான் ஒத்தாசைக்கு ஒரு நண்பர்கள் வட்டாரம். ஒரு சிங்கிள் டீ அடிச்சுட்டு தினத்தந்தி படிச்சுட்டு கதை கதையா அடுத்தவனுக்கு சொல்றதுல ஆரம்பிச்சு இலக்கிய கூட்டம் போடறது வரைக்கும் இதுதான் காரணம்.

நாலாவது தேவை. பாராட்டு, பிரஸ்டீஜ். மேலே சொன்னது மேட்டரிலிருந்து இது கொஞ்சம் வித்தியாசமான ஈகோ மேட்டர். சொஸைட்டியிலே ஒரு ஸ்டேட்ஸ் கிடைக்கணுங்கிறதுக்காக எதையாவது செஞ்சு வைக்கிறது. ·பிரண்டோட அப்பாவோட பிறந்த நாளுக்கு அவரோட பேரை விட தன்னோட பேரை பெரிசா போட்டு போஸ்டர் அடிச்சு ஒட்டறது. நான் யாரையும் ·பாலோ பண்ணமாட்டேன்னு தனி வழியில போறது எல்லாமே லிஸ்ட்டுல உண்டு. பெரும்பாலும் அடுத்தவன் செய்யறான்கிறதுக்காக குக்கர் உதைச்சு எதையாவது செஞ்சுட்டு திரியறது.

கடைசியா சுய பரிசோதனை. நாலு தேவையும் பூர்த்தியான பிறகுதான் மனுஷனுக்கு ஞானாதேயமே வருது. ஏதாவது உருப்படியா சேலன்ஜிங்கா செய்யணுமேன்னு. தனக்கும் உருப்படியா இந்த சொஸைட்டிக்கும் உருப்படியா ஏதாவது செய்யணும்னு நினைக்கிறது. நிஜமாவே நமக்கு என்ன தெரியும் அதை வெச்சு உருப்படியா என்ன பண்ணலாம்னு யோசிச்சு பண்றது.

சிலபேரு அடிப்படை தேவை கிடைச்சதுமே மத்ததை பத்தி நினைக்காம சொஸைட்டிக்காக ஏதாவது பண்ண நினைக்கிறதும் உண்டும். அதையெல்லாம் 'தெய்வ மச்சான்' லிஸ்டில்தான் சேர்த்ததாகணும். ஒவ்வொருத்தனுக்கு ஒவ்வொரு தேவை முக்கியமா இருக்கிறதுக்கிறதுக்கு காரணம் சைக்காலஜி, வளர்ந்து சூழல், படிச்ச படிப்பு எல்லாமே காரணம்தான்னு மாஸ்லோ சொல்றார். இதெல்லாம் இருக்கட்டும். ஏதோ ஒரு 'தேவை'யை மனசுல வெச்சிக்கிட்டு நம்மளை சுத்தி வரும் பார்ட்டிகளிடமிருந்து எஸ்கேப்பாக ஏதாவது தியரி இருக்குதா ஸார்?