Friday, December 31, 2004

பூம்புகார் பகுதி நிலவரங்கள்



சென்னையில் வந்த புது சுனாமி பரபரப்பினால் நேற்றிரவே மயிலாடுதுறை வந்துவிட்டேன். கிழக்கு கடற்கரையோரம் வழியாக செல்லும் பேருந்துகள் சுனாமி பயத்தால் தாம்பரம் வழியாக திருப்பிவிடப்பட்டிருந்தன. பாண்டிச்சேரி வரையிலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்புமில்லை. ஏறக்குறைய ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு லாரி நிறுத்தப்பட்டு அதில் பழைய பொருட்களை மக்களிடம் சேகரித்துக்கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. கூடவே பயணித்த நபர் சென்னையின் பட்டினப்பாக்கம் பகுதியை சேர்ந்தவராம். குடும்பம் காரைக்கால் பக்கத்தில் இருக்கிறதாம். இரண்டு இடங்களிலுமே சுனாமி அச்சுறுத்தல்கள் என்பதால் குடும்பத்தோடு இருப்பதே நல்லது என்று முடிவெடுத்து பஸ் ஏறிவிட்டார். பாண்டிச்சேரியில் கடற்கரையோரமாக இருந்த மக்கள், வீடுகளை பூட்டிவிட்டு நகரத்தின் மற்ற பகுதிகளுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர். ஆக்ரோஷ அலைகள் எதுவுமில்லை என்றாலும் கடலில் தண்ணீர் வரத்து அதிகமாகவே இருப்பதாக பாண்டிச்சேரியில் எனக்கு செய்தி கிடைத்தபோது இரவு மணி ஒன்பது.

சுனாமி அச்சுறுத்தல்கள் இருந்தாலும் பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி என வழியெங்கும் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்புமில்லை என்பது தெரிந்தது. இன்று காலையில் மயிலாடுதுறையிலிருக்கும் இரண்டு முகாம்களுக்கு சென்று சுற்றிப் பார்த்தேன். வாசலில இரண்டு லாரிகள். திருவள்ளூர் மாவட்டத்திலிருந்தும் சேலத்திலிருந்தும் தனியார் அமைப்புகளால் கொண்டுவரப்பட்ட துணிமணிகள், அரிசி மூட்டைகள் உள்ளே கொண்டு செல்லப்பட்டுக்கொண்டிருந்தன. இரண்டு மணிநேரத்திற்கொருமுறை இதுபோல ஏதாவது ஒரு லாரி வந்து இறங்குவதாக வாசலில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸ்காரர் குறிப்பிட்டார். முகாம்களில் அதிகமாக கூட்டமில்லை. காலை சாப்பாட்டிற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. குழந்தைகள் அன்பர்கள் கொண்டு வந்து கொடுத்த புடவைகளை உத்திரத்தில் கட்டி தொங்கவிட்டு அதில் ஏறி உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருந்தனர். சென்னைக்கு தொடர்புகொண்டு பாராவிடமும் பிரசன்னாவிடம் நிலைமையை தெரிவித்தேன். ஒருபக்கம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியிலிருந்து வந்த மாணவர்கள் குழு தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தனர். நேற்றுவரை டிஸ்போஸிபிள் சிரிஞ்சுகளுக்கு தட்டுப்பாடு இருந்ததாக தெரிவித்தனர். மீட்பு நடவடிக்கை நடைபெறும் இடத்திற்கு அருகிலிருக்கும் முகாம்களில் இத்தகைய சிரிஞ்சுகள் இல்லாமல் ஓரே ஊசியை வெந்நீரில் போட்டு உபயோகப்படுத்திக் கொண்டிருந்ததாக கூட வந்த நண்பர் சொன்னார். (ஆனால், மாலையில் கிடைத்த தகவலின் படி இன்று காலையை மாநில அரசின் சுகாதாரத்துறை அனைத்து இடங்களிலிலும் டிஸ்போஸிபிள் சிரிஞ்சு கிடைக்க வழி செய்திருந்தது)

பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் படுத்து தூங்க சரியான பாய் இல்லை என்று தெரிவித்தார்கள். அவர்களில் சிலர் இன்று பாய்களும், போர்வைகளும் விநியோகிக்கப்பட்டுவிடும் என்று தெரிவித்தார்கள். நண்பர்களிடம் பேசி நாளைக்குள் 50 பாய்கள் கிடைக்கும்படி ஆர்டர் கொடுத்திருக்கிறேன். மற்றபடி துணிமணிகள், சாப்பாடு போன்றவற்றில் எந்தக் குறையுமில்லை. அங்கிருந்து கிளம்பி தேரழுந்தூர் பக்கமிருக்கும் இன்னொரு முகாமுக்கு சென்றபோது காலை மணி பத்து. முகாமில் ஐம்பதுக்கும் குறைவானவர்களே இருந்தார்கள். பெரும்பாலானவர்கள் சோகத்தினாலோ, அசதியினாலே உறங்கிக் கொண்டிருந்தார்கள். இங்கேயும் டிஸ்போஸிபிள் சிரிஞ்சு பற்றி பேச்சு எழுந்ததால் நண்பர்களோடு ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று இங்கேயே தடுப்பூசி போட்டுக்கொண்டேன். பின்னர் ஒரு காரை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு பூம்புகாரை நோக்கி பயணமானோம்.

பூம்புகார், மயிலாடுதுறையிலிருந்து கிழக்குபுறமாக சரியாக 24கிமீ தொலைவிலிருக்கிறது. மயிலாடுதுறை-பூம்புகார் சாலையும் சீர்காழி-காரைக்கால் சாலையும் சந்திக்குமிடம்தான் மேலையூர். மேலையூரில் சாலையோரத்திலேயே இருக்கும் சீனிவாச மேல்நிலைப்பள்ளியில் பாதிக்கப்பட்ட மக்கள் கிட்டதட்ட 300 பேர் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் வாகனங்களால் சாலையில் போக்குவரத்து நெருக்கடி. ஒரு பக்கம் உணவுப் பொட்டலங்கள், இன்னொரு பக்கம் புத்தம் புதிய பெட்ஷிட்கள் என்று ஏரியாவே பரபரப்பாக இருந்தது. பள்ளியின் ஒரு மூலையில் தமிழகத்தின் பல மூலைகளிலிருந்து கொண்டுவரப்பட்ட பழைய துணிகள் பரப்பி வைக்கப்பட்டு பிள்ளைகள் அதன் மீதேறி விளையாடிக்கொண்டிருந்தனர். புதிதாக துணி கொண்டுவருபவர்களை அந்த இடத்தில் வைத்துவிட்டு செல்லுமாறு கேட்டுக்கொள்வதாக முகாமில் மக்கள் தொடர்பு வேலையிலிருந்த அலுவலர்கள் தெரிவித்தனர். அத்தியாவசிய பொருட்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லையென்பதை உறுதி செய்துகொண்டு பூம்புகாருக்கு கிளம்பினோம்.


ஊருக்குள் நுழைந்ததுமே வந்த கெட்ட துர்நாற்றம் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வந்தவிட்டோம் என்பதை அறிவித்துவிட்டது. சுற்றுலாபயணிகளின் வருகையால் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் சிலப்பதிகா கலைக்கூடத்தின் கதவுகள் இழுத்து மூடப்பட்டு பூட்டுகள் தொங்கிக்கொண்டிருந்தன. அருகிலிருந்து பூங்காவின் காம்பவுண்டுகள் எல்லாமே சிதைந்து நொறுங்கிப்போய் ரோட்டில் கிடந்தன. கடலிலிருந்து 700 மீட்டர் தூரம் வரை கடல்நீர் உள்ளே புகுந்திருந்ததாக உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்தார். உள்ளே புகுந்த கடல்நீரால் பூங்காவிலிருந்த செடி, கொடிகள் எல்லாமே பட்டுப்போய் பச்சை நிறங்களை இழந்திருப்பதை காண முடிந்தது. நிலநடுக்கம் வந்தால் வெட்டவெளியில் நிற்பது என்கிற விஷயம் இங்கே தலைகீழாக மாறியிருக்கிறது. மக்கள் எல்லோரும் ஏதாவது ஒரு கட்டிடத்தில் தஞ்சமடைவதையே விரும்புகின்றனர்.

கடலோரத்திலிருந்த நீச்சல் குளத்திற்கு பலத்த சேதம். நீச்சல் குளத்திலிருந்து இடது புறமாக கிராமத்தினுள் நடந்தால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. இங்கே ஒரு தெரு இருந்தது என்று நண்பர் கைகாட்டிய இடத்தில் நான்கு ஓலைகளும் இரண்டு குடங்களும் மட்டுமே இருந்தன. சிமெண்ட் கொண்டு அரை அடி சைஸில் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் கூட சுக்குநூறாக உடைந்து கிடந்திருந்தன. நிறைய மச்சு வீடுகள் திறந்தே கிடந்தன. இங்கிருந்தும் ஒரு சடலத்தை எடுத்தோம் என்று நண்பர் சுட்டிக்காட்டிய இடத்தில் காய்ந்து போன நான்கு இட்லிகளும் இன்னும் பிரிக்கப்படாத சாம்பார் பாக்கெட்டும் கிடந்ததை மறக்க முடியாது.


அங்கிருந்து புதுக்குப்பம் என்கிற கிராமத்திற்கு நடந்தே சென்றோம். இருநூறு வீடுகள் இருந்த இடங்கள் சுவடே தெரியாமல் அழிக்கப்பட்ட மாதிரி இருந்தன. இடம் முழுவதும் மஞ்சள் நிற மண்களை கறுப்பு நிற போர்வையால் மறைத்தது மாதிரி இருந்தது. 100 சதவீதம் சடலங்களை அகற்றி விட்டதாக சொன்னாலும் அதிகமான துர்நாற்றத்தினால் ஒரு அளவுக்கு மேல் கிராமத்தினுள் உள்ளே சென்று பார்க்கமுடியாது போய்விட்டது. திரும்பி வரும்போது இன்னொரு சின்ன கிராமம். பெயர் தெரியவில்லை. ஊர் முழுவதும் பிளீச்சிங் பவுடரை இறைத்துகொண்டிருந்தார்கள். இங்கேயும் தெரு முனையில் பழைய துணிமணிகள் மக்களின் உபயோகத்திற்காக குவித்து வைக்கப்பட்டிருந்தது. எனக்கென்னவோ இதே நிலைமை தொடரும் பட்சத்தில் குவியும் பழைய துணிகளை அகற்றுவதிலும் பிரச்னை ஏற்படும் என்றே தோன்றுகிறது.

அங்கிருந்து ஏறக்குறைய ஒரு மணிநேரம் செலவழித்து பாதிக்கப்ட்ட மக்களை பார்த்து பேசிவிட்டு திரும்பவும் காரை நோக்கி நடக்கும்போது இன்னொரு காட்சியையும் பார்க்க முடிந்தது. திருப்பூரிலிருந்து வந்த நண்பர்கள் குழு ஒன்று பாலிதீன் பேக்கில் புத்தம் புதிய போர்வைகளை மக்களுக்கு கொடுத்துக்கொண்டிருந்தது. ஒரு நான்கு பேர் நின்று வாங்கிக்கொண்டிருந்தார்கள். அதற்கு பின்னர் அடுத்த அரைமணி நேரத்திற்கு யாருமே வாங்க வரவில்லை. உதவும் மனப்பான்மையோடு வெகுதொலைவிலிருந்து வந்தவர்களுக்கு இதெல்லாமே ஆச்சரியமாகத்தான் இருந்திருக்கும்.


அங்கிருந்து நாங்கள் போன இடம் நான் ஏற்கனவே பலமுறை போயிருந்த வாணகிரி கிராமம். பூம்புகாரிலிருந்து கடல்வழியாக இது மூன்று கிலோ மீட்டரில் இருக்கிறது. ஆனால், சாலை வழியாக சென்றால் 8 கிமீ தூரத்தை கடந்தாகவேண்டும். நவக்கிரக யாத்திரை வருபவர்களுக்கு இந்த ஊர் பிரபலம். இங்கிருந்து ஒரு கிமீ தூரத்தில்தான் கேது பகவானின் ஸ்தலமான கீழப்பெரும்பள்ளம் இருக்கிறது. வாணகிரி கிராமத்தின் மற்ற பகுதிகளில் அதிகமான பாதிப்பில்லை. மீனவர்களின் குப்பத்திற்குதான் பாதிப்பு. இந்த கிராமத்தில் மட்டும் 60 பேர் இறந்து போனதாக தகவல். ஆனாலும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிகொண்டிருக்கிறார்கள். கடலிலிருந்து ஒரு கிமீ தூரத்திலிருக்கும் வெட்டவெளியில் ஓலைக் குடிசைகளையும் துணிகளையும் வைத்து வீடு கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். கிராமத்தின் எந்த தெருவிற்கு போனாலும் ஏதாவதொரு தொண்டு நிறுவனம் ஏதாவதொரு உதவிகளை வழங்கிக்கொண்டிருந்தது. சேலம் பக்கத்திலிருந்து வந்திருந்த மெடிக்கல் டீம் தன்னுடைய பணிகளையெல்லாம் முடித்துவிட்டு கடல்கொந்தளிப்பு பற்றி மக்களிடம் விசாரித்துக்கொண்டிருந்தார்கள்.

குப்பங்களின் உள்ளே சென்று நடக்க ஆரம்பித்தோம். ஏறக்குறை 300 வீடுகள் இருக்கும். பெரும்பாலானவர்கள் சி¨த்ந்த வீடுகளின் வாசலில் உட்கார்ந்திருந்தார்கள். முகாம் வாழ்க்கை அவர்களை சலிப்பில் தள்ளிவிட்டிருக்கக்கூடும். முகாமில் சாப்பிட்டுவிட்டு பகல் முழுவதும் இங்கேயே உட்கார்ந்துவிட்டு இரவு நேரத்தில்தான் முகாமுக்கு திரும்புகிறார்கள். முடிந்தளவுக்கு காமிராவால் படமெடுத்துக்கொண்டுவிட்டேன். எல்லாவற்றையும் அப்லோட் செய்ய இரண்டொரு நாட்கள் ஆகும்.

சாலையோரங்களில் சாய்ந்து கிடந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிதாக மின்கம்பங்களை நட்டுக்கொண்டிருந்தார்கள். எப்படியும் இரண்டொரு நாட்களில் பகுதிகக்கு மின்சாரம் வந்துவிடும் என்றார்கள். ஒரு வீட்டில் கடல் தண்ணீரில் ஊறிப்போன மூன்றாம் வகுப்பு பாட புத்தகத்தை கையில் நான் எடுத்து பார்த்தும் வீட்டு வாசலிலி உட்கார்ந்திருந்த பெண்மணிக்கு அழுகை தாங்கமுடியவில்லை. அவருடைய பையனின் பாடப்புத்தகம் என்று கூட இருந்த பெண்மணி சொன்னதும் தர்மசங்கடமாகிவிட்டது எனக்கு.

கடல் தண்ணீரே வாழ்க்கையாக இருந்தவர்களுக்கு இதெல்லாமே புதிதான எதிர்பாராத விஷயம்தான். மழை, புயல்களையெல்லாம் எதிர்கொண்டவர்களுக்கு இதுவொரு மோசமான அனுபவம். ராட்சத புயல் வந்திருந்தால் கூட அவர்களால் தப்பித்திருக்க முடியும். சிலரின் கருத்துக்கள் புதுவிதம்¡க இருந்தது. வந்தது கடல் தண்ணீர் மாதிரியே இல்லை. கருப்பு கலரில் சாக்கடைத்தண்ணீர் போல எங்கள் மீது பாய்ந்து வந்தது என்கிறார்கள். அவர்கள் சொல்வது உண்மைதான் என்பதுபோலவே கடற்கரை முழுவதும் கருமணலாகவே காட்சியளிக்கிறது. சுனாமி அலைகள் வருவதற்கு முன்பாக படகுகள் ஓன்றையொன்று மோதிக்கொண்டதாக சொன்னார்கள். கரையில் தலைக்குப்புற கிடக்கும் படகுகள் எல்லாமே மரக்காணம், நாகப்பட்டினம் என வெவ்வேறு இடங்களிலிருந்து அடித்துவரப்பட்டவை.

கிளம்பும்போது மகளில் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த பெண்களிடம் தனது சோக கதையை சொல்லிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் பேசினோம். மொழிதெரியாதவர்களெல்லாம் சாப்பாடும், துணிமணிகளும் கைநிறைய கொடுப்பதாக சொன்னார். பேச்சின் இடையே தன்னுடைய ஒரு பேரனும், மருமகளும் இறந்துவிட்டதாக சொன்னார். தான் மார்க்கெட்டுக்கு போனதால்தான் தன்னால் தப்பிக்க முடிந்தது என்றார். பாய், போர்வை வேண்டுமா என்று கேட்டதற்கு சிதைந்து போயிருந்த தனது வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த போர்வையை காட்டி அது போதும் என்றார். கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் வந்துகொண்டிருந்தது. அவர் வசிக்கும் தெருவில் எத்தனை பேர் இறந்தார்கள், எப்போது உதவி கிடைத்தது என்பதையெல்லாம் விவரமாக சொன்னார். உடம்பை பார்த்துக்கோ பாட்டின்னு சொல்லிவிட்டு கிளம்பும்போது அவர் சொன்ன வார்த்தைதாடன் என் கண்களில் கண்ணீரை முட்டிக்கொண்டு வரவழைத்துவிட்டது.

'சாப்பிட்டு போங்கய்யா....'

Wednesday, December 29, 2004

மீட்பு நடவடிக்கையில் மந்தம்

ஆட்கள் பற்றாக்குறையினால் பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளின் வேகம் குறைந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அழுகிப்போன சடலங்களும், தொற்று வியாதி குறித்த பயங்களும் பலரை நெருங்க விடாமல் செய்து வருகின்றன. வாணகிரி கிராமத்தில் மீட்பு நடவடிக்கைகளுக்காக வந்த என்ஜிஓ அமைப்பை சேர்ந்தவர்களை மக்கள், கிராமத்தின் உள்ளே விட மறுத்ததாக ஒரு செய்தி.



பெரும்பாலான முகாம்களில் தேவைக்கதிகமான உடைகளும், உணவுகளும் தேங்கியிருப்பதாக அரசு அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். உணவு, அரிசி, உடைகளை ஏற்றிவரும் லாரிகளில் அந்தந்த முகாம்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி, குளச்சல் போன்ற இடங்களில் மீட்பு நடவடிக்கைகள் முடிந்து விட்டன.



தமிழகம் முழுவதும் 19 முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு மூன்று வேளையும் நல்ல உணவு அளிக்கப்படுகிறது. முகாம்களில் இருப்பவர்களுக்கு மட்டுமே அரசு உதவி கிடைக்கும் என்று கிளம்பிய செய்தியினால் பெரும்பாலானோர் முகாம்களை விட்டு வெளியே வருவதில்லை.



நாகப்பட்டினத்தில் டெட்டனஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கிய என்.எஸ்.எஸ் மாணவர்களுக்கு உடம்பு சரியில்லாத போனதன் காரணத்தால் பெரும்பாலான நாகை மாவட்டத்து கல்லூரிகள் மீட்பு நடவடிக்கைகளிலிருந்து தங்களது மாணவர்களை திரும்ப அழைத்துக்கொண்டுள்ளனர்.



கடலூரில் மீட்பு நடவடிக்கைகளுக்காக ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் கிடைத்தாலும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர், உணவு கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவும் ஒரு செய்தி.



நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை உயரிழிந்தவர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட 4 ஆயிரம் பேர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினர்களுக்கு வேஷ்டி, சேலை, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 60 கிலோ அரிசி, இரண்டு பெட்ஷீட், இது தவிர குடும்பத்திற்கு தேவையான அத்தியாசிய பொருட்களான சமையல் பாத்திரங்கள், ஸ்டவ் உள்ளிட்ட சாமான்கள் வாங்க என ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4912 ரூபாய் நாளை முதல் அனைத்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் வழங்கப்படுகிறது.

இது தவிர மீனவர்களின் படகு, கட்டுமரம் போன்றவற்றை பழுதுபார்க்கவும், புதிதாக வாங்கவும் அரசின் சார்பில் 65 கோடி ருபாய் செலவிடப்படுகிறது.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கம் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் முடிவில் சிறு மாற்றம். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

ஆக, உதவ விரும்பும் உள்ளங்கள் கொஞ்சம் நிதானம் காப்பது நல்லது என்றே தோன்றுகிறது.

கடலோர கிராமங்கள் - தற்போதைய நிலவரம்



கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற பகுதிகளிலிருக்கும் முகாம்களில் உணவு, உடை, மருந்துகள் போன்ற உதவிகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. உடைகளை பொறுத்தவரையில் ஏராளமாக குவிவதால் மேற்கொண்டு சேகரிப்பது....தற்போதைக்கு அவசியமில்லை என்று நினைக்கிறேன். எனவே, அன்பர்கள் சேகரித்த பழைய ஆடைகளை ஆங்காங்கே வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தேவைப்படும் நேரத்தில் நானே வந்து வாங்கிக்கொள்கிறேன். இவ்வார இறுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுற்றிப் பார்த்துபின்பு நம்மால் ஒரு முடிவுக்கு வரமுடியும் என்று நினைக்கிறேன்.

வெளிநாடுகளிலிருந்து இணைய நண்பர்கள் போன் மூலம் தங்களது அனுதாபங்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர். நண்பர் பி.கே.சிவகுமாரின் உதவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க ஆயிரம் பெட்ஷீட்கள் இணைய நண்பர்கள் சார்பாக கரூரிலிருந்து பெறப்பட்டு பூம்புகார் மற்றும் தரங்கம்பாடியை ஒட்டியுள்ள கடற்கரையோர கிராமங்களுக்கு விநியோகிக்கும் திட்டம் இரண்டு நாட்களில் முழுமை பெற்றுவிடும்.

சீர்காழி பகுதியில் புதுக்குப்பம் என்ற கிராமத்தில் மீனவர் குப்பம் அழிந்ததால் 600 பேர் இறந்துவிட்டனர். பூம்புகாரை சுற்றியிருக்கும் மேலையூர், வாணகிரி போன்ற கிராமப்பகுதிகளிலும் வெகு சிலரே எஞ்சி இருக்கின்றனர். சீர்காழியிலிருந்து தரங்கம்பாடி வரையுள்ள கிழக்கு கடற்கரையோர கிராமத்தில் 500 மீட்டர் தொலைவிலிருக்கும் எல்லா இருப்பிடங்களும் அழிந்து விட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றுடன் அனைத்து சடலங்களையும் மீட்டுவிட முடியும் என்றே சம்பந்தப்பட்டவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தற்போது போதுமான உதவிகள் கிடைத்துவருகின்றன. இதே நிலை இன்னும் ஒரு வாரத்துக்கு தொடரும் என்று நம்பலாம்.

எனவே, இணைய நண்பர்கள் நிதியுதவி செய்வதற்கு கால அவகாசம் நிறைய இருக்கிறது. பத்து நாட்களில் நிஜமான நிலை தெரிந்து விடும். அதற்கு பின்னர் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் கிராமத்தை தத்தெடுத்து அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பது நல்ல யோசனையாக இருக்கும் என்று நம்புகிறேன். இணைய நண்பர்கள் தங்களது கருத்துக்களை தயவு செய்து தங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.

Tuesday, December 28, 2004

ஒரு வேண்டுகோள்

மேலையூர், திருவங்காடு உள்ளிட்ட பூம்புகாருக்கும் தரங்கம்பாடிக்கும் இடைப்பட்ட கடற்கரையோர கிராமங்களில் உணவு, உடையின்றி மக்கள் தவிப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னை அன்பர்களிடமிருந்து பழைய துணிகளை சேகரித்துக்கொண்டு வியாழன் இரவு மயிலாடுதுறை செல்லலாம் என்றிருக்கிறேன்.

பழைய துணிகளை வைத்திருக்கும் அன்பர்கள் எனது சைதாப்பேட்டை இல்லத்தில் வந்து கொடுத்தால் செளகரியமாக இருக்கும். முடியாதவர்கள் என்னை செல்போனில் அழைத்தால் அவர்களது இடத்துக்கே வந்து வாங்கிக்கொள்கிறேன்.

வெளிநாட்டு அன்பர்கள் இங்கிருக்கும் உள்ளூர் அன்பர்களை தொடர்புகொண்டு இம்முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கோர கேட்டுக்கொள்கிறேன். பழைய துணிகளை வியாழன் மாலைக்குள் எனக்கு கிடைக்கும்படி செய்யவும்.

எனது முகவரி

ராம்கி, புது எண் 100 பழைய எண் 50, நாகா மெடிக்கல்ஸ் மாடி, இரண்டாவது தளம், ஜோன்ஸ் ரோடு,
சைதாப்பேட்டை, சென்னை - 15.

எனது செல் நம்பர்
நிதியுதவி செய்ய விரும்பும் அன்பர்களுக்காக எனது ICICI வங்கி கணக்கு விபரங்களை கொடுத்துள்ளேன். டெபாசிட் செய்ததும் விபரங்களை தயவு செய்து எனக்கு மின்னஞ்சலில் தெரிவிக்கவும்

Monday, December 27, 2004

கரை மேல் பிறக்க வைத்தான்.. கண்ணீரில் மிதக்க வைத்தான்...

நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட கரையோர இடங்களில் இன்று அதிகாலை முதல் மழை. நாகப்பட்டினம் வெறிச்சோடி இருப்பதாக செய்தி. காலை ஆறு மணிக்கு அந்தமான் பகுதிகளில் கடல் கொந்தளிப்பு இருந்ததாக ஆஜ்தக் தெரிவிக்கிறது.




கல்பாக்கம் அணுமின் நிலைய உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு க¨யோர மாவட்டங்களில் எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டுள்ளது.



தனுஷ்கோடியும் அதனைச் சுற்றியுள்ள சிறு தீவுகளும் தகவல் தொடர்பின்றி துண்டிக்கப்பட்டுள்ளன. ராமேஸ்வரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த போதுமான விபரங்கள் இல்லை.


கடற்கரையோர மாவட்டங்களில் ஜெயலலிதா, மணிசங்கர் அய்யர் சுற்றுப்பயணம். சிவராஜ் பாட்டீல், அத்வானி சென்னை வருகை.




அந்தமான் நிகோபர் உள்ளிட்ட தீவுகளின் தகவல்தொடர்பு தொடர்ந்து துண்டிப்பு. இலங்கையில் 6000 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்.

நாகப்பட்டினம், வேளாங்கண்ணி பகுதியிலிருந்த மீனவர் குப்பங்கள் அடையாளம் தெரியாத வகையில் சிதைவு.

காரைக்கால் கடற்கரையோர பகுதிகளில் மீட்புநடவடிக்கைகளுக்கு ஆளில்லை. மீனவர் அமைப்புகளும், ரசிகர்மன்றங்களும் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றன.

புதிதாக கட்டப்பட்டிருக்கும் நாகை மேம்பாலம் சேதம். வாகனங்கள் ஊருக்குள் நுழைய முடியாத நிலை.

கன்னியாகுமரியில் சாமி கும்பிட வந்த ஐயப்ப பக்தர்கள் 12 பேரை காணவில்லை.




சென்னையையும் பாண்டிச்சேரியையும் இணைக்கும் கடற்கரையோர சாலையில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

நாகை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட 1000 பேர். அதில் பாதிப் பேர் வேளாங்கண்ணியை சேர்ந்தவர்கள்.

தரங்கம்பாடி கோட்டைக்கு அருகிலிருக்கும் குட்டையிலிருந்து 15 உடல்கள் மீட்பு. கரையோரத்திலிருந்த கல்லறைகள் சேதம்.



அரசு மீட்பு நடவடிக்கைகளில் மந்தம். நாகை அரசு மருத்துவமனையில் 150 அடையாளம் காணப்படாத உடல்கள் அடுக்கி வைப்பு. மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு, அடையாளம் காணப்பட்ட உடல்களின் எண்ணிக்கை மட்டுமே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

நீண்ட இரவு

தூக்கம் தொலைந்த இரவில் திரளாக ஓடிவரும் அலைதான் கண்முன் நிற்கிறது. இன்னமும் நம்பமுடியாத திகிலாகத்தான் இருக்கிறது. நிலநடுக்க பேச்சுக்கள் முடிந்து விஜய் டிவியில் மதன்ஸ் பார்வையில் லயித்திருந்தபோதுதான் வந்தது அந்த செய்தி.



சன் நியூஸ் பார்த்து கிளம்பி மந்தவெளி வழியாக பட்டினப்பாக்கம் அடைந்தபோது அலைகளின் கோரத்தாண்டவத்தை உணர்ந்துகொள்ள முடிந்தது. பிளாட்பாரமெங்கும் பெண்களும், குழந்தைகளும். கையில் மூட்டை முடிச்சுகளுடன் கண்ககளில் வழிந்தோடும் கண்ணீரை துடைத்தபடி... ஓரே நாளில் சென்னை மக்களின் வாழ்க்கையை கடல் நீர் புரட்டிப் போட்டுவிட்டது.



பட்டினப்பாக்கம் அரசுக்குடியிருப்பில் மருந்துக்கு கூட ஆளில்லை. முழுங்காலில் பாதியளவு கூட தண்ணீர் இல்லை. ஆனாலும், ஆங்காங்கே மிதக்கும் குடங்களும், பிளாஸ்டிக் வாளிகளும் நிலைமையின் விபரீதத்தை சொல்லிவிடுகின்றன. குடியிருப்புகளைய தாண்டி மீனவர்களின் குப்பத்தை வந்தடைவதற்குள் துணியால் மூடப்பட்ட இரண்டு பிணங்களை பார்க்க முடிந்தது. வழக்கத்திற்கு மாறாக கடல் சுருங்கியிருப்பது போல கரையிலிருந்து இருநூறு அடி தூரம் தள்ளி தனது வழக்கமான வேலையை செய்துகொண்டிருந்தது. நெருங்க ஆரம்பித்த ஐந்தே நிமிடத்தில் ராட்சஸ அலைகள் மேலேழும்பி துரத்த ஆரம்பிக்க பின்வாங்கி ஓடிவந்தேன். இதெல்லாம் ஓரிரு நிமிஷங்கள்தான். மிரட்டிவிட்டு போவதைப் போல திரும்பவும் இருநூறு அடி தள்ளி சாதுபோல நின்று கொண்டது.
அப்போதும் கூட நிலைமையின் சீரியஸ்னஸ் புரியவில்லை. அழகழகான சங்குகள், கிளிஞ்சல்கள் கையில் கிடைத்ததால் மெரீனா கரையோரமாக கண்ணகி சிலை இருந்த இடம் வரை வாக் போய்விட்டு சந்தோம் சர்ச் வரும்போதுதான் கடலூர், பாண்டிச்சேரி, நாகப்பட்டினம் பகுதி தகவல்கள் கிடைத்தன. வழக்கம்போல சன்டிவியும் ஜெயாடிவியும் அரசியல் செய்ய, உதவிக்கு வந்தது என்டிவியும் ஆஜ்தக்கும்தான்.



இதுவரை தமிழகத்தில் 2400 பேர் உயிரிழிந்திருக்கிறார்கள். (அதிகாரபூர்வமாக 1742 பேர்). இதுவரை உயிரிழந்தவர்களின் விபரம் மாவட்டரீதியாக. சென்னை 243, நாகப்பட்டினம் 788, கடலுர் 300, பாண்டிச்சேரி 280, காஞ்சிபுரம் 58, கன்னியாகுமரி 300.



ராணிமேரி கல்லூரி எதிரில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளின் நிலை தெரியவில்லை. அதற்கு பக்கத்திலேயே கடற்கரைக்கு வந்திருந்த இரண்டு லவ் ஜோடிகளும், வாக்கிங் வந்தவர்களையும் காணவில்லை. கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் மாட்டிக்கொண்ட 500 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். பரங்கிப்பேட்டையில் பெங்களூரை சேர்ந்த பயணிகளின் பஸ் சேதமடைந்து 60 பேர் உயிரிழப்பு. வேளாங்கண்ணி கடற்கரையில் சர்ச்சை தவிர மற்ற கடைகளெல்லாம் சின்னபின்னமாகியிருக்கின்றன. கொஞ்சநஞ்சமிருந்த தரங்கம்பாடி மாசிலநாதர்கோயில் போன இடம் தெரியவில்லை. தரங்கம்பாடியில் தண்ணீர் நுழைவாயிலை தாண்டி வெளியே வந்திருக்கிறது. சுற்றுவட்டார வயல்களெல்லாம் கடல் தண்ணீரால் நிறைந்திருக்கின்றன.



பூம்புகாரில் புதிதாக அமைக்கப்பட்ட நீச்சல்குளம் நாசமாகிவிட்டது. நாகப்பட்டினம் மெதுவாக காலியாகிக் கொண்டிருக்கிறது. பஸ், ரயிலை பிடித்து மக்கள் மயிலாடுதுறைக்கும், திருவாரூக்கும் வந்துகொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான கடலோரப் பகுதிகளில் தொலைதொடர்பும், மின் தொடர்பும் பாதிக்கப்பட்டுள்ளன. அரசின் மீட்பு நடவடிக்கைகளில் வேகமோ, மந்தமோ இல்லையென்றாலும் தலைவலியாக இருப்பது கொந்தளிப்பு திரும்பவும் வரக்கூடும் என்று பரவிவரும் செய்திகளால்தான். வானிலைச் செய்திகளைத்தான் அரசினால் துல்லியாக கணிக்கமுடியவில்லை. நிலநடுக்கம், கடல்கொந்தளிப்பு விஷயத்திலுமா? ஆண்டவனுக்கே வெளிச்சம்!

Wednesday, December 22, 2004

காலத்தின் கோலம்



எமர்ஜென்ஸி வார்டில் இருக்கும் பேஷண்ட் மாதிரி இழுத்து கட்டிவிட்ட மப்ளரையும் மீறி வரும் கடுங்குளிரை தாங்காமல் அப்படியே போர்வையை உடம்பில் சுத்திக்கொண்டு அம்மாவோடு களமிறங்கி, காய வைத்த காபி பொடியை தூவி விட்ட காலமெல்லாம் நினைவுக்கு வருகிறது. கோலம் போடுவது என்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல. சின்ன வயதில் குடியிருந்த தெருவில் சொற்ப வீடுகளென்றாலும் எல்லோருடைய வீட்டிலும் கலர் கலரான கோலங்கள் காணக் கிடைக்கும். கலரில் கோலம் போடுவதற்கு அம்மாவுக்கு வராது. ஆனால், சிக்கலான மாவு கோலத்தையே மணிக்கணக்கில் சிரத்தையாக போடுவாள். பெரும்பாலான நாட்கள் கலர் இல்லாமல் மாவு கோலமாக இருப்பதால் சக நண்பர்களின் டெய்லி விசிட்டில் எங்கள் வீட்டு கோலம் வரவே வராது. எங்க அம்மா மாதிரி யாருக்கும் சிக்கலான கோலம் போட வராது என்று நான்தான் வலியப் போய் சொல்லி 'கொள்கை பரப்பு செயலாளர்' வேலை பண்ணுவேன். அதெல்லாம் அந்த காலம்.



கொஞ்ச காலத்தில் அந்த மாவு கோலத்தில் இருக்கும் ஆர்வமும் போய், மகள் போடும் கோலத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள் அம்மா. உடன்பிறப்புக்கோ முதல்நாள் ராத்திரியே பேப்பரில் பிராக்டீஸ் பண்ணிக்கொண்டு களத்திலிறங்குமளவுக்கு ஆர்வம். இப்போது குடியிருக்கும் தெருவில் யாருக்கும் கோலம் போடுவதில் பெரிதாக ஆர்வமில்லை. அதனால் போட்டியில்லாமல் ஏதோ பெயருக்கொரு கோலம். நாளைக்கு என்னவெல்லாம் மாறப்போகிறதோ?



மார்கழி ஆரம்பிச்சு இவ்வளவு நாள் ஆகியும் இன்னும் எங்க பேட்டையில் ஒரு கலர் கோலத்தை கூட கண்ணில் பார்க்க முடியவில்லை. போன வாரம் நங்கநல்லூர் போய்விட்டு பேட்டை திரும்ப ராத்திரி பதினோரு மணியாகிவிட்டது. அந்த ராத்திரி நேரத்திலும் சீரியல் பார்த்துவிட்டு தாய்க்குலங்கள் சிரத்தையாக கோலம் போட்டுக்கொண்டிருந்தார்கள். ராத்திரியே 'முறைவாசல்' பண்ணி கோலம் போட்டுவிட்டு படுத்துவிடுவதுதான் சிட்டி ஸ்டைலாம்! கஷ்டப்பட்டு அம்மா போடும் கோலத்தை உடன்பிறப்பு கடைக்குட்டி பத்தே நிமிஷத்தில் சைக்கிள் விட்டு அழித்த காலம் நினைவுக்கு வருகிறது. சிட்டி அம்மாக்கள் போடும் கோலம் எப்படியும் பத்து மணி நேரமாவது இருக்குமே!

காலம் காலமாக பின்பற்றி வரும் கலாசாரத்தை விட்டுவிடாமல் இப்போதைய லை·ப் ஸ்டைலுக்கு ஏத்த மாதிரி பின்பற்றும் நம்மூர் சிட்டி அம்மாக்களை நினைத்தால் பெருமையாத்தான் இருக்குது!

Monday, December 20, 2004

பெரியாரும் தமிழிசையும்

"தமிழன் தான் நுகரும் இசையை, ‘தமிழில் இசை, தமிழில் பாடு, தமிழர்களைப் பற்றித் தமிழர்களுக்கு ஏற்றதைத் தமிழர்களுக்குப் பயன்படுமாறு பாடு’ என்கின்றான். அதை யார்தான் ஆகட்டும், ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? ஏன் குறை கூறவேண்டும் என்று கேட்கிறேன். அதிலும் தமிழன் இப்படிக் கேட்பதை - தமிழனால் தமிழனல்லாதவன் என்று கருதப்பட்டவன், ஏன் மறுக்க வேண்டும்? இது மிக மிக அதிகமானதும், தமிழனால் மிக மிக வருந்தத்தக்கதுமாகும்.

தமிழன் - தமிழ் மக்கள், தமிழில் பாட்டுக் கேட்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். பணம் கொடுப்பவன் , தனக்குத் தமிழ்ப்பாட்டுப் பாடப்பட வேண்டுமென்று ஆசைப்படுகிறான்; பாட்டுக்கேட்பவன் தமிழில் பாட்டுப் பாடவேண்டும் என்று ஆசைப்படுகிறான். இந்த ஆசையில் பழந்தமிழர் அல்லாதார் அதை மறுக்கவே, குறைகூறவோ குற்றம் சொல்லவோ எப்படி உரிமையுடையவர்கள் என்று கேட்கிறேன்.

‘தமிழரென்றும், தமிழரல்லாதவர் என்றும் பேதம் பாராட்டக்கூடாது’ என்பதா கத் தமிழர்களுக்கு அறிவுரை கூறும் இந்தப் பெருமான்களே, ‘தமிழில் பாடவேண்டும் என்பது பொது நலத்துக்குக் கேடு, கலைக்குக் கேடு, கலைநலத்துக்குக் கேடு’ என்று சொல்லவந்தால் - இவர்கள் உண்மையில் தமிழர்- தமிழரல்லாதவர் என்கின்ற உணர்ச்சியைக் குறையச் செய்பவர்களாக, அல்லது நெருப்பில் நெய்யை ஊற்றி எரியச் செய்யும்படியான மாதிரியில் வளரச் செய்பவர்களா என்று கேட்கிறேன். அன்றியும், இப்படிப்பட்ட இவர்கள் தங்களைத் தமிழர்களென்று சொல்லிக்கொள்ளக்கூடுமா? தமிழில் பாடினால் இசை கெட்டுப்போகும் என்றால், மேற்கூறிய தமிழர் அல்லாத தோழர்களைவிட இராஜா சர்.அண்ணாமலை செட்டியார், சர்.சண்முகம் செட்டியார் போன்றவர்கள் குறைந்த அளவு கலை அறிவோ பொது அறிவோ உடையவர்கள் என்பது இவர்கள் எண்ணமா என்று கேட்கிறேன்.

காது, கண், மனம் ஆகியவை எல்லா விஷயங்களுக்கும் எல்லோருக்கும் ஒன்றுபோல் இருக்க முடியாது என்பது அறிஞர் ஒப்பமுடிந்த விஷயமாகும்.
‘தமிழில் பாடு!’ என்றால், சிலர் - அதுவும் ஒரு வகுப்பாரே பெரிதும் ஆட்சேபணை சொல்ல வந்ததாலேயே , ‘தமிழ் இசை இயக்கம்’ வகுப்புத் துவேஷத்தையும் உண்டு பண்ணக்கூடிய இயக்கமாகவும், பலாத்காரத்தை உபயோகித்தாவது தமிழ் இசையை வளர்க்க வேண்டிய இயக்கமாகவும் ஆக வேண்டியதாய் விட்டது.


அறிஞர்களே! நமக்குப் பாட்டுக் கேட்கக்கூடத் தெரியாது என்றும், நம் மொழியானது பாட்டு இசைக்கக்கூடப் பயன் படாது என்றும் சொன்னால், இந்த இழிமொழி - நம் உயிரைப் போயல்லவா கவ்வுகிறதாயிருக்கிறது என்று மிக்க வேத னையோடு கூறுகிறேன். தமிழ்த் துரோகத்தால் வாழவேண்டியவ னும், வள்ளுவர் சொன்னதுபோல் - ‘குலத்திலே அய்யப்பட வேண்டி யவனுமான தமிழ் மகன்களுக்கு, இது எப்படி இருந்தாலும் அவர்களது வாழ்வும் நம் எதிரிகளின் புகழுமே அவர்களுக்கு அணியாகவும் அலங்காரமாகவும் முக்கிய இலட்சியமாகவும் இருக்கும்.

தமிழிசை முயற்சி அல்லது கிளர்ச்சி என்றால் என்ன? தமிழ்நாட்டில் தமிழர்கள் இடையில் இசைத் தொழில் வாழ்க்கை நடத்தவோ அல்லது பொருள் திரட்ட ஒரு வியாபார முறையாகவோ கொண்டுள்ள இசைத் தொழிலாளி அல்லது இசை வியாபாரியை இந்த நாட்டானும் பொருள் கொடுப்பவனும் இசையை அனுபவிப்பவனுமானவன், ‘இசை என் விருப்பத்திற்கு ஏற்ற வண்ணம் இருக்கவேண்டும்’ என்று சொல்லி விரும்புவதேயாகும். இதில் எவ்வித விவாதமோ, வெறுப்போ ஏற்படச் சிறிதும் இட மில்லை. இந்த முயற்சியும், கிளர்ச்சியும், இத்தனை நாள் பொறுத்து ஏற்பட்டதேன் என்பது தான் அதிசயிக்கத்தக்கதாகும். அன்றியும் எங்களுக்கு இப்படிப்பட்ட இசைச் சரக்குதான் இருக்கவேண்டும் என்று, கொள்வோரும் நுகர்வோரும் கேட்டால் அதைத் தர்க்கித்து ‘நீ இதைத்தான் கொள்ள வேண் டும்’ என்று சொல்லுவது இசைப் பிழைப்பாரின் ஆதிக்கத்தையும், இசை வியாபாரியின் ஆதிக்கத் தையும்-கொள்வோரின் இழிதன்மையையும், வலிவற்ற, மானமற்ற தன்மையையும் காட்டும் அறிகுறியாகும்"

பெரியார். நன்றி - உண்மை மாத இதழ்

விடை தெரியாத சில கேள்விகள் :-

பெரியார், தமிழிசையை ஆதரிக்க காரணம் தமிழ்ப்பற்றா? பிராமண எதிர்ப்பா?

தமிழ் பற்றி பேசும்போதெல்லாம் வெங்காயத்தை கூப்பிட்ட பெரியாருக்கு தமிழ்ப்பற்று உண்மையிலேயே உண்டா, இல்லையா?

தமிழிசையை வளர்க்கவேண்டுமென்றால் முதலில் கர்நாடக இசையின் ஆதிக்கத்தை ஒழித்தாகவேண்டுமா?

Thursday, December 16, 2004

திருந்திட்டேன்!

"என்னப்பா? என்னது உன் கையில?"

"யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க சாமி... நான் சாகப் போறேன்!

"அப்படியா? அப்ப சரி.... ஆனா, எதுக்காக நீ சாகணும்?"

"இல்ல சாமி, இனிமே வாழ்க்கையில என்னால சந்தோஷமா இருக்க முடியாது. அதான்"

"ஒகே, ஓகே....உன் உடம்பு நல்லாத்தானே இருக்குது. உனக்கு அப்படியென்னதான் பிரச்னை?"

"வெச்சிருந்த பணத்தையெல்லாம் செலவழிச்சே அழிச்சுட்டுனே சாமி!"

"சரி, எவ்ளோ பணம்?"

"அதிருக்கும் லட்சக்கணக்குல.."

"அப்படி என்னதான் பண்ணுனே? குடிச்சுட்டு சூதாடி எல்லாத்தையும் தோத்துட்டியா?"

"அய்யோ...அதில்ல சாமி. பிஸினஸ் பண்ணதால வந்த வினை"

"என்னதான் ஆச்சு? புரியுற மாதிரி சொல்லுப்பா!"

"பணத்துக்காக பிஸினஸ் ஆரம்பிச்சேன் சாமி... லாஸ் ஆயிடுச்சு..... வுட்டதை புடிக்க திரும்பவும் பணத்தை இன்வெஸ்ட் பண்ணிணேன். திரும்பவும் லாஸ் ஆயிடுச்சு. இப்ப எல்லோரும் என் சட்டைய புடிக்கிறாங்க.. என்கிட்ட பணம்னு எதுவுமேயில்லை. செத்துப் போயிடலாம்னு தோணுது"

"ப்பூ.. அவ்வளவுதானே? சில லட்சம் லாஸ் வந்ததுனால செத்துப்போயிடலாம்னு முடிவே பண்ணிட்டியா?"

"ஆமா சாமி. உங்களுக்கு வேணும்னா அது சில லட்சமா இருக்கலாம். நீங்க சன்னியாசி. உங்களுக்கு ஒண்ணுமில்லை. ஆனா, எனக்கு அது பெரிய விஷயம் சாமி"

"சரி, அந்தப் பணத்தை உனக்கு யாராவது கொடுக்கச் சொல்லி சொல்லிடவா?"

"நிஜமாவா? எப்போ சாமி?"

"நாளைக்கு"

"நிஜமாவா?"

"சத்தியமா"

"எப்போ, நான் திருப்பிக் கொடுக்கணும் சாமி?"

"தேவையில்லை. உனக்கு தேவையானது கிடைச்சப்புறம் எப்போ கொடுக்கணும்னு தோணுதோ அப்ப திருப்பிக் கொடுத்தா போதும்"

"நிஜமாவா? அப்ப என்ன வட்டி கொடுக்கணும் சாமி?"

"வட்டியெல்லாம் எதுவும் கிடையாது. இது வட்டி இல்லாத ·ப்ரீ லோன்"

"ரொம்ப தாங்க்ஸ் சாமி. எல்லா பணமும் கிடைச்சதும் நிச்சயம் நான் திருப்பி தந்துடுவேன்."

மனுஷங்க எப்போதும் உணர்ச்சி வசப்படற ஆளுங்கதான். எப்போ வேணா, என்ன வேணாலும் செய்வாங்க. ஏன்னா எல்லோரும் இந்த உலகத்துல வசதியா, சந்தோஷமா வாழணும்னுதான் நினைக்கிறான். அது முடியாதுங்கிற பட்சத்துலதான செத்துப்போயிடலாம்னு முடிவு எடுக்கிறான். பணம் மட்டும் கிடைச்சுட்டா தனக்கு நல்ல எதிர்காலம் இருக்குதுன்னு எல்லோருமே நினைச்சுட்டிருக்கான். அது தேவைக்கு அதிகமா இருக்கும்போதோ அல்லது சுத்தமா இல்லாதபோதோ எதை வேணும்னாலும் செய்வான்!

- சுவாமி தயானந்த சரஸ்வதியின் பகவத் கீதை உரையிலிருந்து

Saturday, December 11, 2004

வாழ்த்துக்கள்!



வாழ்த்த வயதில்லை... வணங்குகிறோம்!



Friday, December 03, 2004

மொட்டை

ஏர் பிடித்த உழவன் மாதிரி லாவகமாக கத்தியை வைத்து சரசரவென்று இழுத்து போய்க்கொண்டே இருப்பார். தலையிலிருந்து பொத் பொத்தென்று முடிக்கற்றைகளாக தரையில் விழும். கூடவே கண்ணீர் துளிகளும். ஆரம்பத்தில் கொஞ்சம் அசெளகர்யமாக இருக்கும். நாலே நிமிஷத்தில் 'முடிஞ்சுடுச்சுப்பா'ன்னு சொல்லும்போது இன்னும் கொஞ்சம் இழுக்கக்கூடாதான்னு சின்னதா ஒரு ஏக்கம்! சட்டையில்லாத உடம்பில் ஒட்டிக்கொண்ட முடிகளை தட்டி தூக்கிவிட்டுவிட்டு நிற்பவரிடம் சில சில்லறைகளை(?) நீட்டுவார் அப்பா. சோகமாய் சட்டையை சுருட்டிக்கொண்டே அப்படியே நடத்தியே அழைச்சுக்கிட்டு கோயில் குளத்தை நோக்கி நடக்கும்போது இப்பவே குல்லா வாங்கி தரமாட்டாரான்னு தோணும். ஆனா, மனுஷன் வாயே திறக்காம குளத்துக்கு போய் மிச்சம் மீது இருக்கும் டவுசரையும் கழட்டி விட்டு பொம்பளைங்க முன்னாடியே குளத்தில் இறங்கி குளிக்கச் சொல்வார். முங்கி எழுந்து வந்ததும் கையோடு கொண்டு வந்திருக்கும் அரைச்ச சந்தனத்தை தலையில்.... தடவ மாட்டார், சின்னதம்பி பிரபு மாதிரி மொட்டைத் தலையையே மிருதங்கமாக்கிவிடுவார். சந்தனத்தின் குளிர்ச்சியும், கொஞ்ச நாளைக்கு எண்ணெய் தடவி தலையை சீவ வேண்டாமே என்கிற நினைப்பும் சந்தோஷமாத்தான் இருக்கும். ஆனா, அடுத்த நாள் ஸ்கூலில் சக மாணவியர்கள் முகத்தில் வரும் நமுட்டுச் சிரிப்பை பார்க்கும்போது முகமே பேஸ்தடிச்சு போய்டும்!

ஆனாலும் ஒவ்வொருத்தருக்கும் மொட்டை ஒரு இனிய அனுபவம்தான். மொட்டை என்கிற சடங்கு சரியா, தப்பான்னு தெரியலை. இந்து மதம் என்றில்லாமல் மற்ற மதங்களிலும் நேர்த்திக்கடனாக மொட்டை போடுவதில் ஏதோ சைக்காலஜிக்கல் காரணம் இருக்கும்னுதான் நினைக்கிறேன். மொட்டை அடிப்பது இப்போ கொஞ்சம் காஸ்ட்லியான விஷயமாகிவிட்டது. கலோக்கியலா பேசும்போது மொட்டையடிக்கிறது என்பதற்கே வேற அர்த்தம் வந்துவிட்டது. சின்ன வயசில் நிறைய தடவை மொட்டை போட்டிருக்கேன் (போடும்படி ஆக்கப்பட்டிருக்கேன்!). வைத்தீஸ்வரன் கோயிலில் ஆரம்பிச்சு, பழனி, சமயபுரம்னு எட்டாங்கிளாஸ் வர்றதுக்குள்ளேயே நாலு மொட்டை. நாடு இருக்குற இன்றைய நிலைமையில முக்கியமான மொட்டையாக நான் நினைக்கிறது நாகூரில் அடிச்சதைத்தான். லேட்டஸ்ட் மொட்டை, போன வருஷம் திருப்பதியில் 'கவனிச்சு' போட்டது! திருப்பதியில் மட்டும் ஏன்தான் மொட்டையடிச்சதும் சந்தனம் தடவ மாட்டேங்கறாங்களோ தெரியலை! கடலூர் பக்கம் கெமிக்கல் கம்பெனியில் வேலைசெய்யும் என்னோட ·பிரண்ட், முடியிலிருந்துதான் நிறைய கம்பெனியில் பிஸ்கெட் தயாரிக்க புரோட்டீன் எடுக்கிறாங்கன்னு ஒரு விஷயத்தை எடுத்துவிட்டு 'உவ்வே' வரவழைச்சான். எத்தனையோ கேள்விகளை ஆனந்த விகடனில் மதனிடம் கேட்டிருந்தாலும் இன்னும் என் நண்பர்களின் ஞாபகத்திலிருக்கும் ஓரே கேள்வி...

'மொட்டையடித்தால் மீசையையும் எடுக்க வேண்டுமா?'

'லேடீஸ் என்றால் அவசியமில்லை!'



'ப்பூ.... வலைப்பூ ஆரம்பிச்சு இன்னியோட ஒரு வருஷமாச்சே! இன்னிக்கு பார்த்தா இப்படியொரு மேட்டர் எழுதறது?!'

Wednesday, December 01, 2004

கேள்வியின் நாயகனே!

"சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம்! ஏன் மத்திய அமைச்சர்கள்மீதும், மற்ற தலைவர்கள்மீதும் இப்படி கொலைக் குற்றம் சாட்டப்பட்டாலே அவர்கள் வகிக்கும் பதவியிலிருந்து விலகவேண்டும். அல்லது விலக்கப்பட வேண்டும் என்று கூறும் பலர், இந்த சங்கராச்சாரியாரை அவர் வகிக்கும் மடாதி பதி பதவியிலிருந்து உடனடியாக நீக்கி வைக்கவேண்டியது, இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையினர் சட்டப்படி ஆற்ற வேண்டிய கடமை யாகும்! சட்டம் வளையக் கூடாது என்றோம்; அப்படி யாராவது வளைக்க முயன்றால் அவர்களை மக்களும், உண்மை நாடுவோரும் கடைசிவரைக் கண் காணித்தலும் அவசிய மாகும்! இந்து அறநிலையப் பாதுகாப்புத்துறை அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை நாடே எதிர்பார்க்கிறது." தி.க. தலைவர் கி.வீரமணி அறிக்கையில்... சில கேள்விகள் * ஜெயிலில் இருக்கும் ஜெயந்திரரை, விஜயேந்திரர் பார்க்க மறுப்பது ஏன்? இவ்வளவு நடந்தபின்பும் மடாதிபதி பதவியிலிருந்து ஜெயந்திரரை விலக்க முடியாதது ஏன்? * இந்து சமய அறநிலைய பாதுகாப்புத்துறையால் ஜெயந்திரர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? இந்து அறநிலையத்துறையின் அதிகார வரம்பை எல்லா சமயக் கோயில்களுக்கும் விரிவுபடுத்த முடியாதது ஏன்? * ஜெயந்திரர் கைதை எதிர்க்கும் பிராமண சங்கத்திற்கும் மற்ற ஜாதி சங்கங்களுக்கும் வித்தியாசம் உண்டா? * சங்கரராமன் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சத்தை அள்ளிக் கொடுத்ததன் மூலம் ஜெயலலிதா சாதிக்க நினைத்தது எதை? * ஜெயந்திரர் பதவிக்கு வந்த காலத்திலிருந்தே விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்ற டாக்டர் ராமதாஸின் கோரிக்கை குறித்து கலைஞர் வாய்திறக்காதது ஏன்? * எத்தனை நாளைக்குத்தான் ஜெயந்திரர் விஷயத்தில் மெளனச் சாமியாராக இருக்கப்போகிறது காங்கிரஸ்? மேட்டர் உண்மைதானுங்களா?! "அய்யோ... சில்லறை இல்லேன்னா ஆளை வுடு சாமி.... தோண்டி துருவாதே! நான் அந்த மாதிரி சாமியாரில்லை!"