Thursday, December 16, 2004

திருந்திட்டேன்!

"என்னப்பா? என்னது உன் கையில?"

"யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க சாமி... நான் சாகப் போறேன்!

"அப்படியா? அப்ப சரி.... ஆனா, எதுக்காக நீ சாகணும்?"

"இல்ல சாமி, இனிமே வாழ்க்கையில என்னால சந்தோஷமா இருக்க முடியாது. அதான்"

"ஒகே, ஓகே....உன் உடம்பு நல்லாத்தானே இருக்குது. உனக்கு அப்படியென்னதான் பிரச்னை?"

"வெச்சிருந்த பணத்தையெல்லாம் செலவழிச்சே அழிச்சுட்டுனே சாமி!"

"சரி, எவ்ளோ பணம்?"

"அதிருக்கும் லட்சக்கணக்குல.."

"அப்படி என்னதான் பண்ணுனே? குடிச்சுட்டு சூதாடி எல்லாத்தையும் தோத்துட்டியா?"

"அய்யோ...அதில்ல சாமி. பிஸினஸ் பண்ணதால வந்த வினை"

"என்னதான் ஆச்சு? புரியுற மாதிரி சொல்லுப்பா!"

"பணத்துக்காக பிஸினஸ் ஆரம்பிச்சேன் சாமி... லாஸ் ஆயிடுச்சு..... வுட்டதை புடிக்க திரும்பவும் பணத்தை இன்வெஸ்ட் பண்ணிணேன். திரும்பவும் லாஸ் ஆயிடுச்சு. இப்ப எல்லோரும் என் சட்டைய புடிக்கிறாங்க.. என்கிட்ட பணம்னு எதுவுமேயில்லை. செத்துப் போயிடலாம்னு தோணுது"

"ப்பூ.. அவ்வளவுதானே? சில லட்சம் லாஸ் வந்ததுனால செத்துப்போயிடலாம்னு முடிவே பண்ணிட்டியா?"

"ஆமா சாமி. உங்களுக்கு வேணும்னா அது சில லட்சமா இருக்கலாம். நீங்க சன்னியாசி. உங்களுக்கு ஒண்ணுமில்லை. ஆனா, எனக்கு அது பெரிய விஷயம் சாமி"

"சரி, அந்தப் பணத்தை உனக்கு யாராவது கொடுக்கச் சொல்லி சொல்லிடவா?"

"நிஜமாவா? எப்போ சாமி?"

"நாளைக்கு"

"நிஜமாவா?"

"சத்தியமா"

"எப்போ, நான் திருப்பிக் கொடுக்கணும் சாமி?"

"தேவையில்லை. உனக்கு தேவையானது கிடைச்சப்புறம் எப்போ கொடுக்கணும்னு தோணுதோ அப்ப திருப்பிக் கொடுத்தா போதும்"

"நிஜமாவா? அப்ப என்ன வட்டி கொடுக்கணும் சாமி?"

"வட்டியெல்லாம் எதுவும் கிடையாது. இது வட்டி இல்லாத ·ப்ரீ லோன்"

"ரொம்ப தாங்க்ஸ் சாமி. எல்லா பணமும் கிடைச்சதும் நிச்சயம் நான் திருப்பி தந்துடுவேன்."

மனுஷங்க எப்போதும் உணர்ச்சி வசப்படற ஆளுங்கதான். எப்போ வேணா, என்ன வேணாலும் செய்வாங்க. ஏன்னா எல்லோரும் இந்த உலகத்துல வசதியா, சந்தோஷமா வாழணும்னுதான் நினைக்கிறான். அது முடியாதுங்கிற பட்சத்துலதான செத்துப்போயிடலாம்னு முடிவு எடுக்கிறான். பணம் மட்டும் கிடைச்சுட்டா தனக்கு நல்ல எதிர்காலம் இருக்குதுன்னு எல்லோருமே நினைச்சுட்டிருக்கான். அது தேவைக்கு அதிகமா இருக்கும்போதோ அல்லது சுத்தமா இல்லாதபோதோ எதை வேணும்னாலும் செய்வான்!

- சுவாமி தயானந்த சரஸ்வதியின் பகவத் கீதை உரையிலிருந்து