Sunday, January 09, 2005

சென்னை புத்தக கண்காட்சி - ரவுண்ட் அப்

சொற்ப சென்னைவாசிகள் வேடிக்கைப் பார்க்க வி.ஐ.பிக்கள் சில பேர் மேடையேறி, தமிழில் படிக்கும் பழக்கம் குறைந்து போய் வருவதாக வருத்தப்பட்டு வழக்கம் போல் சென்னை புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார்கள். நுழைவு வாயிலுக்கு பக்கத்திலேயே உணவு விடுதியை (அதாங்க, கேண்டீன்) வைச்சதுக்கு காரணம் தெரியலை. புத்தகங்களை புரட்டிக்கொண்டிருக்கும்போது இயற்கை உந்துதல் வந்தால், கண்காட்சியை விட்டு வெளியேறி தராளமான தண்ணீர் வசதியுடன் புதிதாக கட்டப்பட்டிருக்கும் கழிப்பறைகளுக்கு போய்வர வசதி உண்டு. ஆனால், திரும்ப உள்ளே வரும்போது புதுசா டிக்கெட் எடுக்கச் சொல்வார்கள்!

ஆரம்பித்து இரண்டு நாட்களாகிவிட்டன. இன்னம் மக்களின் டிரெண்ட் தெரியவில்லை. நான் பார்த்தவரைக்கும் அதிகமாக விற்பனையாகும் புத்தகங்கள் உயிர்மை பதிப்பகத்திலிருந்து வந்திருக்கும் சுஜாதாவின் புது படைப்புகள், எஸ். ராமகிருஷ்ணனின் உலக சினிமா, பா.ராகவனின் டாலர் தேசம், சோம. வள்ளியப்பனின் அள்ள அள்ளப் பணம் சுதாங்கனின் சுட்டாச்சு அப்புறம் சில தன்னம்பிக்கை புத்தகங்கள். உலக சினிமா பத்தி மலையாள மனோரமா ரேஞ்சுக்கு ஒரு புத்தகம் எஸ். ராமகிருஷ்ணனிடமிருந்து. மிரட்டியிருக்கிறார். கண்காட்சிக்கு வர்ற சினிமாக்காரங்களெல்லாம் மறக்காம அள்ளிக்கிறாங்க.

இந்த வருஷம் இதுவரைக்கும் நான் வாங்கின புத்தகங்கள்.... எஸ்.ராமகிருஷ்ணனின் துணையெழுத்து, இரா.முருகனின் சைக்கிள் முனி, சுதாங்கனின் சுட்டாச்சு, சுட்டாச்சு. இன்னும் நிறைய புத்தகங்கள் வாங்கணும். முக்கியமா சோவின் படைப்புகள் ஏ¦ழுட்டு வாங்கியே ஆகணும். போன வருஷம் கண்ணதாசனின் படைப்புகள் ஒரு தொகுப்பாக வாங்கி இன்னும் புரட்டி பார்க்காமல் வைத்திருக்கிறேன்.

இதுவரைக்கும் 6,7 ஸ்டாலுக்குள் மட்டுமே போய் வந்திருக்கிறேன். பெரியார் பற்றிய புத்தகங்கள் நிறையவே கிடைக்கின்றன. இருபது வருஷத்துக்கு முந்தியே வீரமணி எழுதின 'சங்கராச்சாரி யார்' புத்தகம் அமோகமாக விற்பனையாகிறது. பக்கத்து ஸ்டாலில் ஜெயந்திரர் தெய்வீக மொழிகள்!

முதல் நாளில் பரபரப்பாக விற்பனையான ஜெயகாந்தனின் ஹர ஹர சங்கர இரண்டாவது நாளில் மூச்சு வாங்கியது. ஒரு சிறுகதையை வாய்ப்பாடு சைஸில் அச்சிட்டு யாரும் பிரித்து பார்க்க முடியாத வகையில் பின்னிட்டு நாவல்னு நாமகாரணம் சூட்டி விற்பனை செய்தார்கள். எத்தனை காலம்தான்....!

ரமணரில் ஆரம்பித்து குமுதம், விகடனில் எழுதிக்கொண்டிருக்கும் லேட்டஸ்ட் சாமியார்கள் வரை எல்லோருக்கும் தனித்தனி ஸ்டால் உண்டு. சம்பந்தப்பட்ட சாமியார் புகழ் பாடும் புத்தகங்கள், சிடிக்கள், படங்களும் உண்டு.

புத்தகமெல்லாம் இருக்கட்டும். கேண்டீனில் அருமையான மெறுமெறு சமோசா. கண்ணுக்கு முன்னாலேயே ஹைடெக்காக பொரித்து தருகிறார்கள். சாப்பிடுவதை விட பார்ப்பதற்கு சுகமாக இருக்கிறது. ஒவ்வொரு ஏரியாவிலும் கூல்டிரிங், டீ, காபி, ஐஸ்கிரீம், பாப்கார்ன் கடைகள். புத்தகங்களை விட தரமாகவே இருக்கின்றன!