Thursday, January 27, 2005

மயிலாடுதுறையின் அறிவகம்

மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடி போகும் சாலையில் கொத்த தெரு பெரிய மாரியப்மமன் கோயிலுக்கு எதிர்ப்பக்கத்தில் கொஞ்சம் உள்ளடங்கியே இருக்கிறது அறிவகம். தமிழக அரசின் சமூக பாதுகாப்புத்துறையினால் நிர்வகிக்கப்படும் மனவளர்ச்சி குன்றிய, காது கேளாத, வாய் பேசாத ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம். 90களில் நான் பள்ளி வாழ்க்கையில் இருக்கும்போது ஆரம்பிக்கப்பட்ட காப்பகம். நாற்பது குழந்தைகளோடு ஆரம்பித்த இந்த காப்பகத்தில் இப்போது இருப்பதோ நூற்றி இருபது குழந்தைகள்.



ஏற்கனவே நான்கு பெட்ஷீட்கள் வைத்திருக்கும் மீனவ குடும்பங்களுக்கு கூடுதலாக ஒரு பெட்ஷீட்டை கொடுப்பதற்கு பதிலாக நிஜமாகவே கஷ்டப்படும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்ற நண்பர்களின் ஐடியா பற்றி தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில்தான் ஒரு தகவல் கிடைத்தது. பூம்புகார், தரங்கம்பாடி கடற்கரையோர மீனவர் குப்பங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட காது கேளாத, வாய் பேசாத குழந்தைகள் மூன்று பேர் இந்த அன்பகத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாக வந்தது அந்த செய்தி. நிர்வாகியை தொடர்பு கொண்டு கேட்டபோது தகவலை உறுதி செய்தார்.



காப்பகம் இருக்கும் பகுதியின் கவுன்சிலர், குடும்ப நண்பர். படித்துவிட்டு சிவனே என்று பெட்டிக்கடை நடத்தி வந்தவரை அரசியலுக்கு இழுத்து வந்து கட்சி சார்பில்லாமல் சுயேச்சையாக நிற்க வைத்து, மக்கள் இரண்டு முறை வெற்றிக்கனியையும் கையில் கொடுத்துவிட்டார்கள். காப்பகத்திற்கு உதவிகள் கிடைக்காமல் இருந்த காலத்திலெல்லாம் கவுன்சிலர்தான் ஆதரவளித்து வந்ததாக சொல்கிறார்கள். காப்பகத்தோடு தொடர்புடையவரை பக்கத்தில் வைத்துக்கொண்டு பொருட்களை கொடுப்பதே நல்லது என்று நினைத்து அவரையும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டோம்.



காணும் இடமெல்லாம் செடி, கொடிகளை வளர்த்து காப்பகத்தையே பச்சை பச்சையாக வைத்திருக்கிறார்கள். மெயின் ரோட்டிலிருந்து உள்ளடங்கி இருப்பதால் வாகன இரைச்சல்களின் பாதிப்பு குறைவாக இருக்கிறது. தங்குமிடம், பள்ளிக்கூடம், உணவுக்கூடம் என்று எல்லாவற்றிற்கும் தனித்தனியாக கட்டிடங்கள் கட்டிவைத்து அழகான தமிழ்ப் பெயரையும் சூட்டியிருக்கிறார்கள். ஏரியாவை ஒரு ரவுண்டு போய்விட்டு வந்துவிடலாம் என்று நினைத்து முதலில் சாப்பாடு கூடத்திற்கு சென்றோம். யாரோ ஒரு ஸ்பான்ஸர் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஏற்பாடு செய்திருந்தார். அவரது பெயரையும் குடும்பத்தினரது பெயர்களையும் தங்களால் முடிந்தவரைக்கும் முயற்சி செய்து கோரஸாக உச்சரித்து தங்களது நன்றியை தெரிவித்துவிட்டு குழந்தைகள் அப்போதுதான் சாப்பிட ஆரம்பித்திருந்தார்கள்.



·பார்மாலிட்டிக்காக யாரையாவது ஒருத்தரை நிற்க வைத்து பெட்ஷீட்டை கொடுத்து ·போட்டோ எடுத்துக்கொள்வதை இதுவரை முடிந்தவரைக்கும் தவிர்த்து வந்தேன். ஆனால் இங்கே முடியவில்லை. நிர்வாகியின் வற்புறுத்தல் தாங்க முடியாமல் கூட வந்த நண்பரையும் கவுன்சிலரையும் பொருட்களை கொடுக்கச் சொல்லிவிட்டு காமிராவை கையிலெடுத்துக் கொண்டேன். சுனாமியால் பாதிக்கப்பட்ட மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தையை கூப்பிட்டு பெட்ஷிட்டை வாங்கச் சொல்லிவிட்டார் காப்பக நிர்வாகி. பழைய துணிகளையே பார்த்தும் வாங்கியும் பழக்கப்பட்டு போன காப்பக குழந்தைகளுக்கு கண்ணை பறிக்கும் கலரிலிருந்த பெட்ஷிட்கள் ரொம்பவே கவர்ந்துவிட்டன. காப்பகத்திற்குள்ளேயே எம்ப்ராய்டரி செய்வதற்கான சாதனங்கள் இருக்கின்றன. பெட்ஷீட்களை வாங்கிய கையோடு நான்கு பெண்கள் சேர்ந்து உட்கார்ந்து பெயர்களை எழுதும் எம்ப்ராய்டரி வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார்கள்.



கட்டுமரங்கள் கிடைத்து வசிப்பதற்கு தனியாக வீடும் கிடைத்துவிட்டால் மீனவர்களின் வாழ்க்கை பழையபடி இயல்புக்கு திரும்பிவிடும். இதுபோன்ற ஆதரவற்ற மனநலம் காப்பகங்களின் நிலைமையோ எப்போதும் இப்படித்தான். ஆனாலும் சுனாமிக்கு பின்னர் மீனவர் குப்பங்களுக்கு மட்டும் என்றில்லாமல் எல்லா ஆதரவற்ற காப்பகங்களுக்குமே நிதியுதவியிலிருந்து நிவாரணப் பொருட்கள் வரை கிடைக்க ஆரம்பித்துவிட்டன. இது உண்மையிலேயே ஆறுதலான விஷயம்தான். நாங்கள் போன நாளன்று கூட UNICEFலிருந்து அதிகாரிகள் வரப்போவதாக சொல்லிக்கொண்டிருந்தார்கள். எப்படியும் இந்த காது கேளாதா, வாய் பேசாத ஆதரவற்ற குழந்தைகளுக்கு இன்னும் ஒரு வருஷத்துக்கு தேவையான பொருட்களெல்லாம் கிடைத்துவிடும். இனி அடுத்த வருஷத்தை பற்றித்தான் அவர்களுக்கு கவலை!