Monday, April 11, 2005

கருத்து கந்தசாமிகள்

கருத்துக்கணிப்பு என்பதை ரொம்ப சாதாரண விஷயமாகத்தான் நினைத்திருந்தேன், மூன்று மாதத்திற்கு முன்புவரை. எதற்காக என்கிற விஷயத்தை சொல்லாவிட்டால் 'எதுக்கு இதையெல்லாம் கேட்குறே'ங்கிற கேள்விதான் பதிலாக வரும். விவரமாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டு பேனாவை எடுக்க ஆரம்பித்தால், 'வேற வேலையே உனக்கு இல்லையா'ங்கிற தொனியில் முகத்தையே கதவாக்கி அறைந்து சாத்திக்கொள்வார்கள். நிறையபேருக்கு ஆளுங்கட்சி அரசியலிலிருந்து அரிசிவிலை உயர்வு வரை எல்லாமே அத்துப்படி. பேச ஆரம்பித்தால் நிறுத்துவதே கிடையாது. இன்னும் சிலரோ பொதுவான விஷயங்களை விட்டு டிராக் மாறிப்போய் சொந்தக்கதை, சோகக்கதையை எடுத்துவிடுகிறார்கள். முகபாவத்தை வைத்து இப்படித்தான் பேசுவார்கள் என்று எதிர்பார்த்து, ஏமாந்து போய் ஜகா வாங்கின சம்பவங்களைப் பற்றி சுவராசியமாக நிறையவே எழுதலாம். எல்லாமே, 'மனிதர்களில் இத்தனை விதங்களா'ன்னு வியக்க வைத்த அனுபவங்கள்.

டிசம்பர் மாதம் ரஜினி பிறந்தநாளுக்காக ஏற்பாடு செய்திருந்த ரத்ததான முகாமுக்கு வந்தவர்களில் இருந்துதான் என்னுடைய வேலையை ஆரம்பித்திருந்தேன். ஆரம்பத்தில் அறுபது நண்பர்களிடம் பிரிண்டட் பேப்பரை கொடுத்து, பூர்த்தி செய்யச்சொல்லி பதில் வாங்குவது சுலபமான விஷயமாகத்தான் இருந்தது. ஆனால், பொதுவிடங்களில் பேனாவும், பேப்பரும் கையிலெடுத்தவுடனே 'எதுக்கு வம்பு' என்று மிரண்டு ஒதுங்கும் முகங்களைப் பார்த்தவுடன் கொஞ்சம் தலை சுற்றியது. சரசரவென்று மூன்று மாதமும் ஓடித்தான் போய்விட்டது. எத்தனை பேரிடம் கருத்துக்கணிப்பு என்கிற கணக்கு வழக்கெல்லாம் சரிவர நினைவில்லை. நான் பார்த்த வரையில் பெரும்பாலான மக்கள், இதனால் தனக்கு என்ன ஆதாயமிருக்கும் என்பதைத்தான் பார்க்கிறார்கள். இல்லாவிட்டால் நடையைக்கட்டி விடுகிறார்கள். ('நீ இந்தியா டுடே ஸ்டைலில் புரட்சிகரமாக ஏதாவது சர்வே எடுத்தா நிறைய பேர் வருவான்... இதுல என்ன இருக்குது' ஒரு நண்பரோட கமெண்ட்!) ஒரு சில 'கருத்து கந்தசாமி'க்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதே சமயம் எல்லோரும் எல்லாவிதமான பிரச்னைகளுக்கும் கருத்து சொல்வார்கள் என்று நாம் நினைப்பது மடத்தனம்தான். ஏகப்பட்ட லீட் கொடுத்து கேட்டாலும் திருதிருவென்றுதான் முழிக்கிறார்கள். 'தெரியாது' என்று வெளிப்படையாக சொல்பவர்களை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. தனக்கு தெரியாத விஷயத்தையே மறைத்து, 'சொல்ல முடியாது' என்று சொல்லிவிட்டு போகக்கூட அவர்களால் முடியவில்லையே!

ஓகே. எடுத்த சர்வே பத்தி கொஞ்சமாவது சொல்ல வேண்டாமா?

1. ரஜினி - இனி செய்யவேண்டியது...

(a) அரசியலுக்கு வரவேண்டும் - 33 %
(b) தொடர்ந்து சினிமாவில் நடிக்கவேண்டும் - 42 %
(c) மெளனமாக இருப்பது நல்லது - 17 %
(d) எந்த முடிவை எடுத்தாலும் வரவேற்பேன் - 8 %

2. ரஜினி நெருக்கமாக இருப்பது யாருடன்?

(a) கருணாநிதி - 18 %
(b) ஜெயலலிதா - 8 %
(c) ப.சிதம்பரம் - 13 %
(d) நடுநிலை - 61 %

3. ரஜினியின் படங்களில் உங்களுக்கு பிடித்தமான விஷயம்?

(a) ஸ்டைல் நடிப்பு - 36 %
(b) காமெடி நடிப்பு - 23 %
(c) ஆக்ஷன் - 12 %
(d) மேற்கண்டவற்றுள் எதுவுமில்லை - 29 %

4. ரஜினியிடம் உங்களுக்கு பிடித்த விஷயம்?

(a) அரசியல் வாழ்க்கை - 12 %
(b) ஆன்மீக வாழ்க்கை - 9 %
(c) சினிமா வாழ்க்கை - 7 %
(d) தனிமனித வாழ்க்கை - 72 %

5. சிகரெட், புகை பிடிக்கும் பழக்கமுண்டா?

(a) உண்டு - 56 %
(b) இல்லை - 41 %
(c) சொல்ல முடியாது - 3 %

இவை தவிர இன்னும் ஆறு கேள்விகள் கேட்டு வாங்கி, ஒரு உண்டியலில் போட்டு குலுக்கி வந்த ரிசல்ட்டை எக்ஸலில் ஏற்றி பின்னர் முரசுவில் தட்டி 'ரஜினி - ச(கா)ப்தமா'? புத்தகத்தின் கிளைமாக்ஸாக வைத்துவிட்டேன். கம்மிங் பேக் டு த சர்வே.

கருத்துக்கணிப்பு எடுப்பதற்கும் சில சைக்காலஜி தெரிந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நேரடியாக கேள்விக்கு வருவதற்கு முன்னால் சில பொதுவான விஷயங்களாக எடுத்துவிடவேண்டும். 'டிரா·பிக் ரொம்ப ஜாஸ்தியா இருக்குதே... ரோடேல்லாம் இப்படி குப்பையா இருக்குதே'ன்னு கேட்டு கொஞ்சம் வாயை கிளறியாக வேண்டும். கொஞ்சம் தைரியம் ஜாஸ்தியாக இருந்தால் 'உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குதே'ன்னு சும்மா ஒரு ஸீன் போட்டு வைக்கலாம். பார்ட்டி பக்காவாக சிக்கிவிடும். 'பாட்ஷா'வில் பாலகுமாரன் எழுதிய ஒரு டயலாக், 'இந்தியன் பேசாம இருந்தா செத்துப்போயிடுவான்'. நூறு சதவீத உண்மைதான். உலகத்தில் அறிமுகமில்லாத ஆளிடம் தனது பெயர், சொந்த ஊர், வயசெல்லாம் விலாவாரியாக சொல்கிற ஆசாமி இந்தியன் அதுவும் தமிழ்நாட்டுக்காரனாகத்தான் இருக்க முடியும்னு நினைக்கிறேன்!