Thursday, September 29, 2005

அமானுஷ்யம்

Image hosted by Photobucket.com

பூம்புகார் - மேலையூர் மெயின் ரோடிலிருந்து குறுக்காக புகுந்து செம்பொன்னார் கோயில் நோக்கி போகும் சாலையிலிருந்து விலகி காவிரியாற்றின் கரையில் ஆலமரத்தினடியில் கொஞ்சம் நின்று ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில் கண்ணில் பட்ட சிலை. தலையை கொடுத்த தேவி யாரென்று தெரியவில்லை. யார், எதற்காக இதை இங்கே கொண்டு வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆடு, மாடு கூட சீந்த ஆளில்லாத இடத்தில், உச்சி வெய்யில் நேரத்தில் திடீரென்று பிரத்யட்சமானது போன்ற பிரமைக்கு காரணம் தெரியவில்லை. இப்போதெல்லாம் அடிக்கடி ஆழ் மனதில் ·பிளாஷ் ஆகும் காட்சிகளில் இதுவும் ஒன்று.

Sunday, September 18, 2005

விகடனுக்கு ஒரு ஓ!

அரசியல் அரிச்சுவடி படிக்கும் கேப்டனை மறைந்து நின்று திகிலோடு பார்க்கும் பெரியார் வழிவந்த பெரிசுகள். வைகோ, ராமதாஸ், திருமாவளவன், இளங்கோவன் வகையறாக்கள் மட்டும் மிஸ்ஸிங். முக்காடு போட்டுக்கொண்டு மூலையில் உட்கார்ந்திருப்பது கார்ட்டூனில் வரவில்லையோ என்னவோ?! (ஆரம்பிச்சுட்டான்யா... நாயை குளிப்பாட்டி நடு வூட்ல வெச்சாலும்... புது மொழி ஏதாவது சொல்லாம்....அரசியல் வேணாம்னு சொன்னாலும் அடங்காத ராம்கி மாதிரி....ஹி..ஹி.. கரெக்டா கிருபா?) சரி, மேட்டருக்கு வருவோம். ரொம்ப நாளாவே 'வாசகர் கடிதம்' எழுதாம கை துறுதுறுன்னு இருக்குதா... அதான் களத்துல இறங்கியாச்சு!

கோடம்பாக்கம் இருக்கிறவரைக்கும் விகடனார் நம்பர் ஓன்னை தராளாமா தக்க வெச்சுக்கலாம். ஆ.வியில் சினிமா மேட்டர் தவிர வேற என்ன இருக்குதுன்னு கேட்டா பதில் சொல்றதுக்கு செளகர்யமா இருக்கும். நடிப்பு தம்பிகளை பத்தி ராஜாவும், செல்வராகவனும் உருகறாங்க. படத்துல மட்டுமல்ல பேட்டியிலும் குடும்ப 'படம்' தான். கல்யாணம் ஆவறதுக்கு முந்தி வரை மாமா ஒண்ணுமே தெரியாத ஆளா இருந்ததா கேப்டனோடு மச்சான் சொல்லியிருக்காரு. கல்யாணத்துக்கு அப்புறம் சரத்குமார் எப்படியிருக்காரோன்னு யாரும் கவலைப்படவேண்டாம்! செஞ்சரி அடிக்க வந்துட்டாரே!

விஜய், அஜீத்துக்கு ஹாய் சொல்றதும் பதிலுக்கு அஜீத் ஹலோ சொல்றதும் பத்திரிக்கையுலகத்து வட்டாரத்துல... இது மேட்டரு! 'தப்பா நெனைச்சுக்காதீங்க'ங்கிற ஒரு வார்த்தையை வெச்சுக்கிட்டு சும்மா புகுந்து விளையாடியிருப்பவர் பாக்கியம் ராமசாமி. எதுக்கெடுத்தாலும் ஆராயக்கூடாது... அனுபவிக்கணும். கமல் சொன்னது சரிதான். வாழைப்பழத்தை மட்டும் ஏன் கழுவாமல் சாப்பிடுகிறோம் என்கிற அதி புத்திசாலித்தனமான கேள்விக்கெல்லாம் மதன் மாங்கு மாங்கென்று பதில் சொல்லியே ஆகணுமா? உங்க டச்சிங் குறையுதே மதன் ஸார்?!

நீச்சல் போட்டியில் நாலு தங்கப்பதக்கத்தை கடத்திக்கொண்டு வந்த சிவரஞ்சனியை பாராட்டுவதில் தப்பில்லை. அதற்காக டூ பீஸ் உடையில் நாலு ஸ்டில்லையா போடவேண்டும்?! இதில் சிவரஞ்சனியை ஹோம்லி டால்பின் என்று வர்ணித்ததுதான் இந்தவாரத்து மெகா ஜோக்! வார்த்தையை மடிச்சு, மடிச்சு போட்டா கவிதைங்கிறதை வாலி கெட்டியா பிடிச்சுக்கிட்டாரு. கிருஷ்ண விஜயமெல்லாம் புக்கா வரும்போது படிச்சுக்கலாம்!

எங்க காதலுக்கு வில்லன்களே ரசிகர்கள்தான்னு உண்மையை (அட, அங்கேயும் அப்படித்தானா?) சொன்ன மலையாளத்து மீசை மாதவன் பேட்டி படு சிம்பிள். மூணு வருஷமா கேரளத்தை கலக்கிக் கொண்டிருப்பவரை இப்போதான் இங்கே கண்டுகொண்டிருக்கிறார்கள். இந்த வயதிலும் என்னமா இருக்காருன்னு வியக்க வைத்த நம்பியார், தகுதியுள்ள எவரையும் வரவேற்க மக்கள் தயங்கியதில்லை என்ற நடுநிலையான தலையங்கம் என சில உருப்படியான விஷயங்கள், திருஷ்டிப்பொட்டு மாதிரி!

ஒரு காலத்துல ஆ.வி ஜோக்குன்னா ஆர்வமா எட்டிப் பார்க்குறவங்களுக்கு ஒரு அவசர செய்தி. இந்த வாரத்து ஆ.வியிலிருந்து சுடச்சுட ஒரு ஜோக்.

'சாட்டிங் மூலமா ஏமாத்த பணம் பறிக்கலாம்னு பார்த்தா அவன் கில்லாடியா இருக்கானே... '

'எப்படிச் சொல்றே?'

'என் படம்னு ஜோதிகா படத்தை அனுப்பினா அவன் சூர்யா படத்தை அனுப்புறான்'

குலுங்கி குலுங்கி சிரித்த மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். கீழ்ப்பாக்கம் போக வேன் ரெடி!

சினிமா மேட்டரையும், கடி ஜோக்குகளையும் மேய்ந்துவிட்டு ஓவென்று அழத் தயாராக இருந்தவனை சமாதானப்படுத்த ஒரு ஜில் மேட்டர். மாயவரம் ஆர்.எஸ் கிருஷ்ணா & கோவின் ஒரிஜினல் தென்னமரக்குடி எண்ணெய்தான் போயஸ்கார்டனுக்கு சப்ளை ஆகுதாம். புல்லரிக்க வைத்த விகடனாருக்கு ஒரு ஓ! (ஆப்சென்ட் ஆனதுக்கு தேங்க்ஸ் ஞாநியாரே!)

Saturday, September 10, 2005

மூன்றாம் யாத்திரை

வாரம் ஒரு தமிழ் சினிமா பார்ப்பவர்களுக்கு ரொம்பவே பரிச்சயமான விஷயம்தான். பில்டப் ஸீன்ஸ்! டைட்டில் முடிந்ததும் யாராவது ஒரு ஒப்புக்கு சப்பாணி காரெக்டர் ஓடி வந்து ஹீரோவின் அருமை பெருமைகளை டயலாக்காக எடுத்துவிடும். ஹீரோக்களை மோல்டு செய்யும் இந்த பில்ட் அப்புகளால் ஏ சென்டர் வொயிட் காலர் சாமிகள் நெளிய ரம்பித்தாலும் சி சென்டர்களில் விசில் பறக்கும். கல்லூரி வாழ்க்கையில் ஷேக்ஸ்பியர் நாடகங்களை உருட்டும் வரை இதுபோன்ற பில்ட் அப்புகளுக்கு பேடன்ட் வாங்கியிருப்பது தமிழ் சினிமாக்காரர்கள் மட்டும்தான் என்று நினைத்திருந்தேன். ஷேக்ஸ்பியர் காலம் என்ன சோழர்கள் காலத்திலேயே நம்மூரில் பில்ட் அப்புகளுக்கு பஞ்சமில்லை என்பதை தெரிந்து கொள்ள 2005 செப்டம்பர் மூன்றாம் தேதி வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

Image hosted by Photobucket.com

ஏகப்பட்ட தடவை போயிருந்தும் பெரிய கோயிலில் என் கண்களுக்கு தட்டுப்படாத பிரமிக்க வைத்த விஷயம் அது. பெரிய யானையை பாதி முழுங்கிய நிலையிலிருக்கும் ஒரு ராட்சத பாம்பை காலில் போட்டு மிதித்தபடி, சுட்டுவிரலை நீட்டி மிரட்டும் அந்த ராட்சத சிவ கணங்களின் இன்னொரு கரங்கள் சொல்லும் செய்தி, 'உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கு அரிய' அந்த பெருவுடையாரின் பெருமையைத்தான்.

Image hosted by Photobucket.com

சிலிர்த்தெழுந்த சிவபெருமான் தனது விஸ்வரூபத்தை காட்ட, அஞ்சி நடுங்கி அலறியடித்தபடியே பூத கணங்கள் ஓடும் அந்த சிற்பத்தின் உயரம் இரண்டு செங்கல் கூட இருக்காது. மெளஸ் பேட் சைஸ் கல்லில் நிஜமாகவே கைவண்ணத்தை காட்டியிருக்கிறார்கள். அரை அடி சிற்பத்திற்கும் அரை டஜன் உருவங்கள். அவை காட்டும் முகபாவங்கள் பற்றி முப்பது பக்கமாவது எழுதி தள்ளிவிடலாம். எங்க ஊரு வள்ளலார் கோயிலில் பாதி கூட இருக்காத அந்த புள்ள மங்கை கோயிலில் புதைந்திருக்கும் விஷயங்கள் ஜாஸ்தி. துர்க்கையம்மன் சந்நிதிக்கு கீழ் இருக்கும் அந்த குப்பைகளை ஒதுக்கி தள்ளிவிட்டு குனிந்து உட்கார்ந்தபடியே பார்த்தால் கண்ணில் பளிச்சிடுகிறது அந்த சிற்பம். இதுவும் ஒரு பில்ட் அப்தான். குதிரை மீது அமர்ந்தபடியே யாரோ ஒரு வீரன் பின்னால் தொடரும் அந்த முரட்டு யானையை நோக்கி அங்குசத்தை எறியும் காட்சி. மொத்த காட்சியையும் கையளவே இருக்கும் கல்லில் செதுக்கி தள்ளியிருக்கிறார்கள்.

Image hosted by Photobucket.com

பாடல் பெற்ற ஸ்தலங்களை பட்டியிலிடும் ஒரு வங்கி அதிகாரி, ஹிண்டு படிப்பது போல கல்வெட்டை படிக்கும் ஒரு லேடி புரொபஷனல், சரித்திர நாவல்களை கரைத்து குடித்துவிட்டு தமிழ் இலக்கியத்தில் அதன் இடத்தை பற்றி காரசாரமாக விவாதிக்கும் இளைய தலைமுறையினர். கனகாம்பரம் போல் ன்மீகம், வரலாறு, இலக்கியம் என அற்புதமாக தொடுக்கப்பட்டு அரை செஞ்சுரி காலமாய் சமூகத்தின் சாமானியர்களும் விவாதிக்கும் விஷயமாக மாறியிருக்கும் அந்த சரித்திர நாவல்தான் இவர்களையெல்லாம் ஓரிடத்தில் சேர்த்திருக்கிறது. பொன்னியின் செல்வன்! வந்தியத்தேவனையும், குந்தவையையும் மறக்க முடியாமல் பொன்னியின் செல்வனுக்கு பின்னர் சரித்திர நாவல் பக்கமே திரும்பிப்பார்க்காத என்னைப் போன்ற சாமிகள் நாட்டில் நிறைய பேர் என்பதை வரலாறு டாட் காம் ஏற்பாடு செய்திருந்த அந்த மூன்றாம் யாத்திரையில் தெரிய வந்தது. முதன்முதலாக பொன்னியின் செல்வன் தொடரை கல்கியில் ரம்பிக்கும்போது கல்கி கொடுத்த பில்ட் அப் கையில் மாட்டியது. இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன் என்றெல்லாம் சோழ அரசர்களின் பெயர்கள் ஏற்படுத்தியிருக்கும் குழப்பத்தை தீர்ப்பதும், பிறந்த வீடும் புகுந்த வீடும் சோழநாடாகவே இருக்கவேண்டும் என்று நினைத்த குந்தவை, வந்தியத்தேவன் என்னும் சாமானியனை கைப்பிடித்த கதையை விளக்குவதுமே கல்கியின் நோக்கமாக இருந்திருக்கிறது. அந்த ஒரிஜினல் தொகுப்பை உச்சிமோர்ந்த பொ. செ வாசகர்கள் மத்தியில் சுவராசியமான விவாதங்களுக்கும் பஞ்சமில்லை. பொன்னியின் செல்வனில் பிடித்தமான பெண் கதாபத்திரம் பற்றி சீரியஸாக ரம்பித்த விவாதம், சிறந்த ஜொள்ளு பார்ட்டியாக வந்தியத்தேவனையும் அடிக்கடி மயங்கி விழுந்து ஓவராக ஸீன் காட்டிய அம்மிணியாக வானதியையும் தேர்ந்தெடுத்துவிட்டுதான் ஓய்ந்துபோனது. வீராணம் ஏரிக்கரையில் விறுவிறுப்பாக தொடங்கிய யாத்திரை பொன்னி நதிக்கரையின் வழியாக நகர்ந்து திரும்பவும் கூவம் நதிக்கரையை அடைந்தபோது மனதில் தோன்றியது இதுதான். பொன்னியின் செல்வனை மிஞ்சும் ஒரு சரித்திர நாவல் தமிழில் இனி சாத்தியமா?

Thursday, September 01, 2005

தமிழும் நானும்

தொண்ணூற்று இரண்டை விட்டு கீழே இறங்காத தமிழ்தான் கணக்கில் எப்போதும் வாங்கும் அறுபத்து மூன்றை மறைத்து பிராக்ராஸ் ரிப்போர்ட்டை பாஸ் வைக்கும் ஆபத்பாந்தவன். சின்ன வயசில் தமிழை விட நல்ல மொழி உலகத்தில் எங்கேயும் இருக்காது என்கிற எண்ணம்தான் எப்போதும். அது காலேஜ் காம்பவுண்டு வரும் வரை இருந்தது என்று சொல்வதை விட மாத்யூ தரகன் 'ஷேக்ஸ்பியர்' எடுத்து அசத்துவது வரை இருந்தது என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். கையெழுத்து கொஞ்சம் கோணல் மாணலாக இருந்தாலும் இலக்கணப்பிழை கொஞ்சம் கம்மியாகவே இருக்கும். சந்திப்பிழையை இலக்கணப்பிழை லிஸ்ட்டில் நீங்கள் சேர்த்துக்கொண்டால் மேற்சொன்ன வாக்கியத்தை நிச்சயம் நான் வாபஸ் வாங்கிக்கொள்வேன். சந்திப்பிழையை சகித்துக்கொள்ள முடியாமல் வலுக்கட்டாயமாக புன்னகையை வரவழைத்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்த கிழக்கு பதிப்பகத்தின் அந்த சப் எடிட்டர் முகத்தை மறக்கமுடியுமா?!

எழுத்துதான் அப்படியென்றால் பேச்சு 'ழ'கர சுத்தமாக நல்லாவே வரும். நண்பர்கள் வட்டாரத்தில் அது ஒரு பெரிய ஆச்சரியமான விஷயம். அதுவும் சென்னைக்கு வந்த புதிதில் அதுவே பேரதிசயம். 1989 ஆம் வருஷம் என்று ஞாபகம். ஏதோ ஒரு ஸ்கூல் விழாவுக்கு வந்திருந்த அமைச்சர் அன்பழகன் ஒரு தத்துவார்த்தத்தை அள்ளிவிட்டு போனார். 'எட்டாம் கிளாஸ் படிக்கிறவனுக்கு நாலு வார்த்தை தமிழ்ல எழுத தெரிஞ்சுருக்கணும்; பிளஸ் டூ படிக்கிற பையனுக்கு நாலு வார்த்தை இங்கிலீஷில் எழுத தெரிஞ்சிருக்கணும்' ஆஹா... நாம ரொம்பவே ஓவராத்தான் வளர்ந்துட்டிருக்கோங்கிற நினைப்புதான் வந்தது. நல்லவேளை, காலேஜ் படிக்கிறப்போ அன்பழகன் அமைச்சரா இல்லை!

Image hosted by Photobucket.com

போன வாரம் மேஜை டிராயரை குடைஞ்சு பழைய ·பைலை பிரிச்சு பார்க்கும்போது கையில் மாட்டின விஷயம்தான் இது. மூணாங்கிளாஸ் நோட்டு புத்தகத்திலிருந்து கிழித்து எடுத்த சில பக்கங்கள். எல்லா பக்கத்திலேயும் பெயர், தேதி, தமிழ் மாதம், ஆங்கில மாதம் என விலாவாரியான தகவல்கள். கொஞ்சம் நம்பர், கொஞ்சம் கிறுக்கல்கள், ஏகப்பட்ட இடைவெளி விட்டு தமிழ் ரைம்ஸ். விழுப்புரத்திலிருந்து மாயவரம் வழியா தஞ்சாவூர் போகிற மாதிரியான வார்த்தைகள். ஆங்காங்கே அள்ளித் தெளித்த மாதிரி பென்சில் பூக்கள். ஓரே பக்கத்தில் கணக்கு, தமிழ், வரலாறு என சகலமும். முரசு, இகலப்பையை கண்டுபிடித்தவர்களுக்கு கோடி நன்றி. 'அன்னிக்கு பார்த்த மாதிரியே இன்னிக்கும் இருக்கேடா ராம்கி'ன்னு யாராவது சொல்லித்தொலைச்சு அது அந்த சப் எடிட்டர் காதுலேயும் விழந்துட்டா....