Friday, October 07, 2005

டோட்டல் டேமேஜ்

இந்தியா டுடே இதழில் குஷ்புவின் பேட்டியில் ஒரு இடத்தில் கூட தமிழ்ப் பெண்கள் என்கிற சொற்றொடரே கிடையாது. 'என்னைப் பொறுத்தவரை செக்ஸ் என்பது உடல் பற்றியது மட்டுமல்ல; அதில் மனதும் சம்பந்தப்பட்டிருக்கிறது' என்று சொன்ன குஷ்புவின் நேர்மை பாராட்டப்பட வேண்டியதே தவிர கண்டிக்கப்படவேண்டியது அல்ல. அவரைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தை நடத்திய, ஏற்பாடு செய்த, தூண்டிய ஒரு அரசியல் தலை கூட இதே நேர்மையோடு தங்கள் காதல், திருமண வாழ்க்கையைப் பற்றி பேசமாட்டார்கள்.

குஷ்புவின் கருத்துக்கு எதிர்ப்பு என்கிற பெயரில் நடந்திருக்கும் அராஜகங்களில் தமிழ்நாட்டு அரசியல் ஆம்பளை சிங்கங்கள் பலரும் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். கருணாநிதியின் 'தமிழ் முரசு' பேரக்குடும்பம் முதல், 'இங்கிலீஷ் தாத்தா' ராமதாஸ், 'எல்லோரும் விபசாரி' புகழ் தங்கர் பச்சான், 'ஜக்கி பக்தர்' திருமாவளவன், 'நடிகர் சங்க' கேப்டன் விஜயகாந்த், த.மு.முக என பலரும் தங்கள் ஆம்பளைத்திமிரை வெவ்வெறு விதங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

குஷ்புவின் பேட்டிக்கு பல தரப்பிலிருந்து கண்டனம் எழுந்துள்ளது என்று 23.9.2005 இதழில் முதல் பக்கத்தில் தன் பொய்யை தொடங்கிய தமிழ் முரசு தொடர்ந்து 'தமிழ்ப் பெண்கள் கற்பு இல்லாதவர்களா? என்று தலைப்பிட்டு செய்திகளை வெளியிட்டு வந்தது. எந்த சன் டிவிக்கு ஆங்கிலப் பெயர் இருப்பதை நியாயப்படுத்தி அறிக்கை கொடுக்குமளவுக்கு பேரப்பாசம் கருணாநிதிக்கு பொங்கி வருகிறதோ, அதே சன் டிவி குழுமம்தான் தமிழ் முரசு ஏட்டை தமிழர்களுக்கு¡க 'டக்கராக' நடத்திக் காட்டிக்கொண்டிருக்கிறது.

Image hosted by Photobucket.com

தமிழ் படிக்க வாய்ப்பிருந்தும் தன் பேரக்குழந்தைகளை டெல்லியில் ஆங்கிலப்பள்ளியில் சேர்த்துவிட்டு இங்கே 'டமில்' பாதுகாப்பு இயக்கம் நடத்தும் மருத்துவர் மாலடிமைடியின் குடும்பக்கட்சியின் மகளிர் அணிதான் குஷ்புவுக்கு எதிராக தமிழ்ப் பெண்களின் கற்பை பாதுகாக்க வழக்குகள் போட்டுக்கொண்டிருக்கிறது.

மார்க்ஸ், பெரியார், அம்பேத்கார் மூவருமாக ஓருருவில் அவதரித்த ஜக்கி வாசுதேவரிடம் யோக நிஷ்டை பயின்ற திருமாவளவனுக்கு, திண்ணியத்தில் மலம் தின்ன வைத்த ஆதிக்க சாதிக்காரர்கள் வீடு நோக்கியோ மேலவளவு முருகேசனைக் கொன்றவர்கள் வீடு நோக்கியோ கழுதை ஊர்வலம் நடத்த தோன்றவில்லை. ஜக்கி வாசுதேவின் சீடர்களில் குஷ்புவும் உண்டு என்பது திருமாவுக்கு தெரியாதா? குஷ்புவின் கருத்தை விட புரட்சிகரமான கருத்துகளை அதே இதழில் சொல்லியிருக்கும் சுகிர்தராணியை எதிர்த்து துடைப்ப ஊர்வலம் நடத்தாது ஏன்?

உழைத்த தொழிலாளி தினசரி பேட்டா கேட்டதை ஆதரித்த நடிகையை, காசுக்காக வேலை செய்யும் விபசாரியுடன் ஒப்பிட்ட 'தமிழ் சினிமாவின் ஓரே அறிவு ஜீவி' தங்கர்பச்சான், ஒரு ஆண் வேண்டுமானால் எப்படியும் வாழ முடியும் ஆனால் ஒரு பெண் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை தன் திரைப்படங்களில் பதிவு செய்து காட்டியிருப்பதாக குமுதம் ரிப்போர்ட்டரில் கருத்து சொன்ன தங்கர்பச்சான், அப்பேர்ப்பட்ட எனக்கு நேர்ந்த அவமானம்தான் இப்போது ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் நேர்ந்துவிட்டது என்கிறார். கி.ராஜநாராயணன் தொகுத்து தள்ளிய கிராமிய பாலியல் கதைகள் எந்தப் பண்பாட்டிலிருந்து வந்தவையாம்?

தமிழ்ப் பெண்களின் கற்பு பக்கம் நிற்கப்போகிறாரா அல்லது அதை கொச்சைப்படுத்திய சக நடிகர் பக்கம் நிற்பாரா என்கிற தர்மசங்கடத்தை தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினர் உண்டாக்க நினைத்ததை உணர்ந்தததால்தான் விஜய்காந்த் நடிகர் சங்கத்தலைவர் என்கிற முறையில் குஷ்பு சார்பாக எடுக்க வேண்டிய நிலையை எடுக்காமல் நழுவிவிட்டார்.

குஷ்பு ஒரு முஸ்லீம் பெண்ணானாலும் அவரை நாங்கள் முஸ்லீமாகவே கருதவில்லை என்று அறிக்கை வெளியிட்டது முஸ்லீம் முன்னேற்றக்கழகம். பாலியல் பிரச்னைகளில் குஷ்புவுக்கு நிகராக கருத்து தெரிவிக்கும் படைப்புகளை எழுதும் தமிழ்நாட்டு சல்மாவை த.மு.மு.க ஏன் இன்னும் முஸ்லீம் அல்ல என்று அறிவிக்கவில்லை?

தமிழ் ஆணுக்கு இவர்கள் வைக்கும் ரோல் மாடல் கோவலன். மனைவிக்கு வைக்கும் ரோல் மாடல் கண்ணகி. ஆனால் இவர்களுக்கு மாதவியும் வேண்டும். மாதவிகள் கோவலனின் கற்பை கேள்விக்குள்ளாக்கினால் இவர்களால் தாங்க முடியாது. கண்ணகியே நெடுஞ்செழியனிடம் நீதி கேட்பதற்கு முன்னால் கோவலனிடம் நீதி கேட்டிருந்தால் கோவலன் அவளிடம் என்ன சொல்லியிருப்பான்?

'தமிழ் நாட்டை விட்டு ஓடு'

நன்றி - தீம்தரிகிட அக்டோபர் 2005.

மும்பையிலிருந்து ஞாநி கொடுத்திருக்கும் வாய்ஸை படிச்சா வடிவேலு டயலாக்தான் ஞாபகத்துக்கு வருது. 'ஏய்.. வேணாம்...மம்மி பாவம்... நோ..நோ.. டாடி பாவம்.... ஏய்....வேணாம்...சொல்லிட்டேன்...சிஸ்டரை வம்புக்கிழுக்காதே... நோ..நோ... தாத்தா பாவம்.. பிரதர் ரொம்ப பாவம்... ஐயோ...அடிப்பாவி, என் குடும்பத்தை நடுத்தெருவுக்கு இழுத்து இமேஜை டேமேஜ் பண்ணிட்டாளே....'