Saturday, April 03, 2004

மயிலாடுதுறையின் மணிக்குரல்!



நேத்து NDTVயில் Follow the Leader நிகழ்ச்சியில் மணிசங்கர் ஜயரின் பிரச்சாரத்தை 'கவர்' செய்தார்கள். அதிகாலை நேரத்தில் சர்ச்சுக்கு விசிட்டி அடிச்சு மனுஷர் அசத்தலாக பிரே பண்ணி ஆசிர்வாதம் வாங்குவதிலிருந்து ஆர்ப்பட்டமா ஆரம்பித்தது அன்றைய நாள்.

'நான் இந்த மண்ணின் மைந்தன்' என்று பெருமையாக சொல்லிக்கொண்டார். பேட்டியாளரும் இதுவரை இந்த தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்பதை வசதியாக மறந்து விட்டார். 1998 தேர்தலில் தனித்து நின்றே அறுபதாயிரம் ஓட்டுக்கள் வாங்கிய ஜயர், தனது ஆபிஸின் வாசலில் கட்டப்பட்டிருக்கும் கூட்டணிக் கட்சிகளின் தோரணங்களை பார்த்து இவைதான் பலம் என்று பெருமிதப்பட்டுக் கொண்டார். தனது அரைகுறை தமிளில் தாய்க்குலங்களை 'அம்மா....ஓட் போட மர்ந்துடாதீங்க' என்று வழக்கம்போல கைகூப்பி, பொடி பையன்களுக்கும் மரியாதை செய்ய மறக்கவில்லை. வாண்டுகளுடன் கிரிக்கெட் விளையாடி விக்கெட் எடுத்தார். யாரை அவுட் பண்ணப்போறீங்கங்கிற கேள்விக்கு மதவாத கூட்டணியை என்று பளிச் பதில். நான் பாமக கட்சிக்காரன். ஜயருக்காக உயிரையும் கொடுப்பேன்னு உணர்ச்சிவசப்பட்டவரை தடுத்து, ஜயா, உயிர் வேணாம்; உங்க ஓட்டு போதும் என்றார். படு உஷார் பார்ட்டி! அவருக்கு தெரியும்...போன எலெக்ஷனில் கடைசி நேரத்தில் ஆப்பு வெச்சு பரிதவிக்க வெச்சது இதே பாமக ஆட்கள்தாங்கிறது!

மகளிர் சுய உதவிக் குழுக்கள் என்ற பெயரில் வலம் வரும் ஆளுங்கட்சியின் மகளிர் அணியை சமாளிக்க செம்பொன்னார் கோயிலில் அசத்தலான மகளிர் கூட்டத்தை கூட்டி பெண்களின் சிறப்பை பற்றி ஒரு லெக்சரர் கொடுத்தார். வழக்கம்போல பள்ளி வாசலில் தொழுதும், கோயிலுக்கு போய் பரிவட்டம் கட்டிக்கொண்டும் மதச்சார்பின்மை இமேஜை பில்டப் பண்ணிக்கொண்டார். காவிரிப் பிரச்சினை சிக்கலானதற்கு காரணமே காவிரி ஆணையத்தின் தலைவரான பிரதமர் வாஜ்பாய் சரியாக செயல்படாததால்தான் என்றார். ஆஹா... சூப்பர் லாஜிக்!

என்னதான் சொன்னாலும் ஜயர், ஜயர் தான்! காங்கிரஸ் ஆட்சியை பிடிச்சா நிச்சயம் மணிசங்கர் அமைச்சராயிடுவாரு. அது நடக்காவிட்டாலும், குறைந்த பட்சம் ஆக்டிவ்வான, சுதந்திரமான எதிர்க்கட்சி எம்பியாக கலக்குவார். ( ஜெனிடிக் டெக்னாலஜி பற்றிய ஆராய்ச்சி கட்டுரை, பார்வைக்கு )படித்தவர். பண்பாளர். எளிதாக பழக முடியும். எல்லோருக்கும் மரியாதை கொடுப்பவர். கடுமையான வார்த்தை பிரயோகம் இல்லாத பணிவான அணுகுமுறை. எந்த கட்சியில், எந்த கூட்டணியிலிருந்தாலும் அய்யருக்குத்தான் மயிலாடுதுறை மக்களின் ஓட்டு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இம்முறை ஜயர் மோதுவதோ பாதாளம் வரை பாய வல்ல சமாச்சாரத்துடன்!

மக்கள், மணிசங்கரை கைவிட்டு விட்டால் மயிலாடுதுறையை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது!

Friday, April 02, 2004

வாழ்க்கையே ஒரு முரண்பாடுதான்!

நாம் முரண்பாடுகளுடன்தான் வாழ்கிறோம். நமக்குள் ஒழுங்கு இல்லையென்பதே நாம் முதலில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ஒழுங்கென்பது மனதால் சித்தரிக்கப்பட்ட ஒரு எண்ணமல்ல. ஒழுங்கு என்பது ஒவ்வொரு பொருளையும் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் அதற்கு உரிய இடத்தில் வைக்கும் கலை. ஓழுக்க உணர்வு எந்தவொரு பழக்கவழக்கத்தின் கட்டுப்பாடோ, சாதரண செயல்முறையோ, சடங்கோ அல்ல. ஒரு பொருளை விரும்புகிறோம். ஆனால் விரும்புவதை பெரும்பாலும் மறுக்கிறோம். சொல்வது ஒன்று செய்வது மற்றொன்று.
வாழ்க்கையே முடிவில்லாத முரண்பாடுகளின் கோர்வையாக இருக்கிறது, முரண்பாடு இருக்குமிடத்தில் சண்டை, அபிப்பிராய பேதம் கட்டாயம் இருக்கும். ஓர் மனிதர் மேல், நாட்டின் மேல், கொள்கையின் மேல் ஏற்படும் பற்றாக இந்த சச்சரவு வளர்ச்சியடைகிறது. ஆனால் ஒருக்காலும் சாஸ்வதமான உண்மை வாழ்க்கையை நாம் வாழ்வதில்லை. ஆகவே நாம் அரசியல் ரீதியாக, சமய தீதியாக, குடும்ப வாழ்க்கையில், ஓழுங்கில்லாமல் வாழ்கிறோம்.

- ஜெ. கிருஷ்ணமூர்த்தி

சமீபத்தில்தான் சிறந்த ஆன்மீகவாதியும் தத்துவஞானியுமான ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் வலைத்தளத்தை தேடிக் கண்டுபிடித்தேன். உண்மையை பற்றியும் வாழ்க்கை முறைகளை பற்றியும் கிருஷ்ணமூர்த்தி தந்திருக்கும் தெளிவான விளக்கங்கள் மகாத்மா காந்திஜியின் எழுத்துக்களை ஞாபகப்படுத்துகின்றன. எல்லோரும் விசிட் அடிக்க வேண்டிய வெப்சைட்!

Monday, March 29, 2004

நகை அணிவதுதான் அழகா?

"பெண்கள் முன்னேற்றம் என்றால், ஆண்களைப் போன்ற எல்லா உரிமைகளும் வசதிகளும் பெற்றிருப்பதுதான். “நள்ளிரவில் அழகான ஒரு சிறு பெண் தன்னந்தனியே சில மைல்கள் நடந்து செல்லக்கூடிய சமூக அமைப்பு ஏற்பட்டாலொழிய நம் நாட்டில் நாகரிகம் வளர்ந்திருக்கிறது என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.”என்று காந்தியார் எழுதியிருப்பதாக நமக்கு நினைவிருக்கிறது. இன்று படிப்பும் நாகரிகமும் வளர வளர, பெண்களின் ஒரிமை குறைந்து கொண்டு தானிருக்கிறது. இதற்கு ஆண்களின் தீய நடத்தை மட்டுமே காரணமல்ல. பெண்களின் தவறான வாழ்க்கை இலட்சியமும் ஒரு காரணமாகும்.

“படித்த பெண்களும், பட்டதாரிப் பெண்களும், பணம் படைத்தவர் வீட்டுப் பெண்களும் மனித சமுதாயத்துக்காகப் பணியாற்றுவதே கிடையாது. மோட்டார்கார், நகை நட்டுகள், உயர்தர உடைகள், உல்லாசப் பொழுது போக்கு, (சினிமா, நாடகம், இசைவிழா, அரட்டைக்கச்சேரி போன்றவை) ஆகிய ஆசைகளைத் தவிர இவர்களுக்கு வாழ்க்கை இலட்சியம் என்பதே பெரும் பாலும் இருப்பதில்லை.”

கொத்துக் கொத்தாக நகை அணியும் பித்து நம்குலப் பெண்களை அட்டைபோல் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அளவுக்கு மிஞ்சி நகையணிவதைத்தான் நான் இங்குக் குறிப்பிடு கிறேன். ஓரளவு நகைகளுக்குமேல் அணிகிறவர் களுக்குத் தண்டனை அல்லது வரி விதிக்கச் சட்டமியற்றும் சர்க்காரை நான் வரவேற் கிறேன். நகை அணிவதால் உயிருக்கே ஆபத்து நேரிடுவதும் உண்டு.... ஆடைகளுக்கென்று அபரிமிதமாகப் பணத்தை அள்ளி இறைத்து வாழ்க்கையில் அல்லலுறும் நம் குலத்தவரை எண்ணியும் இரங்குகிறேன். கைத்தறித் துணி களை நாம் கட்டிக் கொண்டால், கைத்தறி நெசவாளரின் துயரத்தைப் போக்குவதுடன், வேலையில்லாத் திண்டாட்டத்தையும் குறைக்க முடியும் என்று சென்னையில் நடை பெற்ற நாடார் மகாசன சங்க 23-ஆவது மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய உயர் திருவாளர் நாகர்கோவில் டாக்டர் ஜான் ஹிலக்கையா அவர்கள் எடுத்துக்காட்டி யிருப்பதை வரவேற்கிறோம். அறிவுரையைப் பாராட்டுகிறோம்.

நாடார் குலப் பெண்களைக் குறித்துக் காட்டும் இவர் இப்படிக் கூறியுள்ளா ரெனினும், செல்வர் வீட்டுப் பெண்களுக்கும் இக்கூற்றுப் பொருந்தியதாகும்.

இத்துறையில் கடந்த 30 ஆண்டு களாகப் பிரச்சாரம் செய்து வரு கின்ற சுயமரியாதை இயக்கம் ஓரளவு உணர்ச்சியூட்டியிருக் கிறது. காந்தியார் அவர்களின் பிரச்சாரமும் ஓரளவு வெற்றி தந்திருக்கிறது.

என்றாலும் இந்த நகைப் பித்தும் உயர் தரமான உடைப்பித்தும் பணம் படைத்த வீட்டுப் பெண்களைக் கடுமையாகப் பற்றிக் கொண்டிருக்கிறது.

இவள் இன்னார் மகள் அல்லது இன்னார் மனைவி, இவ்வளவு சொத் துக்குச் சொந்தக்காரி என்று பிறர் கூறிப் புகழ வேண்டும் என்பதற்காகவே அலங்காரப்பதுமைகளைப் போல் 5,000, 10,000 ரூபாய்க்கு மேற்பட்ட உடைகளைச் சுமந்துகொண்டு திரி கின்றார்களேயல்லாது, இவள் இன்ன தொழில் நிபுணத்துவம் பெற்றவள்! இவள் இந்தத் துறையில் திறமைசாலி என்ற பெயர் வாங்கவேண்டுமென்ற எண்ணமோ இத்தகைய பெண் களுக்கிருப்பதில்லை.

பணத்தைச் சேமித்துப் பத்திரப் படுத்த முடியாத பழங்காலத்தில் நம் பெண்கள் நடமாடும் பாங்குகளாகவும், இரும்புப் பெட்டிகளாகவும் பயன்படுத் தப்பட்டனர். ஆனால், பணத்தைச் சேமிக்கக்கூடிய பல நூறு துறைகள் பெருகிக் கிடக்கின்ற இந்தக் காலத்தில் இது அவசியமா என்பதைப் பணம் படைத்த வீட்டுப் பெண்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நகையணிவதுதான்அழகு என்றால், நகையணியாத ஆண்கள் அழகாயில் லையா? நகை என்பது பெண்களின் உரிமைக்குப் பூட்டப்பட்டிருக்கின்ற பவுன்விலங்கு என்பதைப் பெண் இனம் மறக்கக் கூடாது. நகைகளிலும், உயர்தரமான உடைகளிலும் பாழாக்கப்படுகின்ற பணம், குடும்பத் துக்கோ, சமுதாயத்துக்கோ பயன் படாமல் வீணாகிறது.

இதை எப்படித் தடுக்க முடியும்? திரு. ஹிலக்கையா அவர்கள் கூறியிருப் பதுபோல் தண்டனையோ வரியோ விதித்தாக முடியாது. தண்டனையை அனுபவித்து விடுவார்கள், குடிவெறி யர்கள். இன்று துணிந்திருப்பதுபோல வரியையும் கொடுத்து விடுவார்கள், பணம் படைத்தவர்களாதலால்.

ஒருக்கால் நகையைப் பறிமுதல் செய்வது என்ற மாதிரியான சர்வாதிகார உத்தரவு பிறப்பிக்கப்பட்டால்தான் முடியும். ஜனநாயக முறைகளால் இப் பேர்ப்பட்ட சமுதாய வெறிக் குணங் களை ஒழிக்க முடியாது. “அளவுக்கு மீறிய நகை” என்ற பாதுகாப்பு இருக்கக்கூடாது.

மக்களிடையே அறிவு பரவுவதன் மூலமேதான் இந்த மனப்பான்மை அடி யோடு மாறவேண்டும். நெற்றியில் நாம மோ விபூதியோ அடித்துக் கொண்டு வருகின்ற பள்ளிச் சிறுவனைக் கண் டால், உற்ற பள்ளிச் சிறுவர்கள் எவ் வாறு கைதட்டி நகைத்துக் கேலி செய்கிறார்களோ அதுபோல, நட மாடும் நகை அலமாரிகளாகக் காட்சி யளிக்கின்ற பெண்களைக் கண்டு (பைத் தியக்காரரைச் செய்வதுபோல்) மற்ற பெண்கள் கைதட்டிக் கேலி செய்யக் கூடிய நிலைமை தமிழர் சமுதாயத்தில் ஏற்பட வேண்டும்.

படித்த பெண்களும், பட்டதாரிப் பெண்களும், பணக்காரர் வீட்டுப் பெண்களுமே இத்துறையில் மற்ற நகைப்பித்துப் பெண்களுக்கு நல்வழி காட்டக்கூடியவர்களாக விளங்க வேண்டும்.

எந்த நாட்டையும் பீடிக்காத இந்த நகைப் பித்துப் பீடை தமிழ் நாட்டைப் பிடித்திருக்கிறது. பணம் படைத்த ஒரு சிலரைப் பார்த்து, நடுத்தரக் குடும்பப் பெண்களும் நகைப்பித்துப் பிடித்தவர் களாகி விடுகிறார்கள். இதனால் சச்சரவும், திருமணத் தடைகளும் பெண் இனம் துணையில்லாது வெளிச்செல்ல முடியாத வேதனை நிலையும் ஏற்பட்டி ருப்பதைத் தவிர நன்மை ஏதாவது உண்டா? பெற்றோர்களும் பெண்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்"

- தந்தை பெரியார்

நகைகள் அணிவது தமிழர்களுக்கு மட்டுமே உரிய பழக்கம் என்கிற தொனி தெரிந்தாலும் பெரியார் அன்னிக்கு சொன்னது இன்னிக்கும் பொருத்தமா இருக்குதே!