Wednesday, August 11, 2004

தமிழ்நாடு கமர்ஷியல் காம்பளக்ஸ்

அறிவாலயம் பூக்கடை

இங்கே சகலவிதமான உதிரிப் பூக்களும் கதம்ப மாலைகளும் கிடைக்கும். காவி நிறத்தில் இருக்கும் கனகாம்பரம் தற்சமயம் விற்பனைக்கு இல்லை. பூக்கடையாக இருந்தாலும் சைடில் கருவேப்பிலை வியாபாரமும் உண்டு. எலெக்ஷன் நேரத்தில் மட்டும் ரேட் எக்குத்தப்பாய் இருக்கும். அப்பா, பிள்ளை, மாமா, மச்சான் என் சகலரும் ஓரே கடையில் வேலை பார்ப்பதால் படு சுறுசுறுப்பான சர்வீஸ் உண்டு. பூமாலைகளில் ஜிகினா வேலைப்பாடு படு நேர்த்தியாக இருக்கும். கல்யாணமோ, இழவோ எதுவாக இருந்தாலும் எல்லோரும் கடைக்கு வந்துதான் ஆகவேண்டும்.

லாயிட்ஸ் ரோடு காய்கறி மார்க்கெட்

பச்சை காய்கறிகள் சகாய விலைக்கு கிடைக்கும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தவிர அனைவருக்கும் ஒரு கிலோ காய்கறி இலவசமாக வழங்கப்படும். பூக்கடை பக்கம் போகாத எவருக்கும் பிரியாணி பொட்டலம் கூப்பிட்டுக் கொடுக்கப்படும். சுண்டைக்காய், முந்திரி கொட்டை, கத்தரிக்காய் போன்றவை எப்போதும் விற்கப்பட மாட்டாது. தற்சமயம் மாம்பழம் விற்பனைக்கு இல்லை. காய்கறிக்காரரே நேரடியாக களத்திலிறங்கி விற்பனை செய்வார். கடைக்காரர் கொஞ்சம் முசுடு என்பதால் கத்தரிக்காயின் காம்பு மாதிரி புடலங்காய் கூட சுருண்டுதான் கிடக்கும்.

தைலாபுரம் மெடிக்கல்ஸ்

தவறான மாத்திரைகளாக இருந்து உயிரும் போய்விட்டால் தாராளமாக சவுக்கடி கொடுக்கலாம். சினிமாக்காரர்களுக்கு இலவசமாக பேதி மருந்து கொடுக்கப்படும். மரம் வெட்டும் தொழிலாளர்களுக்கும் இன மான காவலர்களுக்கும் இலவசமாக பேண்டேஜ் வழங்கப்படும். ஜாதியுணர்வு ரத்தத்தில் இருந்தால் மெடிக்கல் சீட் வாங்கித்தரப்படும். எலெக்ஷன் நேரத்தில் சூழ்நிலைக்கு தகுந்தபடி பூ வாங்கினாலோ காய்கறி வாங்கினாலோ கன்ஸஷன் தரப்படும். வியாபாரத்தை கெடுக்க வருபவர்களுக்கு கடை வாசலிலேயே எளிய முறையில் அறுவை சிகிச்சை செய்யப்படும்.

தேனாம்பேட்டை மளிகைக்கடை

இங்கு உப்பு, புளி, மிளகாய் போன்றவை டெல்லி ஆபிஸின் ஆர்டரின் பேரில் வழங்கப்படும். எலெக்ஷன் நேரம் தவிர எப்போதும் கடை மூடப்பட்டே இருக்கும். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வந்து தேவையானதை எடுத்துக்கொள்ளும் வசதி உண்டு. கடையின் உண்மையான நிர்வாகி பற்றிய குழப்பம் நீடிப்பதால் தற்சமயம் கடையின் சாவி, பூக்கடைக்காரரின் கைவசம். கடையிலிருந்து வரும் கூச்சல், கதறல், கொடும்பாவி எரிப்பு சண்டைகளையெல்லாம் கஸ்டமர்கள் கண்டுக்காமல் இருப்பது நலம்.

மயிலாப்பூர் லேத் பட்டறை

இங்கு சகலவிதமான கத்தி, கடப்பாறை, கழி போன்றவைகளும் காக்கி டவுசர்களும் வாடகைக்கு கிடைக்கும். வார இறுதிகளில் கடையின் வாசலில் இலவச தியானம், யோகா வகுப்புகளும் உண்டு. அதே நேரத்தில் கடையின் உள்ளே மோடி மஸ்தான் வித்தைகளும் கற்றுத் தரப்படும். ஷைனிங் காட்டுபவர்களுக்கு முன்னுரிமை உண்டு.

கலிங்கப்பட்டி போட் சர்வீஸ்

இங்கே சகாய விலைக்கு படகுகளும் ஸ்பீக்கர்களும் வாடகைக்கு கிடைக்கும். ஏற்கனவே பூ கட்டுவதில் அனுபவமுள்ளவர்களால் படகுகள் கட்டப்படுவதால் வேலையில் நேர்த்தி ஜாஸ்தி. படகுகள் தண்ணீரில் விடப்பட்டதும் இலங்கையை நோக்கி செல்வதுபோல் வடிவமைக்கப்படுவது தனிச்சிறப்பு. திக்கு தெரியாமல் படகு ஓட்டவேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு டிரெயினிங் கொடுக்க நிறைய அனுபவஸ்தர்களும் உண்டு.

ஜக்குபாய் அடகுக்கடை

இங்கே சகல விதமான கோபங்களும் அரசியல் ஆசைகளும் அடகு வைக்கப்பட்டு ஆண்டவனுக்கு அனுப்பப்படும். அடகுப்பொருள் மூழ்கிப் போனாலும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.

Monday, August 09, 2004

பத்திரிக்கை சுதந்திரமும் பாட்டாளி மக்கள் கட்சியும்

சென்ற வருடம் ஜனநாயகத்தின் தூண்களின் ஒன்றாகிய பத்திரிகையின் குரல்வளை நெரிக்கப்பட்டதற்க்காக நாடே அமளிப்பட்டது. காபி கிளப்பிலும் அனல் பறந்தது. தமிழ்நாட்டின் அனைத்து எதிர்க்கட்சிகளும், பத்திரிகைகளும், கொதித்து எழுந்தன. நேற்று தமிழ்நாட்டில் ஒரு தினசரி தாக்கப்பட்டிருக்கிறது. அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. இந்தமுறையும் ஆளும் கட்சியினாரால்தான் தாக்கப் பட்டிருக்கிறது, ஆனால் மத்தியில் உள்ளஆட்சியினரால். மாநிலத்து எதிர்க்கட்சியினரால். ஆனால் அதற்காக கண்டனம் தெரிவிப்பதற்கோ, அனுதாபம் தெரிவிப்பதற்கோதான் ஆளில்லாமல் போய் விட்டது. என்னஇருந்தாலும் தினமலர், கேவலம், ஒருசாரார் நடத்தப்படும் தமிழ் நாளிதழ்தானே?

சென்ற முறை பத்திரிகை சுதந்திரம் பறி போனபோது, ஜனநாயகக் காவலன், பத்திரிகைகளின் காவலன், தமிழ்நாட்டின் தானைத்தலைவன் பொங்கி எழுந்து போராட்டம் நடத்தினார். மனிதச் சங்கிலிகள் என்ன, ஊர்வலங்கள் என்ன, டெல்லிக்குப்படையெடுப்பென்ன என்று பத்திரிகைச் சுதந்திரத்தைக் காக்க தனது தள்ளாத வயதிலும்போராட்டம் நடத்தியதைக் கண்டு நாடே புல்லரித்துக் கிடந்தது. ஆனால் இன்று ஒருமுணுமுணுப்பைக் கூடக் காணோம். ஒரு வேளை, கடலூர் பதிப்பகம் ஒன்றுமட்டும்தானே தாக்கப்பட்டுள்ளது, மற்ற கிளைகளையெல்லாம் கொளுத்தாமல் விட்டு விட்டார்களே என்ற வருத்தத்தில் உள்ளாரோ என்னவோ இந்த பத்திரிகை உலகக்காவலர்? அல்லது அவரது கண்டனச் செய்திகள் என் கண்ணுக்குத்தான் படவில்லையோஎன்னவோ?

நாளைக்கு, உடன் பிறப்பே, நயவஞ்சகர்கள் போடும் நாடகத்தினைநம்பி, மீண்டும் அந்தப் பாழாய்ப்போன பத்திரிகையைப் படிக்கத் துணிந்திடாதே, அருமை நண்பர் ராமதாஸ் தமிழர் மானம் காக்கப் புறப்பட்டிருக்கிறார், அதற்குத் தோள் கொடு,எனக்குத்தான் வயதாகிவிட்டது அந்த நாட்களில் குமுதத்தையும், துக்ளக்கையும், நவசக்தியையும் நாங்கள் அடித்து நொறுக்கிய அளவிற்கு, ராமதாஸின் தொண்டர்கள் செயல்படவில்லையெனினும், எதோ தமிழர்கள் மானம் காக்க தன்னால் ஆன தொண்டினைசெய்துள்ளார்கள், அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லையெனினும், கனவில் கூட கண்டித்துவிடாதே என்று தம்பிகளுக்கு கடிதம் எழுதினாலும் எழுதுவார். ஏற்கனவே தினமலரைப்படித்திடாதே என்றும் வாங்கிக் கொளுத்து என்றும் சனநாயக முறைப்படி கட்டளையிட்டகலைஞர்தான் அவர். அவர் மொளனத்திலும் எனக்கு ஒன்றும் ஆச்சரியமில்லை.

முதலைமைச்சரைப் பொருத்தவரை ஒன்றும் பெரிதாகக் குற்றம் சொல்லிவிடமுடியாது. 'நமது எம்ஜியார்' தவிர வேறு எந்தப் பத்திரிகை தாக்கப் பட்டாலும் அவருக்குமகிழ்ச்சியே. ஆக அவரைப் பொருத்தவரை இரட்டை நிலை எல்லாம் கிடையாது. என்றுஒரே நிலையே. மேலும் ராமதாஸ் அடுத்த தேர்தலின் பொழுது மீண்டும் உடன் பிறவாசகோதரராக மாற மாட்டார் என்று என்ன நிச்சயம்? அதனால் அம்மாவும் அடக்கி வாசிக்கிறார். புரிகிறது.

'ஹிந்து' பிரச்சினையின் போது எமர்ஜென்ஸி என்று ஒன்றே நடவாதது போல் இந்தகாங்கிரஸ்காரர்கள் குதித்த குதி இருக்கிறதே. அடடா, சும்மா சொல்லக்கூடாது. அந்தஇளங்கோவனும், வாசனும், சோ பாவும் இன்றைக்கு எங்கு காணாமல் போய் விட்டார்களோ தெரியவில்லை. அடித்தது அம்மையார் அல்லவே, எங்கள் கூட்டணிக் கட்சிதானே, இதற்கெல்லாம் போயா கண்டனம் தெரிவிப்பார்கள். அட போங்கப்ப்பாஎங்களுக்கு, கிழிஞ்ச வேட்டிகளை தைக்கவே நேரத்தைக் காணோம் என்றுகூறி, அன்னையைத் தரிசிக்க டெல்லிக்குப் போய் விட்டார்கள் போலும்.

ஆக, மிஞ்சி உள்ள வை கோ,கணேசன், நல்லக்கண்ணு, மற்றும் பல லெட்டர் பேடுகட்சியினர், ஒப்புக்கு ஒரு கண்டனம் தெரிவித்து விட்டுத் தன் ஜனநாயகக் கடமையைமுடித்துக் கொண்டு விட்டர்கள், அவர்களும் மருந்துக்குக்கூட மருத்துவரைக் கண்டிக்கவில்லை. ராமதாஸின் அட்டூழியங்களையும், ரவுடித்தனத்தையும், அரஜாகங்களையும்,கண்டிப்பதற்கு இந்தியாவில் நாதியே இல்லாமல் போய் விட்டது.

ஒரு வேளை இதெல்லாம் பெரிது படுத்தக்கூடிய ஒரு விஷயமே இல்லையோ? தமிழகசட்டசபையின் சர்வாதிகாரத் தீர்ப்பின் மூலம் பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப் பட்டபொழுதுமட்டும்தான், எல்லோரும் சேர்ந்து எதிர்ப்பார்களோ என்னவோ? அல்லது ஜெயலலிதாசெய்தால் மட்டும்தான், பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்கப் புறப்பட வேண்டுமோஎன்னவோ? மற்றபடி பத்திரிகை அலுவலகங்கள் தாக்கப்பட்டாலோ, நிருபர்கள்கொல்லப்பட்டாலோ, கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டுமோ என்னவோ? ஒருவேளை நான்தான் விவரம் தெரியாமல் எழுதுகிறேனோ என்று பலத்த சந்தேகத்துக்கிடையில் இதை எழுதுகிறேன். பத்திரிகைக் குரல் வளையை நெரிக்கும் கையைப்பொறுத்துதான் எதிர்க்க வேண்டுமா அல்லது கண்டு கொள்ளாமல் விட வேண்டுமாஎன்பது முடிவு செய்யப்படும் போலிருக்கிறது.

ஜெயலலிதா சட்டசபையில் உள்ள தன் பலத்தை துர்ப்பிரயோகம் செய்து ஹிந்துப் பத்திரிகை மீது நடவடிக்கை எடுத்தற்கு சந்றும் குறைந்ததல்ல இந்த அராஜகம். மத்தியில்ஆளுவதாலும், இவர் கட்சியின் தயவு மத்திய அரசுக்கு தேவை என்பதாலும், ராமதாஸின்இந்த ரவுடித்தனமும், அதிகாரத்திலுள்ள மமதையின் வெளிப்பாடே. என்னைப் பொருத்தவரை, ஹிந்து பிரச்சினையில் ஜெயின் எதோச்சதிகாரம் கண்டிக்கப் பட்டது போன்றே,ராமதாஸின் இந்த அராஜகமும் கண்டிக்கப் பட்டிருக்க வேண்டும். அன்று மாநில அரசு,இன்று மறைமுகமாக மத்திய அரசு பத்திரிகைச் சுதந்திரத்தை ஒடுக்குகிறது.

ஐயாவை எதிர்ப்பவர்கள் யாராயினும் அடி, உதை, வெட்டுக் குத்துதான். அப்படி அடிஉதை விழுமளவிற்கு என்ன எழுதி விட்டது தினமலர்? இவரது அன்பின் மணியான வாரிசு, மத்திய அரசில் கேபினட் மந்திரி. அதுவும் சுகாதரத்துறை மந்திரி. அதுவும் முறையாகமருத்துவருக்குப் படித்த மந்திரி (இவர் நிஜமாகவே எதுவும் மருத்துவக் கல்லூரியில்படித்தாரா அல்லது சோனியா, ராகுல், தயாநிதி வரிசையில் எதுவும் டுபாக்கூர் டிகிரியாஎன்று பலத்த சந்தேகம் எனக்கு உள்ளது). அப்படிப் பட்ட மாண்புமிகு மருத்துவம்படித்த மந்திரி, தொழுநோய் ஒரு தொற்று நோய் என்று மேல்சபையில் அறிவித்து விட்டார், அதுவும் ஒரு முறை அல்ல இரு முறை. மருத்துவம் படிக்காத ஜோஷியும், சுஷ்மாவும் திருத்த வேண்டி வந்தது. இந்த உண்மையை தினமலர் செய்தியாக வெளியிட்டு அன்பு மணியின் தகுதியையை வெட்ட வெளிச்சமாக்கியதற்குத்தான் இந்தத் தாக்குதல்.என்னதான் செயலாலர்கள் எழுதிக் கொடுத்ததை இவர் படித்ததாக வைத்துக்கொண்டாலும், முறையாக மருத்துவம் படித்த ஒரு மந்திரி திருத்திப் படித்திருக்கவேண்டுமல்லவா? அட அப்படியே ஒரு டென்ஷனில் படித்திருந்தாலும், இரண்டாம் முறைதிருத்தியிருக்க வேண்டுமா அல்லவா? அதே தவறை மீண்டும், மீண்டும் செய்ததிலிருந்தும் இவரது அடிப்படைக் கல்வி மற்றும் அறிவு குறித்தே கேள்வி எழுகின்றது.

இதேதவறை முந்தய சுகாதார மந்திரியாகிய சத்ருகன் செய்திருந்தாலாவது மன்னித்து விடலாம். அவர் ஒரு நடிகர் மட்டும்தான், டாக்க்ட்ட்டர் சத்ருகன் சின்கா அல்ல. அன்புமணிபுரிந்த தவறை தினமலர் வெளியிடுகிறது. இந்தச் செய்தியில் உண்மையில்லாதிருந்திருக்கும்பட்சத்தில், ராமதாஸ் முறையாக வழக்குத் தொடர்ந்திருக்கலாம். அல்லது அன்புமணி தன்தவறை பெருந்தன்மையாக, அது ஒரு தகவல் பிழை, பின் நான் சரி செய்து விட்டேன்என்று பதிலளித்திருக்கலாம்.

பா மா க வின் அரஜாகம் தொடர்ந்து அத்து மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. மரம்வெட்டினார்கள், மனிதனை வெட்டினார்கள், படப்பெட்டியைக் கொளுத்தினார்கள், பத்திரிகைகளைக் கொளுத்தினார்கள், எல்லாவற்றையும் சுயநலம் பிடித்த பிற அரசியல்வாதிகளும், யாருக்கு வந்தால் எனக்கென்ன என்று மக்களும், கண்டிக்காமலும்,கண்டுகொள்ளாமலும் செல்கிறார்கள். இந்த விஷ வித்தை முளையிலேயே கிள்ளி எறியாததன் விளைவு எதில் முடியப்போகிறதோ? வன்னியர்களின் பாதையில் நாளைதேவர்களும், நாடார்களும், கவுண்டர்களும் சென்றால் தமிழ்நாடு தாங்குமா?

எனக்கும் கூட தினமலரின் ஒரு சில செய்தி வெளியிடுமும் முறைகளில் ஒப்புதல் கிடையாது. இன்று ஒரு அநாதைப் பத்திரிகை போல் பரிதாபமாக நிற்கிறது. இன்று தமிழகப்பத்திரிகைகளிலேயே அதிகம் தாக்கப் பட்ட, பாதிக்கப் பட்ட நாளிதழ் தினமலராகத்தான்இருக்கும் என நினைக்கிறேன். ஒரு முறை சக நாளிதழ் ஒன்றின் ஊழியர்களேகுண்டர்களாக மாறித் தாக்கினார்கள். ஒரு முறை குண்டு வைக்கப் பட்டது.இதையெல்லாம் யாராவது கண்டிக்கலாம் என்று பார்த்தால், பாவம் அது ஒரு ஆங்கிலநாளிதழாக இல்லாமல் போய்விட்டது, மேலும் இந்த அரஜாகத்தைப் புரிந்தவர் ஜெயாகவேறு இல்லாமல் போய் விட்டார். அப்படி இருக்கும் பொழுது, யாருக்குத்தான் இந்த அநியாயத்தைக் கண்டிக்க மனசு வரும்? எப்படி இந்த அநியாயத்தைக் கண்டிக்கமுடியும்? அனைவரும் சேர்ந்து கண்டிப்பதற்கும் ஒரு தராதரம் வேண்டாமா? பாவம்,நமது அரசியல்வாதிகளும், பத்திரிகையாளர்களும், ஜனநாயகக் காவலர்களும் வேறுஎன்னதான் செய்வார்கள்? ஹிந்து பத்திரிகையில் இது குறித்தான ஒரு சிறு செய்தியைக்கூட நான் இதுவரைக் கண்டிலேன். வாழ்க பத்திரிகை தர்மம். வாழ்க பத்திரிகை சுதந்திரம். இப்பொழுது ஓய்வுவெடுத்துக் கொண்டிருக்கும் இவர்கள் யாவரும் அடுத்த முறை ஜெபத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் பொழுது பொங்கி எழுவார்கள் என்பதில் எனக்குஎந்தவொரு ஐயமுமில்லை. என்ன இருந்தாலும் ஜனநாயகத்தின் ஒரு தூண் அல்லவா பத்திரிகை?

மற்றவர்கள் அனைவரும் ஓய்வெடுத்துவிட்டதால், இந்த முறை, எனக்கு என்னவோஇதைக் கண்டிக்க வேண்டும் என்று தோன்றியது. ஆகவே அரசியல்வாதிகளின், குறிப்பாக ராமதாஸின் வன்முறைப் போக்குகளின் மீதான எனது கடுமையான கண்டனத்தைஇங்கு பதிவு செய்திருக்கிறேன், அவ்வளவுதான். வேற என்ன செய்ய முடியும்?

நன்றி - நண்பர் திரு. ச.திருமலை