Saturday, September 25, 2004

எழுத்து மயக்கம் ?!

ஐகாரஸ் பிரகாஷீக்கு வந்த எழுத்து மயக்கம் ஆச்சர்யமளிப்பதாக மூக்கன் கருத்து தெரிவித்திருக்கிறார். மேய்ச்சல் நிலமாக இருந்த தனது வலைப்பூவை இத்தனை காலம் தரிசு நிலமாக்கி வைத்திருந்தது இதற்குத்தானா என்கிற அவரது ஆதங்கத்தில் நியாயமிருப்பது உண்மைதான். ஆனால், போகிற போக்கில் வெகுஜன பத்திரிக்கைகளில் எழுதுவதை சர்வசாதாரணமான விஷயமாக மூக்கன் சொல்லியிருப்பதுதான் உறுத்தலான விஷயம்.

இணையத்தில் வரும் எழுத்துக்களில் அறுபது சதவீதம் தரமானவை என்பதில் சந்தேகமில்லை. வெகுஜன பத்திரிக்கைகளில் வருபவையெல்லாமே தரமான எழுத்துக்கள்தான் என்று வக்காலத்து வாங்கி உங்களை நான் சிரிக்க வைக்கப் போவதுமில்லை. சிறுபத்திரிக்கையோ, வெகுஜன பத்திரிக்கையோ கட்டுப்பாடுகள் ஜாஸ்திதான். இணையத்தோடு ஒப்பிடும்போது எதிர்வினைகள் கூட குறைவுதான். ஆனாலும் அச்சு ஊடகத்தின் மீதான காதல் மக்களிடையே அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இல்லாவிட்டால் நாலு முன்னணி புலனாய்வு இதழ்கள், 3 ஆன்மீகப் பத்திரிக்கைகள், மருத்துவத்திற்கென்றும், பெண்களுக்கென்றும் பிரத்யேக பத்திரிக்கைகள் என நாளுக்குநாள் வந்துகொண்டேயிருக்காது. தினமணி சென்றடையாத ஊரில் கூட தினத்தந்தியும் ராணியும் அமோகமாக விற்பனையாகின்றன. முப்பது பக்கத்தில் வரும் இந்தியா டுடேவை பத்து ரூபாய் கொடுத்து வாங்கி படிக்கவும் ஆளிருக்கிறார்கள்.

பிரகாஷாவது கட்டுரை எழுதியிருக்கிறார். எட்டு வருஷமாக எல்லா பத்திரிக்கைகளிலும் வாசகர் கடிதம் எழுதியிருந்தும் அந்த மயக்கம் எனக்கு இன்னும் மிச்சமிருக்கிறது. பத்திரிக்கையில் நமது எழுத்துக்கள் பிரசுரமாவது என்பது சினிமா மாதிரி. திறமையை மட்டுமல்ல அதிர்ஷ்டத்தையும் பொறுத்தது அது. வாசகர் கடிதத்திற்கே நாலு பேர் படித்துப் பார்த்து விஷயத்தோடு இருந்தால் மட்டுமே என்ட்ரி கிடைக்கும். பத்திரிக்கை படிக்கும் பத்து பேரில் நாலு பேர் கூட வாசகர் கடிதம் பகுதியை திரும்பி பார்க்கமாட்டார்கள். பைசா நஹி, பேரும் நஹி! பெரிதாக அங்கீகாரம் எதுவும் கிடையாது. எழுதுவதும் வளவளவென்று இருக்காமல் உருப்படியாக இருக்கவேண்டும். யாரையும் தாக்கியும் இருக்கக்கூடாது. நடக்கப்போறதையோ அல்லது நடந்த விஷயத்தையோ எழுதிவிடக்கூடாது. அநாவசிய வார்த்தை அலங்காரம் இருக்கக்கூடாது. சில பத்திரிக்கைகளுக்கு ஒருமையில் எழுதக்கூடாது. சில பத்திரிக்கைகளுக்கு ஒருமையில்தான் எழுதியாகணும். இப்படி ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். வாசகர் கடிதத்திற்கே இப்படியென்றால் கதை, கட்டுரை பற்றி கேட்கவே வேண்டாம். ஆபிஸில் ஆளாளுக்கு கத்தரியும் பிளாஸ்திரியுமாக அலைந்து கொண்டிருப்பார்கள். இதையெல்லாம் மீறி பிரசவித்து, அதை வாசகன் படித்து, அதற்கொரு எதிர் வினை வந்தால் நிச்சயம் முற்றும் துறந்த ஞானிக்கு கூட போதை வரும்.

நீங்க எழுதியிருந்ததை பார்த்தேன்னு சொல்றவங்களை விட நீங்களும் எழுதுவீங்களான்னு கேட்கறவங்கதான் அதிகமா இருப்பாங்க. பக்கத்து வூட்ல இருக்கிறவருக்கு கூட விஷயம் தெரியாது. பத்து வருஷம் எழுதினா பத்திரிக்கை ஆபிஸ் உள்ளே மட்டும்தான் பெயர் பரிச்சயமா இருக்கும். இருந்தாலும் தொடர்ந்து வாசகர் கடிதமா நான் வரைஞ்சு தள்ளினதுக்கு காரணம், நாலு வரியில நச்னு சொல்ற விஷயம் எனக்கு ஏனோ பிடித்திருந்தது. அதுவே கொஞ்சம் அலுத்து போன சமயத்தில்தான் வலைப்பூ மீது வந்தது காதல். இப்போது என்னுடைய நலம் விரும்பிகள் வாசகர் கடிதம் எழுதினா கையை ஒடித்துவிடுவதாக பல்லைக் கடித்தாலும் பழக்க தோஷத்தை விடமுடியவில்லை!

இணையத்தில் வரும் எழுத்துக்கள் பத்து வருஷம் ஆனாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு பரிச்சயமாகப் போவதில்லை என்கிற நிலையில் வெகுஜன பத்திரிக்கைகளின் பார்வை நமக்கு அவசியம் தேவை. கல்கியில் அவர்களாகவே தேடிக் கண்டுபிடித்து எங்களது வலைத்தளத்தை பற்றி எழுதியிருந்ததால் வந்த ரெஸ்பான்ஸ் என்னை மலைக்க வைத்தது. சினிமா மாதிரி வெகுஜன பத்திரிக்கைகளுக்கும் கமர்ஷியல் கட்டாயம் இருக்கலாம். அதற்காக எல்லாவற்றையுமே குப்பையாக ஒதுக்கிவிட முடியாது. மேட்டர் கிடைக்காத நேரத்தில் பத்திரிக்கையுலக ஜம்பவான்களெல்லாம் இணையத்தைதான் மேய வருகிறார்கள் என்று அடிக்கடி கேள்விப்படுகிறேன். இணைய பத்திரிக்கைகள் என்கிற வட்டத்துக்குள் நம்மை அடக்கிக்கொண்டு வெகுஜன பத்திரிக்கைகளிலிருந்து நாமெல்லோரும் விலகிப்போய்விட வேண்டாம் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். அதற்காக இப்படி நீட்டி முழக்கி சுயபுராணம் பேசியதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்னு உங்க மனசுக்குள்ள பிராம்ப்டர் ஓடறதை இங்கிருந்தே என்னால படிக்க முடியுதே!

Wednesday, September 22, 2004

ஆட்கள் வேலை செய்கிறார்கள்!



மறக்க முடியாத நான்குவழி பாதைகளின் சந்திப்பு அது. எங்க ஊர்ப்பக்கம் 'முக்கூட்டு'ன்னு சொல்வோம். வீட்டுக்கு போகிற வழியில் இருப்பதால் முச்சந்தியையும் அதில் ஜம்மென்று உட்கார்ந்திருக்கும் பிள்ளையாரையும் எப்போதும் என்னால் தவிர்க்கமுடியாது. ஊருக்கு வரும்போதெல்லாம் இரண்டு வி.ஐ.பிக்கள் பிள்ளையார் கோயிலுக்கு வராமல் போவதில்லை. ஒருத்தர் விஜய டி.ராஜேந்தர். இன்னொருத்தர் ஹி...ஹி.. நான்தான்! இருபது வருஷத்துக்கு முந்தி சைக்கிளில் வந்த அப்பா மீது லாரி மோதி, கட்டைவிரலில் அடிப்பட்டதிலிருந்து நிறைய ஆக்ஸிடென்டகளை இந்த முக்கூட்டில் பார்த்திருக்கிறேன். இப்பவும் அப்பாவின் கட்டைவிரலை ஆட்டிக்காட்டும்போது பிரபுதேவாவின் டான்ஸ் ஞாபகத்துக்கு வரும். ஒரு பக்கம் மயிலாடுதுறை முனிசிபாலிட்டி, இன்னொரு பக்கம் தாலுகா ஆபிஸ், இன்னொரு பக்கம் மயிலாடுதுறை ஜெயில் என வித்தியாசமான காம்பினேஷனும் இந்த முக்கூட்டில் உண்டு. காலேஜ் போக பஸ் வர காத்திருக்கும்போதெல்லாம் ரோட்டை நன்றாக கவனித்திருக்கிறேன். நிறையபேர் காரிலிருந்தபடியே காரைக்கால் போக வழி கேட்பார்கள். இரண்டு வழியிலும் போகலாம் என்பதால் கொஞ்ச நேரம் முழித்துக்கொண்டு நிற்பேன். பெரிய அளவுக்கு டிராபிக்கெல்லாம் இருக்காது. ஆனாலும், மக்கள் ஏதோ பிள்ளையார் கோயிலையே சுத்தி சுத்தி வருவது மாதிரி இருக்கும். என்னைக் கேட்டால் மயிலாடுதுறையின் இதயமான பகுதி இதுதான்னு சொல்வேன். ஆனால், இப்போது பாதாள சாக்கடைக்காக பாதையையே பிரித்து போட்டிருக்கிறார்கள். ஆறு மாசமாக ஆட்கள் வேலை செய்து கொண்டே இருக்கிறார்கள். எப்படியும் திரும்பவும் பார்முக்கு வர ஒரு வருஷம் ஆயிடும்!



முக்கூட்டில் எனக்கு புடிச்ச முக்கியமான விஷயம். ஒரு பக்கம் பிள்ளையார் கோயில், இன்னொரு பக்கம் தர்கா. இரண்டுக்குமிடையே ஒரு ரோடு. ரோட்டை காவல் காத்துக்கொண்டிருப்பது மாதிரி கையில் தடியோடு காந்தியின் சிலை!

Tuesday, September 21, 2004

வர்க்கப்புரட்சி

அந்த குறுகலான சந்திலிருக்கும் கீற்று கூரையுடன் கூடிய கட்டிடத்தில் வெளுத்துப்போன சிவப்புக்கொடி பறக்கிறது. சுவற்றில் ஸ்டாலின் தொடங்கி வாயில் நுழையாத பெயர் அடிக்குறிப்புடன் அயல்நாட்டு பிரபலங்களின் கருப்பு வெள்ளை படங்கள் பளிச்சிடுகின்றன. ஆங்காங்கே, பிட் நோட்டீஸ்களும், முதலாளிகளை எதிர்க்கும் டீஸெண்டான கண்டனக் குரல்களும் சுவற்றில் எழுதப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் புரட்சிகர கம்யூனிஸ கட்சி அலுவலகங்கள் நிறைய உண்டு. இது போன்ற அலுவலகத்தை எட்டிக்கூட பார்க்காதவர்களுக்கும் இந்தியாவின் எந்த மூலையிலிருக்கும் ரயில்வே ஸ்டேஷனிலும் தென்படும் புரட்சிகர வாசகங்களை படித்த அனுபவம் நிச்சயமாக இருக்கும்.

நாடு சுதந்திரமடைவதற்கு முன்னபாகவே இந்தியாவிலும் ஒரு வர்க்கப்புரட்சி நிச்சயம் நடக்கும் என்று நிறையபேர் நினைத்திருந்தார்கள். வெள்ளையர்களை வெளியேறிய பின்னர் நிச்சயம் இது நிகழக்கூடும் என்றுதான் சாமானியர்களிலிருந்து ஜவர்ஹலால் நேரு வரை எல்லோருமே நினைத்திருந்தார்கள். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வாரிசுகள் கம்யூனிஸ கொள்கையில்தான் ஈர்க்கப்பட்டிருந்தார்கள். ஆனார்ல, காந்திஜியோ அப்போதே வர்க்கப்போராட்டம் எதுவும் தேவையில்லை என்பதை அழுத்தி சொல்லிக்கொண்டு வந்திருக்கிறார். இந்தியா போன்ற நாடுகளில் பெரிதாக வர்க்கப்புரட்சி எதுவும் தேவையில்லை. சம்பந்தப்பட்ட இரு தரப்பிலும் நல்ல மனமாற்றம் இருந்தாலே போதும் என்பதுதான் அவரது கருத்து.

'வர்க்கப்புரட்சி என்பது இந்திய மண்ணிற்கு அந்நியமான விஷயம். அடிப்படை உரிமைகளை பரந்த நிலைத்தளமாக கொண்டு அனைவருக்கும் சமநீதி கிடைக்கும் வகையில் ஒரு புதுவடிவான கம்யூனிஸத்தை உருவாக்கும் திறமை நமக்கு இருக்கிறது' (Collected Works of Mahatma Gandhiji)

காந்தீய விழுமியங்கள் : வர்க்கப்புரட்சி