Wednesday, November 10, 2004

தீபாவளி வேலை!

கொஞ்சம் பெருமையாகத்தான் இருக்கிறது. தமிழகம் முழுவதிலிருந்தும் வந்த விண்ணப்பங்களை பரிசிலீத்து, அப்ளிகேஷனில் தரப்பட்ட விபரங்களை மன்ற உறுப்பினர்கள் மூலம் உறுதி செய்து, லிஸ்ட் தயார் பண்ணி, எஸ்டிமேட் எடுத்து, இரவு பகல் பாராமல் ராகவேந்திரா மண்டபத்திலேயே உட்கார்ந்து வேலை செய்தது மறக்க முடியாத விஷயம். நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளவும் முடிந்தது. ('அனாதை குழந்தைகள்னு எழுதாதீங்க... ஆதரவற்ற குழந்தைகள்னு எழுதுங்கப்பா!' / தகவல் உபயம் - சத்தியநாராயணா.)

குமரன் சில்க்ஸ் டிரெஸ், கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சிவகாசியிலிருந்து வரவழைக்கப்பட்ட பட்டாசுகளை பேக்கிங்கில் அடைத்து ஒவ்வொரு ஆசிரமமாக டோர் டெலிவரி செய்ய ஆட்களை ஏற்பாடு செய்வதில் கடைசி இரண்டு நாட்கள் வேலை படு மும்முரமாக இருந்தது. இதெல்லாம் வழக்கமாக ஒவ்வொரு வருஷமும் நடைபெறும் சங்கதிதான் என்றாலும் இந்த முறை விழா நடத்த வேண்டும் என்று முடிவு செய்ததும் வேலை இரண்டு மடங்காகிவிட்டது. கூடவே தீபாவளியன்று ஆசிரமங்களில் ராகவேந்திரா டிரஸ்ட் சார்பாக மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யும் வேலை வேறு. சென்னை நகரத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட எட்டு ஆசிரமங்களிலிருந்து குழந்தைகளை மண்டபத்திற்கு கூட்டி வந்து நிகழ்ச்சி முடிந்து திரும்பவும் பத்திரமாக அனுப்புவது வரை வேலை கடுமையாக இருந்தாலும் மனசுக்கு நிறைவாக இருந்தது. (இன்னும் எனக்கு தீபாவளி டிரஸ் எடுத்துக்கலை! டைம் லேது?!)

எத்தனை குழந்தைகளுக்கு, எந்தெந்த ஆசிரமங்களுக்கு உதவி செய்யப்பட்டது என்பது குறித்த விபரங்களை தெரிந்து கொள்வதில் வழக்கம் போல மீடியாவுக்கு ஆர்வமில்லை. இருந்தாலும் ஆசிரமங்களின் பெயர் மற்றும் விபரங்கள் எங்களின் WWW.RAJINIFANS.COM இணையத்தளத்தில் வெளியாகும். பிறந்தநாளை ஆசிரமத்தில் கொண்டாட நினைப்பவர்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.

மூன்று வயது குழந்தைகளிலிருந்து எழுபது வயது முதியவர் வரை விதவிதமான வண்ணங்களில். இடுப்பில் ஒரு குழந்தை கையிலொரு குழந்தை சகிதம் வந்த அந்த இரண்டு ·பாரின் பெண்மணிகளும் கடைசி வரை குழந்தைகளை கொஞ்சுவதிலேயே 'கருமமே கண்ணாய்' இருந்தது மெகா அட்ராக்ஷன்! தரையில் புரண்டு அழுது அடம்பிடித்த அந்த மீசை முளைத்த குழந்தைக்கு வயது முப்பதைந்தாம்! வந்தவர்களில் சிலர் மனநலம் குன்றிய, போலீயோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள். ஆனாலும் முகத்தில் மலர்ச்சிக்கும் சிரிப்புக்கும் பஞ்சமில்லை.

திரும்பி ஆசிரமம் போவதற்காக பஸ்ஸில் ஏறி உட்கார்ந்த பின்னரும் 'ரஜினி வரவே மாட்டாரா'ன்னு அந்த சின்னக் குழந்தை கேட்ட கேள்வியைத்தான் எதிர்கொள்ள முடியவில்லை.

Monday, November 08, 2004

பியர்லஸ் தியேட்டர்




மயிலாடுதுறை வாழ் பெருமக்களுக்கு (முக்கியமாக சினிமாவில் ஆர்வமில்லாதவர்களுக்கும்) பியர்லஸ் தியேட்டரை பற்றி தெரியாமல் இருக்க முடியாது. சினிமா ரசிகர்களுக்கோ இது சினிமா பேலஸ்!

அரசியல்வாதிகள் வந்துபோகும் இடமாக இருந்து பின்னர் பஸ் ஸ்டாண்டாக மாறி, தற்போது சகலமுமாக (அதாவது சாக்கடை!) இருக்கும் நகரப்பூங்கா. அதற்கு எதிராக ஓடாத தண்ணீரோடு ஒரு சாக்கடை கால்வாய். கால்வாயின் கரையோரத்தில் பல ஹீரோக்களை பள்ளிக்கொள்ள செய்த இந்த தியேட்டர் ஆரம்பிக்கப்பட்டு நாற்பது வருஷமாகப்போகிறது. எண்பதுகளின் வெள்ளி விழாப்படங்கள் இங்கேதான் வெளியாகின. திரிசூலம், சகலகலாவல்லவன், முந்தானை முடிச்சு, அம்மன் கோயில் கிழக்காலே, மனிதன், வேலைக்காரன், தளபதி, எஜமான், பாட்டி சொல்லை தட்டாதே, தேவர் மகன், பாட்ஷா, முத்து, படையப்பா... லிஸ்ட் கொஞ்சம் பெரிசு.

சாதாரண நடிகர் நடித்த படம் கூட இரண்டு வாரம் ஓடும். தீபாவளி, பொங்கல் பண்டிகை சமயத்தில் பியர்லஸ் தியேட்டரில் படம் பார்ப்பதும் ஒரு சம்பிரதாயம். அப்படிப்பட்ட நாட்களில் கியூவில் நின்று அடித்து பிடித்து படம்பார்ப்பவர்களில் நிறைய பேர் வடகரை முஸ்லீமாக இருப்பார்கள். இரண்டாம் கிளாஸ் படிக்கும்போது அம்மா, அப்பா சகிதம் 'சகலகலாவல்லவன்' படம் பார்த்திலிருந்து 'படையப்பா' கடைசிநாள் கடைசிகாட்சி பார்த்தது வரை தியேட்டரோடு சம்பந்தப்பட்ட அனுபவங்களை நினைத்துப் பார்ப்பதே சுகமாக இருக்கும். பதிமூணு வருஷத்துக்கு முன்னாடி தீபாவளி நாளில் 'தளபதி'யை தரிசிக்கப் போய் கூட்ட நெரிசலில் சட்டையை கிழித்துக்கொண்டதை தீபாவளி நேரங்களில் அவ்வப்போது ஞாபகத்துக்கு வரும்.

இதுவரைக்கும் பலான படம் எதுவும் இந்த தியேட்டரில் ரீலிஸாகவில்லை என்பது ரொக்கார்ட். மேற்காணும் ஸ்டில் 'போஸ்' என்னும் புதுப்படம் ரீலிஸான ஒரு சனிக்கிழமை மாலை ஐந்தரை மணிக்கு எடுத்தது என்பதை சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். எந்தப்படமாக இருந்தாலும் ரீலிஸான நாளன்று பாலம் முழுவதும் கூட்டத்தால் நிறைந்திருக்கும். வெயிலானாலும் மழையானாலும் கூட்டத்துக்கு பஞ்சமிருக்காது. ஆனால், தற்போது நிலைமை தலைகீழ்.

இப்போதும் 'பியர்லஸ்' அப்படியேதான் இருக்கிறது. ஆனால், பார்க்க வருகிறவர்கள்தான் குறைந்து போய்விட்டார்கள். என்றைக்காவது ஒரு நாள் படம் பார்க்க என்றில்லாவிட்டாலும் தியேட்டரை பார்க்கவாது உள்ளே போய் பார்த்துட்டு வரணும்!