Friday, February 04, 2005

எழுத்தறிவிக்கும் இன்னொரு காவி

கேள்வி தப்பா இருந்தா பதிலும் தப்பாத்தான் இருக்கும். தப்பான கேள்விக்கு சரியான பதில் இருக்கவே முடியாது. ஒரு தப்பான கேள்விக்கு சரியான ஓரே பதில், கேள்வி தப்புன்னு சொல்றதுதான். தப்பான கேள்விக்கு மண்டையை உடைச்சு பதில் தேட நினைச்சா கிடைக்கிற பதில் சரியா இருக்கவே இருக்காது - கொஞ்சம் விசுத்தனமாக இருந்தாலும் கடவுள் பற்றிய விளக்கங்களெல்லாம் ரமண மகரிஷியின் மொழிகளுக்கு கோனார் நோட்ஸ் போட்டது போல கொஞ்சம் சுவராசியமாக இருக்கும். 'Where is God?' என்று கேட்பதை விட 'What is God?' என்று கேட்கணும்னு சொல்லி பகவான், சிருஷ்டி, ஜகத், வித்யா, என வார்த்தைகளை கோர்த்து ஆங்கிலத்தில் விளக்கிக்கொண்டே போவார். கொஞ்சம் டயர்டாகும் நேரத்தில் நிமர்ந்து உட்கார வைப்பதற்காக நடுநடுவே ஒரு ஜோக்.



சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஆஷ்ரமம், ரிஷிகேஷில் இருக்கிறது. வருஷாவருஷம் சென்னையில் நடக்கும் சொற்பொழிவின் கடைசிநாளான இன்று, எனக்கு பொறந்த நாள் என்பதால் ஆசி வாங்க கரெக்டான நேரத்துக்கு போய்விட்டேன். ஒரு வாரமாய் தினமும் இரண்டு மணி நேரம் வேதங்களின் மகிமை பற்றி அவர் ஆங்கிலத்தில் பேசுவதை கேட்க வந்த மெத்தப்படித்த கூட்டத்தால் காமராஜ் ஹால் நிரம்பி வழிகிறது. வயது வித்தியாசமின்றி தரையில் உட்கார்ந்தெல்லாம் பேச்சை கவனிக்கிறார்கள். 1999ஆம் வருஷம் புனேவில் கேட்டதற்கும் சென்னையில் கலைஞர் அரெஸ்ட் போது இதே காமராஜ் ஹாலில் கேட்டதற்கும் வித்தியாசம் காட்டாத அதே வியாக்யானங்களும் விவரிப்புகளும். இந்து மதம், கிறிஸ்து மதம் என்றெல்லாம் வித்தியாசம் காட்டாமல் மூட நம்பிக்கைகளை பற்றி விவரிக்கும்போது கொஞ்சம் எள்ளல்.



ஓகே. அதெல்லாம் இருக்கட்டும். நான் எழுத வந்த விஷயமே வேறு. குன்றக்குடி அடிகளாருக்கும் அறிவியலுக்கும் உள்ள சம்பந்தம்தான் தயானந்த சரஸ்வதிக்கும் கல்விக்கும். ஆர்ஷ வித்யா குருகுலம் என்கிற பெயரில் வேதகாலத்து நெறிமுறைகளையும் வாழ்க்கை முறைகளையும் வலியுறுத்தும் கல்விக்கூடங்களை நாடு முழுவதும் இலவசமாக நடத்தி வருகிறார்.
இதன் தலைமையகம் கோயம்புத்தூர் பக்கத்தில் ஆனைகட்டி. 1997ஆம் வருஷம் 'தி ஆஷ்ரம்' ஸ்கூல் ஆண்டுவிழாவில் பேசும்வரை, சுவாமி தயானந்த சரஸ்வதியை வெறும் காவி கட்டினசாமியாராகத்தான் நினைத்திருந்தேன். வேதகால கல்விமுறையை இந்த கம்ப்யூட்டர் யுகத்திலும் சாத்தியமான விஷயம்; அதுவே இந்தியாவின் ஆன்மா மாதிரியான விஷயம் என்றெல்லாம் அவர் பேசும்போது கேட்க நன்றாகத்தான் இருந்தது.

மெக்காலேவின் கல்விமுறைக்கு குட்பை சொல்லிவிட்டு வேதகாலத்து கல்விமுறையை திரும்பவும் வரவேற்பதில் என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது பிஜேபி ஆட்சியிலேயே தெரிந்துவிட்டது. இந்துத்வா, காவி கடப்பாரை முத்திரை, குருகுல கல்வி முறைக்கு இருக்கும்வரை சறுக்கல்கள் இருக்கத்தான் செய்யும். ஆனாலும் ஆர்ஷ வித்யா குருகுலம் அசராமல்
காவிச் சாயத்தை பூசிக்கொள்ளாமல் தனது பணியை தொடர்கிறது. ஆனைகட்டியை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருவாரூர் பக்கத்தில் மஞ்சக்குடி கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்ட குருகுலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். குருகுல கல்வியாக இருந்தாலும் நான்கு குழந்தைகளுக்கு ஒரு கம்ப்பூட்டர் என்கிற வீதத்தில் நவீன கல்விமுறைக்கு கொஞ்சமும் குறையாத தரம்.



ஆர்ஷ வித்யா, கல்விப்பணியோடு நின்றுவிடாமல் சமூகப்பணியையும் செய்துவருகிறது. ஆனைகட்டியை சுற்றியிருக்கும் அறுபது குக்கிராமங்களை தத்தெடுத்து எல்லா கிராமங்களுக்கும் சாலைவசதி, பள்ளிக்கூடங்கள், மின்விளக்குகள், கழிப்பிட வசதி போன்றவற்றை ஏற்பாடு செய்து தந்திருக்கிறது. சுனாமி பாதிப்பின் போது நாகப்பட்டினம் பக்கத்திலிருக்கும் செறுதூர்
கிராமத்தை தத்தெடுத்து மீனவர்களுக்கு குடியிருப்புகளையும் படகுகளையும் ஏற்பாடு செய்து தந்திருப்பதுடன் சென்னை கோவளம் பக்கத்தில் ஒரு குக்கிராமத்தையும் தத்தெடுத்திருக்கிறது.



கம்மிங் பேக் டு த பாயிண்ட். நாடு முழுவதும் இருக்கும் 614 மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு இடத்திலாவது ஆதரவற்ற குழந்தைகளுக்கான குருகுலத்தை ஆரம்பிப்பது என்கிற நோக்கத்துடன் பணிகளை ஆரம்பித்திருக்கிறார்கள். சென்னையில் வேளச்சேரி பக்கமும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்திலும் ஆர்ஷ வித்யா குருகுலங்கள் தொடங்கப்பட இருக்கின்றன. இதற்கென்று பதினோரு பேர் கொண்டு கமிட்டி அமைக்கப்பட்டு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்த பதினொரு பேர் கமிட்டியில் ஒரே ஒரு வி.வி.ஐ.பி. அது யாருன்னு சொல்லியே ஆகணுமா? 'எலி'யை பிடிச்சுட்டு அப்படியே வலது புறமா மேலேறி எட்டிப் பாருங்க... தாடியை தடவிட்டு சிவனேன்னு உட்கார்ந்திருப்பாரு!

Monday, January 31, 2005

சின்னங்குடியும் சீட்டாட்டமும்



சின்னங்குடி. ஆக்கூர் முக்கூட்டிலிருந்து இடது புறமாக திரும்பி பொறையார் சாலையில் தொடராமல் நேராக வண்டியை விட்டால் கிட்டதட்ட திருக்கடையூர் கோயிலுக்கு பின்புறமாக ஆறாவது கிலோ மீட்டரில் அமைதியான மீனவர் குப்பம். ஊர் எல்லையிலேயே பழைய துணிகளை குவித்து வைத்திருந்தாக வேண்டும் என்கிற இலக்கணத்திற்கு இதுவும் தப்பவில்லை.



ஊர் எல்லையிலேயே பெரிய சைஸில் புயல் பாதுகாப்பு மையம் இருக்கிறது. மாவட்டத்தின் எந்தப் பகுதியிலும் நான் பார்த்திராத விஷயம். ஆனாலும் இந்த மெகா சைஸ் மண்டபத்தின் வாசலில் ஒரே ஒரு ஆட்டை தவிர வேறு ஜந்துக்களே இல்லை.



கடல் நீர் உள்ளே புகுந்துவிட்டதால் மோட்டார் வைத்து நீரை இறைப்பதை தவிர விவசாயிகளுக்கு வேறு வழியில்லை. இதற்கு அரசாங்கத்தின் சார்பில் நிவாரண உதவி எதுவுமில்லை என்பதால் புலம்பல்கள் கொஞ்சம் ஜாஸ்திதான். பக்கத்திலிருக்கும் தரிசு நிலத்தை திரும்பிக்கூட பார்க்காமல் விளைச்சல் நிலத்தின் மீது சுனாமி அலைகள் கண் வைத்ததுதான் சோகம்.



சுனாமியால் பாதிக்கப்பட்ட 140 குடும்பங்களுக்கு தனியாக தற்காலிக குடியிருப்பு கட்டிக்கொடுத்திருக்கிறார்கள். யார் செய்தார்கள், எப்போது செய்தார்கள் என்பதைப் பற்றியெல்லாம் எந்தக் குறிப்புமில்லை. உள்ளூர்காரர்களிடம் விசாரித்தால் எல்லாம் தன்னார்வ அமைப்புகளின் பணிகள் என்கிறார்கள். கஷ்டப்பட்டு தனியார் தொண்டு நிறுவனங்கள் குடியிருப்பை கட்டி
முடித்ததும், தமிழ் சினிமாவில் கிளைமாக்ஸ் முடிந்து வரும் போலீஸ் மாதிரி அரசு ஜீப்பில் அதிகாரிகள் வந்து 'தமிழ்நாடு அரசு' சீல் வைத்துவிட்டு போகிறார்கள்!



'எல்லாம் கிடைக்கிறது ஸார். நேத்து கூட யாரே வந்து வேஷ்டி சேலையெல்லாம் கொடுத்துட்டு போனாங்க... ஆரம்பத்துல எல்லோருக்கும் ஒரு பெட்ஷிட் கொடுத்தாங்க.. அதுக்கப்புறம் ஒண்ணுமில்லை. நீங்க கொடுங்க.. யூஸ்·புல்லா இருக்கும்'னு ஒரு +2 சிறுசு கொடுத்த ரெக்கமெண்டஷனால் தெம்பாகி மாரியம்மன் கோயில் வாசலில் வைத்து வேலையை ஆரம்பித்தோம்.



அடுத்த கடற்கரையோர ரவுண்ட் அப். மீன்பிடி தொழில் அதிகமாக இல்லாத இடம் என்பதை கடற்கரையோரத்தில் உலா வரும்போதே தெரிந்து விடுகிறது. மீனவர் குப்பத்திற்கும் கரைக்கும் இடையே தடுப்புச்சுவர் போல கருவேலம் செடி புதர்களாகி அண்டி கிடக்கின்றன. புதர்களுக்கிடையே ஆங்காங்கே சில படகுகளும் சிக்கி கிடக்கின்றன. 'நிறைய பொணம் இங்கே புதர்ல மாட்டிக்கிடந்துச்சு'ன்னு காதோரமாய் வந்த தகவலால் படகுகள், மனித சடலங்கள் மாதிரி கண்ணில் பட்டு பயமுறுத்தின.



புதர்களையெல்லாம் கொளுத்தியிருந்தால் கூட இந்தளவுக்கு இருந்திருக்காது என்று சொல்லும் விதமாக கடல் அலைகள் புதர்களை மூழ்கடித்து பட்டுப் போக வைத்திருக்கின்றன. சுனாமி அலையின் வேகத்தை மட்டுப்படுத்திய இந்த கருவேலம் செடிகளின் தியாகத்தால்தான் சின்னங்குடியில் சில உயிர்கள் நடமாடுகின்றன என்பதை மறுக்க முடியாது.



இது ஐம்பது வருஷத்துக்கு முந்தி கட்டப்பட்ட கோயில். புயல், மழையெல்லாம் கோயிலை இந்த கதிக்கு ஆளாக்கியிருக்கிறது. ஏற்கனவே இங்கிருந்த மாரியம்மனுக்கு புதிதாக ஊருக்கு நடுவே கோயில் கட்டியிருக்கிறார்கள். அதன் வாசலில் வைத்துதான் நாம் போர்வை, தரைவிரிப்புகளை விநியோகம் செய்திருந்தோம். பக்கத்திலிருந்த வீடுகளும் தண்ணீர் தொட்டிகளும், மீன்கள் காய வைக்கும் இடமெல்லாம் சுனாமி தாக்குதலில் சுக்குநூறாக ஆயிருந்தாலும் இந்த பழைய கோயிலை மட்டும் அலைகளால் அசைக்க முடியவில்லை.

200 பேர் வசிப்பதற்கென்று குடியிருப்புகள் கட்டிக்கொடுக்கப்பட்டிருந்தாலும் பல பேர் ரோட்டோரமாய் உட்கார்ந்திருப்பதையே விரும்புகிறார்கள். இளவட்டங்கள் ஊர் எல்லையிலேயே ஏதாவது நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு வேன் வருமா என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அறுபது ரூபாய் பாய், இருபது ருபாய்க்கு பெட்டிக்கடையிலேயே கிடைப்பதுதான் சுனாமியின் பெரிய தாக்கம்!



ஒரு பக்கம் எங்கிருந்தோ வந்த தன்னார்வ தொண்டு அமைப்பினர்கள் பள்ளத்தைத் தோண்டி மூங்கிலை நட்டு மீனவர்களுக்கான குடியிருப்பு வேலைகளில் மும்முரமாக இருக்க இன்னொரு பக்கம் பொழுது போகாமல் மீனவர்கள் சீட்டாடிக்கொண்டிருக்கும் காட்சியைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை!