Friday, June 03, 2005

பச்சைத்தமிழனும் பலான சங்கதிகளும்

'உங்கள் மனதில் புதைந்திருக்கும் ஆழமான சோகம் எது?'

'இன்னும் தூங்குகிறானே எங்கள் தமிழன்!'

82 வயதை நெருங்கும் கலைஞரிடம் 82 கேள்வி கேட்ட குமுதத்திற்கு கிடைத்த பதில் இது. தமிழன் பற்றி கலைஞர் என்ன சொல்ல வருகிறார் என்பது இருபது வருஷங்களாய் யாருக்கும் புரிவதில்லை. தமிழன் தூங்குவது போலவும் தோன்றவில்லை. தமிழ்நாட்டிலிருந்து தப்பித்து ஓடி டாலர்களை எண்ணிக்கொண்டிருக்கிறான். உள்ளூர் தமிழனும் அப்படியொன்றும் தூங்கிக்கொண்டிருப்பதாக தெரியவில்லை. பனகல் பார்க் பக்கம் ரோட்டோரமாய் ரவுண்டு வரும் பிச்சைக்காரனால் கூட ஒரு நாளைக்கு 200 ரூபாய் தேற்ற முடிகிறது. அப்படியே தூங்கிக்கொண்டிருந்தாலும் எழுந்தவுடன் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி கலைஞர் என்றும் சொல்வதில்லை. உண்மையான தமிழன் என்பவன் தமிழ்நாட்டு தமிழனா, இலங்கைத் தமிழனா, வெளிநாடு வாழ் தமிழனா என்பது பற்றியும் யாரும் ஆராய்வதில்லை. தமிழ்நாட்டில் அவல் கிடைக்காத அரசியல்வாதிகளுக்கு 'தமிழன்' என்கிற வார்த்தைப் பிரயோகம்தான் பெரிய வரப்பிரசாதம். எதிரி இல்லாத இருட்டு அறையில் குருட்டாம்போக்கில் வாளை சுழற்றுவது போலத்தான் தமிழனை பற்றி வருத்தப்படுவதும்.

Image hosted by Photobucket.com


பச்சை (புல்வெளியில்) தமிழனும் சில பலான சங்கதிகளும்
இடம் - மகாபலிபுரம் பீச்சாங்கரை கோயில் பீச்சாங்கை பக்கம்

உடன்பிறவா சகோதரர்களான ராமதாசு, திருமாவளவனின் தமிழ்ப் பித்து, எலெக்ஷன் வரைதான் என்பது ஊரறிந்த உண்மை. சம்பந்தப்பட்டவர்களின் தமிழ்ப்பற்றை விமர்சித்தால் சிலருக்கு ஜாதிப்பற்று பொங்கிவழியும் அபாயமிருப்பதால் விட்டுவிடலாம். தமிழன் என்றாலே கலைஞர் தவிர ஞாபகத்திற்கு வருவது வைகோவும், விஜயகாந்தும்தான். இரண்டு பேருமே காமெடியன்கள் என்றாலும் மதுரைக்கார தமிழனிடம் காமெடி கொஞ்சம் தூக்கலாக இருக்கும். சாம்பிளுக்கு ஒன்று. 'எம்.ஜி.ஆர், அம்மாவை கொள்கை பரப்புச் செயலாளராக ஆக்கினார். அதற்கு அப்புறம் மேலே வந்தது எல்லாம் அம்மாவோட திறமைதான். ஆரம்பத்தில் ஆட்சியில் செய்த சிறுசிறு குற்றங்களை விட்டுவிடுங்கள். இன்றைக்கும் அவரது வழிமுறைகள் பெண்களால் பின்பற்றப்படவேண்டியவை'. புரட்சி அம்மா பத்தி இந்த புரட்சி தமிழன் சொல்லியிருப்பது. பத்து வருஷத்துக்கு முந்தி நடந்ததையெல்லாம் மறக்க தமிழனுக்கு தேவை செலக்டியா அம்னீஷியா!

கரை வேஷ்டி, பவுடர் பார்ட்டிங்கதான் இப்படி இருக்குதே... பேனாவும் கையுமாக அலையும் தமிழன் எப்படியிருக்கிறான்னு கேட்குறீங்களா? அப்போ 'அரசியல் ஞானி' ஞாநி என்ன சொல்றார்னு பார்க்கலாம். ஞாநியின் லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு, அரசியலுக்கு வரவிருக்கும் விஜயகாந்தை தன் கூட்டணி பக்கம் இழக்க முடியுமா என்று கலைஞர் முயற்சி செய்வதாக சொல்வதுதான். இராம. நாராயணன் மூலமாக விஜயகாந்தை சந்தித்து கூட்டணிக்கு இழுக்கிறாராம். நீங்கள் இல்லாவிட்டால், வேறு கவர்ச்சியான ஆள் என்னுடன் வரத்தயாராக இருக்கிறார் என்கிற செய்தியை பா.ம.கவுக்கு சொல்வதும் கலைஞரின் நோக்கமாம்.

நீதி - உலகம் கோயிந்தசாமிக்களால் ஆனது.

Monday, May 30, 2005

சோனியா - நோ சைலன்ஸ் ப்ளீஸ்!

எந்தவித எதிர்ப்புமில்லாமல் எதிர்பார்த்த மாதிரியே மூன்றாவது முறையாக தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் டெல்லி அம்மா. கட்சிக்காரர்களுக்கு சந்தோஷமான விஷயம். பிரதமருக்கும் சோனியாவுக்கும் ஏகப்பட்ட பிரச்னை என்றெல்லாம் மீடியா கதறினாலும் பெரிய அளவில் புகை ஏதும் வராமலிருப்பதே பெரிய சாதனைதான். ஆனால், இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் ஒரு கட்சியின் தலைவி இப்படி அநியாயத்திற்கு எல்லா விஷயத்திலும் வாய்மூடி நிற்பதுதான் நெருடலான விஷயம்.

பீகாரில் தேர்தலே வேண்டாம் என்று சொன்னதையெல்லாம் காதில் வாங்காமல் அவசரப்பட்டு தேர்தலை நடத்தி, நாலு மாதம் இழுத்தடித்து ஒரு வழியாக சட்டசபையை கலைத்த நேரத்தில் சோனியா வாய்திறக்கவேயில்லை. லால்லுதான் பேசுகிறார்; பேசிக்கொண்டே இருக்கிறார்.

இருள்நீக்கி சுப்ரமணியனை சிறையலடித்த விவகாரத்தை தமிழ்நாட்டு கட்சிகளெல்லாம் அவரவர்களுக்கு சாதகமாக திசை திருப்ப டெல்லி அம்மாவிடமிருந்து வந்தது ஒரு கமெண்ட். நோ கமெண்ட்ஸாம்!

நரேந்திர மோடிக்கு அமெரிக்க அரசு விசாவை மறுத்தபோது பிரதமரின் மனசாட்சி முந்திக்கொண்டு பேசியது. சோனியாவிடமிருந்து ரியாக்ஷனே வரவில்லை.

அரசியலுக்கு வந்த நாள் முதல் ராகுல், சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் முலாயம்சிங்கை பிடிபிடியென்று பிடிக்கிறார். ஆண்டனியோ என்றெல்லாம் சொல்லி அலற வைத்த நம்மூர் அம்மாவை பத்தி சோனியாவோ அல்லது சோனியாவின் வாரிசுகளோ கண்டுகொள்வதேயில்லை.

பத்துவருடத்திற்கும் மேலாக பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்த கருணாகரன், ஒரு வழியாக தனியாக கட்சி ஆரம்பித்து காங்கிரஸ்காரர்களை சகட்டு மேனிக்கு திட்டி தீர்க்க ஆரம்பித்தும் சோனியாவிடமிருந்து எந்த ரியாக்ஷனும் இதுவரை இல்லை. கருணாகரனும் அவரது மகனும் இன்னும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களாகத்தான் இருக்கிறார்கள்.

சிலர் பேசாமலிருப்பது நல்லது; சிலர் பேசியே ஆகவேண்டியிருக்கிறது. சோனியா இரண்டாவது ரகம். நாட்டின் மிகப்பெரிய கட்சியை நிர்வகிப்பவர் அரசியல் பிரச்னைகளுக்கு தன்னுடைய கருத்தை சொல்லாமலிருப்பதும் மீடியா அதையெல்லாம் கண்டுகொள்ளாமலிருப்பதும் ????????

Image hosted by Photobucket.com

கொசுறு. பத்தடிக்கு ஒரு கட் அவுட், கொடி, தோரணம் என்று மூன்று கி.மீ தூரத்திற்கு கிழக்கு கடற்கரைச் சாலையே அல்லோகலப்பட்டிருந்தது. பெண்ணினத்து போராளியே, காஞ்சித் தலைவியே என்றெல்லாம் ஜெயந்தி நடராஜனை விளிக்கும் பேனர்கள். தமிழ் நாட்டின் ஒரு ராஜ்ய சபா எம்பி தன்னுடைய மயிலாப்பூர் வீட்டிலிருந்து கிளம்பி அடையாறு, திருவான்மியூர் வழியாக இ.சி.ஆர் ரோட்டுக்கு வருவதற்கே லட்சக்கணக்கில் செலவாகியிருக்கிறது. ஜெயந்தி நடராஜன் கட்சி ஆபிஸ்க்கு வருவதே மீடியாவில் செய்தியாகிவிடுகிறது. அவ்வப்போது என்டிடிவி, ஸ்டார் நியூஸ் பக்கம் போனால் அம்மாவை கருத்து கந்தசாமியாக பார்க்கலாம். ம்.. என்னவோ திட்டமிருக்கு! அரசியலில் எல்லோரையும் அரள வைப்பது அம்மாக்கள்தானே!