Wednesday, June 22, 2005

தென்னாடுடைய சிவன்

சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோடு போகும் வழியில் பிளாட்பாரம் ஓரமாய் ஆறுக்கு நாலு இடத்தில் குடிகொண்டிருக்கும் அந்த பிள்ளையாருக்கு எந்நாளும் விசேஷ நாள்தான். பளிச் டிரஸ்ஸில் பூமாலை சகிதம் எப்போதும் ஜிகுஜிகு என்றுதான் கண்ணில்படுவார். பிள்ளையார் சதுர்த்திக்கு பக்தர்கள் கொடுக்கும் அங்கவஸ்திரம் மட்டும் நூற்றுக்கணக்கில் இருக்குமாம்! அந்த குருக்கள் சொல்லி முடிப்பதற்குள் பூம்புகார் போகும் வழியில் கஞ்சா நகரம் பக்கம் விழுந்து கிடந்தேன்.

Image hosted by Photobucket.com

காலேஜ் படிக்கிற காலத்தில்தான் அந்தக்கோயில் பழக்கம். 'இந்த சாயந்திர நேரத்துல மேலையூர் பக்கம் போய் என்ன பண்ணப்போறே... காலை ஷோ மட்டும்தானே'ன்னு நண்பர்கள் அடிக்கும் கிண்டலையும் பொருட்படுத்தாமல் வேகு வேகுவென்று சைக்கிளை மிதித்து கொண்டு செம்பொன்னார் கோயில் சந்து வழியாகக போன இடம். (புரியாதவர்களுக்கு, மேலையூர் மாஸ் தியேட்டர், நம்ம பரங்கிமலை ஜோதி மாதிரி!) கம்மிங் பேக் டு த பாயிண்ட். பூம்புகார் போகும் மெயின் ரோட்டிலேயே குடிகொண்டிருக்கிறார் நம்மவர் பசுபதீஸ்வரர். நினைவு தெரிந்த நாள் முதல் அதே மொட்டை கோபுரம், விரிசலான சுவர், இடிந்து கிடக்கும் சுற்றுப்புறச் சுவர், வற்றிப்போன தண்ணீரோடு குளம் சகிதம் கோயில் அப்படியேதான் இருக்கிறது.

Image hosted by Photobucket.com

இப்போதெல்லாம் ஆறு மாசத்துக்கு ஒரு முறைதான் கோயில் பக்கம் போகமுடிகிறது. எப்போது போனாலும் வெளவால், புல் பூண்டுகள் சகிதம் கோயிலின் வலதுகோடியில் உட்கார்ந்திருக்கும் பிள்ளையாரின் கெட்அப்பில் எந்த வித்தியாசமும் இருக்காது. தூசு தட்டிவிட்டு காரை பெயர்ந்து போன தூணில் சாய்ந்து வாசலிலேயே உட்காரும்போது பிள்ளையாரும் பேச ஆரம்பிப்பார். 'நீ வராத இந்த அஞ்சு மாசத்துல என்னை 22 பேரு பார்க்க வந்தாங்க தெரியுமா...'

Image hosted by Photobucket.com

செருப்பு போட்டுக்கொண்டு சுற்ற வேண்டிய பிரகாரம். காற்று, மழையில் நைந்து போய் அழுக்கேறிய துண்டை சுற்றிக்கொண்டு பெருமிதமாய் கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியை பார்க்கவேண்டுமானால் காலில் நெருஞ்சி முள் குத்துவதை கண்டுகொள்ளாமல் நடக்கவேண்டியிருக்கும். விஸ்தாரமான பிரகாரங்கள். ஆடு, மாடுகளின் புண்ணியத்தால் புதர் அண்டாமல் இருக்கிறது. சுற்றுப்புற சுவர்களின் செங்கல் அரித்து, சிதைந்து... மனதின் பாரம் இறங்கவேண்டிய கோயில், மனதை இன்னும் கொஞ்சம் பாரமாக்கிறது.

Image hosted by Photobucket.com

இடிந்து போன முன்மண்டபம், குழந்தைகளின் விளையாட்டு மைதானமாகியிருக்கிறது. நந்திகள் குழந்தைகள் விளையாடும் குதிரைகளாகியிருக்கின்றன. அரைமணிக்கொரு தரம் மினி பஸ் சர்வீஸ். மேலப்பாதி இரட்டை ஆஞ்சநேயரை தரிசிக்கும் பக்தர்களால் நிறைகிறது. பூம்புகார் பக்கம் வந்து செல்பவர்கள் கண்ணை விரித்து வைத்தால் கட்டாயம் சிக்கும் தூரத்தில் கோயில் ரோட்டை தொட்டுக்கொண்டுதான் இருக்கிறது. எத்தனையோ பேர் பாதையை கடந்து செல்கிறார்கள். யாருக்கும் இறங்கி பார்க்கவேண்டும் என்கிற நினைப்பு வருவதில்லை. ப்ரியா கல்யாணராமன்கள் எழுதிவைத்தாலோ அல்லது ஸ்ரீகாந்த், கோபிகா வகையறாக்கள் ஈஷிக்கொண்டு டூயட் பாடினாலோ இந்த தென்னாடுடைய சிவனுக்கு ஒரு நல்ல காலம் பிறக்க வாய்ப்பிருக்கிறது. பார்க்கலாம்!

Monday, June 20, 2005

டிவியோபியா

டி.வி பார்ப்பது ஒரு பொழுது போக்கு விஷயமாக இருந்த காலம் போய் பொழுது போக்கே டி.வி பார்ப்பதுதான் என்கிற காலமும் வந்தது. அப்போதும் டி.வியில் வரும் நல்ல சங்கதிகளே கண்ணில் பட்டதேயில்லை. சன், ராஜ் செய்திகள், தூர்தர்ஷன் செய்திகளையெல்லாம் சேனல் மாற்றி மாற்றி பார்த்துவிட்டு குறை கண்டுபிடிப்பதே வேலையாக இருந்தது. இன்றும் டி.வியில் ரசித்து பார்ப்பது காமெடி காட்சிகள் மட்டும்தான். இல்லாவிட்டால் என்டிடிவி. 'அரட்டை அரங்கம்' ரொம்ப காலம் வரை பிரியமான புரோகிராமாக இருந்து வந்தது. வெள்ளிக்கிழமை இரவுகளில் 'ஒளியும் ஒலியும்' நிகழ்ச்சிக்காக டி.வி முன் தவம் கிடந்த சம்பவங்களெல்லாம் இப்போது காமெடியாகியிருக்கின்றன.

நினைவு தெரிந்து பார்த்த மெகா தொடர், 'இவளா என் மனைவி ?!' சீரியலை பத்தி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அதற்கு பின்னர் படிப்புக்காலம் (பத்தாவது முதல் பிளஸ் டு வரை) வந்துவிட்டது. அப்போது டி.வி கிட்டதட்ட எங்கள் வீட்டின் பரணில் இருந்தது. காலேஜ் வாசலை மிதித்த பின்னர் ரசித்து பார்த்த இன்னொரு தொடர், 'மேல் மாடி காலி'. மத்தியான நேரத்தில் யார் இதையெல்லாம் பார்க்கப்போகிறார்கள் என்று என்னால் அலட்சியப்படுத்தப்பட்ட 'விழுதுகள்' செம ஹிட். அவ்வப்போது பார்த்து விட்டு எழுதவும் செய்திருக்கிறேன். நியூஸ் முதல் சீரியல் வரை சகலமும் உண்டு.தினமலர் டிவிமலர், தினமணி ஞாயிறுமணி என எதையும் விட்டுவைத்ததில்லை. அப்போதெல்லாம் பாராட்டை விட கிண்டல்தான் அதிகமாக வந்து விழும். கையை பின்னுக்கு தூக்கி வடிவேலு சொல்லும் பஞ்ச் டயலாக் மாதிரி... 'வாலிப வயசு!'

Image hosted by Photobucket.com

மெகா சீரியல் காலத்தில் தொழில்நுட்ப சங்கதிகள் எவ்வளவோ மாறியிருக்கின்றன. எதிர்பார்த்த முடிவு மட்டுமல்ல எதிர்பார்த்த வசனங்களும் பேசப்பட்டாலும் 'மெட்டி ஓலி'யின் கிளைமாக்ஸ், ஓரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருந்த விஷயம் ரசிக்க வைத்தது. எல்லா கேரக்டர்களும் கிளைமாக்ஸில் வரவேண்டும் என்பதற்காகவே பின்னணி காட்சிகளில் மற்ற கேரக்டர்களை உலாவ விட்டிருந்தார்கள். 'சித்தி' போல கிளைமாக்ஸில் சொதப்பவில்லை என்பதே 'மெட்டி ஓலி'யின் பெரிய வெற்றிதான். மெகா சீரியல்களை ஓரேயடியாக ஒதுக்கி தள்ளும் விமர்சனங்களை நான் கண்டு கொள்வதில்லை. சினிமாவில் சொல்வது போல கமர்ஷியல் கட்டாயங்களுக்காக, சில வட்டங்களை போட்டுக்கொண்டு உருண்டு வந்தாலும் மெகா சீரியல்களை ஒட்டு மொத்தமாக நிராகரிக்க வேண்டியதில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் 'கெட்டி மேளம்' பார்க்கிறேன். யாராவது அழ ஆரம்பித்தால் விஜய் டி.விக்கு மாற்றிவிடலாம். ரிமோட் பகவான் வாழ்க!

பின் குறிப்பு - திடீர்னு டி.வி பத்தி எழுதுனதுக்கும் அர்த்தமுண்டு. சும்மா தலைகாட்டிட்டு போற கருத்த மச்சான் கேரக்டருக்கு கூட என்னை கமிட் பண்ணாத டி.வி சீரியல் டைரக்டர்களை கண்டிக்கும் வகையில் ஒரு மாசமா டி.வி விமர்சனம் எழுத ஆரம்பித்திருக்கிறேன், தமிழோவியத்தில்!