Wednesday, May 12, 2004

பேராசை பெருநஷ்டம்!



ஆந்திரத்தில் நாயுடுகாரு கவுந்து போனதற்கு காரணமென்ன எல்லா பத்திரிக்கைகளும் பத்தி பத்தியா எழுத ஆரம்பிச்சுட்டாங்க! மக்கள் சக்தி மகத்தான சக்தி; மக்களை யாரும் ஏமாத்த முடியாதுன்னு தனி பில்டப் வேற. நேத்து வரைக்கும் தேறுவோமான்னு சந்தேகத்துலேயே இருந்த காங்கிரஸ் கோஷ்டிங்க இன்னிக்கு ஜிவ்வுன்னு பறக்குறாங்க. எலெக்ஷனுக்கு முன்னாலேயும் சரி முடிஞ்சப்புறம் சரி காங்கிஸ் சார்பா யாரு முதல்வராவறதுங்கிறதுல பிரச்சினை ஆரம்பிச்சாச்சு! டெல்லி அம்மா ஷிலா தீட்சித்தையே டீல்ல வுட்டவங்க ஆந்திராவுல மட்டும் சும்மாயிருப்பாங்களா?

ஆறேழு தலை உருண்டாளும் ஆறு வருஷமா லைம் லைட்டில் இருந்த ராஜசேகர ரெட்டிக்குதான் பிரகாசமான வாய்ப்பு. தெலுங்கானா வேணும்னு கேட்டு கட்சி ஆரம்பிச்சு டி.ஆர்.எஸ்ஸை காங்கிரஸ் பக்கத்துல வெச்சுக்குமா அல்லது கழட்டி வுட்டுடுமா? சென்னை மக்களுக்கு கிருஷ்ணா தண்ணி வருமா? ஹைதராபாத், தெலுங்கானா பக்கம் போயிட்டா ஆந்திராவோட தலைநகர் திருப்பதியா விசாகப்பட்டினமான்னு தனியா பட்டிமன்றம் ஆரம்பிச்சாச்சு!

ஒரு பழைய சினிமாதான் ஞாபகத்துக்கு வருது. முகமது பின் துக்ளக்கில் எலெக்ஷன் முடிந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் துக்ளக் (சோ) பேசுவதாக ஒரு காட்சி.

'மக்கள் முட்டாள்கள்!'

'என்னது?'

'ஆம். மக்கள் முட்டாள்கள். என்னையே தேர்ந்தெடுத்து விட்டார்களே!'