Monday, August 16, 2004

ஓசாகாவில் உறையும் தமிழ்



டெட்சுனொசுகெ - பெயரைச் சரியாக சொல்ல மட்டுமல்ல இவரிடம் பேசவும் கஷ்டப்படவேண்டும். ஒரு ஐப்பான்காரரிடம் ஜப்பானிஸ், இங்கிலீஷில் பேசுவதற்கு அல்ல. தமிழில் பேசுவதற்குத்தான்! உரைநடை தமிழில் வெளுத்து வாங்குகிறார். டெட்சுனொசுகெ, ஜப்பானின் ஓசாகா நகரில் சொந்தமாக கடை வைத்திருக்கிறார். எங்களது வலைத்தளத்தின் (www.rajinifans.com) உறுப்பினர். இணையத்தின் மூலம் ஓரளவு பரிச்சயம் இருந்தாலும் நேரில் பார்த்தபோதுதான் தமிழ் மீதும் ரஜினி மீதும் டெட்சுனொசுகெ வைத்திருக்கும் பிரியத்தை புரிந்து கொள்ள முடிந்தது. http://www.osaka-rajni.net/

ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தவனை இடைமறித்து தனக்கு ஆங்கிலம் அவ்வளவாக வராது என்று இலக்கிய சுத்தமாக தமிழில் பேச ஆரம்பித்தார். கூடவே ·பாலோ அப் பண்ணி சரளமாக உரை நடை தமிழில் பேச என்னால் முடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். பெரும்பாலானவர்களுக்கு ஆங்கிலம் சரியாக தெரியவில்லை. நம்மூர் சேட்டுகள் மாதிரி தமிழ் பேசுவார்கள் என்று நான் நினைத்திருந்ததை தவிடு பொடியாக்கினார்கள். தமிழில் பேசுவதோடு எழுத படிக்கவும் தெரிந்திருக்கிறது.

டெட்சுனொசுகெ, கூட வந்திருந்த மனைவியையும் மற்ற உறவினர்களையும் அறிமுகப்படுத்தி வைக்கிறார். எல்லோருமே ஓரளாவது தடுமாறியாவது தமிழில் பேசுகிறார்கள். 'எனக்கு தமிழ் ரொம்ப பிடிக்கும்' என்கிற வாசகத்தோடு ரஜினி படம் போட்ட டீஷர்ட்டில் குறுக்கும் நெடுக்குமாக அலைவதை பார்த்து அருணாச்சலா இன் ஹோட்டல் ஊழியர்கள் அதிசியமாகத்தான் பார்க்கிறார்கள். வைரமுத்து, செந்தில், மீனா, ஜனகராஜ் என்று தமிழ் கலைஞர்களை ரொம்பவும் ரசிக்கிறார்கள். காலையில் வைரமுத்துவை சந்தித்துவிட்டு மதியம் ஜனகராஜை பார்த்துவிட்டு சாயந்திரம் கில்லி படம் பார்த்துவிட்டு இப்போதுதான் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தார்கள் என்கிறார் அவர்களுடன் கூடவே இருக்கும் மதன்.

நிஐமாகவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. தமிழ் சினிமாவை முக்கியமாக ரஜினி படங்களை ஐப்பானில் எப்படி ரசிக்கிறார்கள் என்பது அல்ல. (இதே கேள்வியை பாரதிராஜா கேட்டு இவர்கள் சொல்லியிருக்கும் பதிலை கூடிய சீக்கிரம் செல்வமணியின் தமிழ் திரை தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கலாம்!) ஆச்சரியப்பட வேண்டிய விஷயம், தமிழ்க் கலாசாரம் பற்றி தெரிந்து கொள்வதற்கு ஜப்பானியர்கள் காட்டும் ஈடுபாடு.

தமிழகத்தின் ஆன்மீக விஷயங்கள், உணவுவகை, பொழுதுபோக்கு, சினிமா மற்றும் தியேட்டர் கலாசாரம் எல்லாமே ஐப்பானியர்களை கவர்ந்திழுத்திருக்கிறது. இதையெல்லாம் தெரிந்து கொள்வதற்காகவே மெனக்கெட்டு அங்கேயே தமிழ் கற்றுக்கொள்கிறார்கள். பரதநாட்டியத்தை ரொம்பவும் ரசிக்கிறார்கள். நல்லவேளை தமிழ்நாட்டின் அரசியல் இன்னும் அத்துப்படியாகவில்லை. அரசியலை பத்தி எதுவும் அவர்களுக்கு தெரியவில்லை. பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தையும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் தரிசித்து வந்தது பற்றி பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள். வலைத்தளமெல்லாம் தமிழில் இருந்தால் தங்களுக்கு படிக்க வசதியாக இருக்கும் என்கிறார்கள். வைரமுத்து ரஜினிக்காக எழுதிய பாடல்களை அட்சரம் பிசகாமல் பாட தெரிகிறது.

கிளம்பும்போது ரஜினி படம் போட்ட டீஷர்ட், ஸ்டிக்கர் என்று நம் கைகளில் திணித்து நன்றி சொல்கிறார்கள். அவர்கள் ஸ்டைலில் நாம் குனிந்து வணக்கம் சொல்ல முயல்வதற்கு முன்பாகவே நம்மூர் ஸ்டைலில் இருகரம் கூப்பி நன்றி சொல்கிறார்கள். கூட்டத்திலிருந்த ஒரு பெண்மணி தன்னுடைய விசிடிங் கார்டை கொடுத்துவிட்டு செளந்தர்யாவை ரொம்பப் பிடிக்கும் என்கிறார். விசிடிங் கார்டில் கண்ணை மூடியபடி கலர்·புல்லாக செளந்தர்யா!

இன்னொரு வயதானவர் தன்னை ரஜினியின் ரசிகர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். (ஆளைப் பார்த்தால் ஐம்பதுகளில் இருப்பவர் போல தெரிகிறது!) தனக்கு தமிழில் பேசவும் படிக்கவும் தெரியும் என்றாலும் சரளமாக பேச வராது என்று சொல்லிவிட்டு அவர் சொன்ன விஷயம் கேட்டு எனக்கு மயக்கம் வராத குறைதான்.
'ஜக்குபாய் ரீலிஸ்....அப்போது....எ(ன்)னால் நன்றா(க) தமிழ் பேச முடியும்!'