Wednesday, January 05, 2005

சினிமா 2004

இந்த வருஷம் சிறந்த படம்னு நான் எதையாவது சொல்லி வைச்சா என் மனசாட்சியே 'சுனாமி' மாதிரி என்னை சுக்குநூறாக்கிடும். எந்த படத்தையும் தியேட்டரிலோ, திருட்டு விசிடியிலோ பார்க்காததால் நமக்கெல்லாம் அந்த தகுதியில்லை. ஆனாலும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் டிவியில் மொழி வித்தியாசம் பார்க்காமல் ரிமோட்டை போட்டு உருட்டிக்கொண்டே இருப்பேன். முக்கியமாக மதன்ஸ் திரைப்பார்வை, சூர்யா டிவியில் வரும் சினிமா விமர்சனம், ஞாயிறு காலையில் வரும் தெலுங்கு சினிமா டாப் டென். இதெல்லாமே கொஞ்சமாவது சினிமாவை பற்றி தெரிந்து கொள்ள வைத்தது. எங்கே போனாலும், யார் சினிமா பற்றி பேசினாலும் காதை தீட்டி வெச்சுக்கிட்டு கம்முன்னு இருந்துடுவேன்!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை இந்த வருஷம் பரபரப்பை அள்ளிக்கொண்டு போனவர் கமல்ஹாசன் என்றுதான் நினைக்கிறேன். சீரியஸ் சினிமா ரசிகர்களுக்காக விருமாண்டி, கமர்ஷியலுக்காக வசூல்ராஜான்னு இந்த வயசிலும் அவர் கொடி பறக்குது! இந்த வருஷம் நான் அதிகமாக முணுமுணுத்த சினிமா பாடல் ரமேஷ் விநாயகத்தின் குரலில் 'விழிகளின் அருகினில் வானம்'. வாவ்! ரசித்த காமெடியாக 'கல்யாண ராமனாக' வடிவேலு, பார்த்திபனிடம் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படும் காமெடி டிராக்கை சொல்லாம். இப்போ, லேட்டஸ்டா 'காதல்' படத்தில் ஒரு பொடிசு, டயலாக் டெலிவரியிலேயே அசத்தியிருக்கிறது.

லேட்டஸ்டாக விஜய் கூட ஆடி, அசைந்து மாளிகை கடை லிஸ்ட் போட்ட கர்ணம் மல்லேஸ்வரியின் சிஸ்டர் கணக்காக இருக்கும் ஒரு கவர்ச்சிப்புயல்தான் கன்னடத்தில் 'மன்தராசா'ன்னு மாத்தாடி ஒரு ஆட்டம் போட்டிருக்காக.... ஜெமினி டிவி பக்கம் ரிமோட்டை திரும்பும்போது எப்படியும் சிக்கும். பயப்படாம பாருங்க! 'முத்துவை' ஸீன் பை ஸீன் சுட்டுப்போட்டு கன்னடத்தில் ரவிச்சந்திரன் ஒரு ஹிட் கொடுத்துருக்காரு. வேடிக்கையா இருக்குது! தெலுங்கு சினிமாவை பொறுத்தவரைக்கும் இந்த வருஷம் கஷ்டகாலம். சிரஞ்சீவிகாரு மட்டும் கஷ்டப்பட்டு ரெண்டு ஹிட் கொடுத்து தன்னை காப்பாத்திக்கிட்டாரு.

வழக்கம் போல அசத்திக்கொண்டிருப்பவர்கள் மலையாளத்துக்காரர்கள்தான். மோகன்லால், மம்முட்டி பெரிசுங்க எல்லாம் இந்த வருஷம் நிமிர்ந்து உட்கார்ந்திருப்பதாக செய்தி. இன்னொரு பக்கம் '4 த ஆர்மி' எடுத்து ஒரு சின்ன பசங்க கூட்டம் வேறு கலக்கிட்டிருக்கு. இன்னொரு ஆச்சரியமான விஷயம். நம்மூரு பக்கம் வந்து போணியாகாத சின்னத்திரை 'ஜோ' ஷர்மிலிதான் அங்கே முன்னணி நட்சத்திரமாம்! (இதெல்லாம் ரொம்ப தேவையான்னு நீங்க நினைக்கிறதுக்குள்ள அடுத்த மேட்டருக்கு தாவிடறேன்!)

கொஞ்ச நாள் முன்னாடிதான் அந்த படத்தோடு திரை விமர்சனத்தை சூர்யா டிவியில் பார்த்தேன். கமலின் இயக்கத்தில் வந்திருக்கும் 'பெருமழைக்காலம்'. படம் வந்த வேகத்தில் தியேட்டரை விட்டு திரும்பி விட்டது என்பது வேறு விஷயம். கொஞ்ச நாட்களாக மலையாள திரையுலகை கலக்கிக் கொண்டிருக்கும் 'மீசை மாதவன்' திலீப் - காவ்யா மாதவன் ஜோடி பவர்·புல் பாத்திரத்தில் எதிரும் புதிருமாக. கூடவே மீரா ஜாஸ்மீன் வேறு.

கதை ரொம்ப சிம்பிள். ஒரு வளைகுடா நாட்டில் வசிக்கும் திலீப், ஒரு அசாதாரண சந்தர்ப்பத்தில் வினீத்தின் சாவுக்கு காரணமாகி தூக்கு தண்டனைக்கு ஆளாகி விடுகிறார். அதிலிருந்து தப்பிக்க ஓரே வழி செத்துப்போன வினீத்தின் மனைவி காவ்யா மாதவனிடமிருந்து ஒரு மன்னிப்புக் கடிதம்.

திலீப்-மீரா ஜாஸ்மின் ஜோடியோ இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள். வினீத்தும் காவ்யா மாதவனும் பக்கா பிராமின் குடும்பம். காவ்யா மாதவனை எப்படி சம்மதிக்க வைத்து மீரா ஜாஸ்மீன் மன்னிப்புக் கடிதத்தை பெற்று தனது கணவரை தூக்கு தண்டனையிலிருந்து மீட்கிறார் என்பதுதான் கதை. காவ்யா, மீரா என இரு கதாநாயகிகளை மையப்படுத்தியிருக்கிறார்கள்.



உள்ளூரில் டீச்சராக வேலைபார்த்துக்கொண்டு வெளிநாட்டிலிருக்கும் கணவரை நினைத்துக்கொண்டே காலத்தை ஓட்டும் வெயிட்டான ரோல் காவ்யா மாதவனுக்கு. டிபிகல் கேரள பெண்மணியாக அசத்தியிருக்கிறார். வெள்ளைச்சேலையை இழுத்துப் போர்த்திக் கொண்டு நெற்றியை சுருக்கிக் கொண்டு கலகல காவ்யா மாதவனா இது என்று ஆச்சர்யப்படுத்துகிறார்.

படத்தின் பெரிய பலம் காமிராமேன். படம் முழுவதும் பசு¨மையான மரங்களினூடே மெல்லியதாக மழை பெய்து கொண்.....டே இருக்கிறது! பாத்திரங்கள் பேசும்போதெல்லாம் பின்னணியில் மெல்லியதாய், இழையோடும் மழைத்துளிகள்.....இதைத்தான் ரம்மியம் என்று சொல்வாங்களோ?!