ஒரு வருஷமாய் இன்னும் கிடைக்காத விஷயம் ஒன்று உண்டு. 'சுனாமி'ன்னா பெருசா அலை துரத்திட்டு வரும் என்பது மட்டும் தெரிந்திருக்கிறது. எதனால் வரும், வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருப்பவர்கள் ரொம்ப குறைவு. ஓரே மாதத்தில் பள்ளிக்கூடங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டன. ஆனால், பள்ளிக்கூட பாடங்களில் சுனாமி பற்றிய செய்திகள் இன்னும் சொல்லப்படவில்லை. மத்திய அரசோ, மாநில அரசோ அல்லது தொண்டு நிறுவனங்களோ மக்களுக்கு இலவசங்களை இறக்குமதி செய்வதில் காட்டிய ஆர்வத்தை நாலு பேரை உட்கார வைத்து சுனாமின்னா இதுதான் என்று சொல்ல முயற்சிக்கவேயில்லை. உதவிக்கு வந்த மகளில் சுய உதவி குழுக்களினால் ஆறுதல் மட்டுமே சொல்ல முடிந்தது. ஒரு அனுதாப அலையே வருமளவுக்கு அடுத்தவரிடம் பேசுவது எப்படி என்பதில் விவரமாக இருக்கும் மிஸ்டர் பொது ஜனத்துக்கும் சுனாமி பற்றி தெரிந்து கொள்ள நேரமில்லை. அடிக்கடி அந்தப்பக்கமாய் சென்று வந்தாலும் ஒரு பவர் பாயிண்ட் பிரசெண்டேஷன் கொடுக்கமளவுக்கு நமக்கும் நேரமில்லையே என்கிற மனசாட்சியின் குரலை உதாசீனப்படுத்திவிட்டுதான் மேற்கொண்டு தட்டச்ச வேண்டியிருக்கிறது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. சுனாமியோ, வெள்ளமோ எது வந்தாலும் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு அப்படியே இருந்துதான் ஆகவேண்டும். எது நடந்தாலும் மாற்றம் இருந்துகொண்டேதான் இருக்கும். ஆனால் ஆதாரத்தையே அசைத்துப்பார்க்கும் மெகா மாற்றம் வரும் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. பாதை குழப்பமாக இருந்தாலும் செய்தி தெளிவாகத்தான் இருக்கிறது.
