Wednesday, April 07, 2004

'தலித்'துவம் எத்தனை நாளைக்கு?

ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடனும் வந்த தலித் இலக்கிய எழுச்சி தலித் போராட்டங்களை முன்னிலைப்படுத்தியதைவிட சில தலித் எழுத்தாளர்களின் சுய பிரஸ்தாபங்களை முன்னிறுத்தியது என்றுதான் சொல்லவேண்டும். தலித்துகளின் சோகத்தையும் கோபத்தையும் மட்டும் எழுத்தில் வடிப்பதுதான் தலித் இலக்கியம் என்றால் வேட்கை குறைய ஆரம்பித்துவிட்டதாகத்தான் கொள்ள முடியும். தலித் சமூகத்திலிருந்து வந்து பெரிய பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகள் தங்கள் சமூகத்தை மேம்படுத்துவதற்கான எந்த முயற்சியும் செய்வதில்லை. தீண்டாமைக் கொடுமையை நீக்க முயற்சிப்பதை மறந்துவிட்டு அது இந்து மதத்தின் சாபக்கேடு என்று சொல்லி தப்பித்துக் கொள்வது நியாயமான விஷயம்தானா? மகாத்மா காந்திஜி முன்மொழிந்த 'ஹரிஜன்' என்கிற சொல்லாக்கத்தையும் து¡ர எறிந்து விட்டு 'தலித்' என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதை வைத்து ஏகப்பட்ட ஆராய்ச்சிகள் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அரசியலில் கூட தலித் கட்சிகளை சிலர் ஜாதிக் கட்சிகளாக கருதுவதில்லை. திருமாவளவனும், டாக்டர் கிருஷ்ணசாமியும் தாழ்த்தப்பட்ட வர்க்கமான தலித்துகளுக்காக பாடுபடுகின்றார்களாம்! அவர்கள் ஜாதி என்கிற குறுகிய வட்டத்தில் வளைய வருவதில்லை என்று சர்ட்டிபிகேட் கொடுப்பவர்கள், பாமகவை ஜாதிக் கட்சி என்று சொல்வதும் வேடிக்கையாக இருக்கிறது. சாதாரண மக்களை பொறுத்த வரை பாமகவும் சரி, திருமாவளவனின் கட்சியும் சரி, தென்மாவட்டங்களில் பரபரப்பை கிளப்பும் தேவர் இனத்து மக்களின் கட்சிகளும் சரி எல்லாமே குறுகிய ஜாதீய சிந்தனையுடைய அரசியல் அமைப்புகளாகவே பார்க்கப்பட்டுவருகின்றன. இத்தகைய கட்சிகளால் தங்கள் ஜாதி மக்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் மட்டுமே கோலோச்ச முடியும். ஜாதி அரசியல் தமிழகத்தில் தற்போது உச்சத்திலிருக்கிறது. பெரிய கட்சிகளின் அரசியல் முடிவுகள் பெரும்பாலும் ஜாதி ஓட்டை பொறுத்தே அமைந்திருக்கின்றன. சமீபத்திய உதாரணம், திருச்செந்து¡ரில் ராதிகா செல்வியும் தர்மபுரியில் பு.தா. இளங்கோவனும் போட்டியிடுவது. ஜாதிகள் ஒழிய வேண்டும் என்று பாடிய பாரதியார் இன்றிருந்தால் தமிழ் நாட்டை என்ன இந்தியாவை விட்டே ஓடிப் போயிருப்பார்!

'தலித்' என்ற பெயரில் நடக்கும் கண்ணாமூச்சி விளையாட்டுக்கள் இன்னும் எத்தனை நாளைக்கோ?!