Sunday, June 18, 2017

கலிங்கத்துக் கோயில் பரணி

வலம், மார்ச் 2017 இதழில் வெளியான கட்டுரை.....



புவனேஷ்வரின் பெரிய கோயிலான லிங்கராஜா கோயிலுக்குச் செல்லும் வழியில் இருந்த அந்த சின்னக் கோயில், முதலில் பயணத் திட்டத்தில் இல்லை. நந்தவனத்துக்கு நடுவே சிதைந்திருந்த கோயில், பல கோணங்களில் தமிழ்நாட்டுக் கோயில்களை ஞாபகப்படுத்தியது. இடதுபுற கோஷ்டத்தில் ஒரு கையில் கலசமேந்தி, இன்னொரு கையில் கடக முக முத்திரையோடு நடன வடிவில் முகமெங்கும் புன்னகையோடு பிள்ளையார் எங்களை வரவேற்றார். புவனேஸ்வரில் புள்ளமங்கை வாசம்! திராவிட உட்கல ஜாத்ராவை அங்கிருந்து ஆரம்பிப்பதுதான் பொருத்தமாக இருந்தது.


தாளேஸ்வரா தியால் என்ற அந்த சின்ன சிவன் கோயிலின் விமானம் இடிந்திருக்கிறது. மற்றவையெல்லாம் ஒரிசா கோயில்களின் கலிங்க பாரம்பரியக் கட்டமைப்பை ஒத்திருந்தது. தியோல் என்பது கோயில். ரேகா என்பது கர்ப்பகிரகம். கர்ப்பகிரகத்தை சுற்றி பார்ஷ தேவதா என்னும் கோஷ்ட தெய்வங்களைப் பார்க்கமுடிகிறது. இடதுபுறம் பிள்ளையார். நம்மூர்க் கோயிலின் பின்புறம் சிவா, விஷ்ணு அல்லது பிரம்மா இருப்பார். இங்கே கார்த்திகேயன் என்னும் முருகன் இருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக துர்க்கையம்மன்.


எந்தக் கோயிலாக இருந்தாலும் கோஷ்ட தெய்வங்கள் மூன்றுதான். சிவன் கோயிலாக இருந்தால் பிள்ளையார், கார்த்திகேயன் & பார்வதி அல்லது துர்க்கை. விஷ்ணு கோயிலாக இருந்தால், நரசிம்மா, திரிவிக்ரமா & வராகா. சக்த என்னும் சூரிய வழிபாட்டுக்கோயிலாக இருந்தால் மூன்று இடங்களிலும் சூரியனின் வெவ்வேறு நிலையில் உள்ள சிற்பங்களைப் பார்க்க முடிகிறது.


ஒவ்வொரு கோயிலில் வாசலிலும் சிவனின் பல்வேறு அவதாரங்களுக்குப் பிரதான இடமுண்டு. ஏகபாத சேகரன், ஒடிசா கோயில்களில் பரவலான இடங்களில் பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டில் மிகக் குறைவு. நுழைவாயிலின் மேற்பகுதியில் கஜ லெட்சுமிக்குப் பதிலாக நவக்கிரகங்களின் உருவம் உள்ளது. சில இடங்களில் நவக்கிரக வரிசைக்குக் கீழே கஜலெட்சுமி உருவமும் உண்டு. நவக்கிரகங்களில் எட்டுப் பேருக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. கேது, பெரும்பாலான கோயில்களில் இடம்பெறுவதில்லை. ராகுவின் முகம், சற்றே பெரிதாக குளோஸப்பில் காட்டப்படுகிறது.


புவனேஷ்வரில் மட்டுமல்லாமல் ஒடிஷா முழுவதும் உள்ள கோயில்களை கலிங்கா கட்டமைப்பாக மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். ரேகா, பீடா, காக்ரா. முதல் இரண்டு வகையையும் இணைத்துக் கட்டப்பட்ட பல கோயில்களே தற்போது எஞ்சியிருக்கின்றன. கருவறையின் மீது நீளவாக்கில் கட்டப்பட்ட அமைப்புதான் ரேகா தியோல்.


ரேகா தியோலுக்கு முன்னால் இருப்பது ஜகன்மோகனா. நம்மூரின் முக மண்டபத்தோடு இதை ஒப்பிடலாம். இதையே பீடா தியோல் என்பார்கள். ரேகா தியோல் போல் அல்லாமல் பீடா தியோல், அகலவாக்கில் விஸ்தாரமாகக் கட்டியிருக்கிறார்கள். இங்கிருந்துதான் கர்ப்பகிரகத்தில் உள்ள இறைவனை வழிபடவேண்டும்.


ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டுக் கோயில்களில் ரேகாவும், ஜகன்மோகனாவும் மட்டுமே இருந்திருக்கின்றன. பிற்காலத்திய கோயில்களில் ஜகன்மோகனா சற்றே விரிவுபடுத்துப்பட்டு அதற்கு முன்னர் இன்னும் சில மினி ஜகன்மோகனா மண்டபங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. நட மந்திர் என்றும் சொல்லப்படக்கூடிய நடன மண்டபமும், போக மண்டபம் என்னும் மடப்பள்ளியும், பூரி, லிங்கராஜா போன்ற பெரிய கோயில்களில் காணமுடிகிறது.


தரைத்தளத்தின் அமைப்பு, கோயிலுக்கு ஏற்றபடி வேறுபடுகிறது. பிஷ்டா என்னும் தரைத்தளத்தின் மீதுதான் ரேகாவும், ஜகன்மோகனாவும் கட்டமைக்கப்பட்டுள்ளன. உயரம், கோயிலுக்குக் கோயில் மாறுபட்டிருக்கிறது. அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள பகுதியை படா என்கிறார்கள். படா வரை ரேகாவும் ஜகன்மோகனாவும் ஒரே அளவில் தென்படுகின்றன. படாவுக்கு பின்னர் வருவது காந்தி. காந்தியின் வெளிப்புறச் சுற்றுச்சுவர்தான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம். ஏராளமான சிற்பங்களும், அதை ஒட்டிய வேலைப்பாடுகளும் பிரமிக்க வைக்கின்றன.


பாபகா, ஜங்கா, வரண்டா என்னும் மூன்று பகுதிகள் கொண்ட படாவைப் பெரும்பாலான கோயில்களில் பார்க்கமுடிகிறது. பூரி, லிங்கராஜா போன்ற கோயில்களில் ஐந்து வகையான படாவைக் காணலாம். பாபகா, தல ஜங்கா, பந்தனா, உப ஜங்கா & வராண்டா. ரேகாவைச் சுற்றியுள்ள வெளிப்புறச் சுவர்களை 5,7,9 ஒன்று வெவ்வேறு அளவுகளில் செய்திருக்கிறார்கள். ஐந்து விதமான மடிப்புகள் கொண்ட பஞ்சரத ரேகாவை பல இடங்களில் பார்க்கமுடிகிறது. ஒவ்வொரு புரொஜெக்ஷனுக்கும் தனித்தனியே பெயரும் உண்டு. ராகா, கனிகா, அனுராதா!


படா மற்றும் காந்தியின் வெளிப்புறங்களில் நீட்டிக்கொண்டிருக்கும் அமைப்பின் மீது சில உருவங்களைப் பார்க்கமுடியும். சிங்கம், கர்ப்பகிரகத்தின் மேலிருந்து பாய்ந்துகொண்டிருப்பது போல் செய்திருக்கிறார்கள். இதென்ன தேவையில்லாமல் நீட்டிக்கொண்டிருக்கிறதே என்று தோன்றலாம். ரேகா தியோல் அமைப்பின் மொத்த எடையையும் குறுக்கு நெடுக்காக வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான உருளை வடிவ அமைப்புகளே தாங்கிக்கொண்டிருக்கிறன. அவ்வாறு வெளியே நீட்டிக்கொண்டிருப்பதை சிங்கமாகவும், கீர்த்திமுகமாகவும், கஜசிம்ஹாவாகவும் அழகுபடுத்தியிருக்கிறார்கள்.


ரேகாவையும், ஜகன்மோகனாவையும் சுற்றி, ஏராளமான சுதைச் சிற்பங்களைக் காணமுடிகிறது. பெரும்பாலும் அலசா கன்யா என்னும் ஆடல் மகளிரின் சிற்பங்கள் விதவிதமாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. நடுவே பாதி மனித உடலுடனும் பாதி பாம்பு உடலுடனும் தென்படும் நாகா மற்றும் நாகி ஆகிய உருவங்களும் அவர்களின் சல்லாபங்களும் உண்டு. சாலபஞ்சிகா என்னும் சிற்றின்பத்தில் திளைக்கும் மகளிர் உருவங்கள், குறிப்பாக மரங்களின் மீது ஒய்யாரமாகச் சாய்ந்தபடி நிற்பதும், கிளைகளைத் தழுவியபடிக் காமப்பார்வை பார்ப்பதும் நம்மைப் பிரமிக்கவைக்கின்றன.


யானையைக் காலடியில் இட்டு மிதித்தபடி, பிரம்மாண்டமாய் நெருப்பைக் கக்கியபடி விண்ணில் பாயத்துடிக்கும் விட்டலா என்னும் பாயும் சிங்கத்தை ஒவ்வொரு கோயிலிலும் பார்க்கமுடிகிறது. சிவன் கோயிலாகட்டும், விஷ்ணு கோயிலாகட்டும், கனிகா என்னும் வெளிப்புற சுவர் நீட்சியின் ஒவ்வொரு உள்ளடங்கிய பகுதியிலும் விட்டலாவைக் காணமுடிகிறது. சிறு வடிவங்களில் ஆரம்பித்துப் பெரிய அளவு வரை ஏராளமான விட்டலா உருவங்கள் கோயிலின் பிரம்மாண்டத்துக்குத் துணை சேர்க்கின்றன.


சுற்றுப்புறச் சுவரின் அலங்காரங்களுக்கு நடுவே மினியேச்சர் வடிவக் கோயிலைக் காணமுடிகிறது. புடைப்புச் சிற்பமாக தென்படும் இந்த மினியேச்சர் கோயில்களில் உள்ளே மூர்த்திகளும் உண்டு. பெரும்பாலும் நவக்கிரகங்கள் அல்லது சிவ வடிவங்களே காணப்படுகின்றன. ஒட்டுமொத்த மினியேச்சர் அமைப்பையும் முண்டி என்கிறார்கள். கோயிலின் அமைப்புக்கு ஏற்றபடி காக்ரா முண்டி, பீடா முண்டி என்றும், அளவில் சிறியதும் பெரியதுமான சிறிய மினியேச்சர் கோயில்களை படா முதல் காந்தி வரை பல இடங்களில் பார்க்கமுடிகிறது.


நாம் இதுவரை பார்த்தவையெல்லாம் அடிப்படைக் கட்டுமான வடிவங்கள். இதே சாயலில் புவனேஷ்வர் நகரம் முழுவதும் நூற்றுக்கணக்கான கோயில்களைக் காணமுடியும். அளவில் பெரியதும், அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய பெரிய கோயில்களாக புவனேஷ்வரின் லிங்கராஜா கோயிலையும், பூரியின் ஜெகநாதர் கோயிலையும் குறிப்பிடலாம். இரண்டையும் விடப் பெரிய கோயிலாக கோனரக் சூரியக் கோயில் இருந்திருக்க வேண்டும். கோனரக்கில் ஜக்மோகனாவும், நட மந்திரும் மட்டும் எஞ்சியிருக்கிறது. ஒட்டுமொத்த கட்டுமானமும் தொடர்ந்து இருந்திருக்கும் பட்சத்தில் ஆசியாவிலேயே பிரம்மாண்டான கோயிலாக இருந்திருக்கக்கூடும்.


ஓடிசாவுக்கே உரிய கலிங்கக் கோயில்கள், பல நூறு ஆண்டுகளாகப் பல மாற்றங்களைச் சந்தித்து வந்திருக்கின்றன. இருந்தாலும், ஒருசில அடிப்படைக் கட்டுமான விஷயங்கள் பெரிய அளவில் மாற்றங்களைச் சந்திக்கவில்லை என்பது ஆச்சரியமான விஷயம். கலிங்க பாணியிலான முதல் கோயில், ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டிருக்க வேண்டும். அதற்கு முன்னால் இத்தகைய கோயில்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை.


ஆனால், முதலாம் நூற்றாண்டு தொடங்கி, ஏராளமான கோயில்கள் இருந்திருக்கின்றன என்பது உண்மை. அவை கலிங்க பாணியிலான கோயில்கள் என்பதற்கான சான்றுகள் இல்லை. காரவேலர்களின் ஹத்தி கும்பா கல்வெட்டிலிருந்து, அப்போதே கோயில்கள் இருந்ததும், கடவுள் சிலைகள் பழுதுபார்க்கப்பட்டதும் தெரியவருகிறது. ஆனால், கோயில்களின் கட்டமைப்பு பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை. ஆனாலும், முதல் நூற்றாண்டைச் சேர்ந்த யக்ஷா, நாகா வடிவங்கள் கிடைத்திருக்கின்றன. அவற்றை வைத்து எந்தவொரு முடிவுக்கும் வரமுடியவில்லை.


கிடைத்த தடயங்களின்படி, கலிங்கக் கட்டமைப்பிலான கோயில்களின் வரலாறு ஆறாம் நூற்றாண்டில் சைலேத்பவர்களின் ஆட்சியில் தொடங்குகிறது. ஒன்பது மற்றும் பதினோராம் நூற்றாண்டுகளில் பரவலானது. ஒரிசா பகுதியை ஆண்டு கொண்டிருந்த சோமவம்ஷியின் ஆட்சிக்காலங்களில் எண்ணிக்கையளவில் ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டன. பின்னர் தொடர்ந்த கங்கர்களின் காலகட்டத்தில் அதுவும் குறிப்பாக பதிமூன்றாம் நூற்றாண்டின் முடிவில் பிரம்மாண்டமான கோயில்கள் கட்டப்பட்டன. 800 ஆண்டுகள் தொடர்ந்த கலிங்கக் கோயில் கட்டுமான பாரம்பரியத்தின் உச்சம், கோனராக்கின் சூரியக் கோயிலில் நிறைவு பெற்றது என்று சொல்லலாம்.


பூரியின் ஜெகந்நாதர் கோயில் கி.பி 1150ல் அனந்தவர்மன் சோடகங்கனால் கட்டப்பட்டது. தஞ்சையை ஆண்ட முதலாம் குலோத்துங்கனின் மருமகன். சைவராக வாழ்க்கையைத் தொடங்கி, பூரிக்கு விஜயம் மேற்கொண்ட ராமானுஜரால் வைஷ்ணவனாக மாறியவன். இடிந்து கிடந்த ஜெகந்நாதர் கோயிலை, பிரம்மாண்டமான கோயிலாக எழுப்பியவன்.


மாலை நேரம். நூற்றுக்கணக்கானவர்கள் கூடியிருக்கிறார்கள். பூரி கோயிலில் சகல விஷயங்களுக்கும் பாத்யதை பெற்ற பாண்டா குழுவைச் சேர்ந்த ஒருவர், முதுகில் கொடிகளைக் கட்டியபடி, நட மந்திரிலிருந்து ஜக்மோகனாவில் மீது தாவி ஏறுகிறார். பின்னர் அங்கிருந்து கர்ப்பகிரத்தின் மீது தாவி, விறுவிறுவென்று மேலே ஏற ஆரம்பிக்கிறார். கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. நூறு அடி உயரம் கொண்ட ரேகா தியோலைக் கடந்து பேக்கி என்னும் ஆளுயுர இடத்தை அடைகிறார். அங்கிருக்கும் விஷ்ணுவுக்கு ஆரத்தி நடைபெறுகிறது.


அங்கிருந்து சங்கிலியைப் பிடித்தபடியே அமலக்காவின் மீது ஏறுகிறார். கரணம் தவறினால் மரணம்! அமலாக்காவைத் தாண்டி காபூரி என்னும் தளத்தை அடைகிறார். பூரி கடற்கரையிலிருந்து வரும் காற்று, ஆளைத் தள்ளிவிடுகிறது. அங்கிருக்கும் கலசத்தின் வழியாக சுதர்சன சக்கரத்தின் மீதேறி ஒரு கையால் பிடித்தபடியே இன்னொரு கையால் கொடியை மாற்றுகிறார். கூட்டம் பரவச நிலைக்குச் செல்கிறது, ஜெய் ஜெகந்நாத்!


சிவப்புக் கொடிக்கு பதிலாக மஞ்சள் கொடி. மழையும் புயலும் இருந்தாலும் கூட தினந்தோறும் தொடரும் சடங்கு என்கிறார்கள். இதுவரை ஒருமுறை கூட அசம்பாவிதம் நடைபெற்றதில்லையாம். கீழிறிங்கி வரும் பாண்டாவிடமிருந்து பழைய கொடிகளை வாங்கிக்கொள்ள நூறு ரூபாய் நோட்டுகளுடன் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. ஓர் அபாயகரமான சடங்கு, ஒரு மாபெரும் சாகசமாக இங்கே சித்தரிக்கப்படுகிறது. 214 அடி உயர கோபுரத்தைக் கட்டிமுடித்த கையோடு, சொந்தத் தாய்மாமனின் படைத்தலைவனான கருணாநகரத் தொண்டைமானால் தோற்கடிக்கப்பட்டு வீழ்ந்த அனந்தவர்மனின் கதை, இன்னொரு இடத்தில் சாகசமாக்கப்பட்டு, கலிங்கத்துப் பரணி என்னும் அபாயகரமான இலக்கியமாக்கப்பட்டது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?


http://www.valamonline.in/2017/06/blog-post_86.html



எங்கேயும் எப்போதும் எல்லாமே தானாகவே இயங்கும் – ஜென்கின்ஸ்


சொல்வனம், மே 2017 இதழில் வெளியான கட்டுரை...
அதுவொரு காலம். இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை திறக்கும் முன்பாக, திரள் கோப்பை (Batch file) தட்டியெழுப்பி, வலை வழங்கியை (Java webserver) இயக்கவேண்டும். சர்வெலெட் கோப்புகள் தொகுக்கப்பட்டு இயக்கம் ஆரம்பமாகும்வரை காத்திருக்கவேண்டும். அருமை தெரியாத பொறுமை! write once, run anywhere, anytime தத்துவமெல்லாம் தெரிந்தாலும், ஒவ்வொரு முறையும் ஜாவா நிரலை இயக்குவதற்கு முன்பாக தொகுக்கப்படும (compile). தொடரியல் வழுவெல்லாம் (syntax error) தொடர்ந்து வந்தால் ஆரம்பத்திலேயே சரிசெய்துவிடலாம். பேபி ஜாவா நிரல் எழுதுபவருக்கே உரிய சகல அலட்சியங்களும் உண்டு. எக்ளிப்ஸ் என்னும் IDE வந்தபின்னர்தான் நிம்மதியாக நிரல் எழுத முடிந்தது.
ஜாவா மெய்நிகர் பொறி தொடங்கி சகலத்தையும் இயக்கி, இனொனரு முறை தொகுத்து, இயக்கி, தயாராவதற்கு சற்று நேரமாகும். ஆனால், திரள் கோப்பு இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. எலிக்குட்டி (மௌஸ்) கண்டுபிடிக்காத முற்காலத்தில் செய்யப்பட்ட முதல் செய்பொருளாக்க (Automation) பணி, திரள் கோப்பு உருவாக்குவதாகத்தான் இருந்திருக்கவேண்டும். அப்போதெல்லாம் திரள் கோப்பை தட்டிவிட்டு, டீ சாப்பிட்டு வந்துவிடலாம். எண்டர் கீ மூலமாக குண்டலினியை எழுப்பிவிட்டு, சகல நிரல்களையும் சந்துக்கு கொண்டு வரும் திரள் தொகுப்பு கலாச்சாரம், இன்னும் இருக்கத்தான் செய்கிறது.
கட்டற்ற மென்பொருள்களின் அறிமுகம், அதைத்தொடர்ந்த தொடர்ச்சியான பயன்பாடு நம்மை எங்கேயோ அழைத்துச் சென்றுவிட்டது. நிரல் எழுதத்தொடங்கும் அதே நேரத்தில் நிரலில் இயக்கமும் ஆரம்பமாகிவிடுகிறது. எங்கேயோ உட்கார்ந்துகொண்டு, எதையோ இயக்குமளவுக்கு இன்றைய தொழில்நுட்பம், உச்சம் பெற்றுள்ள நிலையில், எழுதப்பட்ட நிரல்களை நிர்வகிப்பதும், மேம்படுத்துவதும் முக்கியமான பணி. அதை விட முக்கியமான விஷயம், எழுதப்பட்டதை தொடர்ச்சியான இடைவெளியில் இயக்குவது. அதன் மூலம் பெறப்படும் முடிவுகளை வீடியோ கேம்ஸ் விளையாடிக்கொண்டிருக்கும் வாடிக்கையாளரின் மின்னஞ்சலில் சேர்ப்பதற்கும் ஒரு தொண்டன் தேவை. எத்தகைய அடியையும் தாங்கிக்கொண்டு அசராமல், அசுரகதியில் உழைத்துக்கொண்டே இருக்கும் அடிமாடுதான் ஜென்கின்ஸ்.
உங்களது நிரல், எதில் வேண்டுமானாலும் எழுதப்பட்டதாக இருக்கட்டும். எங்கே, யாரிடம் வேண்டுமானாலும் இருக்கட்டும். அதை இயக்கி, முடிவுகளை சரியானவர்களிட்ம் சேர்ப்பிக்கும் அஞ்சலக பணியாளர் பணியைத்தான் ஜென்கின்ஸ் செய்கிறது. இதென்ன கட்டண சேவையா? இல்லை. உரிமம் வாங்கவேண்டுமா? தேவையே இல்லை. முழுவதும் இலவசம். கட்டற்ற சுதந்திரம்!
ஜென்கின்ஸ், தகவல்தொழில்ப புரட்சியின் முக்கியமான மந்திரம். நிரல் எழுத, ஏராளமான IDE உண்டு. அதை விட அதிகமான கணிணி மொழிகளும் உண்டு. ஜென்கின்ஸை நிரல் எழுதுபவர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதை பரிசோதிப்பதாக பீதியுட்டுபவர்களும் பயன்படுத்தமுடியும். ‘யார் வேணும்னாலும் எதுல வேணும்னாலும் எழுதித் தொலைங்கய்யா…எங்கே, எப்ப வேணுமோ அப்போ எக்ஸ்கியூட் பண்ணி, ரிசல்ட் காட்டுறேன்’ என்று சொல்லும் நல்லவர்கள் மிகக்குறைவு. ஸ்லீப்பர் ஷெல் தாக்குதல் போல், ஒரே நிரலை, ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் இயக்கி, மிரள வைக்கலாம்.
2004ல் ஜாவாவோடு சேர்த்து சன்மைக்ரோ சிஸ்டம், ஜென்கின்ஸையும் வளர்த்தது. ஹட்சன் என்னும் பெயரில் அப்போது பிரபலமாகியிருந்த இந்த நுட்பத்திற்கு ஆரக்கிள் பங்காளியானது. 2010ல் சன் மைக்ரோ சிஸ்டத்தை ஆரக்கிள் வாங்கியதும் ஆரம்பமான பிரச்னை அது. பஞ்சாயத்தின் முடிவில் ஹட்சன் என்னும் பெயர் மாற்றப்பட்டு ஜென்கின்ஸ் ஆனது. ஹட்சனாக இருந்த காலத்திலேயே மாவேன் வகையறாக்களுடன் இணைந்து… சரி, அதெல்லாம் கடந்த காலம். கதை சொல்லி, போரடிக்காமல் நேராக விஷயத்திற்கு வந்துவிடலாம்.
ஜென்கின்ஸ், அதை எப்படி இயக்குவது? அதுதானே நமக்கு முக்கியம். நிரல் எழுதுபவர் அதை முழுமையாக்கியதும், ஜென்கின்ஸ் அதனுடன் கரம் மசாலா சேர்த்து, நிரல் தொகுப்பாக மாற்றுகிறது. பின்னர், எப்போது அல்லது எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் அதை இயக்குகிறது. நிரல் இயக்கப்பட்டு, அதனால் பெறப்படும் முடிவுகளை ஜென்கின்ஸ் முகப்பு பெட்டியில் (Dashboard) பார்ககமுடியும். நிரல் வெற்றிகரமாக இயக்கப்பட்டதும் அதன் முடிவுகளை மின்னஞ்சல் வழியாகவும் சகலருக்கும் தெரிவித்துவிடுகிறது. ஏதாவது பிரச்னை ஏற்படடு, சுருண்டுகொண்டாலும் ஒட்டுமொத்த தகவல்களையும் முகப்பு பெட்டியிலேயே பார்த்துவிடமுடியும்.
ஜென்கின்ஸ் இயங்க ஜாவா வேண்டும். டிகாஷன் இருந்தால்தான் அது காபி. இல்லாவிட்டால் அது வெறும் பால். ஜாவா இல்லாமல் ஜென்கின்ஸ் இல்லை. ஏற்கனவே குறிப்பிட்டபடி எந்தவொரு இயங்குதளமாகவும் இருக்கலாம். நிரல்கள், எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதப்பட்டிருக்கலாம். குறைந்தபட்சம் 2 ஜிபி ராம் வேண்டும். நிரல்களை சேமித்து வைக்க, ஒரளவு இடமிருந்தால் போதும். வேறெதுவும் தேவையில்லை.
ஜென்கின்ஸை அதன் தளத்திலிருந்து தரவிறக்கிக்கொள்ளலாம். பின்னர் Tomcat சர்வரை தரவிறக்கி, நிறுவி கொள்ளுங்கள். ஜாவா உள்ள இடத்திற்கு போய், jenkins.war என்று தட்டினால், தானாகவே இயங்கி, நிறுவிவிடும். வலைச்சட்டகத்தை திறந்து, http://localhost:8080 தட்டினால், ஜென்கின்ஸ உங்களை வரவேற்கும்.
ஜென்கின்ஸை நம்முடைய தேவைக்கு தக்கப்படி மாற்றுவது முக்கியமான பணி. ஜென்கின் சம்பந்தப்பட்ட அனைத்து ஆணைகளும், நிரல்களும், தொகுப்பு பற்றிய விபரங்கள் XML கோப்பாக அதன் ஹோம் டைரக்டரியில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும். நிரல் தொகுப்பின் ஒட்டுமொத்த வரலாறும் இங்குதான் இருக்கும். தேவையான நிரல் தொகுப்பை நீக்க, புதியதை சேர்க்க வேண்டியிருககும். இதையெல்லாம் ஜென்கின்ஸ் முகப்பு பெட்டியில் செய்துவிடலாம். ஒவ்வொரு நிரல் தொகுப்பை இயங்குவதற்கு எடுத்துக்கொள்ளப்படும் நேரம், முடிவுகள், எதெல்லாம் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன என அனைத்து புள்ளி விபரங்களும் முகப்பு பெட்டியில் பார்க்கமுடியும். கண்ணைப் பறிக்கும் வரைபடங்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். எத்தனை நோடு, எந்த நோடில் எப்போது இயக்கலாம் என்பதையும் தீர்மானிக்க முடியும். சர்வர் நிரல் எழுதி, அங்கிருந்தே இயக்கி ஸ்தம்பிக்கவும் வைக்கலாம்.
இத்தகைய பணிகளைச் செய்ய ஏராளமான தொகுப்பாணைகள் (plugin) இலவசமாக கிடைக்கின்றன. பில்ட் ஹிஸ்டரி, செக் ஸ்டைல், கோட் அனாலிசிஸ், ஸ்டாடிக் அனாலிசிஸ் கலெக்டர், பைன்ட்பக் என ஏராளமானவை உண்டு. ஆனால், இவற்றையெல்லாம் தேடித் தேடித்தான் நிறுவ வேண்டியிருக்கும். ஒவ்வொன்றையும் தனித்தனியாக தரவிறக்கி, சோதிக்க வேண்டும். ஏதாவது தொகுப்பாணை மீது சந்தேகமிருந்தால் தயவு தாட்சண்யம் பார்க்காமல் நீக்கிவிடவேண்டும். தொகுப்பாணை என்னும் பெயரில் வலை விரித்துப் பிடிப்பது சகஜமான விஷயம். சரியானதை தேடிக் கண்டுபிடிப்பதில் கவனம் தேவை. வாழ்விலே ஒரு முறைதானே.. சலிக்காமல் செய்துவிடுங்கள். எல்லாம் முடிந்தபின்னர், http://localhost:8080/jenkins/restart தட்டினால் ஜென்கின்ஸ் ரெடி.
ஜென்கின்ஸ் பற்றிய ஐந்து நாள் பயிற்சி வகுப்பு அது. முதல் நாள், ஜென்கின்ஸ் பிறந்த கதை பேசி, ஜாவா, மாவென் என்றெல்லாம் அலைந்து மாலையில் ஜென்கின்ஸை தரவிறக்கி, நிறுவியாகியாகிவிட்டது. மறுநாள் முழுவதும் அதை இயக்கச் செய்வதிலேயே ஒட்டுமெர்த்த நேரமும் போனது. கட்டற்ற மென்பொருள் என்பதால் முறையான வழிகாட்டுதலோ, உதவிக்குறிப்புகளோ கிடையாது. ‘ஜென்கின்ஸை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் எப்படி செய்வது என்பதை மட்டும் என்னிடம் கேட்காதீர்கள். ஏனென்றால் எனக்குத் தெரியாது’ என்றார் பயற்சியாளர். உண்மைதான். தெரியாத கடலில் மூழ்கி முத்தெடுப்பதுதான் சவலான காரியம். ஆழமும், ஆபத்தும் தெரியாமல் ஆரம்பத்தில் எதுவும் பிடிபடாமல் போய்விடும். பித்து கூட பிடிக்கலாம். ஆனால், தேடலின் முடிவில் சர்வ நிச்சயமாக முத்து கிடைக்கும்.