Tuesday, May 02, 2017

அடாலஜ் படிக்கிணறு


வலம், மார்ச் 2017 இதழில் வெளியான கட்டுரை...


ஆழ் நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்...
கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி,
துருப்பிடித்தக் கட்டையோடு
உள் விழுந்த ராட்டினம்,
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்...

-நா. முத்துக்குமார்

வங்கக்கடலில் புயல் மையம் கொண்டால் மாயவரத்தில் மழை வரும். பெருமழைக் காலங்களில் கொல்லைப்புறத்துக் கிணறு மழை நீரால் நிரம்பி வழியும். இரும்புச் சகடையும் கயிறும் இல்லாமல் தண்ணீரை மொண்டு, தரையில் விடுவது மழைக்காலங்களில் எங்களுக்குப் பிடித்தமான மெகா விளையாட்டு. கோடைக்காலங்களில் கிணறு வேறுவிதமாகக் காட்சியளிக்கும். கிணற்றடியில் பல்லாங்குழி விளையாடுவது கோடையின் வெம்மையைக் குறைக்கும். கவிஞர் முத்துக்குமாரின் கவிதையைப்போல் தூர் வாருவது வருடாந்திர உற்சவம். முத்தாட்சியம்மன் கோயில் தெரு டவுசர் பையன்களுக்கு அம்பிகாவை போஸ்டரில் பார்ப்பதைவிடக் கிறங்கடிக்கும் இன்னொரு விஷயமும் உண்டு. தூர் வாரும் சட்டி மேலே தூக்கிக் கொண்டு வரும் விளையாட்டுப் பொருட்களை வேடிக்கை பார்ப்பதுதான்.

பின்னாளில் ஓமலூரில் நண்பர் வீட்டுத் தோட்டத்தில் பிரமாண்டமான கிணற்றைப் பார்க்க முடிந்தது. மாயவரத்துக் கிணறுகளைவிட நூறு மடங்கு பெரியதாக இருந்தது. கிணறுகளில் தண்ணீர் இருக்கவேண்டியது அவசியமில்லை என்பதை தர்மபுரி, செங்கல்பட்டு மாவட்டத்துக் கிணறுகளிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது. படிக்கட்டு வசதியெல்லாம் இருந்தும், கிணற்றின் பிரமாண்டம் பயமுறுத்தியதால் உள்ளே இறங்குவதற்குத் தைரியமில்லை.

கிணறுகள், எண்பதுகளோடு இறந்து போய்விட்ட ஒரு பொற்காலத்தின் மிச்சம். அப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தேன், குஜராத் செல்லும் வரை.
குர்ஜரி யாத்ரா என்று பெயரிட்டிருந்தாலும் நதியைத் தேடி ஒரு நெடும்பயணம் (ஜனவரி 2014ல் சென்ற பயணம்) என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். தமிழ்ப் பாரம்பரியக் குழுவின் சார்பில் சிந்துச் சமவெளி நாகரிகத்தின் நகரங்களான தோலவீரா, லோத்தல் போன்ற இடங்களில் உள்ள நீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு முறைகளைப் பற்றி அறிந்து கொள்வதுதான் பயணத்தின் நோக்கம்.

டெல்டாவில் கிணறுகள் இருப்பதும், அதில் 365 நாட்களும் போதுமான தண்ணீர் இருப்பதும் ஆச்சரியமான விஷயமல்ல. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை நிறத்தையே பார்க்கமுடியாத ஒரு உப்புப் பாலைவனமான கட்ச் வளைகுடாவில் நூற்றுக்கணக்கான கிணறுகள் உண்டு என்கிற செய்திதான் ஆச்சரியமளித்தது.

5ம் நூற்றாண்டு தொடங்கி 15 ம் நூற்றாண்டு வரை கட்ச் வளைகுடாவை உள்ளடக்கிய குஜராத்தில் படிக்கிணறுகளே பிரதான நீர் ஆதாரமாக இருந்திருக்கின்றன. லோத்தல், தோலவீரா செல்வதற்கு முன்னர், மழை நீர் சேகரிப்பில் முக்கியமானதாகவும் குஜராத்தின் கலை, கலாசார அங்கமாகவும் உள்ள படிக்கிணறுகளைப் பார்வையிட முடிவு செய்திருந்தோம்.
குஜராத் படிக்கிணறுகளில் முக்கியமானது ராணி கி வாவ். ஆனால், ராணி கி வாவின் பிரமாண்டத்தை உள்வாங்கிக்கொள்வதற்கு முன்னர் அதைவிட அளவில் சிறியதும், நீண்ட காலமாக அறியப்பட்டதுமான ஓர் இடத்தை முதலில் பார்த்தாகவேண்டும். அதுதான் அடாலஜ்.

அகமதாபாத்திலிருந்து அரைமணி நேரப் பயணம். புதிதாகக் கட்டப்பட்டுள்ள நர்மதா கால்வாயைக் கடந்து, காந்தி நகர் சாலையில் பயணித்தால் அடாலஜ் என்னும் கிராமத்திற்கு வந்துவிடலாம். தொலைவிலிருந்து பார்க்கும்போது நாயக்கர் காலத்து மண்டபங்களை ஞாபகப்படுத்தும். அருகே செல்லும்போதுதான் ஓர் அற்புதத்தின் தரிசனம் நிகழும்.
ஐந்து அடுக்கு மாடிகளைப் போல், ஐந்து அடுக்கு தரைத்தளங்களைக் கொண்டிருக்கிறது அடாலஜ் படிக்கிணறு. படிப்படியாக இறங்கிச்சென்று தண்ணீர் எடுக்கும்படியான அமைப்பு. ஒவ்வொரு தளத்திலும் காணப்படும் சிற்பம் மற்றும் தூண் வேலைப்பாடுகள் கண்களைக் கவருகின்றன. கடைசி படிக்கட்டில் நின்று, அடாலஜின் உயரத்தைப் பார்க்கும்போது அதன் பிரமாண்டம் புரியும்.

ஓர் அரிய கலைப் பொக்கிஷத்தைத் தரையில் புதைத்துப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஒரு வழிபாட்டுக்குரிய கோவிலுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைவிடப் பலமடங்கு அதிக முக்கியத்துவம், சாமானியர்கள் புழங்கும் கிணற்றுக்குக் கொடுத்திருப்பதன் உயர்வான எண்ணத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

குஜராத் வரலாற்றுப் புத்தகத்தில் அடாலஜ் படிக்கிணறுக்கு சர்வ நிச்சயமாக ஒரு பக்கம் உண்டு. வகேலாவின் மன்னனாக இருந்த வீரசிம்மாவின் மனைவி ராணி ரூடாபாய், தன்னுடைய கணவனின் நினைவாகக் கட்டி முடித்ததுதான் இந்தப் படிக்கிணறு. அடாலஜ் என்றால் ‘சொர்க்கத்தின் ஆறு’ என்று அர்த்தம்.
11ம் நூற்றாண்டில் வீரசிம்மாவில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, ரூடாபாயால் வெற்றிகரமாகக் கட்டி முடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. மொத்த செலவு 7 லட்சம் டான்கஸ். (டான்கஸ் – இஸ்லாமிய ஆட்சியில் கூலி. 7 லட்சம் டான்கஸ் என்பது தோராயமாக ஐந்து லட்ச ரூபாய்க்குக் கூடுதலாக மதிப்புடையது.) அடாலஜின் முதல் தளத்தின் இரண்டாவது அடுக்கில் தென்படும் கிழக்கு நோக்கிய கல்வெட்டு வரலாற்றுக்குச் சாட்சியாக இருக்கிறது. சம்ஸ்கிருதத்தில்,தேவநகரி பாணியில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டு, ரூடாபாய் பற்றிக் குறிப்பிடுகிறது.

குஜராத்தின் பெரும்பாலான பகுதிகள் முஸ்லிம்களால் ஆளப்பட்டபோது, வகேலா மட்டும் தனித்து ஆளப்பட்டு வந்திருக்கிறது. சுல்தான் மெஸ்முத் பெகடா மற்றும் வீரசிம்மாவுக்கு இடையேயான யுத்தத்தில் வீரசிம்மா கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. வீரசிம்மாவின் மறைவுக்குப் பின்னர் சுல்தான், ரூடாபாய் தன்னை மணந்துகொள்ளக் கட்டாயப்படுத்தினான். ரூடாபாயும் சம்மதித்தாள். அதற்கு முன்னதாக, வீரசிம்மாவால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறாமல் இருந்த அடாலஜ் படிக்கிணற்றைக் கட்டி முடித்த பின்னரே திருமணம் செய்து கொள்ளமுடியும் என்று நிபந்தனை விதிக்கிறாள். சுல்தானும் ஒப்புக்கொள்கிறான்.

திட்டமிட்டபடி, படிக்கிணறு கட்டி முடிக்கப்படுகிறது. இந்து / முஸ்லிம் கட்டடக்கலையின் சிறப்பம்சங்களை உள்வாங்கிக்கொண்டு அடாலஜ், முக்கியமான கலாசாரச் சின்னமாக எழுப்பப்பட்டது. ரூடாபாய் அதில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக நம்பப்படுகிறது. அப்படியெல்லாம் இல்லை என்று மறுக்கிறது இன்னொரு தரப்பு.

குஜராத் போன்ற வறண்ட மாநிலங்களில் மழை நீரைச் சேமிக்கவும், சேமித்ததைக் குடிப்பதற்குப் பயன்படுத்தவும் படிக்கிணறுகள்தான் உதவியிருக்கின்றன. அரச குடும்பத்தினர் மட்டுமல்ல, சாதாரணக் குடியானவர்களும் குடிநீர்த் தேவைகளுக்குப் படிக்கிணற்றையே நம்பியிருந்தார்கள். தண்ணீர்த் தேவைக்காக மட்டுமல்லாமல் மக்கள் கூடும் இடமாகவும், வழிபாட்டு இடமாகவும், பயணம் மேற்கொள்பவர்கள் தங்குமிடமாகவும் இருந்திருக்கிறது படிக்கிணறு.

பெரு மழைக்காலங்களில் கிணறு நிரம்பி, முதல் தளத்திலேயே தண்ணீர் எடுத்துக்கொள்ள முடிந்திருக்கிறது. தண்ணீர் குறையும்போது, அடுத்தடுத்த தளங்களுக்கு இறங்கிச்சென்றாக வேண்டும். 16ம் நூற்றாண்டு வரை, இப்பகுதியில் 700 படிக்கிணறுகள் இருந்திருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட படிக்கிணறுகள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன. இன்னும் சில படிக்கிணறுகள் வழிபாட்டு இடங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.
தெற்கு வடக்காக நீண்டிருக்கும் அடாலஜ் படிக்கிணற்றை நாம் மூன்று வழிகளில் அணுக முடியும். தென்புறம் உள்ள மூன்று நுழைவாயில்கள் ஏதேனும் ஒன்றின் வழியாக உள்ளே நுழைந்து, ஒவ்வொரு தளமாக இறங்கி, படிகளைக் கடந்தால், முடிவில் கிணற்றை அடைந்துவிடலாம். படிக்கிணற்றின் மொத்த நீளம் 75.3 மீட்டர். அகலம் 10 மீட்டர் இருக்கலாம்.
நுழைவாயில் எண்கோண வடிவைப் பெற்றிருக்கிறது. மூன்று நுழைவாயில்களையும் இணைக்கும் மண்டபமாக இருக்கிறது. எண்கோண வடிவிலான தளத்தை, 16 தூண்களும் தாங்கி நிற்கின்றன.
நுழைவாயிலின் கிழக்கிலும் மேற்கிலும் S வடிவ மாடம் உண்டு. மாடத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் இலை மற்றும் சுருள் வடிவப் பட்டைகளால் நிரப்பப்பட்டுள்ளன. பெரிய பட்டை வடிவ உத்தரங்களில் விலங்குகளே பிரதானமாகத் தென்படுகின்றன. சண்டையிடும் யானை, குதிரையை அடக்கும் மனிதன் என விதவிதமான பாணிகளில் சிற்பங்களைப் பார்க்கமுடிகிறது.

நுழைவாயிலைத் தாண்டி வந்தால் அடுத்தடுத்து இரண்டு தளங்களைப் பார்க்கமுடியும். குடா என்னும் தளங்களைச் சிறிதும் பெரிதுமான தூண்கள் தாங்கிப் பிடிக்கின்றன. முதலிரண்டு கூடங்களில் தூண்கள் மூன்று வரிசைகளில் காணப்படுகின்றன. மூன்றாவது கூடமான இறுதிக்கட்டத்தில் தூண்கள் நான்கு வரிசைகளில் அமைந்துள்ளன.
 தூண்களின் அடித்தளம் சிறியதாக இருந்தாலும், மேல்நோக்கி நீளும்போது வேலைப்பாட்டுடன் கூடிய பெரிய தூண்களாகக் காட்சியளிக்கின்றன. தொங்கும் இலை அல்லது கழுத்தில் தொங்கும் மணிமாலை போன்ற வேலைப்பாடுகளுடன் சின்னஞ்சிறிய வளைவுகளும் முன்வரிசைத் தூண்களில் குறிப்பிடும்படியாக உள்ளன.

ஒவ்வொரு தளத்தின் முகப்பிலும், சிற்பங்களின் தொகுதியைப் பார்க்கமுடியும். இரண்டாவது தளத்தின் கிழக்குப்பகுதியில் நவக்கிரகங்களைப் பார்க்கலாம். இருபுறமும் பணியாள் சகிதம் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அரசன், தயிர் கடையும் மனிதன், பைரவர், நடனமாடுபவர்கள், இசை விற்பன்னர்கள், நுழைவாயிலில் பார்த்தது போல் யானை, குதிரை, கஜ சர்டுலா, சக்தி வடிவங்கள், நாணயங்கள், கீர்த்தி முகங்களுக்கும் குறைச்சலில்லை.

ஒவ்வொரு தளத்திற்கு மேலும் ஒரு மேல்தளம் உண்டு. அவற்றை ஒரே அளவிலான உயரங்கள் கொண்ட தூண்கள் தாங்கிப்பிடிக்கின்றன. மேல்தளத்திற்குச் செல்ல சரியான வழியில்லை. ஒரு பாதம் அளவு சுற்றுப்பட்டை மீது கால் வைத்துத்தான் மேல்தளத்திற்குச் செல்லமுடியும்.
மேல்தளத்தின் இருபுறமும் அலங்காரமான மாடங்கள் உண்டு. பெரிய அளவிலான சிற்பங்கள் நல்ல வேலைப்பாட்டுடன் கூடிய மாடத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இறைவடிவங்கள், குறிப்பாகச் சக்தி வடிவங்கள் தென்படுகின்றன. குஜராத் முழுவதும் சக்தி வடிவங்களைப் பார்க்கமுடியும். சிங்கம், குதிரை போன்ற சக்தியின் வாகனங்களும் சக்தி வடிவங்களாகப் போற்றப்படுகின்றன.

ஒரு சிங்கம் தன்னுடைய முதுகில் திரிசூலத்தைச் சுமந்து செல்கிறது. இன்னொரு மாடத்தில் வெறும் சிங்கத்தை மட்டும் பார்க்கமுடியும். பாய்ந்து செல்லத் தயாராக நிற்கும் குதிரையைச் சுற்றிப் பூக்களும், நாணயங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

மூன்று குடங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு மூன்று வரிசைகளில் வைக்கப்பட்டுள்ளன. 9 குடும்பங்கள் உள்ளடக்கிய இந்த அமைப்பும் ஒரு சக்தி வடிவமாகக் கருதப்படுகிறது. இன்னொரு மாடத்தில் மூன்று சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட ஒரு குடம் தொங்கிக்கொண்டிருக்கிறது. இலைகளும், அதன் காம்புகளும் இணைந்த ஒரு புதுவிதமான வடிவத்தை இன்னொரு இடத்தில் பார்க்கமுடிந்தது.

அடாலஜ் படிக்கிணற்றின் முக்கியமான அம்சம், கடைசிப் பகுதியான எண்கோண வடிவ அமைப்புதான். 9 மீட்டர் அளவுள்ள சதுரங்கள் இணைந்து ஒரு எண்கோண வடிவை ஏற்படுத்துகின்றன. அவற்றை 12 தூண்கள் தாங்கிப் பிடிக்கின்றன. ராஜசேனகா, வேதிகா, அசனபட்டா, காக்சாசனா என நான்கு தளங்கள் இணைந்து, இப்படியொரு உருளை போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன.

கிணற்றின் விட்டம் 7 மீட்டர். கீழிருந்து மேலே பார்க்கமுடியும். மேலிருந்து கீழே பார்க்கத் தற்போது அனுமதி இல்லை. கிணற்றில் உள்ள ஒவ்வொரு தளத்திலும் ஒரு சிற்பம் செதுக்கப்பட்டிருக்கிறது. அவற்றைச் சுற்றி வேலைப்பாடுகள் கொண்ட பட்டையும் காணப்படுகிறது.
நீர், ஆவியாகிவிடுவதைத் தடுப்பதற்கே இப்படிச் சிக்கலான அடுக்குத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. 6 டிகிரி சாய்வில் உள்ள எண்கோண அமைப்பின் ஊடாகச் சூரிய ஒளியானது ஒரு நாளில் அதிகபட்சமாக ஆறு நிமிடங்களே ஊடுருவ முடியும்.

 ஒவ்வொரு உத்திரத்தின் மையப்பகுதியிலும் நிறையச் சிறு உருவ அமைப்புகளைப் படிக்கிணறு முழுவதும் காண முடியும். புகைப்படத்துக்குள் உள்ள ஓவியம் போல் சற்று சதுர வடிவமான அமைப்பில் உட்கார வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பிள்ளையார், ஹனுமான் தவிர அதிகமாக நம்மைக் கவருவது கீர்த்திமுகம்தான்.

யானைகளின் சிற்பத் தொகுதி, நல்ல வேலைப்பாட்டுடன் உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான யானைகள் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. மரங்களைப் பிடுங்கி, தும்பிக்கையில் ஏந்தியபடி நிற்கின்றன. சில இடங்களில் யானைகள் போர்க்கள ஆடை அணிந்து, போருக்குத் தயாராக மிடுக்குடன் தென்படுகின்றன.

விலங்குகளின் தொகுதியில் ஒரு சில விசித்திரமான விலங்குகளும் உண்டு. பாதி யானை, பாதி சிங்கம், நடுவே மனிதன். தன்னுடைய கூரிய அலகுகளால் இலைகளைப் பறித்துக்கொண்டிருக்கும் கொக்குகள். மழைக்காலங்களில் கிணறு நிறைந்து தண்ணீரின் அளவு உத்திரத்தை எட்டும்போது மண்ணாலான கொக்குகள், நிஜமான தண்ணீரில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும்.
கட்ச் வளைகுடாவில் கோடைக்கு மறுபெயர் கொடுமை. இமயமலையின் பனி போல், கட்ச் பகுதியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெள்ளை நிற உப்பளங்களை மட்டுமே பார்க்கமுடியும். கிணறுகள், கட்ச் வளைகுடா பகுதியின் முக்கியமான நீர் ஆதாரமாகத் தொடர்ந்து இருந்து வருகின்றன. அந்த வகையில் படிக்கிணறுகளை வழிபாட்டுக்குரிய இடங்களாகக் கருதுவதில் எந்தத் தவறுமில்லை.

இனி, ஓ காதல் கண்மணி. அடாலஜின் மேல்தளத்திலிருந்து கல்லெறியும் நாயகனை, தரைத்தளத்திலிருந்து நாயகி நிமிர்ந்து பார்ப்பதை க்ளோஸ்-அப் காட்சியாக காமிரா விழுங்குகிறது. மணிரத்னத்தின் மற்ற படங்களில் வருவது போலவே, மும்பையிலிருந்து அடாலஜ் வரை துரத்தி வரும் நாயகன், சற்றும் சம்பந்தமில்லாத இடத்தில் காதலைத் தெரிவிக்கிறான். அடலாஜ் வரை வந்துவிட்டு, ஒரே ஒரு காட்சி மட்டுமே வைத்த பி.சி.ஸ்ரீராம் மீது கோபம்தான் வருகிறது. அடாலஜை மட்டுமல்ல, ஒட்டுமொத்த குஜராத்தையும் பி.சி.ஸ்ரீராமின் காமிரா போல் ஒரேவிதமாகத்தான் பார்க்கிறார்கள். அப்படித்தான் பழக்கப்பட்டிருக்கிறோம்.

http://www.valamonline.in/2017/03/blog-post_44.html

குருவை மிஞ்சிய சிஷ்யை

வலம், ஜனவரி 2017 இதழில் எழுதிய கட்டுரை...


அலுமினிய அண்டாவை ஒற்றை ஆளாக நகர்த்தி வைத்துவிட்டு, வகுப்புக்கு வந்தார் சந்திரா என்னும் சத்துணவு டீச்சர். ‘இன்னிக்கு நாம படிக்கப்போற அதிகாரம், கள்ளாமை. அப்படீன்னா என்ன தெரியுமா?’
அது 1984. பள்ளிக்கூடத்து நாட்கள் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் மதிய உணவு முடிந்ததும் திருக்குறள் வகுப்பு ஆரம்பமாகிவிடும். ‘வாரம் ஒரு அதிகாரம் சொல்லிக்குடுக்கணும்னு ஜெயலலிதா உத்தரவு போட்டிருக்கா’ என்று சத்துணவு டீச்சர், கிளாஸ் டீச்சரிடம் பேசிக்கொண்டிருந்தார். தமிழ்நாடெங்கும் சத்துணவுக் கூடங்களுக்கு ஜெயலலிதா மேற்கொண்ட அதிரடி விசிட் அப்போது பரபரப்பான விஷயமாகப் பேசப்பட்டது.

சத்துணவுத் திட்டக்குழு உறுப்பினராக ஜெயலலிதாவின் அனுபவங்களே, பின்னாளில் 'அம்மா உணவகம்' வரை வரக் காரணமாக இருந்திருக்கவேண்டும். 1980 இறுதியில் எம்ஜிஆரின் நெருக்கமான வட்டாரத்துக்குள் வந்துவிட்டாலும், அதிகாரபூர்வமாக அதிமுகவில் சேர சத்துணவுத் திட்டமே காரணமாக இருந்தது. காமராஜர் காலத்திலிருந்து செயல்பட்டு வந்த திட்டம், எம்ஜிஆரால் தூசு தட்டப்பட்டு, 100 கோடி ரூபாய் செலவில் இன்னும் பல மாணவர்களைச் சென்றடையும்படி மாற்றப்பட்டிருந்தது. தமிழ் சினிமாவினர் அதை மக்களிடம் கொண்டு சென்றார்கள். பள்ளிக் குழந்தைகளுக்கான சத்துணவைக் கடத்திக்கொண்டு போகும் லாரி டிரைவரை வழிமறித்து சினிமாவில் உதைத்துக் கொண்டிருந்தார் பாக்யராஜ். சத்துணவு சாப்பிட்டால் கண்பார்வை கிடைக்கிறது, காது கேட்கிறது என்றெல்லாம் சினிமா மேடைகளில் பேசினார் பாரதிராஜா. எம்ஜிஆர் அரசுக்குப் போதுமான விளம்பரம் கிடைத்தது. ஆனால், செயல்பாடு?

சத்துணவுத் திட்டத்தின் தூணாக இருந்தவர் ஜெயலலிதா. திட்டத்திற்கான நிதிஒதுக்கீடு செய்வதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருந்தன. டெல்லியின் ஏராளமான கேள்விகளை ஜெயலலிதாதான் எதிர்கொண்டார். காமராஜர் கொண்டுவந்த திட்டம்தானே, இதிலென்ன புதுமை என்று கிண்டலடித்தது திமுக. சத்துணவுத் திட்டத்தை பித்தலாட்டம் என்றார் கம்யூனிஸ்ட் கல்யாண சுந்தரம். அரிசி போதவில்லை என்று எம்ஜிஆர் டெல்லியிடம் முறையிட்டபோது, சத்துணவுத் திட்டத்தின் மூலம் அரிசியை வீணாக்குகிறார்கள் என்றது காங்கிரஸ். எல்லாவற்றையும் சமாளித்தது ஜெயலலிதாதான்.

அதிமுக பேச்சாளர்களுக்கு, சத்துணவுத் திட்டம் குறித்துப் பயிலரங்கு நடத்தினார். பள்ளி ஆசிரியர்களால் நடத்தப்பட்டு வந்த சத்துணவுத் திட்டத்தில் இருந்த குளறுபடிகளை நீக்கி, ஒவ்வொரு பள்ளி வளாகத்திலும் சத்துணவு மையத்தை அமைத்தார். சத்துணவு டீச்சர் பொறுப்பேற்றுக் கொண்டார். தனி கட்டடம், பாத்திரங்கள், பண்டங்கள், ஆயாக்கள், அரிசி, பருப்பு என அதுவொரு தனி அமைப்பாக மாறியது. அடுத்த கட்டமாக, பாலர் பள்ளி உருவானது. கர்ப்பிணிகளுக்கும் முதியோர்களுக்கும் மதிய உணவு இலவசமாக இங்கிருந்து தரப்பட்டது. திருக்குறள் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. பின்னாளில், ஜெயலலிதா முதல்முறையாக முதல்வரானபோது சத்துணவு ஊழியர்கள், அரசு ஊழியர்களாக்கப்பட்டார்கள். சத்துணவுக் கூடங்கள், பள்ளிக் கூடங்களுக்கு இணையான எழுச்சியைப் பெற்றன.

ஜெயலலிதா என்னும் அதிரடி ஆட்டக்காரர் ஆடிய வெற்றிகரமான முதல் ஆட்டம் அது. அரசியலோடு அரசு நிர்வாகமும் அவருக்குப் பழக்கப்பட்டிருந்தது. அரசியல், அவருக்குக் கனவாகக் கூட இருந்ததில்லை. 1974ல் திரையுலகத்திலிருந்து காணாமல் போன ஜெயலலிதா, ஐந்தாண்டுகள் கழித்து எழுத்தாளராகத்தான் அறிமுகமானார். துக்ளக்கில் வாராவாரம் தொடர் கட்டுரைகள் எழுதினார். அதிலும் அதிரடிதான்.

ஜெயப்பிரகாஷ் நாராயணன் மறைவுக்கு நாள் முழுவதும் ரேடியாவில் சோக கீதம் இசைக்கப்பட்டது. இதெல்லாம் போலித்தனமான அஞ்சலிகள் என்று எழுதினார். ‘மதுவிலக்கைப் பொருத்தவரை எம்ஜிஆரும் கருணாநிதியும் ஒன்றுதான். ஆட்சியில் இல்லாதவரை மதுவிலக்கு வேண்டுமென்பார்கள். ஆட்சிக்கு வந்ததும் மறந்துவிடுவார்கள்’ என்று விமர்சித்தார். இந்திய மருத்துவர்களின் அலட்சியப் போக்கிற்குத் தரப்படவேண்டிய தண்டனை, ஜோசியத்தின் மீது கொள்ள வேண்டிய நம்பிக்கைகள் எனப் பொதுப்புத்தி தாண்டிய விஷயங்களை எழுதியவர், கடைசிவரை சினிமா பற்றி எழுதவேயில்லை.

முழுநேர எழுத்தாளராவது என்கிற முடிவில் ஜெயலலிதா இருந்திருக்கலாம். கலைஞருக்கு குங்குமம் போல், எம்ஜிஆருக்கும் ஒன்று ஆரம்பித்தாகவேண்டும் என்பது வலம்புரிஜானின் விருப்பம். ‘தாய்’ பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டது, வலம்புரிஜான் ஆசிரியரானார். ‘எனக்குப் பிடித்தவை’ என்னும் தலைப்பில் ஜெயலலிதா நிறைய கட்டுரைகள் எழுதினார். வலம்புரிஜானுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையேயான முட்டல், மோதல்களில் சிக்கிக்கொண்ட எம்ஜிஆருக்கு வேறு வழி தெரியவில்லை. ‘தாய்’ நிறுத்தப்பட்டது.

தமிழ்நாடெங்கும் ஒவ்வொரு ஊராகச் சென்று அதிமுக கொடியை ஏற்றி வைத்த நாஞ்சில் மனோகரன் போன்ற உற்சவர்கள் கட்சியை விட்டு விலகியிருந்த காலம் அது. இந்திரா காந்தியே முன்வந்து தஞ்சாவூரில் போட்டியிட விருப்பம் தெரிவித்தபோதும், மெரார்ஜி தேசாய்க்குப் பயந்து எம்ஜிஆர் நழுவினார். கோபம் கொண்ட இந்திரா, திமுகவுடன் கூட்டணி அமைத்து, டெல்லி கோட்டைக்குச் சென்றார். உள்ளூர் அரசியல் முதல் டெல்லி அரசியல் வரை சுழலில் மாட்டிக்கொண்ட எம்ஜிஆருக்கு, சுறுசுறுப்பான இரண்டாம் கட்டத் தலைவர்கள் தேவைப்பட்டார்கள்.
ஜெயலலிதாவின் எழுத்தில் இருந்த துணிச்சலையும், அதில் தொனிக்கும் சாமானியனின் குரலையும் எம்ஜிஆர் புரிந்துகொண்டார்.

ஜெயலலிதா பேச்சாளராக்கப்பட்டார். கட்சிக்கு மட்டுமல்ல, கழக வரலாற்றிலும் அதுவொரு முக்கியமான திருப்பம். அதுவரை கழக மேடைகள் அடுக்குமொழி வசனங்களைப் பேசும், அலங்கார இடமாகவே இருந்து வந்தன. சினிமா நட்சத்திரங்கள், குறிப்பாக நடிகைகள் முன்னிறுத்தப்பட்டதில்லை. எம்ஜிஆர் அதை மாற்றியமைத்தார்.

ஜெயலலிதா, தலைமையுரை மட்டுமல்ல, சில மேடைகளில் அவரே ஒரே பேச்சாளராகவும் ஆனார். அவரது பேச்சுகளில் கருணாநிதி எதிர்ப்பு பிரதானமாக இருந்தாலும், தேசிய அரசியலையும் தொட்டுக்காட்டினார். வழக்கமான அரசியல் மேடைப்பேச்சுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. அடுக்குமொழி வசனங்கள் இல்லை. சிலேடையும் இல்லை. பாமர மக்களின் மனதுதான் அவரது இலக்கு. ‘கிருஷ்ணா நதிநீரை தமிழ்நாட்டுக்கு கெண்டு வர நம்முடைய முதல்வர் ஆந்திர முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு இரவு திரும்புவார். விடிந்தால் வேறொரு முதல்வர் இருப்பார். அவரோடும் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திரும்பி வருவார். மறுநாள் வேறொருவர் ஆந்திர முதல்வராக இருப்பார். நம் முதல்வர் என்னதான் செய்வார் பாவம்!’ என்றார். கிண்டல், குத்தல், ஆவேசம், அதுதான் ஜெயலலிதா.

நம்பர் டூவாக இருந்தாலும், அவ்வப்போது கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு அவமானங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. படுதோல்வி அடையும் என்று கணிக்கப்பட்டபோதும், 1984ல்அதிமுக பெற்ற பெருவெற்றிக்கு காரணமாக இருந்தது ஜெயலலிதாவின் அதிரடி பிரசாரம்தான். எம்ஜிஆர் அமெரிக்காவிலிருந்து திரும்பியபோது, மீனம்பாக்கம் விமானநிலையத்தில் அவரை தூரமாக நின்று கூடப் பார்க்க முடியாத ஏமாற்றத்தோடும், எதிர்காலம் பற்றிய கவலைகளோடும் போயஸ்கார்டனுக்கு திரும்பிய அதே ஜெயலலிதா, பின்னாளில் நான்கு முறை அதிமுக ஆட்சியில் ஏறுவதற்குக் காரணமாக இருந்தார்.

ஜெயலலிதாவின் துணிச்சலும் தன்னம்பிக்கையும், அவரது அரசியல் எதிரிகளாலும் வியக்கப்பட்ட விஷயம். தன்னுடைய படங்களைப் பற்றி, கடுமையாக விமர்சனம் செய்த ஒரே சினிமாக்காரர் அவராகத்தான் இருக்க முடியும். அதையும் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது செய்தவர். ஜெயலலிதா நடிக்க வருவதற்கு முன்பு படப்பிடிப்பு தளங்களில் நடிகைகளின் சுயமரியாதை கெட்டுக்கிடந்தது. படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் கால்மேல் போட்டபடி புத்தகம் படித்த ஜெயலலிதாவின் கலகக்குரல், அறுபதுகளின் தமிழ்ச் சமூகத்திற்கு அவசியம் தேவைப்பட்டது.

சினிமா மட்டுமல்ல, சினிமாவுக்குப் பின்னணியில் உள்ள விஷயங்களையும் பொதுவெளியில் விமர்சிக்க அவர் தயங்கியதேயில்லை. இந்தி சினிமா நாயகர்களுக்கும், தமிழ் சினிமா நாயகர்களுக்கும் உள்ள வித்தியாசம் பற்றி ஜெயலலிதாவிடம் கேட்கப்பட்டது. சட்டென்று பதில் சொன்னார், ‘ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் உள்ள வித்தியாசம். அவ்வளவுதான்.’ எம்ஜிஆர் மட்டுமல்ல, என்.டி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமனோடு நடித்துக்கொண்டிருந்த காலத்திலும் தன்னுடைய தனித்தன்மையை நிரூபித்தவர். 1964 தொடங்கி பத்து ஆண்டுகள் நடித்திருந்தாலும் 100 நாட்கள் ஓடிய 4 படங்களும், 3 வெள்ளி விழா படங்களில் மட்டுமே சம்பந்தப்பட்டிருந்தார். ஆண்டுக்கு சராசரியாக 15 படங்கள் நடித்தாலும், அவர் சினிமாவில் உச்சத்தில் இருந்த காலம்வெறும் 6 ஆண்டுகள் மட்டுமே.

1972 மே மாதம், வேதா நிலைய கிரஹப்பிரவேசம். சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோது கட்ட ஆரம்பித்த வீடு. திரையுலகம் திரண்டு வந்து வாழ்த்தியது. வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட எம்ஜிஆர், கடைசிவரை வரவேயில்லை. பிற்பகலுக்குப் பின்னர் வீடே வெறிச்சோடி கிடந்தது. ஜெயலலிதாவின் அம்மா சந்தியா பார்த்துப் பார்த்து கட்டிய வீடு. ஆனால், வீடு கட்டி முடிவதற்குள் சந்தியாவின் வாழ்க்கை முடிந்துவிட்டது. ஜெயலலிதா இப்போது ஒரு தனி ஆள்.

அடுத்து வந்த இருபதாண்டுகள், புயலில் சிக்கிய தோணியாக இருந்தது ஜெயலலிதாவின் வாழ்க்கை. அவரது வாழ்க்கைப் பாடத்தின் முக்கியமான அத்தியாயங்கள் இக்காலகட்டத்தில்தான் புதைந்து கிடக்கின்றன. அவற்றை முழுவதுமாக வெளிக்கொண்டுவர அவர் ஒருவரால் மட்டுமே முடியும்.
திட்டமிட்டு ஒதுக்கப்பட்டாலும், கட்சித்தொண்டர்கள் அவரது பக்கம்தான் இருந்தார்கள். கருணாநிதி எதிர்ப்பு என்பதைப் பரிபூரணமாக அவரால் மட்டுமே முன்னெடுக்க முடிந்தது. உதிர்ந்த ரோமங்கள் என்று விமர்சித்தாலும், அவரைத் தேடி வந்தார்கள். தலைவியாக ஏற்றுக்கொண்டார்கள். சுற்றி கூட்டம் கூடி நின்றாலும், மனதளவில் அவர் தனிமையின் சிறையில் இருந்தார்.

எழுபதுகள் தொடங்கி, மாநில சுயாட்சி பற்றி திமுக பேசாத கூட்டங்கள் இல்லை. காங்கிரஸுடன் கூட்டணியில் இல்லாத காலங்களில் திமுகவும், அதிமுகவும் அவ்வப்போது பேசுவதுண்டு. மாநில உரிமைகள் குறித்து ஒவ்வொரு முறையும் ஜெயலலிதாவிடமிருந்து உரத்த குரல்களே எழுந்தன. அது டெல்லியைக் கிடுகிடுக்க வைத்து, சென்னையை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தது. ஆணாதிக்க அரசியல் உலகில், ஆண்களைக் குனிய வைத்து, தரையில் விழுந்து வணங்க வைத்தது விமர்சிக்கப்பட்டது. கேலிக்கூத்தாக்கப்பட்டது. காலப்போக்கில் பார்வை மாறியிருக்கிறது. கருணாநிதியை விட ஜெயலலிதாவை அதிகமாக விமர்சித்த எழுத்தாளர் வாஸந்தி, ‘அதுவொரு உத்தி. ஆண்களைச் சற்று எட்ட நிறுத்தவேண்டிய அவசியம் இருந்தது. ஆண் உலகம் அவரை அவமானப்படுத்தியதற்கான பரிகாரம் அது‘ என்கிறார்.

தமிழ்நாட்டு அரசியல் வானில், முரண்பாடுகளின் மொத்த உருவமாக ஜெயலலிதா இருந்தார். அவரது முன்கோபம், கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கலைத்துப்போட்டது. புதிய அரசியல் சமன்பாடுகளை ஆரம்பித்து வைத்தது. முன்னுப்பின் முரணான அரசியல் நடத்தினாலும் அதை உறுதியுடன் நடத்துவதில் வெற்றி பெற்றிருந்தார். தமிழ் ஈழம், பாஜகவுடன் கூட்டணி போன்ற விஷயங்களில் அவரது உண்மையான நிலைப்பாடு அவருக்கு மட்டுமே தெரிந்த விஷயம். அவரது பிடிவாத குணமும், அசட்டுத்துணிச்சலும் ஆயிரம் விமர்சனங்களை ஏற்படுத்தினாலும் ஆரோக்கியமான வழியையும் திறந்துவிட்டிருந்தது. யாரும் எதிர்க்கத் துணியாத நேரத்தில் விடுதலைப்புலிகளை எதிர்த்தார். சட்டம், ஒழுங்கைத் தொலைத்து, ஆயுதக் கலாசாரத்தில் மூழ்கிக்கொண்டிருந்த தமிழகத்தை மீட்டெடுத்தார். எம்ஜிஆரால் நிகழ்த்தவே முடியாத சாதனை.

ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பின்னரும் ஜெயலலிதா மாறிப்போனார் என்பதை யாரும் நம்பத் தயாராக இல்லை. ஆனால், ஒரு சில விஷயங்களில் அவர் மாறாமல் இருந்தது, தமிழ்நாட்டிற்குக் கிடைத்த வரம். குறிப்பா பெண்கள் நலனும், பசித்தவர்களுக்கு சோறிடும் ஒவ்வொரு திட்டங்களும், தொண்ணுறுகள் தொடங்கி அவர் கைக்கொண்டவை. தொட்டில் குழந்தைகள் திட்டம் தொடங்கி, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு திட்ட நிதியுதவி வரை பெண்கள் நலனுக்கான திட்டங்களை வேறெந்த முதல்வர்களும் முன்னெடுத்ததில்லை. அவரது ஆட்சியில்தான் மதிய உணவுத் திட்டம், காலை உணவுத்திட்டமாகவும் விரிவுபெற்றது. வழிபாட்டுத் தலங்களில் நாள்தோறும் அன்னதானம் ஆரம்பமானது. இனம், மதம், மொழி பேதமின்றி பசி தீர்க்கும் அம்மா உணவகங்களை ஏற்படுத்தியது கடைசிக்காலங்களில் அவர் செய்த பெரும் சாதனை.

ஜெயலலிதாவே சொல்வது போல் வாரிசாக வருவதற்கான எந்தப் பாதையையும் எம்ஜிஆர் உருவாக்கித் தரவில்லை. அரசியலுக்கு அழைத்து வந்தாலும், அந்தப் பாதையை அவர் எளிதாக்கித் தரவில்லை. எம்ஜிஆர் உதாசீனப்படுத்தியிருந்தாலும் ஜெயலலிதா தளர்ந்துவிடவில்லை. ஒருவேளை, எம்ஜிஆர் மீது கோபம்கொண்டு, வேறு கட்சிகளில் இணைந்திருந்தால் ஜெயலலிதா எப்படி இருந்திருப்பார்? நம்மால் கற்பனை செய்து கூடப் பார்க்கமுடியாது.

ஜெயலலிதா, நவீன அரசியல் கண்டெடுத்த அற்புதம். அதுவரை கொள்கை என்னும் முகமூடியில் தனிமனித அரசியலே அரங்கேறிக்கொண்டிருந்தது. போலித்தனத்தைத் தூக்கியெறிந்துவிட்டு, தேர்தல் அரசியலையும், சீட் பேரங்களையும் வெளிப்படையாக முன்னிறுத்தினார். ஆட்சித் தலைமை வேறு, அரசியல் தலைமை வேறு என்பதை அழுத்தமாக பதிவுசெய்திருக்கிறார். காமராஜர், கருணாநிதி போன்ற அரசியல்வாதிகள், சிறந்த ஆட்சியாளர்களாகவும் இருந்த காரணத்தால் மட்டுமே வரலாற்றில் நிலைக்க முடிந்தது. அண்ணாதுரை, எம்ஜிஆரால் அத்தகைய நிலையை எட்டமுடியவில்லை. ஆனால், ஜெயலலிதாவால் அதை அநாயசமாக செய்யமுடிந்தது. ஜெயலலிதா, இனி ஜெயில் லலிதா என்ற நிலை வந்தபோதுதான் அப்படியொரு விஸ்வரூபமெடுத்தார்.

சகலகலாவல்லியாக அவரை முன்னிறுத்தும் அஞ்சலிகள் இன்னும் நிறைய வரக்கூடும். அதற்குத் தகுதியானவர்தான். அவரை விடச் சிறப்பான ஆட்சியாளர்களாக சந்திரபாபு நாயுடுவையும், மம்தா பானர்ஜியையும் நிறுவமுடியும். ஆனால், ஜெயலலிதா வாழ்ந்த வாழ்க்கை, சந்தித்த சோதனைகள், அவரது தனிமையின் துயரோடு இணைத்துப் பார்க்கும்போது, ஒரு புதிய சித்திரம் கிடைக்கும். அது முற்றிலும் ஜெயலலிதாவுக்கு மட்டுமே சொந்தமானதாக இருக்கும்.

http://www.valamonline.in/2017/04/blog-post_86.html