Friday, September 29, 2006

கடக்க முடியாத பாதை

Photobucket - Video and Image Hosting

கரடுமுரடான பாதைதான்.
ஆனாலும் போய்த்தான் ஆகவேண்டும்.
போக வேண்டிய தூரமும் அதிகம்.
இப்போதைக்கு திரும்பியும் வர முடியாது.
வருத்தம் ப்ளஸ் குழப்பத்துடன் வணக்கம் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை.

Two roads diverged in a yellow wood,
And sorry I could not travel both...
I took the one less traveled by,
And that has made all the difference.

Wednesday, August 16, 2006

இடைவேளை

Photobucket - Video and Image Hosting

மனதி லுறுதி வேண்டும்
வாக்கினிலே யினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்கை
வசமாவது விரைவில் வேண்டும்
தனமு மின்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திடவேண்டும்
காரியத்திலுறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்கவேண்டும்
மண் பயனுறவேண்டும்
வானகமிங்கு தென்படவேண்டும்
உண்மை நின்றிடவேண்டும்
ஒம் ஒம் ஒம் ஓம்.

Thursday, August 10, 2006

சத்தம் போடாதே

படு பிஸியாக புதுப்படத்து வேலைகளில் இருக்கிறார் இயக்குநர் வஸந்த். நடுவே குறும்படம், டி.வி சீரியல் டிஸ்கஷன் வேறு. சத்தமே போடாமல் வளர்ந்து வரும் வஸந்தின் 'சத்தம் போடாதே' படம்தான் கோடம்பாக்கத்தில் 'சிவாஜி'க்கு அடுத்து ஹாட் டாபிக். ஒரு சாயங்கால வேளையில் டி.நகரின் பரபரப்பான டிரா·பிக் சத்த பின்னணியில் வஸந்திடம் பேசியபோது...

நிறைய ஹிட் கொடுத்துட்டு பரபரப்பா வந்துட்டேருந்தீங்க... திடீர்னு ஒரு இடைவெளி. நடுவுல என்னதான் ஆச்சு?

அந்த இடைவெளி நேச்சுரல்தான். ஒரு விஷயத்தை ஆடியன்ஸ்க்கு சொல்லி ஆகணும்னு நான் முடிவு பண்ற வரைக்கும் அந்த இடைவெளி இருக்கத்தான் செய்யும். என்னுடைய எல்லா படத்துக்கும் நானே கதை திரைக்கதை எழுதறேன். எனக்கு பிடிச்சிருந்தாத்தான் பண்ணுவேன். என்னைப் பொறுத்தவரைக்கும் எண்ணிக்கையை விட குவாலிட்டிதான் முக்கியம். பரபரப்பா படம் பண்ற ஆளு நான் கிடையாது.

'சத்தம் போடாதே'ங்கிறது எதைப்பத்தி?

சின்னச் சின்ன சந்தோஷங்களோட இருக்குற ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்துக்கு ஒரு பெரிய அதிர்ச்சி வந்தா என்ன ஆகும். அதை எப்படி தாங்கிக்கிட்டு அதிலேர்ந்து வெளியே வர்றாங்கங்கிறதை சொல்லியிருக்கேன். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை படம் இந்த ரகம் அந்த ரகம்னு பிரிச்சுப் பார்த்து மக்கள் ரசிக்கிறதில்லை. எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி ஜனரஞ்சகமா இருக்கணும். சத்தம் போடாதே அந்த ரகம்தான். பாதிப்படம் முடிஞ்சுப்போச்சு. தீபாவளியை ஒட்டி ரீலீஸ் பண்ணலாம்னு ஐடியா.

Photobucket - Video and Image Hosting


நிறைய படத்துல ஹீரோயினை மையப்படுத்தியே எடுத்திருக்கீங்க. இப்போ அது மாதிரி டி.வியிலதான் பண்ண முடியும். இந்தப்படத்துல எப்படி?

கே.பி ஸார் நிறைய ஹீரோயின் சப்ஜெக்ட் எடுத்து அதுல ஜெயித்தும் காட்டியிருக்கார். என்னோட எல்லா படத்துலேயும் அப்படி கிடையாது. ஆசை, நேருக்கு நேர் எல்லாம் ஹீரோ பத்தின படங்கள்தான். ஹீரோயின்களை மையப்படுத்தி சப்ஜெக்ட் இருக்கணும்னு திட்டம் எதுவும் கிடையாது. என்னுடைய ஹீரோயின்கள் மரத்தைச் சுத்தி பாட்டுப்பாட மாட்டாங்க. அவ்வளவுதான். இந்தப் படமும் அப்படித்தான்.

நம்மைச்சுற்றி நடக்கிற நம்மை பாதிக்கிற விஷயங்களை சினிமாவுல அதுவும் தமிழ் சினிமாவுல பார்க்க முடியறதில்லை. மலையாளத்துல நிறைய பண்றாங்க. இந்தியில கூட பண்றாங்க. ஆனா தமிழ்ல குறைச்சல். உதாரணத்துக்கு சுனாமி.

சுனாமி சோகத்திலிருந்து வெளியே வர்றாம இருக்கிறவனை கூப்பிட்டு சினிமாவுலேயும் சுனாமியை காட்டினா நல்லா இருக்காதே. இன்னும் பத்து வருஷம் கழிச்சு பண்ணினாக்கூட பரவாயில்லை. சுனாமி மாதிரியான பேரழிவுகளை சினிமாவுல பண்றதில் நிறைய சிக்கல் இருக்கு. அது பட்ஜெட் சம்பந்தப்பட்ட விஷம். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை சந்தோஷமான சமாச்சாரங்களைத்தான் மக்கள் ரசிப்பாங்க. அவங்களோட தினசரி வாழ்க்கையிலேயே ஏகப்பட்ட சோகம் இருக்குது. தேவைப்படற கொஞ்சூண்டு சோகமும் டி.வியில கிடைச்சுடறது. மக்கள் தியேட்டருக்கு வர்றதே கொஞ்ச நேரமாவது சந்தோஷமா இருக்கத்தான்.

ஆனா உங்க எல்லா படத்துலேயும் மெலிதா ஒரு சோகம் இருந்துட்டுத்தான் இருக்குதே. ஜாலியா படம் பண்ணக்கூடாதுன்னு ஏதாவது முடிவு பண்ணியிருக்கீங்களா?

அப்படியெல்லாம் எதுவுமில்லை. நான் ஒரே மாதிரிதான் பண்றேன். மனித உறவுகளுக்குள்ளே இருக்கிற சிக்கல்களை அப்படியே சொல்லணும்தான் நினைக்கிறேன். கேளடி கண்மணிக்கு அப்புறம் எனக்கு நிறைய பாராட்டு கிடைச்சது ரிதம் படத்துலதான். காரணம் உறவுகளை மென்மையா சொன்னதுக்குத்தான். முக்கியமா ஹீரோவோட அப்பா அம்மா கேரக்டர்கள். உறவுகளுக்கு இடையே இருக்கிற சிக்கலை சொல்லும்போது அது சோகத்தையும் கூடவே இழுத்துக்கிட்டுத்தான் வரும். சோகமில்லாம வாழ்க்கையில்லை. காமெடி படம் பண்ணனும் எனக்கும் ஆசை இருக்கு. அப்படி நினைச்சுத்தான் 'பூவெல்லாம் கேட்டுப்பார்' பண்ணினேன். அவ்வளவுதான் என்னால பண்ண முடியும். ஒரு வேளை நல்லா வந்திருந்தா கண்டினியூ பண்ணியிருப்பேன்.

கே.பியோட பேர் செல்லும் பிள்ளையாக உங்களைத்தான் சொல்றாங்க. உங்களை அவர்கிட்டேர்ந்து வித்தியாசப்படுத்துறது எது?

சந்தோஷமா இருக்கு. ஆனா, என்னுடைய படத்துல ஒரு ஷாட் கூட அவருடையது மாதிரி இருக்காது. அவரை அப்படியே காப்பியடிக்கிறதுங்கிறது வேற. நான் நிச்சயமா அவரை காப்பியடிக்கமாட்டேன். அவரை மாதிரி படம் எடுக்க அவரே இருக்கும்போது நான் எதுக்கு? முதல் படம் எடுக்கும்போதே இந்த முடிவோடத்தான் ஆரம்பிச்சேன்.

திடீர்னு சினிமாவுலேர்ந்து டி.விக்கு போனதுக்கு என்னதான் காரணம்? நடுநடுவே டாக்குமெண்டரி, குறும்படம்னு வேற பிஸியா இருக்கீங்க...

விஜய் டி.வில வர்ற தொடர் என்னோட தயாரிப்பு மட்டும்தான். டி.விங்கிற வேற மீடியம். அதுக்கு இப்போதைக்கு நான் போறதா இல்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் நிறைய வெரைட்டி பண்ணனும். பத்திரிக்கைன்னு எடுத்துக்கிட்டா சினிமா பத்திரிக்கை, இலக்கியப் பத்திரிக்கை, அரசியல் பத்திரிக்கைன்னு எல்லாத்தையும் படிக்கிற மாதிரிதான். மனித உறவுகளை பாதிக்கிற சின்ன சின்ன பிரச்னைகளை ஏதாவதொரு வடிவத்துல ஈஸியா குடுக்கணும். பிளாட்பாரத்துல இருக்கிறவனோட வாழ்க்கையை படமாக்கணும்னு ரொம்ப ஆள் ஆசைப்பட்டு அப்படியே லைட்டிங் கூட இல்லாம நேச்சுரலா 'இடம்'னு ஒரு குறும்படம் பண்ணிணேன். ஜெயகாந்தன் பண்ணின மாதிரி அசோகமித்திரனோட தண்ணீர் கதையை ஒரு பேரலல் சினிமா மாதிரி பண்ணணும்னு ஆசை. ஆனா, என்எ·படிசி கிட்டேர்ந்து இன்னும் அப்ரூவல் கிடைக்கலை.

இந்திய அளவில் தென்னிந்திய சினிமாவுக்கு சரியான முக்கியத்துவம் இல்லைன்னு மம்மூட்டி சொல்லியிருக்கார். நீங்களும் ஜூர்ரில இருந்திருக்கீங்க. அதைப்பத்தி என்ன நினைக்கிறீங்க?

நான் ஜூர்ரியா இருந்த அனுபவத்துல சொல்றேன். யாரும் எந்த ரெக்கமண்டேஷனுக்கும் என்கிட்டே வரலை. எல்லாமே ஒழுங்கத்தான் நடந்தது. படங்களை செலக்ட் பண்றதுக்கு எங்களுக்கு முழு சுதந்திரம் இருந்தது. போன தடவை கொடுத்த பதினெட்டு அவார்டுல கிட்டதட்ட ஒன்பது அவார்டு தென்னிந்திய சினிமாவுக்கு அதுவும் மலையாள சினிமாவுக்குத்தான் போனது. தேசிய அளவுல சிறந்த படமா கமலோட பெருமழைக்காலம்தான் தேர்வானது. தமிழுக்குத்தான் கம்மியா நாலு அவார்டு கிடைச்சது.

பொதுவாவே தேசிய அளவில் மீடியாவுல இந்திப்படங்களை மட்டும்தானே கவனிக்கிறாங்க. ஒரு இந்திப்படம் ஆரம்பிக்கிறதிலேர்ந்து படம் ரிலீஸாவறது வரை டி.வி, பத்திரிக்கையெல்லாம் அதை முன்னிலைப்படுத்தறாங்களே.. நம்ம படங்களை யாரும் கண்டுக்க மாட்டாங்கங்கிறது உண்மைதானே?

அவங்களோட மார்க்கெட் பெரிசு. என்னதான் இருந்தாலும் நாம ரீஜினல்தானே. நம்முடைய பட்ஜெட்டுக்கு நிறைய லாபம் வருதே தவிர அவங்க அளவுக்கு நாம பணத்தை இன்வெஸ்ட் பண்றதில்லையே. அவங்க 200, 300 கோடி வியாபாரம் பண்றாங்க. நமக்கு 100 கோடியே அதிகம். அவங்க 2000 கோடி பிரிண்ட் போடறங்க. இங்கே சந்திரமுகி மாதிரியான பெரிய படத்துக்கே 300 பிரிண்ட்தான் போடறோம். இங்கே லாபம்தான் அதிகம். பிரிண்ட் கம்மிதான்.

முன்பெல்லாம் உங்க படத்து டைட்டில் சின்னதா, எளிமையா இருக்கும். இப்போ உங்க டைட்டில் ஒரு முழ நீளத்துக்கு இருக்குதே..

சினிமாவுல டைட்டில் ரொம்ப முக்கியமான விஷயம். அது சப்ஜெக்டை பொறுத்து இருக்கணும். ஒரு ஜாலியா ரொமாண்டிக் ஸ்டோரியா இருந்ததால 'ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே'ன்னு வெச்சேன். சத்தம் போடாதே ¨ட்டில் கூட ஒரு மிரட்டல் வேணுங்கிறதுக்காகத்தான் வெச்சுருக்கேன்.

சினிமா பரபரப்புக்கு நடுவேயும் பான்யன் மாதிரியான அமைப்புக்கு உதவி செய்யறீங்க. திடீர்னு ஐக்கியான்னு மனவளர்ச்சி இல்லாத குழந்தைகளுக்காக புரோகிராம் பண்றீங்க. அரசியலுக்கு வர்றீங்களோ?

அரசியலா? இதென்ன வம்பா போச்சு? எந்த விளம்பரமும் இல்லாம பண்றதுதான் சேவை. அவங்க நடத்துற நிகழ்ச்சிக்கு என்னால முடிஞ்சதை செய்யறேன். அவ்வளவுதான். இதெல்லாம் காலேஜ் படிக்கிறப்பவே ஆரம்பிச்சதுதான். வீடு வீடா போய் பழைய இந்து பேப்பரை கலெக்ட் பண்ணுவோம். இதைத்தான் 'மனதில் உறுதி வேண்டும்' படத்துல டைரக்டர் ஒரு ஸீனாகவே வெச்சார். ரிதத்துல ரமேஷ் அர்விந்த் சொல்ற மாதிரி
இதையெல்லாம் சமூக சேவைன்னு சொல்றது பெரிய வார்த்தை. சொல்லிக்க கூச்சமா இருக்குது. அதுக்காக அரசியலுக்கு வர்றதுன்னா ஐயோ சாமி.. ஆளை விடுங்க!

இப்போ டைரக்டரெல்லாம் ஹீரோ ஆகற சீஸன். தாடியை எடுத்துட்டு ஜீன்ஸ் போட்டுக்கிட்டு ஹீரோ ஆகிற ஐடியாவெல்லாம் உண்டா?

டைரக்டரா இருக்கிறதுல கிடைக்கிற திருப்தி எனக்கு எதுலேயும் இல்லை. லேட்டஸ்டா அப்படியொரு சான்ஸ் வந்தது. கேரக்டர் ரோலும் வந்தது. பட் எனக்கு இஷ்டமில்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் ரொம்ப அழகா இருக்குறவங்க நடிக்கிறதுதான் நல்லா இருக்கும்!

6.7.2006 கல்கி இதழுக்காக எடுத்த பேட்டியிலிருந்து...

Sunday, August 06, 2006

நிலைக்கண்ணாடி

ஜன்னலுக்கு வெளியே சோடியம் லைட்டுகளின் மஞ்சள் வெளிச்சத்தில் நேரம் போனது தெரியவில்லை. சிஸ்டம் நேரத்தை 2:30 AM காட்டியது. கிழக்கு பதிப்பகத்தின் எடிட்டோரியல் அறை. 'கடைசியா ஒரு தடவை படிச்சு முடிச்சுடு... மார்னிங் பிரிண்டுக்கு அனுப்பிச்சாகணும்'. படுக்கப்போகும்போது பாரா சொல்லிவிட்டு போனது ஞாபகத்துக்கு வந்தது. வேகமாக ஸ்க்ரோல் பாரை நகர்த்த ஆரம்பித்தேன். 'ஐயோ... ஸார்...சேப்டர் டைட்டில் போடவேயில்லையே!'

பத்ரி கெட்அப்பில் கால்மேல் கால்போட்டு கண்மூடி தரையில் கிடந்த பாரா நிமிர்ந்து உட்கார்ந்தார். உதவிக்கு வந்தது எடிட்டோரியல் பட்டாளம்.

'தேவுடா... தேவுடா.. டைட்டில் ஒண்ணு சொல்லுடா!'

'ஒரு சேஞ்சுக்கு மத்த கிழக்கு புத்தகங்களோட டைட்டிலையே சாப்டர் டைட்டிலா வெச்சுட்டா என்ன ஸார்?'

'கோயிஞ்சாமி... நல்ல ஐடியாடா! ராம்கி, ஒவ்வொரு சாப்டர்லேயும் வர்ற விஷயத்தை அப்படியே படிச்சுட்டே வா... நாம டைட்டில் சொல்லிட்டே வரலாம்.'

படிக்கப் படிக்க, டைட்டில்ஸ் பறந்து வந்தது. மிஸ்டர் தன்னம்பிக்கை, நாடகமல்ல வாழ்க்கை, காலம் உங்கள் காலடியில், வேதபுரத்து வியாபாரிகள், நிலமெல்லாம் ரத்தம், ஆளப்பிறந்தவர் நீங்கள், அழிவிலிருந்து வாழ்வுக்கு, டமால் டுமீல், மார்க்கெட்டிங் மாயாஜாலம்...

'ஸார்... இதுல கல்லக்குடி ஆர்ப்பாட்டம். எதுக்காக, எப்படி நடந்ததுன்னு சொல்றோம்... இதனால் திமுகவுக்கு கிடைச்ச லாபம், அரசியல் மாற்றங்கள் பற்றி ஒரு சின்ன அலசல்'

Photobucket - Video and Image Hosting

ஏதோதோ டைட்டிலுக்கு பின்னர் கடைசியாக முடிவானது. 'சப்தமா? சகாப்தமா?'

'அத்தியாயத் தலைப்புகள் அனைத்தும் கிழக்கு பதிப்பகத்தின் வேறு சில நூல்களின் தலைப்புகளாக அமைந்துவிட்டது தற்செயல் அல்ல'. கடைசியாய் மறக்காமல் வந்த அந்த அடிக்குறிப்புக்கு இன்ஸ்டண்ட் வரவேற்பு. அந்த நடுநிசி நேரத்தில் மு.க புத்தகத்துக்கு கிடைத்த முதல் கைதட்டல்!

கடந்த ஒரு மாதத்தில் புத்தகத்திற்கு கிடைத்த வரவேற்பும் விமர்சனங்களும் எதிர்பாராதது என்றுதான் சொல்லவேண்டும். வலைப்பூக்களில் தமிழினி முத்துவும், அலுவலக சகா லக்ஷமணனும் ஒரே மூச்சில் புத்தகத்தை படித்துவிட்டு விமர்சனம் எழுதியிருந்தார்கள். காரைக்குடி கவிஞர் வழக்கம்போல் தொலைபேசியில் நிறை குறைகளை அலசினார். அலுங்காமல் குலுங்காமல் ஒரு மெயில் தட்டிவிட்டதும் புத்தகங்களை அனுப்ப ஏற்பாடு செய்து கொடுத்த எனிஇண்டியன் ஹரன்பிரசன்னாவுக்கும் நன்றி சொல்லியாகவேண்டும்.

எலெக்ஷனுக்கு பின்னர் அரசியல் நிலைமைகள் மாறிவிட்டதால் புத்தகம் வெளிவருவதற்குள் நகவெட்டிக்கு வேலையில்லாமல் போய்விட்டது. நெய்வேலி புத்தக கண்காட்சிக்கு எடுத்துப்போகும்போது கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலேயே பத்து புத்தகம் விற்றுத்தீர்ந்துவிட்டதாக கிழக்கு சேல்ஸ் நண்பர்கள் சேதி சொன்னார்கள். 'நல்ல பேக்கேஜ். நிச்சயம் சூப்பர் ஹிட்டா வரும்'. பத்ரியின் வாக்கு ஒருவழியாக பலித்துவிட்டது.

கருணாநிதி பற்றி புத்தகம் எழுதியிருப்பதை வீட்டிலேயே ஆச்சரியமாகத்தான் பார்க்கிறார்கள். ஏதோ எழுதறானேன்னு பார்த்தா இப்போ அரசியல் பண்றானோன்னு சந்தேகப்பட்டிருப்பார்கள். எல்லோரும் அரசாங்கத்துக்கு ஊழியம் பார்க்கும் பரம்பரை. எலெக்ஷன் நேரத்தில் பூத் அதிகாரியாகவே இருந்து பழக்கப்பட்டுப்போனவர்கள். வீட்டில் அரசியல் பேசுவது யாருக்கும் பிடிக்காது. அதுவும் பாட்டிக்கு கருணாநிதியை பிடிக்கவே பிடிக்காது. அவளைப் பொறுத்தவரை பிடித்தவர்கள் லிஸ்ட் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ரஜினியோடு முடிந்துவிடும். நல்லத்துக்குடி செல்லியம்மன் கோவிலைத் தாண்டி எல்லேராமின் பெருமாள் கோயில் வழியாக எலெக்ஷன் பூத்துக்கு அழைத்துப்போய் வண்டியிலிருந்து இறக்கிவிடும்போதுதான் காதோரமாய் வந்து கிசுகிசுவென்று கேட்பாள். 'யாருக்குடா தம்பி ஓட்டு போடறது?'

பாட்டி என்னை விட்டுப்போய் இன்றோடு ஒரு வருஷமாகிறது. பேரன், பத்திரிக்கைகளுக்கு எழுதிக்கொண்டிருப்பதில் பாட்டிக்கு நிறைய பெருமை. ஒரு வேளை தாத்தாவின் ஞாபகம் வந்திருக்கலாம். என் நிலைக்கண்ணாடியில் தாத்தாவின் முகம்! ஐம்பதுகளில் தருமபுர ஆதீனத்தில் வெறும் கணக்குப்பிள்ளையாக இருந்த தாத்தாவிடம் மல்லுக்கட்டி சந்நிதானத்துடன் பேசச்சொல்லி அச்சாபீஸ் வேலை பார்க்கச்சொன்னவள் பாட்டிதான். நான்கே மாதத்தில் தாத்தா ஒரு அச்சகத்துக்கு நிறுவனர் ஆனார். பின்னாளில் சைவ சித்தாந்த நூல்களை அச்சிடுவதில் மும்முரமாக இருந்த தருமபுரம் ஞானசம்பந்தர் பிரஸ் உருவான கதை இதுதான். இவ்வளவுக்கும் பாட்டிக்கு எழுதப் படிக்க தெரியாது...கடைசிவரைக்கும்!

நேற்றைய நினைவுகள் - நாளைய எதிர்பார்ப்புகள்

Friday, July 21, 2006

ஓரங்கட்டேய் - 12

Photobucket - Video and Image Hosting

"தமிழை விட சாமி பெரிசான்னு கேட்குறாம்பா! இன உணர்வு ரொம்ப முக்கியமாம்!"


Photobucket - Video and Image Hosting

"ஆணாதிக்கம், கம்யூனிஸம், மனித உரிமை பத்தியெல்லாம் பேசுறாம்பா! அட, இங்கே பார்றா சமூக நீதியை!"

Photobucket - Video and Image Hosting

"ஹை! ஓடுக்கப்பட்டவர்களின் ஓலம்? கரெக்ட்...அப்ப இவன்தான் நாம தேடிட்டிருக்கிற அறிவு ஜீவி!"

Photobucket - Video and Image Hosting

"தெய்வமே... நீங்க எங்கியோ போய்ட்டீங்க!"

Friday, June 23, 2006

ரொம்ப தூரம்தான்!

பெருமாள் கோயில் புளிசாதம்
சோ கமெண்ட்
அஞ்சாங்கிளாஸ் சைக்கிள்
தலைவர் ரிங்டோன்
ஜனகனமண முன்னுரை
சந்திரபாபு டான்ஸ்
வாழைத்தண்டு கூட்டு
சாவித்திரி குளோஸப்
சின்னக்கடைத்தெரு பிள்ளையார்
நதியா டிரெஸ்
கிழிந்து போன சத்திய சோதனை
வைத்தா டீ ஸ்டால் ஸ்டூல்
ஜோதிகா முழிப்பு
ஸ்வர்கேட் ஷீரா
பாருக்குட்டி கிளைமாக்ஸ்
இளையராஜா சோகம்
புன்செய் கோயில் பிரகாரம்
தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்ட கல்கண்டு பால்
வைரமுத்து தத்துவம்
பரங்கிப்பேட்டை பாபாஜி கோயில்
கிருஷ்ணா பேலஸ் சைக்கிள் ஸ்டாண்ட்
எஸ்.பி.பி தலைவர் பாட்டு
கர்ஜத் வடா பாவ்
கோயிஞ்சாமி பன்ச்
சந்திரபாபு நாயுடு தாடி
பியர்லெஸ் தியேட்டர் கவுன்டர்
கருணாநிதி சுறுசுறுப்பு
பீச் ஸ்டேஷன் காபி
அப்பா ஆயில் மசாஜ்
அரசு கேள்வி பதில் கட்டிங்ஸ்
பாட்டி பஜ்ஜி
வைஷ¤ வெட்கம்
காவி கலர் சட்டை
உப பாண்டவம்
அம்மா வாக்கிங்
தாடண்டர் நகர் கடைசித்தெரு
இரண்டாங்கிளாஸ் நோட்டு
பெரிய வாத்தியார் அடி
இந்தி கிளாஸ் கீதா சிரிப்பு
பிரவுண் கலர் பேண்ட்
உருத்திராட்ச கொட்டை
.
.
.

பின்கதைச்சுருக்கம்



'நமக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம்?'

'என்னுடையது என்று உங்களுக்கு பிடித்த எதையெல்லாம் சொல்லுகிறீர்களோ, அதையெல்லாம் ஒன்று விடாமல் ஒரு லிஸ்ட்டில் எழுதுங்கள். என்னுடைய பேனா, என்னுடைய சட்டை, என்னுடைய நகை, என்னுடைய அழகு என்று இப்படி லிஸ்ட் போடுங்கள். லிஸ்ட் எவ்வளவு நீளத்துக்கு வருகிறதோ அந்த தூரம்தான் கடவுளுக்கும் நமக்கும் உள்ள தூரம். பெரிதாக இருந்தால் ரொம்ப தூரம்; சின்னதாக இருந்தால் கொஞ்சம் தூரம். அவ்வளவுதான்!'

- சுவாமி சச்சிதானந்தாஜி, பிப்ரவரி 7, 1976, குமுதம்

Friday, June 09, 2006

ஊர்வலம் - பூம்புகார்

Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

அந்த அடர்ந்த கருவேலஞ்செடி காடு, சுனாமி தாக்குதலில் இறந்தவர்களின் சடலங்கள் சிக்கிக்கிடந்ததை ஞாபகப்படுத்துகிறது. இன்னமும் வாணகிரியின் பொது கழிப்பிடம் இந்த முட்புதர்கள்தான். வாணகிரியின் பெரிய மீனவ குடியிருப்புப் பகுதியான வாணகிரி குப்பத்தில் 72 குடியிருப்புகளுக்கான கட்டிடம் இப்போதுதான் வளர்ந்து வருகிறது. பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்கள் இன்னும் தற்காலிக குடியிருப்புகளின்தான் வாசம். குடியிருப்புகளை ஒட்டி பளிச்சென்று புதிதான இருக்கும் கட்டிடங்களில் லைப்ரரியும், சமூகக்கூடங்களும் உண்டு.மண் மூடியிருக்கும் தார்ச்சாலை தெருவின் அகலத்தை பெரிதாக்கி காட்ட, சுனாமி நேரத்தில் அலங்கோலமாக கிடந்த அந்த சின்னத் தெரு வெறிச்சென்று இருப்பது வெளிப்படையாக தெரிகிறது....

தொடர்ந்து படிக்க... திசைகள்

Monday, June 05, 2006

எங்கேயோ கேட்ட குரல் -1

Photobucket - Video and Image Hosting


"ஏதோ...சுற்றுச்சூழல் தினமாம்! இன்னிக்கு மட்டும் கம்பெனிக்கு போக வேணாம்னு அப்பா சொல்லிட்டாரு!"

Tuesday, May 30, 2006

மெரீனா பீச்சில்...

அதைப் பற்றி சொல்லாமலே இருந்திருக்கலாம். இப்போதுதான் உறைக்கிறது. எப்போதும் அவ்வளவு சீக்கிரம் வெளியே வராதது புதிதாக நெஞ்சுக்குழி வரை வந்து நெருடியதால் கேட்டுத் தொலைக்க நேர்ந்துவிட்டது. உச்சி வெய்யிலில் பட்டப்பகலில் பகிரங்கமாக நடப்பதை கண்டு கொள்ளாமலே கிளம்பியிருக்கலாம்! நம்ம சுழி என்றைக்கு சும்மா இருந்திருக்கிறது. 'இந்த லவ்வர்ஸ்க்கு வேற இடமே கிடையாதா... இங்கே வந்து அசிங்கம் பண்ணுதுங்க...' பளிச்சென்று முகத்திலடித்தாற்போல் ஒரு பதில் வரும் எதிர்பார்க்கவேயில்லை. 'உன்னால முடியலைங்கிறதுக்காக அடுத்தவங்களை ஏன் குறை சொல்றே?'

Photobucket - Video and Image Hosting

உடனே ஒரு பிகரை தேடிப்பிடித்தாகவேண்டும் என்று விபரீதமாய் முடிவெடுக்காத மனசாட்சியே நீ வாழ்க! என்னதான் நெத்தியடியாக சொன்னாலும் கூடவே வந்த நண்பனின் பதிலில் நியாயமிருக்கிறது. அடுத்தவர்களின் சுதந்திரத்தில் தலையிட நமக்கென்ன உரிமையிருக்கிறது? சம்பந்தப்பட்டவர்களுக்கு நான் என்ன மாமாமனா, மச்சானா? யாரோ எப்படியோ இருந்துவிட்டு போகட்டுமே என்று கொஞ்சம் உணர்ச்சிவசப்படாமல் வாய் மூடி இருந்திருக்கலாம். பேசுவதற்கு முன்னர் நமக்கு தகுதி இருக்கிறதா என்று பார்த்துவிட்டே பேச வேண்டும் என்று சொன்ன அந்த ஒன்பதாம் கிளாஸ் (கேயார்) வாத்தியார் சொன்னதை எப்போதும் மறப்பதில்லை. அதனாலேயே பல நேரங்களில் எதைப்பற்றியும் பேச முடியாமலே போய்விடுகிறது. எப்படியாவது தப்பித்தவறி பேசினாலும் இதுமாதிரி சறுக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதும் இன்னொரு காரணம்.

குறைவாக பேசி நிறைய சாதிக்கும் பெரிய மனிதர்களை பார்த்தால் பொறாமையாகத்தான் இருக்கிறது. தலையில் இடியே வந்து விழுந்தாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்பதற்கு அசாத்திய பொறுமை அவசியம். எந்த அர்த்தத்தில் சொன்னாலும் அனார்த்தமாகிவிடும் உயரத்திலிருக்கும் மனிதர்களுக்கு எதுவுமே அக்னிப்பரீட்சைதான். எந்தப் பிரச்னைக்கும் நிரந்தர தீர்வே இல்லை என்கிற நிலையில் இன்ஸ்டெண்ட் தீர்வு என்று சொன்னால் பிரச்னையைப்பற்றி பேசாமலிருப்பதுதான். சரி பேசாமலே இருந்துவிடலாம் என்றால் பக்கத்து வீட்டுக்காரர் பயமுறுத்துகிறார். முக்கியமாக அவர் சொல்லும் சைக்காலஜி. எப்போதும் பேசாமலிருந்தால் இன்·பீரியாரிட்டி காம்ப்ளக்ஸாக இருக்கும்; அல்லது சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸாக இருக்குமாம்! அட, இதுக்கு எதையாவது உளறி தள்ளிக்கிட்டே இருக்கலாம்!

Photobucket - Video and Image Hosting

ரொம்ப பிடிச்ச பன்ச் டயலாக்தான் ஞாபகத்துக்கு வருது. எது நடந்தாலும் எந்த எதிர்பார்ப்பும் வெச்சுக்காம அப்படியே அள்ளிவிட்டுக்கிட்டே போவது. பெர்னாட்ஷா சொன்னதை கொஞ்சம் புரட்டிப்போட்டு சொன்ன பன்ச் டயலாக்குதான்.

'இந்த உலகமே நாடகம். நாமெல்லோரும் நடிகர்கள். அலைகள் வந்து வந்து போகும். ஆனால் கடல் மட்டும் மாறாம அப்படியோ இருக்கும். நடிகர்கள் மாறிக்கிட்டே இருப்பாங்க. நாடகம் நடந்துகிட்டேயிருக்கும். ஆண்டவன் நமக்கு கொடுத்த பாத்திரங்களை அவனுக்கு பிடிச்ச மாதிரி செஞ்சாத்தான் நமக்கு அவன்கிட்ட இடம் கிடைக்கும்... நல்லா இருங்க!'

Thursday, May 25, 2006

அந்த மூன்று மணி நேரம்

மூன்று மாதமாய் திட்டமிட்டும் மூன்று மணி நேரத்தில் திணற வேண்டியிருந்தது. எந்த பக்கம் திரும்பினாலும் பழகிய முகங்கள். நின்று நிதானமாக பேசத்தான் நேரமேயில்லை. கடைசி நேரத்தில் முதல்வரின் திருக்குவளை விஜயத்தால் நமக்கும் சிக்கல். சதாபிஷேக ஓட்டலில் டிபனை முடித்துக்கொண்டு முதல்வர் திருவாரூர் கிளம்பும் வரை மாப்பிள்ளையும் இரட்டைப்பிள்ளையார் கோயில் வாசலில் காத்திருக்க வேண்டியிருந்தது. திரும்பி வரும்போதும் மணமக்களை ரோட்டோரமாய் காரில் காத்திருக்க வைத்தார் கலைஞர்.

நேரிலும், மின்னஞ்சலிலும், தொலைபேசியிலும் வாழ்த்துச் சொல்லியவர்களுக்கு வேண்டுமானால் ஒற்றைவரியில் நன்றியை சொல்லிவிடலாம். சென்னையிலிருந்து இரண்டு லீவு போட்டு வந்து கல்யாண வேலைகளில் களமிறங்கியவர்களுக்கு வெறுமனே நன்றி சொல்வதில் இருக்கும் தர்மசங்கடத்தை வெளியே சொல்லமுடியாது. பரபரப்பு, டென்ஷனெல்லாம் இறங்கி நாலு மணி நேரத்தில் மண்டபத்தை காலி செய்துவிட்டு வெறுமையாய் தனிமையில் நடக்கும்போது மனதை அழுத்தும் பாரத்திற்கு என்ன பெயர் சொல்வதோ?

மறக்க முடியாத ஷாட்களை மட்டும் சொல்லி ஷார்ட்டா முடிச்சுக்குறேன்!

Photobucket - Video and Image Hosting

எலெக்ஷனுக்கு அப்புறமாய் ஒரு நிம்மதி கும்பிடு!


Photobucket - Video and Image Hosting

அவரு வர்றலையா? பையன் கல்யாணத்துக்கு வந்துடுவாரா?

Photobucket - Video and Image Hosting

தாலிகட்டும்போது பொண்ணுங்க தலைகுனியறதுக்கு எதுக்காம்?


Photobucket - Video and Image Hosting

சீக்கிரமா மாலையை மாத்துங்க... சி.எம் வர்றதுக்குள்ளே கிளம்பியாகணும்!


Photobucket - Video and Image Hosting

மாப்பிள்ளே... கடைசியா ஒரு சிரிப்பு சிரிச்சுக்கோங்கோ!

Photobucket - Video and Image Hosting

பார்த்து தேடுங்கோ.... பானையை உடைச்சுடாதீங்கோ...

Photobucket - Video and Image Hosting

மச்சானுக்கு ஒரு பவுன் மோதிரமும் தர்றேன்னு சொல்லியிருந்தா அம்மா ஜெயிச்சுருப்பாங்க!

Photobucket - Video and Image Hosting

அட...வேட்டி கட்டிக்கிட்டு நல்லா நடக்கத்தெரியுமா?

Photobucket - Video and Image Hosting

மொய் எழுதாம கம்பி நீட்டுறவங்களை கரெக்டா பிடிச்சு கொண்டாங்கடா...

Photobucket - Video and Image Hosting

தம்பியுடையான்... கரெக்டாத்தான் சொல்லியிருக்காங்க!

Photobucket - Video and Image Hosting

என்னதான் சிவாஜி மாதிரி போஸ் கொடுத்தாலும் திரும்பி பார்க்க மாட்டேங்கிறாரே!

Photobucket - Video and Image Hosting

கூட்டம் வந்துடும்னுதான் வர்றதை சீக்ரெட்டா வெச்சுக்க சொன்னேன்!

Photobucket - Video and Image Hosting

இட ஒதுக்கீடு இங்கெல்லாம் வேணாம்மா...சேர்ந்தே நில்லுங்க!


Photobucket - Video and Image Hosting

மாப்பிள்ளைக்கும் சந்திரமுகிக்கு அப்புறம் சிவாஜிதான் சினிமாவாம்!


Photobucket - Video and Image Hosting

போயஸ் கார்டன் ஸ்பெஷல் கிப்டை பத்திரமா எடுத்து வைங்கப்பா!

Friday, May 12, 2006

செய்திகள் வாசிப்பது...

'உங்கள் பொன்னான, மணியான, முத்தான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் எங்கள்....' டயலாக் இல்லை; தொங்கும் தோரணம், அலறும் ஆட்டோ எதுவுமேயில்லை. அமைதியான தேர்தலும் அதிகபட்ச வாக்குப்பதிவும் அதிசயம் என்றால் தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்திகளிலும் நிறைய ஆச்சர்யம். 'செங்குட்டுவன் ஒன்றரை லட்சம் ஓட்டில் முன்னணியில் இருக்கிறார்' என்கிற ரேடியோ செய்தியை கேட்டே பழக்கப்பட்டவனுக்கு ஆயிரம் ஓட்டு, அம்பது ஓட்டு என்று வித்தியாசத்தை அடுக்கும்போது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. ஓட்டுப்போடாத குற்றவுணர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் கருத்து சொல்லியே ஆகணும்னு நினைச்ச பிறகு ஆசை வெட்கமறியாது!

இந்த தேர்தலில் நிறைய ஹீரோக்கள். கருணாநிதியில் ஆரம்பித்து கலர் டி.வி வரை. ஜெயலலிதாவும் இந்த லிஸ்ட்டில் உண்டு. எட்டாயிரம் ஓட்டில் ஆரம்பித்து பதினாலு ஓட்டு வரை கஞ்சத்தனமாய் கைப்பற்றி கரை சேர்ந்திருக்கும் திராவிட பெரிசுகளை பார்க்கும்போது ஆண்டிப்பட்டியில் அம்மாவின் குவார்ட்டர் செஞ்சுரி பெரிய விஷயம். இந்த தேர்தலிலும் காமெடியன்களுக்கு பஞ்சமில்லை. அதற்காக கிண்டலடிக்க தேவையில்லை. காமெடியன்கள் என்று நாம் நினைக்கும் பலரும் வில்லன் வேஷத்தை மறைக்க காமெடி வேஷம் போட்டவர்கள்தான். தேர்தல் முடிவுகளால் அவர்களுக்கு பாதிப்பே இல்லை. அதையெல்லாம் அலசிப்பார்த்தால் கடைசியில் காமெடியன்கள் நாம்தான் என்கிற உண்மை உலகத்துக்கு தெரியவரும்.

Photobucket - Video and Image Hosting

வை.கோ நிச்சயமாய் ஜீரோ இல்லை; ஹீரோதான். வரப்போகும் மூன்று வருஷத்துக்குள் அதை நிரூபிப்பார். பத்து வருஷத்துக்கு முன்னர் தனியாக நின்று டெபாசிட்டை பறிகொடுத்த வை.கோவுக்கும் ராமதாசுக்கும் விஜயகாந்தின் வெற்றி எரிச்சலாகத்தான் இருக்கும். வன்னியர்களின் கோட்டையாக சொல்லப்படும் ஏரியாவிலேயே கால் வைத்து எட்டி உதைத்திருக்கும் விஜயகாந்தின் ஆம்பிளைத்தனத்தை ஆளாளுக்கு சிலாகிக்கிறார்கள்! அதை விட முக்கியமான ஒரு விஷயமிருக்கிறது. தன்னுடைய ஜாதியின் பெயரைச்சொல்லி ஓட்டுக்கேட்காமல் இருந்ததுதான். விருத்தாச்சலத்தில் விஜயகாந்தை விடாமல் துரத்திச் போய் கிண்டலடித்து ஜாதியின் பெயரைச்சொல்லி தெனாவட்டாக ஓட்டுக்கேட்ட பா.ம.கவுக்கு எதிராக மக்கள் பொங்கியெழுந்திருப்பது அந்த பதினெட்டாயிரம் வாக்குகளில் தெரிகிறது. ஜீன்ஸ், டீஷர்ட் போட்டு தமிழை பாதுகாத்த, சினிமா சான்ஸ் கிடைக்காத சில தமிழ் அறிஞர்களின் முகத்தில் கரி. நமக்கெதுக்கு இந்த வம்பு? விஜயகாந்தின் அசெம்ப்ளி எண்ட்ரி பத்தி மதன் போடப்போகும் கார்ட்டூனை கெஸ் பண்ண ஆரம்பிக்கலாம்!

விருத்தாச்சலவாசிகளுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல சென்னைவாசிகள். தி.மு.க கோட்டையில் அ.தி.மு.கவுக்கு ஆதரவாக அலையே அடித்திருக்கிறது. ·பதர் சயீத் கூட ஜெயித்திருக்கிறார் என்பது முக்கியம். சென்னையில் அம்மா இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்யவில்லை என்பது ரொம்ப முக்கியம். சைதாப்பேட்டை எதிர்பார்த்ததுதான். சங்கத்து ஆளுங்களை காணாம முழிக்கும் கட்டத்துரையை விட காமெடியான விஷயம் இங்கே நடந்தது. கூட்டிக்கழித்து பார்த்தால் சென்னைவாசிகளின் அந்தர் பல்டிக்கு இரண்டே காரணம்தான் இருக்க முடியும். ஒன்று தயாநிதி மாறன். இன்னொன்று செட்டப் பாக்ஸ்!

கொஞ்சம் அடக்கி வாசிச்சுருக்கலாமோன்னு டெல்லி கணக்குப்பிள்ளை இந்நேரம் நினைக்க ஆரம்பிச்சுருப்பார். 'இரண்டு ரூபாய்க்கு அரிசி தரமுடியுமா? இலவசமாக கலர் டி.வி தரமுடியுமா என்று அவர்கள் கேட்கிறார்கள்.. நான் சொல்கிறேன்....அது சாத்தியம்' என்று நிதானமாக சர்ட்டிபிகேட் கொடுத்ததை யார் மறப்பார்கள்? கொஞ்ச நாளைக்கு டெல்லியிலிருந்து தமிழ்நாட்டை பார்க்கலாம். இல்லாட்டி இப்படியொரு பன்ச் டயலாக் விடலாம்! 'நான் சாத்தியம் என்றுதான் சொன்னேனே தவிர சத்தியம் என்று சொல்லவில்லை!'

திருமா திரும்பவும் வெறுமா ஆகியிருக்கிறார். விஜயகாந்தை நினைத்து பல்லை கடித்துக்கொண்டிருப்பார். தமிழ்நாட்டில் காயடிக்கப்படாத வயசுப்பசங்க கூட்டம் கம்மிதான். தியாகி அவார்டு இருந்தால் கார்த்திக்குக்கு ஸாரி மு. கார்த்திக் தேவருக்கு கொடுத்துவிடலாம்! தேவர் ஓட்டை பிரித்த இனக்கோடாரி என்கிற பட்டம் கிடைக்கலாம். பா.ம.க என்கிற பலூனுக்கு யாரும் பஞ்சர் பார்க்காமலேயே காத்து இறங்க ஆரம்பிச்சுட்டதை சொல்லத் தேவையில்லை. மெதுவா ஒரு ஜாதி சங்கத்தை ஆரம்பிச்சு அப்படியே கட்சியா மாத்தி ஆட்சியை புடிக்கிறோமோ இல்லையோ டெல்லியில மினிஸ்டர் ஆயிடலாம்னு நினைக்கிறவங்க இப்போதைக்கு பதுங்கிக்கிறது உத்தமம்! இதுதான் தேர்தல் 2006 சொல்லும் மெகா செய்தி!

Friday, May 05, 2006

வாளுக சனநாயகம்

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

கண்ணாமூச்சி ஆட்டம் நடக்குது
காணாமப் போச்சு நம் தேசம்...
மேடை போட்டு பேசும் தலைவரை
பாருங்க எல்லாம் பொய் வேஷம்.
ஆறு ஓடுற ஓட்டத்தைப் பார்...
அதுதானே சுதந்திரம்தான்.
வந்த சுதந்திரம் போனது எங்கே?
சட்டமும் பட்டமும் விக்குது இங்கே.
விக்கிறவன் வேலை எனக்கேண்டா?

Photobucket - Video and Image Hosting

40 நாள் லேட்டாக முட்டாளுங்க தினத்தை கொண்டாடப்போகும் தமிழனுக்கு வாழ்த்துக்கள்!

Wednesday, May 03, 2006

ஓரங்கட்டேய் - 11

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

நோ கமெண்ட்ஸ்!

அருள்வாக்கு

"பாட்டாளி மக்கள் கட்சியில் 1 எம்.எல்.ஏ.வாக இருந்த இந்த கட்சியில் இன்று 20 எம்.எல்.ஏக்கள் அதிகரித்து உள்ளனர். இப்போது 31 எம்.எல்.ஏ.வாக ஆகப்போகிறோம். மேலும் மத்தியில் 6 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்த கட்சியில் சிறந்த சுகாதார அமைச்சராக அன்புமணி உலகளவில் பாராட்டப்பட்டு விருதும் வழங்கப்பட்டுள்ளது. நம் உணர்ச்சியை எவராலும் தடுக்க முடியாது.நடிப்பில் எவரும் சீண்டாமல் இருந்ததால் இன்று கட்சியை ஆரம்பித்த ஒருவரால் இந்த மண்ணை பற்றி என்ன தெரியும். இளைஞர்களை கெடுத்து கெட்ட சக்திகளை பரப்புபவர்களை நான் தேர்தலுக்கு பிறகு விடப்போவதில்லை"

- டாக்டர் ராமதாஸ்

Tuesday, May 02, 2006

புரட்சி தொகுதிகள்

அடிதடி, வெட்டு குத்து, கோஷ்டி தகராறு, தள்ளுமுள்ளு, ஆள்கடத்தல் என்றெல்லாம் விதவிதமாக வார்த்தையை போட்டு விவரிப்பதற்கு பதிலாக சிம்பிளாக 'புரட்சி'ன்னு சொன்னாலே போதும். நம்மூரில் நிறைய பேருக்கு புரிந்துவிடும். எந்த ரவுடி ஜெயிப்பான்னு மண்டையை குடையுற 'புரட்சி' தொகுதி நிலவரம் கொஞ்சம் பார்க்கலாம். வேட்பாளர் புரொ·பைல் பார்த்தால் 'எரியுற கொள்ளி' டயலாக்கை சொல்ல தோணும். வேணாம், சொல்லி சொல்லி போரடிச்சுப் போச்சு! எதை தொட்டாலும் இம்சைதாங்கிற நிலைமையில இருக்கும் இந்தப்பகுதி குடிமகன்களை காப்பாத்த ஆண்டவனை ஒரு தபா வேண்டிக்கோங்கோ!

Photobucket - Video and Image Hosting

பூம்புகார்: கற்புக்கரசி பிறந்து, கருணாநிதி கண்டுபிடிச்ச ஊராக இருந்தாலும் எப்போதும் இது எம்.ஜி.ஆர் தொகுதிதான். இப்போது சுனாமி அலையால் ஆளுங்கட்சி பக்கம் சுருண்டு கிடக்குது. எப்படியாவது பொண்ணை நிக்க வெச்சுடணும்னு நம்பிக்கையோட தொகுதிக்கு ரவுண்டு வந்த மருத்துவர் திகைச்சுப்போய் வேட்பாளரை மாத்திட்டாராம். பூம்புகார் தமிழனுக்கு சினிமா மயக்கம் போக சான்ஸ் இல்லாமல் போய்விட்டது! இன்னொரு சுனாமி வந்து, அப்போ அம்மாவே ஆட்சியில இருந்தா இன்னும் நிறைய கிடைக்குமேன்னு நினைக்கிற அளவுக்கு மக்கள் இங்கே இருக்காங்கிறது ஷாக்கான சங்கதி. ஆதரவு ஓட்டை பங்கு போடுவதில் ஆளுங்கட்சிக்குள்ளேயே அடிதடி. அ.தி.மு.கவின் அக்மார்க் ரவுடிகளெல்லாம் ஏனோ இங்கேதான் பிறந்திருக்கிறார்கள். இப்போ பிரச்னை, கிளைமாக்ஸ் நேரத்தில் களத்தில் இறங்கியிருக்கும் 'கட்டபொம்மன் பேரன்' மாயா வெங்கடேசன்தான்! மாயவரத்து சுற்று வட்டார பகுதியில் அடிக்கடி போஸ்டரில் போஸ் கொடுக்கும் இந்த இம்சை அரசனிடம் ஏகப்பட்ட காசு. ஆளுங்கட்சி ஒரு பக்கம்; மாயா தரும் சாயா ஒரு பக்கம். பா.ம.க பெரியசாமியை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

திருவிடைமருதூர்: கட்சி நிக்கலையேன்னு கட்டை விரலை கட் பண்ணிக்கிட்ட விஷயத்தை யாரு மறந்தாலும் கலைஞர் மறக்கமாட்டார். அம்மா கட்சி தொண்டன் மாதிரி ஏகத்துக்கும் விசுவாசமா இருக்கானேன்னு கலைஞர் நினைக்கவும் மாட்டார். சிட்டிங் எம்.எல்.ஏ ராமலிங்கம் கட்டை விரலையே விலைக்கு வாங்குமளவுக்கு வசதியான பார்ட்டி. இந்த டிராமாவை ஜெயா டிவி. மிஸ் பண்ணியதுதான் ஆச்சர்யம். கோ.சி.மணிக்கு அடங்காத இந்த காளை இப்போது சிலிர்த்து நிற்கிறது. 'யாருமே இல்லாத இடத்தில் எதுக்குடா டீ ஆத்துறேன்'னு விவேக் தேவர் வந்தால் பா.ம.கவை நிச்சயம் கமெண்ட் அடிப்பார். ஜாதி ஓட்டு இல்லாத இடத்தில் உடன்பிறப்புகள் அடித்துக்கொள்வதை வேடிக்கை பார்த்த பா.ம.கவின் மேலேயே இப்போது புதுக்குண்டு. பாமகவின் ஆலயமணி, விடுதலைப்புலிகளுக்கு டீசல் கடத்திய கேஸில் மாட்டிக்கொண்டு அலைபவருக்கு அடிக்கடி ஷாக் ட்ரிட்மெண்ட் கொடுப்பது அ.தி.மு.க அல்ல தி.மு.கதான்!

Photobucket - Video and Image Hosting

வேதாரண்யம் : அடித்து துரத்துதல் (மணி சங்கர் அய்யரை மட்டும்!) ஸ்பெஷலிஸ்ட், இன்னபிற சங்கதிகளை கடத்தும் ஸ்பெஷலிஸ்ட்ம் மோதுகிறார்கள். வேதாரண்யத்தின் நிரந்தர எம்.எல்.ஏவை அசைத்துப்பார்க்க சாம, பேத, தான தண்டத்தில் இறங்கியிருக்கிறார் அம்மாவின் தளபதி. இரண்டு தரப்பும் கட்சிக்காரர்களை காசினால் குளிப்பாட்டுகிறார்கள். கலைஞர் பிறந்த ஊரில் இரட்டை இலை கொடி பறக்கிறது. திருக்குவளை தப்பித்தவறி இந்த தொகுதியில்தான் வருகிறது. நாகப்பட்டினத்திலிருந்து ஒண்ட வந்திருக்கும் பிசாசை நம்புவதா அல்லது ஊர்ப்பிசாசையே நம்பித்தொலைவதா என்று மக்கள் குழப்பத்திலிருப்பதால் வேதாரண்யம் தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து துண்டிக்கப்பட்டே கிடக்கும்!

பண்ருட்டி: கிழட்டு நரிக்கும் குட்டி நரிக்கும் கல்யாணமாம் என்று ஆள்காட்டி விரலை ஆட்டிக்காட்டாததுதான் குறை. பண்ருட்டியார் பெரிய ஆளு. கருணாநிதி கூடவே இருந்து எம்.ஜி.ஆர் கட்சிக்கு ஆள் பிடித்தவர். ராஜீவ் காந்தியையும் பிரபாகரனையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு தப்பும் தவறுமாக டிரான்ஸ்லேட் பண்ணி நிறைய சாதித்தவர்! குட்டி நரியும் சாதாரண ஆளில்லை. ஆறு மாதம் அரெஸ்ட் வாரண்ட்டுக்கு டிமிக்கி கொடுத்து டெல்லியில் தலைமறைவாக இருந்துவிட்டு எலெக்ஷன் நேரத்தில்தான் ஊருக்கு வந்திருக்கிறார். சிப்காட்டில் ஸ்டிரைக் நடந்தால் வேல்முருகனுக்கு சந்தோஷம். கம்பெனியும் சரி அதில் வேலை பார்க்கிறவர்களும் சரி கட்டை பஞ்சாயத்துக்கு வீடு தேடி வருவார்கள். பிடிச்ச பாட்டு... ராஜா.. வசூல் ராஜா! கடலூருக்கு கலவர மாவட்டம் என்று நல்ல பெயர் வாங்கி தந்த நாலு பேரில் இவரும் ஒருத்தர்!

Monday, May 01, 2006

ரவுண்ட் அப் - குத்தாலம்

இதுவும் ஒரு அக்மார்க் அ.தி.மு.க தொகுதிதான். வடக்கே திருப்பனந்தாள்; தெற்கே சன்னாநல்லூர். தொகுதி போலவே எல்லா கட்சியிலும் இரண்டு துருவங்கள் உண்டு. சன்னாநல்லூர், ஸ்ரீவாஞ்சியம் பகுதியிலிருந்து வேட்பாளர்களை நிறுத்துவது இதுவே முதல் முறை. அ.தி.மு.க சார்பில் நிற்கும் வேட்பாளர் பரம சாது. சொந்த ஊரில் ஏகப்பட்ட செல்வாக்கு. நல்ல அனுபவசாலி. கட்சிக்கூட்டங்களில் ஓரமாக உட்கார்ந்து கொண்டிருந்தவரை கூப்பிட்டு சான்ஸ் கொடுத்திருக்கிறார்களாம்! வம்பு தும்புவுக்கு போகாதவர் என்பதால் சாது இமேஜ் கைகொடுக்கிறது. ஜாதி கணக்குகள் எப்போதும் தோற்றுப் போவதால் இங்கே ஜாதிக்கட்சிகளுக்கு வேலையில்லை.

Photobucket - Video and Image Hosting

திரும்பவும் தி.மு.க சார்பில் நிற்க ஆசைப்பட்டு கிடைக்காமல் தன்னுடைய மகனையே களத்தில் இறக்கியிருக்கிறார் கல்யாணம். இரண்டு முறை தேர்தலில் நின்று தோற்றுப்போனாலும் ஒரே ஒரு தடவை ஜெயித்ததால் கல்யாணத்தின் கூரை வீடு சொற்ப காலத்தில் பங்களாவான அதிசயம் நடந்தது. அவ்வப்போது கூட்டம் போட்டு தன் இருப்பை காட்டிக்கொண்டே இருந்ததற்கு கைமேல் பலன். மூன்று மாதத்திற்கு முன்னால் கட்சியில் சேர்ந்த கல்யாணத்தின் வாரிசு மேல் உடன்பிறப்புகளுக்கு ஏகப்பட்ட கோபம். இருந்தாலும் வேறு வழியில்லை. மூன்று மாதத்தில் இந்த பொடிசு அரசியலில் கடைத்தேறிவிட்டது.

கோஷ்டி பிரச்னையை சமாளிக்க கோ.சி மணிதான் பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருக்கிறார். கோ.சி. மணி மகனுக்கே சீட் கொடுக்க மறுத்த கலைஞர், கல்யாணத்தின் கோரிக்கைக்கு தலையாட்டியதுதான் கட்சிக்காரர்களின் மண்டையை குடையும் கேள்வி. பஞ்சாயத்து பண்ணுவதில் கோ.சி.மணி எக்ஸ்பர்ட். இருந்தாலும் குடும்ப அரசியலால் நிறைய பேருக்கு எரிச்சல். இப்போதைக்கு குத்தாலம் தொகுதியின் வெற்றி ஆசைமணியின் கையில்தான். அதிருப்தியிலிருக்கும் இந்த முன்னாள் எம்.எல்.ஏ, அ.தி.மு.கவின் பெரும் புள்ளி. எம்.ஜி.ஆர் காலத்து ஆள். ஆசைமணிக்கு அம்மா மேல் கோபம் வந்தால் அ.தி.மு.க இங்கே காலி!