Friday, March 12, 2004

'மக்கள் மனசு' ஒரு தினுசு!

சன் டிவி, ராஜ் டிவி, விஜய் டிவின்னு எல்லா டிவிக்களும் பத்தரை மணிக்கு அப்புறம் வரும் ஸ்லாட்டை காமெடிக்கு ஒதுக்கியதை பார்த்து ஜெயா டிவியும் தன் பங்குக்கு எல்லாரையும் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறது, பதினோரு மணிக்கு 'மக்கள் மனசு' நிகழ்ச்சியின் முலம்!

தேர்தல் நிலவரத்தை ஒவ்வொரு தொகுதிக்கும் நேரில் சென்று 'நடுநிலையுடன்' அலசுகிறார் ரவி •பெர்னார்ட். (எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!) இதில் நேத்து ராத்திரி அரக்கோணமும் மயிலாடுதுறையும்!

அரக்கோணத்தை பத்தி எது சொன்னாலும் வம்புதான். விசிலடிச்சான் குஞ்சான்னா அதாவது ரஜினியோட ரசிகன்னா இப்படித்தான் பேசுவாங்கன்னு நாம என்ன சொன்னாலும் காதுல வாங்கமாட்டாங்க!

மயிலாடுதுறைக்கு வருவோம்!

பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு தொகுதிகளிலும் அம்மாவை ஆதரித்து அலையே அடிக்குதுன்னு சொன்னபோது அடக்க முடியாமல் சிரிச்சுட்டேன்!

'பொங்கல், தீபாவளிக்கு அம்மாதான் அரிசி, சேலை, வேஷ்டி கொடுத்தாங்க. அதனால அம்மாவுக்குதான் ஓட்டு!'

'வாஜ்பாய்க்குதான் ஓட்டு!' (வாஜ்பாய்க்கு, மயிலாடுதுறை எங்கே இருக்குன்னு தெரியுமா?)

'தாமரைக்கு என் ஓட்டு' (தொகுதியை அம்மா பாஜகவுக்கு ஒதுக்கலைங்கிறதை கேள்வி கேட்டவராவது
ஞாபகப்படுத்தியிருக்க கூடாதோ?)

அம்மா ஆட்சியில ரோடு போட்டிருக்காங்கங்கிறதில ஆரம்பிச்சு எல்லாமே அபத்தமான காரணங்கள். பெரும்பாலும் கிராமப்பகுதியை சேர்ந்த மக்கள்தான் கருத்து சொல்வதிலும் முன்னுக்கு நின்றார்கள்?!

சீர்காழி பகுதியை சேர்ந்த ஒரு டாக்டர் மழை நீர் சேகரிப்பு திட்டம் பற்றி புகழ்ந்தது மட்டும்தான் இயல்பாக இருந்துச்சு!

நிகழ்ச்சியின் முடிவில் வழக்கம் போல 'மக்கள் தீர்ப்பு' அம்மாவுக்கு வெற்றிமுகம்னு சொன்னது.

அட போங்கப்பா!

சரி, நிஜமாவே மயிலாடுதுறையில் என்னதான் நிலைமை?

அதிமுகவின் ஓ.எஸ் மணியனை கட்சிக்காரங்களுக்கு மட்டும்தான் தெரியும். ஆனா மணிசங்கர் அய்யரை மக்களுக்கும் தெரியும் என்ற குமுதம் ரிப்போர்ட்டரின் குறிப்புதான் ஞாபகத்துக்கு வருது!

எந்தக்கூட்டணியிலும் இல்லாமல் 1996 தேர்தலில் சுயேச்சையாக நின்றே 60,000 ஓட்டு வாங்கிய மணிசங்கர் அய்யருக்கு சகல கட்சிகளின் ஆதரவோடு ஓட்டு வாங்கி ஜெயிப்பதில் பெரிய கஷ்டமில்லை. இம்முறை 'அம்மா ஆட்கள்' அடிச்சுட்டாங்கங்கிற அனுதாப அலை வேறு!

திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயமாக ஜெயிக்க வாய்ப்புள்ள ஒரே தொகுதியாக பலராலும் அடையாளம் காட்டப்படுவது மயிலாடுதுறை மட்டுமே.
தப்பித் தவறி காங்கிரஸ் மத்தியில் ஆட்சியைப் பிடித்தால் மணிசங்கருக்கு மினிஸ்டர் பிரமோஷன் நிச்சயம் என்றும் சொல்லப்படுகிறது. ஊர் முழுக்க தேர்தல் விளம்பரங்களில் ஆளுங்கட்சியின் ஆதிக்கம் அதிகமாக இருந்தாலும் மணிசங்கர் அய்யருக்கு விளம்பரம் எதுவும் தேவையில்லை.

பெருவாரியான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் 'மணி' குரல் ஒலிக்க வாய்ப்பு அதிகம். அதற்காக அய்யர் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம்.... திரும்பவும் மயிலாடுதுறையை துபாயாக மாற்றுவேன்னு அச்சுப்பிச்சு மாதிரி உளறாம இருக்கிறதுதான்!