Thursday, February 17, 2005

கண் பேசும் வார்த்தைகள்

மாயவரத்தில் வெங்கட்ராமன் டாக்டரை தெரியாதவர்கள் இருக்கமுடியாது. அதுவும் திவான்பகதூர் தி.அரங்கச்சாரியார் தேசீய மேல்நிலைப்பள்ளியில் படித்தவர்களுக்கு அந்த குள்ளமான, குண்டான உருவமும் கீச்சு குரலையும் மறக்கவே முடியாது. சின்னவயதில் உடம்பெல்லாம் ஊதிப்போய் புசுபுசுவென்று என்ன வியாதியென்றே தெரியாமலிருந்த எனக்கு ஏதோதோ ட்ரீட்மெண்ட் கொடுத்து இந்த நிமிஷம் வரை உயிரோடு இருக்க காரணமாக இருக்கிறவர். எந்த வியாதிக்கும் ஊசியை கையிலெடுக்காத டாக்டர்; ஆனால் சாதாரண காய்ச்சலுக்கே கூடை நிறைய மாத்திரையை எழுதிக்கொடுத்து பர்ஸை காலி பண்ணுகிறவர். ஸ்கூலுக்கு டோனேஷன் கொடுக்க வசதியில்லாதவர்களுக்கு பிரிஸ்கிரிப்ஷன் பின்னாடி அவர் கிறுக்கி எழுதி தருவது நேஷனல் ஹைஸ்கூல் அக்கெளண்டடுக்கு நன்றாக புரியும். கிளினிக், ஸ்கூல் தவிர அவ்வப்போது லயன்ஸ் கிளப் அலுவலகத்திலும் அன்னாரை நான் பார்த்ததுண்டு.



நிறைய பேருக்கு தெரிந்த நல்ல டாக்டர்தான். ஆனால் தெரியாத விஷயம், முப்பது கண் பார்வையற்ற குழந்தைகளை வைத்துக்கொண்டு அவர் நடத்தும் காப்பகம்தான். புதுத்தெருவிலிருக்கும் தருமபுர ஆதினத்தின் கட்டடித்தில்தான் காப்பகம் இருக்கிறது. முப்பது பேருக்கும் கண்பார்வை சரிவர தெரியாது என்பதை தவிர பெற்றோர்களால் கைவிடப்பட்டவர்கள் என்கிற ஒற்றுமையும் உண்டு. ஆறு வயதில் ஆரம்பித்து பதினெட்டு வயது வரை விதவிதமான பையன்கள். எல்லோரும் தவறாமல் ஸ்கூலுக்கு போய் படிக்கிறார்கள். போட்டிருக்கும் துணியிலிருந்து படிக்கும் ·பெரயில் எழுத்து புத்தகம் வரை எல்லாமே டாக்டரின் சொந்தப் பணம்தான். முப்பது பெட்ஷீட்களை கொண்டு போய் கொடுப்பதற்காக இரண்டு முறை அலைந்து டாக்டரிடம் பர்மிஷன் வாங்க வேண்டியிருந்தது. எதைக் கொடுத்தாலும், யார் கொடுத்தாலும் வாங்கக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவு.



காலை எட்டரை மணிக்கே இவர்களின் ஊர்வலம் ஆரம்பமாகிவிடுகிறது. ஒருவர் கையை இன்னொருவர் பிடித்துக்கொண்டு வரிசையாக தெருவில் நடக்க ஆரம்பிக்கின்றனர். புதுத்தெரு, மாயூரநாதர் கீழ வீதி வழியாக நேஷனல் ஹைஸ்கூல். திரும்பவும் சாயந்திரம் ஒருவர் கையை இன்னொருவர் பிடித்தபடி மீண்டும் காப்பகம். ஆதரவற்ற குழந்தைகளை வைத்துக்கொண்டு காப்பகம் நடத்துவது இன்னொரு பிழைக்கும் வழியாகிவிட்ட காலத்தில் யாரையும் சார்ந்திருக்காமல், யாரிடமும் கையேந்தாமல் தனியரு மனிதராக காப்பகம் நடத்துவதற்கு நிறைய மனது வேண்டும். அக்கம்பக்கத்து மக்களும் தங்களது பிறந்தநாள், திருமணநாளன்று இந்த கண்பார்வையற்ற சிறுவர்களுக்கு ஏதாவது செய்ய ஆசைப்பட்டு விடாப்பிடியாக டாக்டரிடம் அலைந்து பர்மிஷன் வாங்குவது ஆச்சரியமாக இருக்கிறது.



கண்பார்வையற்றவர்களெல்லாம் சென்னையில்தான் அதிகமாக இருக்கிறார்களோ என்கிற சந்தேகம் எனக்கு ரொம்பநாளாக உண்டு. எலெக்டிரிக் டிரெயின், பஸ்ஸ்டாப் என நிறைய இடங்களில் தட்டுத் தடுமாறும் இவர்களை சென்னையில்தான் அதிகமாக பார்க்க முடிகிறது. மூன்றில் இரண்டு பேராவது உதவி செய்ய ஓடி வருகிறார்கள். எதற்காக கஷ்டப்பட்டு பஸ் பிடித்து, ரயில் ஏறி அலைகிறார்களோ என்று சில சமயங்களில் கேட்கத் தோன்றும். நிறைய பேர் இப்போதெல்லாம் பிச்சையெடுக்கப் போவதில்லை என்பது ஆறுதலான விஷயம். கைவசம் ஏதாவது ஒரு தொழில் இருக்கிறது. அதேபோல பார்வையற்றவர்களை பார்க்கும்போது உச் கொட்டுவர்களெல்லாம் குறைந்திருக்கிறார்கள். அவர்களும் நம்மை மாதிரிதானே என்கிற மனப்பக்குவம் வந்துவிட்டதா அல்லது இரக்க மனப்பான்மையே போய்விட்டதா.. புரியவில்லை!



டாக்டரின் காப்பகத்திலிருந்து போது பழைய ஞாபகம். என்னோடு ஒன்பதாம் கிளாஸில் கொஞ்ச நாள் படித்த அந்த கண்தெரியாத நண்பருக்கு இந்த உதவிகளெல்லாம் கிடைத்திருந்தால் படிப்பை தொடர்ந்திருப்பார். அபாரமான ஞாபக சக்தி. சக மாணவன் பாடத்தை படிக்க படிக்க கிரகித்துக்கொள்ளும் மூளை. செலவு செய்ய ஆளில்லாத காரணத்தால் படிப்பு பாதியிலேயே நின்று போனது. இப்போது எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால், நிச்சயம் மோசமான நிலையில் இருக்க மாட்டார். எஸ்டிடி பூத்தில் உட்கார்ந்திருக்கும் பார்வையற்றவர்களை பார்க்கும்போதெல்லாம் அவர் ஞாபகம்தான் வரும். அப்படியே எங்கேயாவது உட்கார்ந்திருந்தால் கூட நாமாக பார்த்து அடையாளம் கண்டுகொண்டால்தானே உண்டு. உலகம் ரொம்ப சின்னதுதான். என்றைக்காவது ஒருநாள் என் கண்ணில் மாட்டாமலா போய்விடுவார்?

Monday, February 14, 2005

அ.மி - அரை செஞ்சுரி

கடந்த பத்தாண்டுகளாகத்தான் நான் பேட்டி காணக்கூடியவனாக நினைக்கப்பட்டிருக்கிறேன். பேட்டி காண வருபவர்கள் ஒருவர் தவறாமல் அவர் காணும் பேட்டி மிகவும் வித்தியாசமானது என்றுதான் சொல்வார். ஆனால் ஓரே மாதிரிக் கேள்விகள். அல்லது ஓரே மாதிரிப் பதில்களைப் பெறக்கூடும் கேள்விகள். உண்மையில் இந்தப் பேட்டிகளில் பேட்டி காணப்படுபவரை விட பேட்டி காண்பவரின் நோக்கம்தான் நன்கு வெளிப்படுகிறது. ஆரம்பத்தில் அச்சில் என்னுடைய பேட்டிகளைக் கண்டு நான் திகைத்துப் போயிருக்கிறேன். இப்போது பதில்களை எழுதிக் கொடுத்துவிடுவது அதனால்தான்.

- அசோகமித்திரன். நன்றி - நவீன விருட்சம்



எழுத்துலகில் அரை செஞ்சுரி அடித்திருக்கும் அசோகமித்திரனின் எழுத்தில் மட்டுமல்ல பேச்சிலும் தன்னடக்கம்தான். என் மனைவி இதையெல்லாம் பார்த்தால் என்ன இது என்று அற்பமாக பார்ப்பாரே என்பதை முகபாவத்துடன் அவர் சொன்ன விதம் காலாகாலத்துக்கும் மறக்காது. அந்த நகைச்சுவையும், அலங்காரமில்லாமல் உள்ளதை உள்ளபடியே சொல்லும் நடையும் வாசகர்களை மட்டுமல்ல ஆயிரக்கணக்கான எழுத்தாளர்களையும் கவர்ந்திருக்கிறது. அசோகமித்திரன் நிச்சயம் ரைட்டர்ஸ் ரைட்டர்தான்!

ஏகப்பட்ட இரைச்சலின் பின்னணியில் அசோகமித்திரனை படிக்க வைத்ததும், அவரது முகத்துக்கு நேராக காமிரா ஆங்கிள் வைத்து சினிமாத்தனம் காட்டியதும் அம்ஷன்குமாரின் குறும்படம் கொடுத்த எரிச்சல். அசோகமித்தரன் கையெழுத்துப் போடும் ஸ்டைலிலேயே டைட்டிலை அமைத்தது வித்தியாசமான ஐடியா. ஆடியன்ஸ் எல்லோரும் குறும்படத்தை கவனித்துக்கொண்டிருந்த நேரத்தில் துறுதுறவென்று இருந்த தனது பேரனை கட்டுக்குள்க் கொண்டுவருவதிலேயே அசோகமித்திரன் சிரத்தையாக இருந்தார்.

அசோகமித்திரனின் எழுத்துநடையிலேயே ஒரு மினி லெக்சர் கொடுத்து அசத்தியது சுந்தர ராமசாமி! இலக்கிய உலகத்தில் அபூர்வமான நேரம் அது. சு.ராவின் ஸ்டைலான எள்ளல் கொஞ்சம் தூக்கலாக இருந்தது என்கிற முணுமுணுப்புகளை ஒதுக்கிவிடலாம். எத்தனையோ முறை கமல்ஹாசன் என்கிற படைப்பாளியை பாராட்டியிருந்தாலும் பரஸ்பரம் ரஜினி என்கிற படைப்பாளியை பாராட்ட கமல்ஹாசனுக்கு இருக்கிற தயக்கத்தையெல்லாம் பார்க்கும்போது இதெல்லாம் ச்சும்மா!

அவசரமாக பேசினாலும் ஆழமாக பேசியது பால்சக்கரியா. மலையாளிகளை விட தமிழ்நாட்டுக்காரங்க எவ்வளவோ மேல் என்கிற ரீதியில் அவர் எழுதியிருந்த காலச்சுவடு கட்டுரைதான் ஞாபகத்துக்கு வந்தது. அசோகமித்திரனின் 'தண்ணீர்' பற்றி அழகான ஆங்கிலத்தில் பேசினார். அடிக்கடி சென்னை தண்ணீரை விரும்பி வாங்கி குடித்தார்....அபூர்வ பிறவி!

அசோகமித்திரன் டீ மட்டும்தான் சாப்பிடுவார்; சுந்தர ராமசாமி காபி மட்டுமே சாப்பிடுவார் என்கிற அதிமுக்கிய பிரத்யேக தகவ¦ல்லாம் கைவசமுண்டு. எழுதினால் அடிக்க ஆள்வரும் என்பதால் எஸ்கேப்பாகிவிடுகிறேன். நேரமில்லாததால் ஞானக்கூத்தனின் கவிதைக்கான பொழிப்புரை கிடைக்கவில்லை. மேடையிலிருந்த பரபரப்பில் கவிஞர் வைத்தீஸ்வரனின் பேச்சையும் கவனிக்க முடியவில்லை. ஆறு மாதங்களாக தேடிக்கொண்டிருந்த அழகிய சிங்கர் வசமாக என்னிடம் மாட்டிக்கொண்டார். நிறைய இணைய தலைமுறையை பார்த்தில் வந்த ஆச்சர்யம் அவரது முகத்தில் மிச்சமிருந்தது. கூடிய சீக்கிரம் இணைய தலைமுறைக்கு நவீன விருட்சமும் வழிகொடுக்கும் என்று நம்பலாம்.

பாராட்டு விழா நடக்கும் நாளில் அசோகமித்திரன் பற்றி 'கதாவிலாச'த்தில் வந்தது, நம்மைப் போலவே எஸ்.ராமகிருஷ்ணனுக்கும் ஆச்சர்யம்தானாம். உருவத்திலும் பேச்சிலும் படு இளமையாக இருக்கிறார் பிரபஞ்சன். இரா.முருகன், வெங்கடேஷ், சோம. வள்ளியப்பன் தலைமையில் இணைய நண்பர்கள் ஒருபக்கம். வழக்கம்போல பிரகாஷ்ஜி, சுரேஷ்ஜி, சித்ரன், சுவடு ஷங்கர் எல்லோரும் ஆஜர். புதிதாக அறிமுகமான டோண்டு ராகவனையும் உருப்படாதது நாராயணணையும் (என்ன தலைப்பைய்யா அது?) நேரில் பார்த்தது கூடுதல் போனஸ். எதிர்பார்த்திருந்த முக்கியமான இணைய நண்பர்களை காணவில்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கு கிழக்கு பதிப்பகத்தில் அர்ச்சனை ஒன்று காத்திருக்கிறது என்பதை முன்கூட்டியே அறியத்தருகிறேன்.

நிகழ்ச்சி ஆரம்பித்து கவிஞர் வைத்தீஸ்வரன் எல்லோரையும் வரவேற்றுப் பேசியதும் ஒரு பத்துப் பேர் பின் வரிசையில் வந்து உட்கார்ந்து கொண்டார்கள். அடுத்துப் பேச வந்தது காலச்சுவடின் கர்த்தா. திடீர் விருந்தினர்கள், சு.ராவின் பேச்சிற்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ் காட்டி உற்சாகம் குறையாமல் பார்த்துக்கொண்டார்கள். சு.ரா பேசி முடித்து மேடையை விட்டு கீழிறங்கி உட்கார்ந்து கொண்டதும் பின்வரிசையே காலியாகிவிட்டது. டயமாயிடுச்சுன்னு கிளம்பிட்டாங்களோ என்னவே?!

கொசுறு - எளக்கியத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லைன்னு இன்னும் யாராவது சொல்லிட்டு இருக்காங்களா?!