Friday, June 04, 2004

துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன்

சோ எடுத்த தேர்தல் நிலைப்பாடு பற்றிய பொது ஜனத்தின் கமெண்ட்

'மக்கள் இந்த ஆள் ஏன் எழுதறான். எதுக்காக எழுதறான். யாருக்காக எழுதறான்னே இத்தனை நாள் புரியாம இருந்துச்சு. இப்போதானே தெரியுது. தானே எழுதி, தானே படிச்சுக்கறான்யா அவன்!'

*****************************************************************

பொன்னையன் -

'ரேஷன் கடையில் அரிசி இலவசம், மின்சாரக் கம்பியிலிருந்து யார் வேண்டுமானாலும் கரண்ட் இழுத்துக் கொள்ளலாம், அரசு ஊழியர்கள் வேலைக்கு வரத் தேவையில்லை-சம்பளம் மாதாமாதம் மணியார்டரில் அனுப்பி வைக்கப்படும், ஆடு கோழி பலி போல யாருக்காவது வேண்டுதால் இருந்தால் அவர்கள் நரபலி கொடுக்கலாம், போன் செய்தால் அரசு பஸ் வீடு தேடி வரும்- பயணம் இலவசம்ம்னு நீங்க போட்ட உத்தரவையெல்லாம் ஒரு பட்டியலா எழுதிட்டேம்மா... பாக்கறீங்களா?'

ஜெ -
'இதையெல்லாம் செஞ்சு அடுத்த எலெக்ஷன்ல ஜெயிச்சா, சரி. ஜெயிக்கலேன்னாலும் கவலையில்லை. அடுத்து ஆட்சிக்கு வர்றவங்க நல்லா மாட்டிகிட்டு சாவட்டும்! நமக்கென்ன!'

Thursday, June 03, 2004

கலைஞருக்கு முத்துவிழா!




முத்துவேலர் கருணாநிதிக்கு இன்று முத்துவிழா. வாழ்த்த வயதில்லையென்றாலும் தமிழினத்தின் மூத்த தலைவரை வணங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!

Cross Talk!

நேத்து இவன் ஏணி
இன்று இவன் ஞானி
ஆளை கரை சேர்க்க
ஆடும் நல்ல தோணி!

சொந்தமே ஒரு வானவில்
அந்த வர்ணம் கொஞ்ச நேரம்...
வேப்பிலை கருவேப்பிலை
அது யாரோ...
நான் தானோ?

Tuesday, June 01, 2004

அடுத்த '10' படங்கள்!

முன்னாடியே நான் ஜகா வாங்கிட்டேன். ரஜினி படங்களை தவிர நான் அதிகமா வேற சினிமா எதுவும் பார்த்ததில்லைன்னு! நான் பார்க்காத நல்ல படங்களின் காட்சிகள் டிவியில் வரும்போது எனக்கும் ஆர்வமாகத்தான் இருக்கும். முக்கியமாக காமெடி காட்சிகள்! நான் போட்ட லிஸ்ட் எல்லாத்துக்கும் உள்ள ஒரே ஒத்துமை... எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்க சலிக்காததுங்கிற ஒரே விஷயம் தான்!

இப்போ டாப் டென்!

10. ஸ்ரீராகவேந்திரர்

தமிழ் சினிமாவில் பக்திப் படம் என்றாலே சிவாஜி நடித்த புராணப் படங்களும், ராமநாரயணன் காலத்து கிராபிக்ஸ் கலக்கல்களும்தான் ஞாபத்துக்கு வரும். பெரும்பாலும் அவை கடவுளர்களின் மகியையும், பக்தர்களுக்கு தரும் சோதனைகளையுமே மையப்படுத்தியிருப்பார்கள். பக்திப் படமாக இருந்தாலும் அவற்றிலும் டூயட், சண்டை, காமெடிக்கு பஞ்சமிருக்காது. மகான்கள், ரிஷிகள் பற்றி வந்த படங்களெல்லாம் ரொம்ப கம்மி. முடிந்த அளவு ராகவேந்திரரின் அற்புதங்களை தவிர்த்துவிட்டு இயல்பாக சொல்ல முயற்சித்த வகையில் இது வித்தியாசமான படம். பதினெட்டு வரிகளில் ராமகாவியத்தை வாலி சுருக்கமாக சொல்லி கலக்கியிருப்பார்...ஜேசுதாஸின் உதவியுடன்!

9. வீடு

சொந்த வீடு கட்டும்போது எல்லோரும் அவசியம் பார்க்கவேண்டிய படம்னு இதை சொல்லலாம். கல்யாணம் செய்வதை விட கஷ்டமான காரியம் வீடு கட்டுவது. ஒரு வீடு கட்டும்போது என்னவெல்லாம் நடக்கும் என்பதை ரொம்ப சிம்பிளாக காட்டி நடப்பதை அப்படியே காமிராவில் பிடிப்பது என்கிற விஷயத்தில் தெளிவாக இருந்து பாலுமகேந்திரா அசத்தியிருப்பார். தள்ளாத வயதில் வீடு கட்டுவதற்காக தானும் கஷ்டப்பட்டு கலங்க வைக்கும் சொக்கலிங்க பாகவதரின் நடிப்பு ஏ ஒன். கிளைமாக்ஸில் ஆசையெல்லாம் நிராசையாகும்போது மனசு கொஞ்சம் பாரமாகும்போது கொஞ்சம் கஷ்டமாகத்தானிருக்கும்!

8. மூன்று முடிச்சு

கமலும் ஸ்ரீதேவியும் துணி துவைக்கும் காட்சியிலேயே கதையின் முடிச்சை அவிழ்த்துவிடுகிறார் கே.பி. தமிழ் சினிமாவின் வில்லனை அழாத, பயப்படாத, நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்காத பாத்திரமாகவே காட்டி பழக்கப்படுத்திவிட்டவர்களுக்கு யதார்த்தமான, வித்தியாசமான நடிப்பின் மூலம் மக்களிடமிருந்து கைதட்டல் வாங்கிய ரஜினி ஒரு பெரிய ஆச்சரியமாக இருந்தார் என்றால் அதற்கு காரணம் கே.பி டச்! 'மன வினைகள்' கண்ணதாசனும் பின்னணி இசையில் எம்.எஸ்.வியும் அசத்தியிருப்பார்கள்.

7. உன்னால் முடியும் தம்பி


வெறும் நல்ல விஷயங்களை மட்டுமே பாஸிடிவாக சினிமாவில் காட்ட முடியாது என்கிற நினைப்பை கே.பியும், கமலும் தூக்கி கடாசியிருப்பார்கள். கமலின் உதயமூர்த்தி பாத்திரம் மீது எனக்கொரு பொறாமையே உண்டு. ஏதோ முடிக்கவேண்டுமே என்பதற்காக வரும் கிளைமாக்ஸை போல இல்லாமல் தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து அசத்தியிருப்பார்கள். 'முதல்வனு'க்கு அடுத்தது ரஜினி மிஸ் பண்ணிய படம் எதுவென்றால் இதைத்தான் நான் சொல்வேன். கடைசிக்காலம் வரைக்கும் மரம் நடுவதேயிலேயே குறியாக இருக்கும் அந்த தாத்தா கேரக்டர் இன்னும் மனசுக்குள்ளே இருக்கிறது.

6. முகம்மது பின் துக்ளக்

தமிழ்நாட்டு அரசியல் பத்தி அலட்டிக்காமல தெரிஞ்சுக்கணும்னா இதை அவசியம் பார்த்தே ஆகணும். பக்கா அரசியல் படத்தையும் படு காமெடியாக தரும் துணிச்சல் சோவுக்கு மட்டுமே உண்டு. இப்ப மட்டுமல்ல ஒரு 30 வருஷம் கழிச்சு பார்த்தாலும் படத்தின் காட்சிகள் அன்றைய அரசியலுக்கு பொருத்தமாகத்தான் இருக்கும். எந்தக் கட்சியையும் விட்டுவைக்காமல் சகட்டு மேனிக்கு சகலரையும் சோ வறுத்தெடுத்த காலம் அது!

5. தண்ணீர் தண்ணீர்


இருபது வருஷத்துக்கு முந்தி வந்த தமிழ் சினிமாவின் 'லகான்'. எத்தனையோ கிராமத்து ராசாக்கள் இருந்தாலும் கே.பியின் இந்தப்படம் மாதிரியான நிஜமான கிராமத்தை யாருமே காட்டியதில்லை. தண்ணீர் பிரச்சினையை பற்றி மேடையில் முழுங்குபவர்கள் அவசியம் பார்க்கவேண்டிய பாடம். கோமல் சுவாமிநாதனின் டயலாக்கும் அவரது டயலாக் டெலிவரியும் மெச்சப்பட வேண்டியவை. ஒரு குடம் தண்ணீரை சினிமா மோகத்தால் சிதறடித்துவிட்டு அழும் சிறுவன் வரும் ஆரம்பக்கட்சிகளில் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும். ஒரு நெகடிவ் அப்ரோச் இருந்தாலும் ரியாலிடி சினிமா என்ற பெயரில் நம்மை இம்சை படுத்துபவர்களுக்கு இதை அவசியம் பார்க்க வேண்டிய படம்.

4. பாபா


'உழைப்பாளி'யிலேருந்து 'பணக்காரன்' வரைக்கும் எல்லாமும் ஓடியிருக்கும்போது இது ஏன் தோத்துப்போனதுங்கிறதுக்கு இன்னிக்கு வரைக்கும் உருப்படியான பதில் கிடைக்காதது ஒரு ஆச்சரியம். 'அருணாச்சல'த்தோடு வந்திருக்கவேண்டிய படம் ரொம்ப லேட்டா வந்ததுதான் பிரச்சினையோ? ஆன்மீகம்னா ஏதோ பெரிய விஷயம்; அதுக்கெல்லாம் ரொம்ப கஷ்டப்படணும்னு சொல்லி ஓதுங்கிறவங்கதான் ஜாஸ்தி. இப்படியும் ஆன்மீகத்தை நடைமுறை வாழ்க்கையில கொண்டுவரலாம்னு ஒரு அருமையான விஷயத்தை சொல்ல வந்த படம். எந்தப் படத்திலும் இல்லாமல் இந்தப்படத்தில்தான் ரஜினி நிறைய விஷயங்களை ரசிகர்களுக்கு சொல்லி ரொம்பவும் மெனக்கெட்டிருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிஞ்சது!

3. தில்லு முல்லு


ஓரு ஆக்ஷன் ஹீரோவை நம்பி தம்மாத்துண்டு மீசையை வெச்சுக்கிட்டு ஆள்மாறாட்டம் காமெடியை இந்தியிலிருந்து இறக்குமதி பண்ணி வயிறு குலுங்க சிரிக்க வைத்த கே.பியின் வித்தியாசமான படம்! விசுவின் வசனமும் ரஜினியின் நடிப்பும் கே.பியை ஓரங்கட்டியதை சொல்லியே ஆகவேண்டும். சைலண்டாக எழுந்திரிச்சு கண்ணாடியின் முன்னாடி நின்னு உனக்கு இது தேவையான்னு கேட்டு தலையணையில் முட்டிக் கொண்டு ரஜினி காட்டும் டென்ஷன் படு நேச்சுரல்...இன்னிக்கும்!

2. பாட்ஷா

ரஜினி என்கிற தனிப்பட்ட நடிகரின் செல்வாக்கை உச்சிக்கு உயர்த்திய படம். ரஜினி ரசிகர்களின் ஓட்டுமொத்த ஒரே சாய்ஸ். 'ஹம்' அளவிற்கு பண்ணினாலே பெரிய விஷயம்னு நினைச்சிட்டிருந்தவனின் புருவத்தை உயர வைத்தது மட்டுமல்லாமல் எப்போது பார்த்தாலும் பூஸ்ட் குடிச்ச எபெக்டை தரும் ஒரே படம். ரசிகர்களை தாண்டி மக்களையும் எனர்ஜிடிக்கா உணர வைத்து இளைய தலைமுறை நடிகர்களுக்கு பெரிய இன்ஸ்பிரஷேனாக இன்னும் இருக்கும் படம்.

1. முள்ளும் மலரும்

புரட்சிகரமான கதையமைப்போ, இழுவையான காட்சிகளோ இல்லாத தமிழின் முழுமையான யதார்த்த சினிமாவாக இதைச் சொல்லலாம். சண்டைக் காட்சியிலிருந்து சோகக் காட்சி வரை எதையும் மிகைப்படுத்தாமல் எப்போது பார்த்தாலும் உறுத்தாத ஒளியமைப்பு நம்முடைய பேரனையும் நிச்சயம் ரசிக்க வைக்கும். மகேந்திரன், ரஜினிகாந்த், இளையராஜா, பாலுமகேந்திரா, ஷோபா என பல பெரிய கைகளின் திறமைக்கு முழு தீனி போட்ட படம். இதைப் பத்தி அதிகமாக எழுதவேண்டிய அவசியமேயில்லை. படத்தை ஓட வைத்ததற்கு எம்ஜிஆரிலிருந்து கமல் வரை எல்லோருக்கும் நன்றி சொல்லியாகவேண்டும்!