Wednesday, December 22, 2004

காலத்தின் கோலம்



எமர்ஜென்ஸி வார்டில் இருக்கும் பேஷண்ட் மாதிரி இழுத்து கட்டிவிட்ட மப்ளரையும் மீறி வரும் கடுங்குளிரை தாங்காமல் அப்படியே போர்வையை உடம்பில் சுத்திக்கொண்டு அம்மாவோடு களமிறங்கி, காய வைத்த காபி பொடியை தூவி விட்ட காலமெல்லாம் நினைவுக்கு வருகிறது. கோலம் போடுவது என்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல. சின்ன வயதில் குடியிருந்த தெருவில் சொற்ப வீடுகளென்றாலும் எல்லோருடைய வீட்டிலும் கலர் கலரான கோலங்கள் காணக் கிடைக்கும். கலரில் கோலம் போடுவதற்கு அம்மாவுக்கு வராது. ஆனால், சிக்கலான மாவு கோலத்தையே மணிக்கணக்கில் சிரத்தையாக போடுவாள். பெரும்பாலான நாட்கள் கலர் இல்லாமல் மாவு கோலமாக இருப்பதால் சக நண்பர்களின் டெய்லி விசிட்டில் எங்கள் வீட்டு கோலம் வரவே வராது. எங்க அம்மா மாதிரி யாருக்கும் சிக்கலான கோலம் போட வராது என்று நான்தான் வலியப் போய் சொல்லி 'கொள்கை பரப்பு செயலாளர்' வேலை பண்ணுவேன். அதெல்லாம் அந்த காலம்.



கொஞ்ச காலத்தில் அந்த மாவு கோலத்தில் இருக்கும் ஆர்வமும் போய், மகள் போடும் கோலத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள் அம்மா. உடன்பிறப்புக்கோ முதல்நாள் ராத்திரியே பேப்பரில் பிராக்டீஸ் பண்ணிக்கொண்டு களத்திலிறங்குமளவுக்கு ஆர்வம். இப்போது குடியிருக்கும் தெருவில் யாருக்கும் கோலம் போடுவதில் பெரிதாக ஆர்வமில்லை. அதனால் போட்டியில்லாமல் ஏதோ பெயருக்கொரு கோலம். நாளைக்கு என்னவெல்லாம் மாறப்போகிறதோ?



மார்கழி ஆரம்பிச்சு இவ்வளவு நாள் ஆகியும் இன்னும் எங்க பேட்டையில் ஒரு கலர் கோலத்தை கூட கண்ணில் பார்க்க முடியவில்லை. போன வாரம் நங்கநல்லூர் போய்விட்டு பேட்டை திரும்ப ராத்திரி பதினோரு மணியாகிவிட்டது. அந்த ராத்திரி நேரத்திலும் சீரியல் பார்த்துவிட்டு தாய்க்குலங்கள் சிரத்தையாக கோலம் போட்டுக்கொண்டிருந்தார்கள். ராத்திரியே 'முறைவாசல்' பண்ணி கோலம் போட்டுவிட்டு படுத்துவிடுவதுதான் சிட்டி ஸ்டைலாம்! கஷ்டப்பட்டு அம்மா போடும் கோலத்தை உடன்பிறப்பு கடைக்குட்டி பத்தே நிமிஷத்தில் சைக்கிள் விட்டு அழித்த காலம் நினைவுக்கு வருகிறது. சிட்டி அம்மாக்கள் போடும் கோலம் எப்படியும் பத்து மணி நேரமாவது இருக்குமே!

காலம் காலமாக பின்பற்றி வரும் கலாசாரத்தை விட்டுவிடாமல் இப்போதைய லை·ப் ஸ்டைலுக்கு ஏத்த மாதிரி பின்பற்றும் நம்மூர் சிட்டி அம்மாக்களை நினைத்தால் பெருமையாத்தான் இருக்குது!

Monday, December 20, 2004

பெரியாரும் தமிழிசையும்

"தமிழன் தான் நுகரும் இசையை, ‘தமிழில் இசை, தமிழில் பாடு, தமிழர்களைப் பற்றித் தமிழர்களுக்கு ஏற்றதைத் தமிழர்களுக்குப் பயன்படுமாறு பாடு’ என்கின்றான். அதை யார்தான் ஆகட்டும், ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? ஏன் குறை கூறவேண்டும் என்று கேட்கிறேன். அதிலும் தமிழன் இப்படிக் கேட்பதை - தமிழனால் தமிழனல்லாதவன் என்று கருதப்பட்டவன், ஏன் மறுக்க வேண்டும்? இது மிக மிக அதிகமானதும், தமிழனால் மிக மிக வருந்தத்தக்கதுமாகும்.

தமிழன் - தமிழ் மக்கள், தமிழில் பாட்டுக் கேட்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். பணம் கொடுப்பவன் , தனக்குத் தமிழ்ப்பாட்டுப் பாடப்பட வேண்டுமென்று ஆசைப்படுகிறான்; பாட்டுக்கேட்பவன் தமிழில் பாட்டுப் பாடவேண்டும் என்று ஆசைப்படுகிறான். இந்த ஆசையில் பழந்தமிழர் அல்லாதார் அதை மறுக்கவே, குறைகூறவோ குற்றம் சொல்லவோ எப்படி உரிமையுடையவர்கள் என்று கேட்கிறேன்.

‘தமிழரென்றும், தமிழரல்லாதவர் என்றும் பேதம் பாராட்டக்கூடாது’ என்பதா கத் தமிழர்களுக்கு அறிவுரை கூறும் இந்தப் பெருமான்களே, ‘தமிழில் பாடவேண்டும் என்பது பொது நலத்துக்குக் கேடு, கலைக்குக் கேடு, கலைநலத்துக்குக் கேடு’ என்று சொல்லவந்தால் - இவர்கள் உண்மையில் தமிழர்- தமிழரல்லாதவர் என்கின்ற உணர்ச்சியைக் குறையச் செய்பவர்களாக, அல்லது நெருப்பில் நெய்யை ஊற்றி எரியச் செய்யும்படியான மாதிரியில் வளரச் செய்பவர்களா என்று கேட்கிறேன். அன்றியும், இப்படிப்பட்ட இவர்கள் தங்களைத் தமிழர்களென்று சொல்லிக்கொள்ளக்கூடுமா? தமிழில் பாடினால் இசை கெட்டுப்போகும் என்றால், மேற்கூறிய தமிழர் அல்லாத தோழர்களைவிட இராஜா சர்.அண்ணாமலை செட்டியார், சர்.சண்முகம் செட்டியார் போன்றவர்கள் குறைந்த அளவு கலை அறிவோ பொது அறிவோ உடையவர்கள் என்பது இவர்கள் எண்ணமா என்று கேட்கிறேன்.

காது, கண், மனம் ஆகியவை எல்லா விஷயங்களுக்கும் எல்லோருக்கும் ஒன்றுபோல் இருக்க முடியாது என்பது அறிஞர் ஒப்பமுடிந்த விஷயமாகும்.
‘தமிழில் பாடு!’ என்றால், சிலர் - அதுவும் ஒரு வகுப்பாரே பெரிதும் ஆட்சேபணை சொல்ல வந்ததாலேயே , ‘தமிழ் இசை இயக்கம்’ வகுப்புத் துவேஷத்தையும் உண்டு பண்ணக்கூடிய இயக்கமாகவும், பலாத்காரத்தை உபயோகித்தாவது தமிழ் இசையை வளர்க்க வேண்டிய இயக்கமாகவும் ஆக வேண்டியதாய் விட்டது.


அறிஞர்களே! நமக்குப் பாட்டுக் கேட்கக்கூடத் தெரியாது என்றும், நம் மொழியானது பாட்டு இசைக்கக்கூடப் பயன் படாது என்றும் சொன்னால், இந்த இழிமொழி - நம் உயிரைப் போயல்லவா கவ்வுகிறதாயிருக்கிறது என்று மிக்க வேத னையோடு கூறுகிறேன். தமிழ்த் துரோகத்தால் வாழவேண்டியவ னும், வள்ளுவர் சொன்னதுபோல் - ‘குலத்திலே அய்யப்பட வேண்டி யவனுமான தமிழ் மகன்களுக்கு, இது எப்படி இருந்தாலும் அவர்களது வாழ்வும் நம் எதிரிகளின் புகழுமே அவர்களுக்கு அணியாகவும் அலங்காரமாகவும் முக்கிய இலட்சியமாகவும் இருக்கும்.

தமிழிசை முயற்சி அல்லது கிளர்ச்சி என்றால் என்ன? தமிழ்நாட்டில் தமிழர்கள் இடையில் இசைத் தொழில் வாழ்க்கை நடத்தவோ அல்லது பொருள் திரட்ட ஒரு வியாபார முறையாகவோ கொண்டுள்ள இசைத் தொழிலாளி அல்லது இசை வியாபாரியை இந்த நாட்டானும் பொருள் கொடுப்பவனும் இசையை அனுபவிப்பவனுமானவன், ‘இசை என் விருப்பத்திற்கு ஏற்ற வண்ணம் இருக்கவேண்டும்’ என்று சொல்லி விரும்புவதேயாகும். இதில் எவ்வித விவாதமோ, வெறுப்போ ஏற்படச் சிறிதும் இட மில்லை. இந்த முயற்சியும், கிளர்ச்சியும், இத்தனை நாள் பொறுத்து ஏற்பட்டதேன் என்பது தான் அதிசயிக்கத்தக்கதாகும். அன்றியும் எங்களுக்கு இப்படிப்பட்ட இசைச் சரக்குதான் இருக்கவேண்டும் என்று, கொள்வோரும் நுகர்வோரும் கேட்டால் அதைத் தர்க்கித்து ‘நீ இதைத்தான் கொள்ள வேண் டும்’ என்று சொல்லுவது இசைப் பிழைப்பாரின் ஆதிக்கத்தையும், இசை வியாபாரியின் ஆதிக்கத் தையும்-கொள்வோரின் இழிதன்மையையும், வலிவற்ற, மானமற்ற தன்மையையும் காட்டும் அறிகுறியாகும்"

பெரியார். நன்றி - உண்மை மாத இதழ்

விடை தெரியாத சில கேள்விகள் :-

பெரியார், தமிழிசையை ஆதரிக்க காரணம் தமிழ்ப்பற்றா? பிராமண எதிர்ப்பா?

தமிழ் பற்றி பேசும்போதெல்லாம் வெங்காயத்தை கூப்பிட்ட பெரியாருக்கு தமிழ்ப்பற்று உண்மையிலேயே உண்டா, இல்லையா?

தமிழிசையை வளர்க்கவேண்டுமென்றால் முதலில் கர்நாடக இசையின் ஆதிக்கத்தை ஒழித்தாகவேண்டுமா?