Saturday, May 29, 2004

டாப் 20 படங்கள்

சினிமா நடிகருக்கு தீவிர ரசிகரா இருந்தாலும் சினிமாவை பத்தி மூச்சே விட மாட்டேங்கிறீங்களேன்னு 2,3 விசாரிப்புகள். (ஓழுங்கா தெரிஞ்சாத்தானே மூச்சு விட முடியும்!) நான் பார்த்து, ஏதோ ஒரு காரணத்துனால எனக்கு பிடிச்ச படங்களை மட்டுமே இங்கே லிஸ்ட்டியிருக்கேன்! ஜம்முனு உட்கார்ந்துகிட்டு கால் மேல கால் போட்டு நான் சொல்ற மாதிரி நினைச்சுகிட்டு படிச்சுத் தொலைங்க!

20. கலங்கரை விளக்கம்

எம்.ஜி.ஆர் நடித்து நான் பார்த்த மூணு படங்களில் இதுவும் ஒண்ணு. திரில்லர் சப்ஜெக்ட். சரோஜாதேவியை தேடி அலையும் கச்சிதமான கேரக்டர் டாக்டர். எம்ஜிஆருக்கு. (நிஜமாவே படத்துல டாக்டர்தான்!) சோகமான பாடலை கூட ஜாலியாக பாடி நடிக்க எம்ஜிஆரால் மட்டுமே முடியும். நெருடவே இல்லை. உம் 'காற்று வாங்கப் போனேன்'. படத்தின் இன்னொரு பாடலில் கூட லேசான சோக டச்சிங் / 'பொன்னெழில் பூத்தது புதுவானில்'. அப்போதெல்லாம் பாரதிதாசன் பாடல்களை சினிமாவில் வைச்சே ஆகணும்னு எம்ஜிஆருக்கு ஒரு ஆர்வமாம்! இங்கே ஒரு 'சங்கே முழுங்கு'. படத்தை விட பாடல்களும், பாடல் காட்சிகளும்தான் டாப்!

19. டார்லிங் டார்லிங் டார்லிங்

எத்தனையோ படங்களை சர்வசாதாரணமாக எடுத்து மெகா வெற்றி பெற்ற பாக்யராஜ் கஷ்டப்பட்டு செஞ்ச படம் எடுபடாமல் போனது இண்டஸ்டிரிக்கே ஒரு ஷாக்தான். இந்த காலத்து 'அழகி', 'ஆட்டோகிராப்' கதையையெல்லாம் அப்பவே அழகா சொல்லியிருக்கார். அப்பாவியா வந்து பாட்டு பாடி, கராத்தே சண்டை போட்டாலும் பொருத்தமான வேஷம் பாக்யராஜ் ஸாருக்கு. சின்ன வயசு காதலை நியாயப்படுத்தாம கண்டிச்சு ஒரு டயலாக் வைச்சிருந்திருக்கலாம்.

18. வருஷம் 16

பிறந்த ஊருக்கு ஒரு ஜாலியான ·பேமிலி டிரிப் போன திருப்தி. தாத்தா, மாமா, சித்தப்பாட என உறவுகள் உரசிக் கொண்டு சுகிர்த்த அனுபவம். தமிழ் சினிமாவின் 'ஹம் ஆப்கே ஹை கெளன்'. பீம்சிங்கின் காலத்து படத்தையும் எந்தவித திருப்பமுமில்லாமல் இதமாக சொல்ல பாசிலுக்கு தெரிந்திருக்கிறது. 'பழமுதிர்ச்சோலை' பாடல் மட்டுமல்லாமல் டூயட் பாட்டு கூட சந்தோஷ மூடுக்கு உத்திரவாதம் தரும்.

17. இதயம்

இந்தப் படம் வரும்போது தமிழ் சினிமா டிரெண்ட் எப்படியிருந்துச்சுன்னு எல்லோருக்கும் தெரியும். மோகன் காலத்துக்கு பின்னாடி காதலை மையப்படுத்தி வர்ற சீசஸனை இது ஆரம்பிச்சு வைச்சப்ப, நான் பதினோராம் கிளாஸ் படிச்சுட்டிருந்தேன். திரைக்கதை கொஞ்சம் குழப்பினாலும் படம் முழுவதும் வர்ற இசையும் காதலைச் சொல்ல இயக்குநர் கையாண்ட டீஸெண்டான யுக்தியும் என்னவோ....என்னவோ... பிடிச்சிருக்கு!

16. கர்ணன்

அந்தக் காலத்து 'ஷங்கர்' படம். அதாவது பிரம்மாண்டம்! மகாபாரதத்தை நல்லா படிச்சு தெரிஞ்சுகிட்டது இந்தப் படத்தை பார்த்த பின்னாடிதான். அதனால், இன்னிக்கு வரைக்கும் கர்ணன் வில்லன்களோட கூடாரத்துல இருந்தாலும் நம்மளைப் பொறுத்த வரையில் ஹீரோதான். எம்.எஸ்வி இசையில் கண்ணதாசனின் பாடலில் சீர்காழி கோவிந்தராஜனின் கம்பீரம் காட்டிய பாடல்கள்தான், படத்தின் பெரிய ப்ளஸ் பாயிண்ட்.

15. ஜானி

ஹீரோ, டபுள் ஆக்ட் என்றாலே கதையை சினிமா டிக்கெட்டின் பின்புறத்தில் எழுதிவிடலாம். இதிலும் அப்படித்தான். வழக்கமான ஆள்மாறாட்டமாக இருந்தாலும் ட்ரீட்மெண்ட் வித்தியாசமாக இருக்கும். மறக்கவே முடியாத கிளைமாக்ஸ். இளையராஜாவும் தன் பங்குக்கு வெறும் பெண்குரலை வைத்தே எல்லா பாட்டையும் கம்போஸ் பண்ணி அசத்தியிருப்பார்.

14. தளபதி

ஏகப்பட்ட கிளைக் கதைகள் இருந்ததால் குமுதத்தால் 'தொளபதி' என விமர்சிக்கப்பட்டது. ரஜினி படங்களில் டெக்னிக்கல் சங்கதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட ஆரம்பித்தது தளபதிக்கு பின்னர்தான். எளிமையான காஸ்ட்யூம், ஆர்ப்பாட்டமான இசை, அசத்தலான ஒளிப்பதிவு, இயல்பான நடிப்பு என தமிழ் சினிமாவுக்கே ஒரு 'ஷோலே' இது.

13. பூவிழி வாசலிலே

ஒரு குழந்தையையும் குடிகாரனையும் வைத்துக் கொண்டு ஒரு ஆக்ஷன் திரில்லரை படு அமைதியாக எடுக்க பாசிலை விட்டால் வேறு யாருமில்லை. திடுக்கிடும் திருப்பங்களுக்கும், ஒட்டாத காட்சிகளுக்கும் 'நோ' சொல்லிவிட்டு இளைய ராஜாவின் இசையை படம் முழுவதும் இழைய விட்டு அசத்தியிருப்பார்கள். ஜேசுதாஸ் குரலில் வரும் இரண்டு சோகப் பாடல்களும் மாஸ்டர் பீஸ்.

12. ஒரு தலை ராகம்

எங்க ஊர்க்காரர் எடுத்த இந்த காதல் காவியத்தை இன்னிக்கு வரைக்கும் ரசிக்க முடியவில்லை. காரணம், 'இதான் நம்ம காலேஜ், இதான் தருமபுரம் கோயிலு. இதான் நம்ம தெருவு'ன்னு வர்ற கமெண்ட்ஸ்தான். என்னதான் இருந்தாலும். 25 வருஷத்துக்கு முன்னாடி எங்க ஊர் எப்படியிருந்ததுங்கிறதை இதைப் பார்த்தாலே தெரிஞ்சுக்க முடியும்.

11. மகாநதி

'ஜெண்டில் மேனு'க்கு அப்புறம் ரஜினி படங்கள் தவிர வேறதையும் பார்த்ததில்லை, மகாநதியை தவிர. அதுவும் சமீபத்தில்தான் டிவியில் மகாநதியை பார்த்தேன். கமல் ஒரு பெரிய நடிகர் என்பதெல்லாம் உலகத்துக்கே தெரியும். ஆனா, எனக்கு புடிச்ச விஷயம் அவர் ஒரு சிறந்த மனிதாபிமானி என்பதே. மகனிடம் தெரியும் அந்நியத்தனம், மகளை மீட்டெடுக்கும் போது அவரிடம் வரும் கேவலும் மனதை உலுக்கி போட்ட விஷயம். படத்தில் வரும் திருவிடைமருதூர் ஏரியா காட்சிகள் எனக்கு எக்ஸ்ட்ரா போனஸ்.


மத்த '10' பத்தி நாளைக்கு பார்ப்போம்!

Wednesday, May 26, 2004

மறுபடியும் தள்ளாட்டத்தில்!

சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கையின்படி உலகிலேயே சுற்றுலாத்துறையின் மூலம் அதிக வருமானம் ஈட்டிய நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்றாமிடத்தை பிடித்திருக்கிறது. இது கடந்த ஆண்டுகளில் இந்தியாவுக்கு கிடைத்திராத கெளரவம். முதலிடத்தை இலங்கையும் இரண்டாமிடத்தை நேபாளம் பெற்றிருப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு நிகழ்ந்த ஈராக் போர் மற்றும் சார்ஸ் பீதியினால் உலகிலேயே அமைதியான பகுதியாக தெற்கு ஆசிய நாடுகள் இருந்ததுதான் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்க காரணம். இதனால் இலங்கையில் 23.7 சதவீதமும் நேபாளத்தில் 14.8 சதவீதமும் இந்தியாவில் 14.6 சதவீத வளர்ச்சியும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையில் ஏற்பட்டிருக்கும் சுறுசுறுப்பால் இந்தியாவின் அன்னிய செலாவணியில் 23 சதவீத ஏற்றம் ஏற்பட்டிருக்கிறது. போர் பற்றிய பயங்களெல்லாம் இலங்கையில் நீங்கிவிட்டது. இந்தியா இரண்டாமிடத்தை மிகக்குறைந்த புள்ளிகளில்தான் கோட்டை விட்டிருக்கிறது. ஆகா, நமக்கு நல்ல காலம் ஆரம்பித்துவிட்ட மாதிரிதான் தெரிகிறது.

கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் தமிழோவியத்துல எழுதியிருந்தேன். போன வருஷம் சுற்றுலா வளர்ச்சி கிடுகிடுவினு உயர்ந்த மாதிரி இருந்ததுக்கு காரணம் வாஜ்பாய் அரசு அல்ல; சார்ஸ் பீதிதான் தெளிவா தெரியுது. உலகத்திலேயே பாரிஸ் நகருக்குதான் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமா இருக்குதாம். 80 மில்லியன் மக்கள் பாரீஸ் பார்க்கிறதுக்கு வர்றாங்களாம். நம்மூருக்கு வர்றவங்கள வெறும் 3 மில்லியன் மட்டும்தான். கம்யூனிஸ கோட்டை மாதிரி இறுக்கமா இருந்தாலும் சீனா, இந்தியாவை விட்டுவிட்டு எங்கேயோ போய்விட்டது. 33 மில்லியன் மக்கள், சீனாவை சுத்திப் பார்க்க வர்றாங்கங்கிறது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம்.

சுற்றுலாத்துறையின் மூலம் உலகெங்கிலும் கிடைக்கும் வருமானம் 4.6 டிரில்லியன் என்கிறது ஒரு என்டிடிவியின் செய்தி. இதில் இந்தியாவின் பங்கு வெறும் 4 பில்லியன் மட்டும்தான். இருப்பினும் இந்தியா சுற்றுலாத்துறையில் இன்னும் ஒரு 15% வளர்ச்சி பெறமுடியும் என்கிற நம்பிக்கையையும் தருகிறது அதே செய்தி. ஆனால், வெளியுறவு, உள்துறை, சுற்றுச்சுழல், நிதி எனப் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பால் மட்டுமே இது சாத்தியம்.

மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் ஆந்திராவின் அதிரடி அரசியல்வாதி ரேணுகா செளத்ரியின் பொறுப்பில் தற்போது சுற்றுலாத்துறை. எதிர்பார்ப்பது போல 15% வளர்ச்சி இந்திய சுற்றுலாத்துறைக்கு கிடைக்குமா என்கிற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள்.... சுற்றுலாத்துறையின் மூலம் வருமானம் ஈட்டும் யுக்தியே இந்தியாவுக்கு புதுசுதானே என்கிறார். ஜம்பது ஆண்டுகளில் காங்கிரஸால் செய்ய முடியாததை ஜந்து ஆண்டுகளில் பாஜக செய்திருக்கிறது என்ற பிரமோத் மகாஜனின் காமெடிக்கும் இதுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை!

Tuesday, May 25, 2004

காணாமல் போன காஸி!

தெற்காசியாவின் முதல் நீர்மூழ்கி கப்பல் முப்பது வருஷத்துக்கு முந்தி விசாகப்பட்டினம் கரையோரம் ஜல சமாதியடைந்து இன்னும் மீட்கப்படாமலேயே இருக்கிறது என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே ஆச்சரியமாக சங்கதிதான். டயாப்ளோ என்று நாமகரணம் சூட்டி இரண்டாம் உலகப்போரின் போது அறிமுகப்படுத்தப்பட்ட நீர்மூழ்கி கப்பல்தான் அறுபதுகளில் பாகிஸ்தானுக்கு குத்தகை விடப்பட்டு, ஒரு சில மாற்றங்களுடன் காஸி என்று பெயரிடப்பட்டு பாகிஸ்தானின் முக்கியமான அஸ்திரமாக இருந்து வந்திருக்கிறது.

1971 ஆம் ஆண்டின் இறுதிகளில் இந்தியாவின் கிழக்கு கடற்கரையோரத்தை தவிடு பொடியாக்க சத்தம் போடாமல் விசாகப்பட்டினத்திலிருந்து வெகு தொலைவில் மையம் கொண்டிருந்ததாக ஒரு சிலரும் இந்தியாவின் யுத்த கப்பலான விக்ராந்தை தகர்க்க காராச்சியிலிருந்து புறப்பட்ட காஸி, வழி தெரியாமல் விசாகப்பட்டினத்திற்கு வந்து தொலைந்ததாக இன்னும் சிலரும் சொல்கின்றனர். எதுக்காக இந்தப் பக்கம் வந்தது என்பது யாருக்குமே தெளிவாக தெரியவில்லை.

300 மீட்டர் நீளமுடைய காஸியால் 11,000 கடல் மைல்கள் வரை விடாமல் டிராவல் பண்ணி தொடர்ந்து 75 நாட்கள் வரை கடலிலேயே இருக்க முடியுமாம். எதிரியை ஒழிப்பதற்காக வெகு து¡ரம் பயணம் செய்து வந்து காத்திருந்த காஸி, இந்திய எல்லையில் போர் துவங்குவதற்கு முன்னாலேயே வங்காள விரிகுடாமல் ஜல சமாதியாகி அட்ரஸ் இல்லாமலே போய்விட்டது. பாகிஸ்தானிலும் எமர்ஜென்ஸி வந்து யுத்தத்திற்கு தயாரானதால் காஸியை பத்தி பேசவே யாரும் முன்வரவில்லை. இன்று வரை தெற்காசியாவின் மிகப் பெரிய புதிராகவே காஸி இருந்து வருகிறது.

காஸி எப்படி மூழ்கியது? இந்திய கப்பற்படையின் பங்கு என்ன என்கிற விடை தெரியாத கேள்விகள் முப்பது வருஷமாக தொடர்ந்து இருந்து வருகிறதாம். இந்திய படையின் அதிரடி தாக்குதல்தான் காரணம் என்று ஒரு குரூப்பும் கப்பலில் ஏற்பட்ட எதிர்பாராத தீ விபத்து என்று பாகிஸ்தானும் பக்கமும் சொல்கிறார்கள். உண்மையிலேயே என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. சம்பவம் நடந்த போது எத்தனை பேர் இருந்தார்கள் சடலங்கள் கிடைத்ததா இல்லையா என்பதை பற்றியெல்லாம் பாகிஸ்தான் மூச்சு விட மறுக்கிறது. இந்தியாவும் காஸி மூழ்கிய இடத்தில் தேடிக்கொண்டே இருக்கிறது. அட்லீஸ்ட், நம்ம பேரனுங்களுக்காவது விஷயம் தெரிய வரும்னு நம்பிக்கை வைப்போம்!

இதையும் படிச்சுடுங்க!

வாய்ஸ் தந்த மாஸ்


முத்தமிழ் தந்த வாய்ஸ்