Thursday, August 26, 2004

கம்பனும் கருப்புச்சட்டைகளும்

தமிழினக் காவலர் டாக்டர் வீரமணி, கம்பனுக்கும் கம்பன் விழாவுக்கும் நோ சொல்கிறார். காரணம்? கம்பன், இராவணன் என்கிற திராவிடனை வில்லனாக காண்பித்ததுதானாம்! பகுத்தறிவு அய்யா, ராமன் ஆரியன் என்றும் கைபர் கணவாய் கிராஸ் பண்ணி வந்தவன் என்றெல்லாம் ஏற்கனவே பிதற்றியவர்தான். இப்போது கம்பன் மீது பாய்ந்திருக்கிறார். (நன்றி - உண்மை மாத இதழ்)

கம்பன் என்ற புலவனைப் புகழ்வது, பாராட்டுவது, பெருமைப்படுத்துவது, அவனுக்கு விழா எடுப்பது என்பது, தமிழர், திராவிடப் பண்பாட்டையும், நாகரீகத்தையும் இழிவுபடுத்தும் மிகப்பெரிய பண்பாட்டுச் சீரழிவு ஆகும்!
கம்பன் அடிப்பொடிகளும், கம்பனைத் தூக்கி நிறுத்த முயலும் கொம்பன்களும் சிந்திக்க வேண்டும்.


காப்பி அடித்த கம்பனின் இராமன்- கடவுள் அவதாரம்!

“ஆரிய இராமனை உயர்த்தவே, இராவணன் அரக்கனாக்கப்பட்டான் - எதனால்? இராமன் தெய்வமாக்கப்படல் வேண்டும் என்பதற்காக” (‘இராவண காவிய’, மதிப்புரை) தந்தை பெரியார் அவர்கள் கம்பன் செய்த இனத் துரோகம்பற்றி ‘குடிஅரசு’ வார ஏட்டில் 1946-இல் எழுதினார்!

“வசிஷ்டர் இராமனிடம் சென்று கீழ்க்கண்டபடி (மனு) நீதி உரைக்கின்றார் - ‘எப்படி ஆட்சி நடத்த வேண்டும்’ என்று?”

“கரிய மாலினும் கண்ணுதல் ஆனினும்
உரிய தாமரை மேலுறை வானிலும்
விரியும் பூதமோர், அய்ந்தினும் மெய்யினும்
பெரியார் அந்தணர் பேணுதி உள்ளத்தால்!”

இதன் பொருள் (துளசிதாசர் இராமாயணத்திலும் இது உள்ளது) “திருமால், சிவன், பிரம்மா, அய்ம்பூதங்கள் இவை எல்லாவற்றிற்கும் மேல் ஒன்று உண்டு என்று சொன்னால் ‘உண்மை’ என்று தத்துவம் சொல்வார்கள். அந்த உண்மையை விட உலகில் உயர்ந்தவர் யார் என்றால் அவர் பார்ப்பனரே!
எனவே அவர்களை பார்ப்பனரை வணங்கி அனுதினமும் ஆட்சி நடத்து” என்று கம்பர் எழுதுகிறார் என்றால்.. இதைவிடக் கொடுமை - பச்சைப் பார்ப்பனீய வர்ணாசிரம உயர்வு பிரச்சாரம் வேறு உண்டா?

இந்தக் கம்பனை மானங்கெட்ட தமிழர்கள் தலையில் வைத்து விழாக் கொண்டாடுவதை விட இந்த இனத்தின் எழுச்சியைத் தடுத்து, மீட்சிக் கிடைக்காவண்ணம் வீழ்ச்சியுறச் செய்தல் வேறு உண்டா?


அட தேவுடா!

Monday, August 23, 2004

பெண் பெரியார்

பெண்களைப் பற்றிப் பேசுகிற எந்த இந்திய வரலாறும் தேவதாசிகளைப் பற்றிப் பேசாமல் இருந்துவிட முடியாது. தேவதாசி முறையை மாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்த முன்னோடிகளில் முக்கியமானவர் மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார். ஐந்து வயதுக் குழந்தையாக இருந்த போது வறுமையின் காரணமாக பத்து ரூபாய்க்கும் ஒரு பழம் புடவைக்கும் ஒரு தாசிப் பெண்ணிடம் விற்கப்பட்டவர். அவர் ஒரு இளம் பெண்ணாக வளர்ச்சி அடைந்த போது அவரை தாசித் தொழிலில் ஈடுபடுத்த மற்றவர்கள் முனைந்த போது சீறியெழிந்து பொட்டுக் கட்டும் வழக்கத்தை எதிர்த்துப் போராடியவர். சுய முயற்சியால் தமிழும் சமஸ்கிருதமும் படித்தவர். தமிழ் எழுத்தாளர். 'தாசிகள் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்' (1936) 'தமயந்தி' (1945) ஆகிய நாவல்களை எழுதியவர். புரோகிதர் மறுப்புக் கல்யாணங்களில் திருமணத்தின் போது சொல்லப்படும் மந்திரங்களைச் சொல்லிக் காட்டி அதன் பொருள் என்ன என்று விளக்கும் அளவிற்கு சமஸ்கிருத அறிவு பெற்றிருந்தார். காங்கிரஸ் கொடியைப் பொது இடங்களுக்கு எடுத்துக் கொண்டுவரத் தடையிருந்த போது கொடியையே சேலையாக உடுத்திக் கொண்டு மேடையேறிப் பேசியவர். பெரியாரின் சீடர். இவரே ஒரு பெண் பெரியார்.

அது 1987ம் வருஷம் என்று ஞாபகம். கலைஞரை முதல் முறையாக அப்போதுதான் நேரில் பார்க்கிறேன். நகராட்சிப் பூங்காவில் புதிதாக கட்டப்பட்டிருந்த கட்டிடத்தை திறந்து வைக்க மயிலாடுதுறைக்கு வந்திருந்தார். மேடையில் உள்ளூர் தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே உதவியாளர் கொண்டுவந்த ஒரு பொருளன்றை பிரித்து வாயில் போட்டுக் கொள்கிறார். 'பாருப்பா... சாக்லேட் சாப்பிடுறாரு...' ஆச்சரியமாய் நானும் அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அது சாக்லேட் அல்ல விக்ஸ் என்பது ரொம்ப வருஷம் கழித்துதான் தெரிய வந்தது. கலைஞர் திறந்து வைத்த கட்டிடமும் பழசாகிப் போய் போன வாரம் மயிலாடுதுறை நகராட்சியினர் இடித்து இம்சித்துக் கொண்டிருந்தார்கள். சொல்ல மறந்து விட்டேன். அந்த விக்ஸ் மாதிரியே நான் மிஸ் பண்ணிய இன்னொரு விஷயம், அந்த கட்டிடத்திற்கு கலைஞர் சூட்டியிருந்த பெயர்! மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் வணிக வளாகம்.
யார் இந்த மூவலூர் அம்மையார்? இப்படித்தான் பெரியாரும் ஆரம்பத்தில் கேட்டிருப்பார். ஒரு காலத்தில் திராவிட இயக்கத்தின் பெண் பேச்சாளராக இருந்தவர் ராமாமிர்தம் அம்மையார். மயிலாடுதுறைக்கு அருகில் மூவலூர் கிராமத்தில் பிறந்து வாழ்க்கையின் இறுதி மூச்சு வரை பெரியாரின் உண்மையான சீடராகவே இருந்தவர் என்பதை விட இன்னொரு ஆச்சரியமான விஷயமிருக்கிறது. ராமாமிர்தம் அம்மையார் அடிப்படையில் தாசி குலத்தை சேர்ந்தவர். தேவதாசி முறையை தமிழ்நாட்டிலிருந்து முற்றிலுமாக விரட்டியடிக்க தீவிரமாக இருந்தவர்.
சோழர்களுக்கு பிந்தைய காலத்தில் தஞ்சை மாவட்டம் அந்நியர்களின் வருகையால் கலாச்சார பண்பாட்டு சிதைவுக்கு உள்ளாகி அடிமைப்பட்டு அடங்கி கிடந்த நேரம்தான் தேவதாசி முறை உச்சத்தில் இருந்த நேரம் என்று சொல்கிறார்கள். உள்ளூர் நிலவுடைமை பண்ணையார்களின் ஆளுகை பல விபரீதங்களை ஏற்படுத்தி வைத்திருந்தது. நல்ல தலைவர்களெல்லாம் அந்நிய சக்திகளின் அடக்குமுறைக்கு எதிராக அணிதிரண்ட குரல் கொடுத்துக் கொண்டிருந்தபோது சமூகத்தில் பெண்களுக்கெதிரான அடக்குமுறைகளை கண்டும் ஒரு கூட்டம் பொங்கியெழுந்தது. அவர்களுக்கு சுயமரியாதை பிரச்சாரங்கள்தான் துணை நின்றன. தேவதாசி குடும்பத்தில் பிறந்து குலத் தொழிலை வெறுத்து ஒதுக்கி அப்படிப்பட்ட பெண்களின் நிலையை சமூகத்தில் உயர்த்த வேண்டும் என்கிற எண்ணம் ராமாமிர்தம் அம்மையாருக்கு தீவிரமாக எழுந்தது. டாக்டர் முத்து லெட்சுமியின் துணையும் அவருக்கு கிடைத்தது. தேவதாசிகள் முன்னேற்ற சங்கமும் உருவாகி முழுமூச்சாக களமிறக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் மேடையேறிப் பேசவே மக்கள் தயங்கிக் கொண்டிருந்த காலத்தில் முதன் முதலில் மேடையேறி சுயமரியாதை பிரசங்கம் செய்த முதல் பெண் இவராகத்தான் இருக்கமுடியும். தாசி குலத்தொழிலாக தொடர உள்ளூர் ஆதிக்க சக்திகளான பண்ணையார்களும், செல்வந்தர்களும்தான் காரணம் என்பதை ராமார்மிதம் அம்மையார் தனது எழுத்திலும் பேச்சிலும் வெளிப்படுத்தி வந்திருக்கிறார். ஜோதிடம், மந்திரம் போன்ற மூட நம்பிக்கைகளை எதிர்த்து மேடையேறி முழுங்கி பெரியாரின் முழுமையான சிஷ்யையாகவும் இருந்திருக்கிறார். தாசிகளே இல்லாத தமிழகத்தை உருவாக்குவதில் திராவிட இயக்கத்திற்குதான் முக்கிய பங்கு இருந்திருக்கிறது.
தேவதாசிகளை ஒழிப்பதில் தேசிய அளவில் காந்திஜியுடன் முன்நின்றவர்களில் பெரியார் ராஜாஜி, திரு.வி.க. டாக்டர் முத்துலெட்சுமி, வரதராஜுலு நாயுடு என்கிற தலைவர்களின் பெரிய லிஸ்ட்டில் திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை போன்ற கலைஞர்களையும் நாம் சேர்த்தாக வேண்டும். அவற்றில் கடவுளுக்கு தாலி கட்டி விட்டு பக்தர்களிடம் போவது என்று தாசிகளையும் விமர்சித்துவிட்டு எத்தனை புருஷரோடு சல்லாபித்தாலும் விபசார தோஷமில்லை என்று தாசிகளை ஊக்குவிக்கும் சமூகத்தையும் விமர்சித்து நடுநிலையான விமர்சனங்களை முன்வைத்தவர்களில் ஒருவர் ராமாமிர்தம் அம்மையார்.
தேவதாசி முறையை ஒழிப்பது தெய்வ குற்றம் என்பதிலிருந்து தேவதாசி முறையை ஒழித்து விடுவது புராதான இசைக்கலையான பரதநாட்டியத்துக்கு இழுக்கு என்றெல்லாம் பேசியவர்கள் பிற்பாடு ராமாமிர்தம் அம்மையாரின் மேடைப் பேச்சுக்கு பயந்தார்கள். பெண்கள், தெய்வங்களாக போற்றப்படுகிறார்கள் என்பதெல்லாம் ஏமாற்று வேலை. தாசிகளும் பெண்கள்தானே....அவர்களுக்கு சமூகத்தில் ஏன் சம அந்தஸ்து கொடுக்கப்படவில்லை என்று ராமாமிர்தம் அம்மையார் முன்வைத்த கேள்விகள்தான் இன்று தேவதாசி முறை முற்றிலுமாக ஓழிவதற்கு காரணம். தேவதாசிகளின் அலங்கோலமான வாழ்க்கைமுறையை வெளிப்படையாக மக்களுக்கு சொன்னதும் இவர்தான். இருந்தும் சமூகத்தில் தாசிகள் கீழ்த்தரமான மக்களாகவே நடத்தப்பட்டார்கள். ஐம்பதுகளின் இறுதிவரை தமிழ் சினிமாவின் வில்லன் பாத்திரம் பெரும்பாலும் தாசிகளாகத்தான் இருந்து வந்திருக்கிறது.
ராமாமிர்தம் அம்மையாரின் கருத்துப்படி திருமணம் என்பது சுயம்வரம் நடத்தி மணமகள், மணமகனை தேர்ந்தெடுப்பதுதான். நமது கலாச்சாரம், காதலை அடிப்படையாக கொண்டது என்கிறார் அவர். கட்டாய திருமணங்கள்தான் தாசிகள் என்கிற அமைப்பையும் விபச்சாரத்தையும் நமது கலாச்சாரத்துக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறது என்பது அவரது நம்பிக்கை. தாசிகளுடன் சேர்ந்து இருந்ததன் காரணமாக அவர்களைப் பற்றிய உளவியல் ரீதியிலான புரிதல்களும் அவருக்கு இருந்தது.
தாசித் தொழில் ஒரு வியாபார முறை. தாசியிடம்போதுமான அளவு பணம் சேர்ந்தாலும் தொழிலை விட முடியாது. என்கிற யதார்த்ததையெல்லாம் அறிந்து வைத்திருந்தார் அவர். காம உணர்ச்சியை எழுப்பும் பரதநாட்டிய நிகழ்ச்சிகளை முற்றிலுமாக தடை செய்யவேண்டும் என்கிற அவரது கருத்து தாசித் தொழில் ஊக்குவிக்கப்படக்கூடாது என்கிற ஆதங்கத்தால் விளைந்தது என்றுதான் அர்த்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.
தேவதாசிகள் என்கிற கருத்தியலே ஆரியர்களின் வருகைக்கு அப்புறம்தான் என்றெல்லாம் திராவிட இயக்க ரீதியிலான கொள்கைகளையே இவரும் முன்வைக்கிறார். தேவதாசி, பரத்தை என்கிற நடைமுறைகளெல்லாம் ஆரியர்களின் படையெடுப்புக்கு முன்னாலே இருந்திருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.
ஆனால் தாசிகள் கோயில்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளூர் பெரியவர்களுக்கு விருந்தாக்கப்பட்டது மேல் சாதியினரின் ஆதிக்கம் அதிகமாக இருந்த காலத்தில்தான். கோயில் குருக்களிலிருந்து செல்வந்தர்கள் வரை ஆண்டவனின் பெயராலும் கலையின் பெயராலும் பெண் சமூகத்தை விபசாரத்திற்கு பயன்படுத்திக்கொண்டிருந்தது. தமிழகத்தின் கலாசார நடனமான பரதநாட்டியத்திற்கும் இழுக்கு வந்ததற்கு சில சுயநல சக்திகளின் பெண் பித்துதான் காரணம்.
தனக்கு கடவுள் நம்பிக்கையில்லாமல் போனதற்கு ராமாமிர்தம் அம்மையார்சொல்லும் காரணம் கொஞ்சம் வித்தியாசமானது. தேவதாசி முறையை பண்டைக்கால சித்தர்களும் சாமியார்களும் கண்டிப்பதை விட சுயமாரியாதைக்காரர்கள்தான் கண்டித்துவிட்டார்கள். அதானால்தான் தான் கடவுளை மறுத்து சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து கொண்டதாக சொல்கிறார். கடவுள் உண்டா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. யாருக்கும் தெரியாத ஒன்றை பற்றி நாம் ஏன் பேசவேண்டும்? கண்ணுக்கு தெரிந்த விஷயங்களையும் பிரச்சினைகளையும் மட்டுமே பேசுவோம் என்கிற அவரது கருத்தும் நியாயமான விஷயம்தான்.
ராமாமிர்தம் அம்மையாரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய குறிப்புகள் பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை. அவரது போட்டோவை கூட மயிலாடுதுறை திமுக கட்சி அலுவலகத்தில் பார்த்த மாதிரி ஞாபகம். ஆணுக்கும் பெண்ணும் அறிவு போன்றவற்றில் வித்தியாசமில்லை என்பது மாதிரி சம்சாரிக்கும் தாசிக்கும் வாழ்க்கையில் எவ்வித வித்தியாசமில்லை என்கிற அம்மையாரின் கருத்தை படிக்கும்போது பாரதி கண்ட புதுமைப்பெண்ணாகத்தான் அவரை பார்க்கத் தோன்றுகிறது.

Courtesy : www.thisaigal.com