Wednesday, March 17, 2004

புரட்சிப்புயல் தேர்தல் கரையை கடக்குமா?

வைகோவின் ஒன்றரை ஆண்டு சிறைவாசம் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் நட்சத்திர பிரச்சாரகர் என்கிற அந்தஸ்தை கொடுக்கலாம். ஆனால் விடுதலைப்புலிகளுக்கு கொடுக்கப்படும் ஆதரவு பற்றிய விஷயத்தில் தமிழ்நாட்டு மக்கள் எந்த சமரசத்திற்கும் தயாராக இல்லையென்பதை உணர்ந்து கொள்ளும் யதார்த்த அரசியல்வாதியாக அவர் இருக்கிறாரா என்பதுதான் கேள்வி. இலங்கை தமிழ் மக்களுக்கு கொடுக்கப்படும் ஆதரவு என்பது வேறு; விடுதலைப்புலிகளுக்கு தரப்படும் ஆதரவு என்பதில் கலைஞரே தெளிவாக இருக்கிறார். மேடைப் பேச்சில் கலைஞரின் உண்மையான வாரிசாக இருக்கும் வைகோ, திமுகவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு தலைவராக இருப்பார் என்று நிச்சயம் நம்பலாம். இந்த தேர்தலில் வலுவான பிரச்சார பீரங்கியாக பரிணமித்திருக்கும் வைகோவை திராவிட பாராம்பரியத்தின் அடுத்த வாரிசாக அடையாளம் காட்டுவதுதான் கலைஞரின் முக்கியமான அரசியல் பணியாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் திமுகவுக்கும் காங்கிரஸ¥க்கும் இருக்கும் பரஸ்பர புரிதல் மற்ற கூட்டணிக் கட்சிளுடன் முக்கியமாக மதிமுகவுடன் காங்கிரஸ¥க்கு இல்லையென்பது வெளிப்படை. தமிழக கட்சிகள், ஜெயலலிதாவின் ஆணவப் போக்கை எதிர்த்து அணி சேர்த்து ஜனநாயக முற்போக்கு கூட்டணி அமைந்திருக்கும் நிலையில் ஜெயலலிதா பற்றி சமீபத்திய சென்னை விசிட்டில் சோனியா கருத்து எதுவும் தெரிவிக்காததும் வினோதம். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி, சமீபத்திய பேட்டியில் காங்கிரஸ் திமுகவுடன் மட்டும்தான் உறவு கொண்டுள்ளது; மதிமுகவுடன் அல்ல என்கிறார் (அது என்ன புதுமாதிரியான கூட்டணியோ?!) எனவே, எந்த வகையிலும் மதிமுக - காங்கிரஸ் இடையேயான சுமூகமான உறவு நிலவ வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

கருணாநிதி மீதும் ஜெயலலிதாவின் மீதும் வைத்திருந்ததை விட தான் பல மடங்கு நம்பிக்கை வைத்திருந்த வாஜ்பாயையும் கனத்த இதயத்துடன் கடுமையாக தாக்குவேன் என்னும் வைகோவின் ஆவேசத்தில் நியாயமிருக்கிறது. வாஜ்பாய் தமிழத்தின் நம்பகமான கூட்டாளியை இழந்திருக்கிறார். நாளை பாஜகவுடனான அதிமுகவின் தேனிலவு முறியும் பட்சத்தில் இந்த அதிரடி அரசியல்வாதி வாஜ்பாய்க்கு தோள் கொடுக்கும் நிலையும் வரக்கூடும். அப்போ பொடா நாயகனின் பேச்சை கேட்டு உணர்ச்சிப்பட்ட தொண்டர்களின் நிலைமை...? பாராவின் 'டாலர் தேச'த்தில் வந்த குருஜி கவுண்டமணியாரின் டயலாக்தான்! "அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!"

Monday, March 15, 2004

49ஓ!

'வாக்காளர்களிடம் விழிப்பு ஏற்படுவதற்காக உந்துநர் அறக்கட்டளை நடத்தி வரும் குடீமக்கள் முரசு இதழில் ஆசிரியர் முன்னாள் ஜ.ஏ.எஸ் அதிகாரி அ.கி. வேங்கடசுப்ரமணியன், எந்த வேட்பாளரையும் பிடிக்காவிட்டால் அதையும் வாக்குச்சாவடியில் பதிவு செய்ய சட்டத்தில் இடமிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டியுள்ளார். அது 49ஓ பிரிவின்படி வாக்களிப்பதில்லை என்று வாக்காளர் முடிவு செய்வதுதான்.

ஒரு வாக்காளர், படிவம் 17 ஏவில் உள்ள வாக்காளர் பட்டியலில் அவரது வாக்காளர் எண் முறையாக பதிவு செய்யப்பட்டு அவரும் தமது கையெழுத்தையோ பெரு விரல் ரேகையையோ விதி 49 Lபடி வைத்த பிறகு, வாக்களிப்பதில்லை என்று முடிவு செய்தால், அந்த முடிவுக்கு ஏற்ப படிவம் 17Aவில் வாக்குச்சாவடி தலைமை அதிகாரி ஒரு குறிப்பைச் செய்து வாக்காளரின் கையெழுத்து அல்லது பெருவிரல் ரேகையையும் அந்த குறிப்புக்கு எதிரே பெறவேண்டும் (தேர்தல் நடைமுறை விதிகள் 1961) வாக்குப்பதிவு முடிந்தபிறகு இவ்வாறு எத்தனை பேர் வாக்களிக்க மறுத்து பதிவு செய்தார்கள் என்ற எண்ணிக்கை விவரத்தையும் அதிகாரி தெரிவிக்க வேண்டும்.

1999ல் நடந்த மக்களவைத் தேர்தலில் தமிழ் நாட்டில் மொத்தமுள்ள 4.75 கோடி வாக்காளர்களில் சுமார் 2 கோடி பேர் வாக்களிக்கவில்லை. சென்ற தேர்தலில் வட சென்னை எம்பி தொகுதியில் மொத்தம் 70 சதவிகிதம் பேர் வாக்களிக்கவில்லை. இதனால் ஒரு தொகுதியின் மொத்த வாக்குகளில் சுமார் 15 சதவிகித வாக்கு பெற்றாலே ஒருவர் எம்பியாகிவிடமுடியும் என்பது தெரிகிறது. சென்னை மாநகராட்சி தேர்தலின்போது பெசண்ட் நகர், கலாசேத்திரா காலனி, திருவான்மியூர் போன்ற 'மெத்த' படித்தவர்கள் உள்ள டிவிஷன்களில் 75 சதவிகிதம் பேர் வாக்களிக்கவில்லை. இவர்களில் பாதி பேர் வந்து 49 ஓவைப் பயன்படுத்தியிருந்தால், பல தொகுதிகளில் வெற்றி பெறும் வேட்பாளரை விட அதிக ஓட்டாக இருந்திருக்கும்.

இந்த நிலைமையை பல தொகுதிகளில் வாக்களர்களாகிய நம்மால் ஏற்படுத்த முடியும். அது அரசியல் சட்ட நெருக்கடியை ஏற்படுத்தும். அதை தீர்க்க தேர்தல் முறைகளில் மாற்றங்கள் வந்தே தீரும். விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை ஏற்பட்டால் எந்த கட்சியும் தன்னுடைய அசல் பலத்துக்கு மீறிய சீட்டுகளை பெற முடியாது. பிஜேபி, பாமக போன்ற கட்சிகள் தங்கள் அசல் பலத்துக்கு பொருத்தமில்லாத வகையில் ஆட்சியை அதிகாரத்தை பிடிக்க உதவி செய்யும் தேர்தல் முறையை மாற்றும் நிரந்தர தீர்வுக்கு இது வழி வகுக்கும்.'

நன்றி தீம்தரிகிட

நல்ல ஜடியாதான்! ஆனா, தேர்தல் நாளன்று 'மெத்த' படித்த மக்கள் மெனக்கட்டு வாக்குச்சாவடிக்கு வரணுமே! இதைவிட நல்ல ஜடியா, ஓட்டுப் போடதவனுக்கு அரசியல் பத்தி பேச தகுதியில்லைன்னு நம்ம அரசியல் பெருந்தலைகளை விட்டு சொல்ல வைக்கணும். நடக்கிற காரியமா அது...?!